About Me

2020/06/25

எண்ணம் போல் வாழ்க்கை


அற்பமான வாழ்வுக்குள் அற்புத எண்ணங்கள்/
கற்பகதருவாய் வாழ்ந்திடலாம் பிறருக்கும் பயனாய்/
பெற்றோரைக் காத்திடும் பொற்கரங்கள் யாவும்/
போற்றப்படுமே சுற்றும் பூமியின் அச்சாணியாய்/

மனதின் நீட்சியே குணமாகிப் போகும்/
கனவும் வாழ்வின் தொடராகி மோதும்/
பகட்டினில் மதியிழந்து கடன்படும் வாழ்வும்/
அகத்தினில் துன்பம் ஊற்றிக் கரைக்கும்/

நன்றும் தீதும் நம்மையே தொடரும்/
என்றும் செயல்களே விதியாகிக் கூடும்/
சேர்க்கும் நட்புக்களும் நிறமாற்றிப் போகும்/
வார்த்திடும் நல்லவற்றால் மனிதம் பூக்கும்/

சித்தம் நிரப்பும் சத்தியம் நமதாக/
நித்தம் சூழும் உறவுகளின் இதமாக/
அன்பைப் பகிரும் நெஞ்சின் அரணாக/
இன்பத்துடன் வாழ்ந்திடலாம் புன்னகைகளைச் சுமந்தபடி/

ஜன்ஸி கபூர் 


  •  
     

2020/06/24

மாறுவோம்

அதிகாரம்  மிடுக்கல்ல இலக்கிற்கான துடுப்பே
மதி கெடுக்காத வல்லமையே மாண்பாகும்
விதியையும் வெல்லலாம் சமத்துவப் பேணலிலே
புதிதாய் பூப்போம் அறநெறியில் வாழ்வோம்

ஜன்ஸி கபூர்  

புத்தம்புது பூமி வேண்டும்

புத்தம்புது பூமி வேண்டும் அழகாக/
சித்தம் மகிழும் வாழ்வும் நமதாக/
சத்தம் கலக்காத காற்றும் சுவாசமாக/
நித்தம் நலம் பேணும் நிலமாக/

மாசு அற்ற இயற்கையே வரமாக/
காசு தேடா வாழ்க்கையே இருப்பாக/
பசுமை தெளிக்கும் தருக்களே அரணாக/
ஆசு தேடா மக்களே உயிர்ப்பாக/

பூக்கள் வாசம் மனங்களின் நேசமாக/
காக்கும் கரங்கள் இறையோன் ஆசியாக/
தாக்கும் தொற்றுக்கள் நீக்கும் மருந்தாக/
பாக்கள் தளிர்க்கும் தமிழ்மொழி   விருப்பாக /

மாற்றிடும் நம்மைச் சுமக்கும்  தேசம்/
ஆற்றிடும் இன்னல் ரணங்களைத் தேகம்/
மறைத்திடும் பொங்கும் வன்முறை  மோகம்/
குறைந்திடும் வாழ்வில் வறுமைத் தாக்கம்

ஜன்ஸி கபூர்  
  •  

2020/06/23

அழியாத நினைவுகள்

நெஞ்சம் வரைந்திடும் வண்ணங்களாய் நினைவுகள்
கஞ்சத்தனமேது இன்பங்களை நிதம் சுவைப்பதற்கே
வெஞ்சினம் அறியா பிஞ்சு வயதும்
கொஞ்சி மகிழ்ந்தன கரங்களில்; பொம்மைகளை

சோலை யிலாடும் மலர்களாய் நானும்
காலைக் காற்றில்  சிறகுகள் வீசி
இலைகளில் ஒளிந்து மறையும் வண்ணப்பூச்சிகளை
அலைக்கழித்தே பிடித்த வீரமிப்போ வெட்கத்தில்

கற்றிடும் பாடங்கள் இடைநடுவே களவாய்
சொற்களைக் கோர்த்தே புனைந்திட்ட கவிகள்
கற்கண்டு நட்பினர் விழிகளில் மொழியாய்
தொற்றிய சிரிப்பும் வதையாகி இனிக்கும்

கடலோசை குவிந்து குழையும் மணலில்
தடம் பதித்தும் அழித்தும் விளையாடும்
உடலும் நனையும் ஈரமாய் குறும்பும்
உணர்வில்; கலந்த நொடிகள் மறந்திடுமோ

ஜன்ஸி கபூர்