About Me

2021/04/23

வசந்தமும் ஒரு நாள்

அழகான பட்டாம்பூச்சியொன்று சில நாட்களாக அந்தப் பூக்களைச் சுற்றி சுற்றி வருகின்றது. காற்றோடு உரசுகின்ற அதன் சிறகுகள்   அமுதத்தின் போதை நினைப்பில் ஆசையுடன் உராய்கின்றன.

நாட்கள் செல்லச் செல்ல ஈர்க்கப்பட்ட புற அழகின் கவர்ச்சி படிப்படியாகக் குறைய,

 ஒரு நாள் அந்த மலரின் பார்வையிலிருந்து நீங்கி விட்டது அந்தப் பூச்சியும்.....

அந்தப் பூச்சிதான் மனதோ.....

வாழ்க்கையில் எதுவும், எந்த உணர்ச்சியும் யாருக்கும் நிரந்தரமில்லை. இயல்பான வாழ்வில் மனம் போராடும்போது, புற மாயைகளிலிருந்து நீங்கி விடுகின்றது. ஆசையும், அதிசயமும் கலவையாகி ஜொலித்த ஒவ்வொன்றும்  அந்நியமாகி விடுகின்றன.

இதைத்தான் இரசித்தோமா 

ஆச்சரியம் நம்மை விழுங்கி விடுகின்றது.

மனதில் ஊற்றெடுத்த ஆசைகள் மங்கிப் போக,   மறுதலையாக ஏமாற்றமும் அலுப்பும்   ஒன்றன்பின் ஒன்றாக நம்மைத் துரத்த ஆரம்பிக்கின்றன. 

ஒரு குறித்த காலத்தின் பின்னர் நாம் ஆசைப்பட்ட விடயங்களை அசை போட்டுப் பார்ப்போமாயின், அவை சாதாரண விடயங்கள்போல் நம்மை விட்டுக் கடந்து போயிருக்கும். நம்மைப் பற்றிய சுய விசாரணையின்போது அட இதற்குத்தான் இப்படி முக்கியத்துவம் கொடுத்தோமா என நம்மையே நாம் திருப்பிக் கேட்போம். ஏனெனில் அன்பைத் தவிர அனைத்துமே காலவோட்டத்தில் காணாமல் போய்விடுகின்றன.

ஜன்ஸி கபூர்

2021/04/22

வெற்றி

 

சிறு புள்ளிதான் ஒவ்வொரு தொடக்கத்திற்கும் ஆரம்பம். அது சிதைவதும், சீராகுவதும் நமது மனோபலம், முயற்சி, விருப்பில் தங்கியுள்ளது. செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் அர்ப்பணிப்பான தொடக்கமொன்று இருக்குமாயின், அச்செயலின் வெற்றிக்குள் நமது நிழலும் மகிழ்ந்து கொண்டிருக்கும்.

ஜன்ஸி கபூர்

முயற்சியின் பலன்

முயற்சியின் பலனால் முன்னேற்றம் வாழ்விலே/

முடிச்சினை அவிழ்த்தே முழங்கிடும் விவேகம்/

முகங்காட்டும் வெற்றியில் முடியாதது ஒன்றுமில்லையே/

இரும்புத் திரையும் இளகுமே பயிற்சியில்/

இதயத்தின் வலிமையில் இன்பமே செயல்களில்/

இடரினைத் தடுத்தால் இலக்கும் அருகிலேயே/


ஜன்ஸி கபூர்  

மழலையின் சிரிப்பு

 
பிறை உதடுகள் வரைந்திடும் சிரிப்பினில்/
சிந்தையும் நுகருதே மகிழ்வின் நறுமணத்தை/

பஞ்சுக் கன்னமதில் படர்ந்திடும் அழகினில்/
உயிரும் நனைந்தே ரசிக்கிறதே மழலையை/

அன்பின் சுகந்தத்தில் வருடும் குழந்தை/
இன்பத்தின் பேரூற்றே இவ்வுலக வாழ்வினில்/

ஜன்ஸி கபூர்  


மழலையின் சிரிப்பு மந்திரப் புன்னகையோ
மலர்கின்றதே மகிழ்வும் நெஞ்சத்தை நிறைத்து

பஞ்சுக் கன்னத்தில் தேங்கிடும் அழகை
கொஞ்சி ரசிக்கையில் நிறைகிறதே மனதும்

பூவிழிக் கண்களும் உதிர்த்திடும் பார்வையினில்
பூசுகின்றேன் எனையே உயிருக்குள் பரவசமே

Jancy Caffoor