About Me

2021/06/02

யாழ்ப்பாண நூலகம்

 



அறிவினைத் தேடுகின்ற சமூகமே கலாசார பண்பாட்டு ரீதியிலான சிறந்த விழுமியக் கட்டமைப்பினைக் கொண்டுள்ளது. அறிவின் தளம் புத்தகங்கள். புத்தகங்கள் அணைந்திருக்கின்ற களம் நூலகம். சிந்தனை விருத்திக்குரிய பல தரப்பட்டுள்ள நூல்களை தன்னகத்தே தேக்கி வைத்திருக்கின்ற நூலகங்களை பாதுகாப்பது இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கொப்பானது. ஏனெனில் மனிதர்களின் சிந்தனையை வளர்த்தெடுக்கின்ற கூடமாக அதுவே உள்ளது. 


தெற்காசியாவின் சிறந்த நூலகமாகவும் பண்பாடு, கலாசாரம், கல்வி என்பவற்றை பறைசாட்டி நிமிர்ந்து நின்ற அறிவின் அடையாளமுமான  யாழ்ப்பாண நூலகத்தின்பால் எனது பார்வையினைச்   செலுத்துகின்றேன். 

ஒவ்வொரு தனி மனித  முயற்சி, சிந்தனைகள் பிற்காலத்தில் உலகம் பேசுகின்ற அடையாளங்களாகின்றன என்பதை மெய்ப்பிப்பதைப் போல் யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த கனகசபை .முதலித்தம்பி செல்லப்பா எனும் ஆர்வலரே நமது யாழ்ப்பாண நூல் நிலைய தோற்றத்திற்கு வித்திட்டார். 1933.11.11 ஆம் ஆண்டில் தனது வீட்டில் காணப்பட்ட சில நூல்களைக் கொண்டு நூல்நிலையமொன்றை  நிறுவினார்.


 பின்னர் அச்சிந்தனை வலுப்பெற்றதால், 1934.06.09 ஆம் திகதி யாழ்ப்பாண மத்திய கல்லூரி மண்டபத்தில் ஐசக் தம்பையா அவர்களின் தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில் பொது நூலகமொன்று அமைக்க வேண்டிய தேவை உணரப்பட்டு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

க.மு. செல்லப்பா அவர்களால் திரட்டப்பட்ட 184 ரூபா 22 சதம் மூலதனமாக முன்வைக்கப்பட்டது. பல மக்களின் ஒத்துழைப்பினால் 1934.08.01 ஆம் திகதி யாழ்ப்பாண ஆஸ்பத்திரி வீதி வாடகை அறையொன்றில் சிறிய நூலகம் அமைக்கப்பட்டது. வாசகர்களுக்காக 844 நூல்களும்,  34 பருவ இதழ்களும் பயன்பாட்டிலிருந்தன.

1936 ஆம் ஆண்டின் பின்னர் நூலகம் யாழ் நகரசபையிடம் கையளிக்கப்பட்டு, யாழ்ப்பாணக் கோட்டைக்கருகே புதிதாக கட்டப்பட்ட நகர மண்டபத்திற்கு அண்மையில் அது இடமாற்றம் செய்யப்பட்டது.

யாழ் நூலகத்தை நவீனப்படுத்தும் தீர்மானத்திற்கேற்ப பலரது   ஒத்துழைப்பினால், 1953 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. சென்னை அரசின் கட்டிடக்கலை நிபுணர் கே.நரசிம்மன் அவர்களின் வரைபட
 


வடிவமைப்பிற்கேற்ப திராவிட கட்டிடக்கலைப் பாணியைத் தழுவிய இரண்டு தளங்களைக் கொண்ட அழகிய கட்டிடமாக 1959 ஆம் ஆண்டில் நூலகத்தின் பெரும் பகுதிகள் உருப்பெற்றன. எனினும் கட்டிட வேலைகள் முற்றாக முடிய முன்னர், அன்றைய யாழ்ப்பாண மேஜர் அல்பிரட் துரையப்பா அவர்களினால்

 1959.10.11 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. நூலகர் உட்பட 33 பேர் அதில் கடமையாற்றினார்கள். 

 பின்னாளில் எனக்கு நன்கு நினைவிருக்கின்றது. நானும் அதில் அங்கத்தவராக இருந்திருக்கின்றேன். எனது அங்கத்துவ இல 1967. அன்றைய காலகட்டத்தில் நூலக கட்டிடத்தில் நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றியிருக்கின்றேன். அம்புலிமாமா, நட்சத்திரமாமா கதைப்புத்தகங்கள் உள்ளிட்ட பல நூல்கள் என் கண்களுக்கு விருந்தாகின.

மன உணர்வுகளுள் முரண்பாடுகள் எழுகையில் அங்கு பலவிதமான மோதல்களும்,  சமூக குரோதங்களும் முளைவிடுகின்றன. 1981 ஆம் ஆண்டில் மோதி வெடித்த தமிழ் விரோத இனக் கலவரங்களின் வெடிப்பின் பிம்பமாக யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அறிவுக் கோபுரம் இரவோடு இரவாக தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. 


அந்நாள் 1981.05.31 ஆம் திகதி யாழ்ப்பாண வரலாற்றுச் சுவடுகளில் கறைபடிந்த நாள். 


அக்கினிச் சங்கமத்தில் 1800 ஆண்டுகளில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட விலைமதிக்க முடியாத 97000 நூல்கள் சாம்பராகின. 

இலக்கியம், மொழி, சமயம், தத்துவம் உள்ளிட்ட 6000 பண்டைய யாழ்ப்பாணம் முத்துத்தம்பியின் அபிதான கோசம் மற்றும் அபிதான சிந்தாமணி, சித்த வைத்திய ஓலைச்சுவடிகள் போன்ற  பல அரிதான பொக்கிசங்களை தீ நாக்குகள் விழுங்கின.


அச்சாம்பர் முகடுக்குள் மனித உணர்வுகளின் ஓலங்கள் புதைக்கப்பட்டன. கல்வியை நேசித்தவர்களின் கதறல் ஒலியானது, யாழ்நகரைச் சூழ்ந்த அந்தக் கரும்புகைக்குள் கரைந்துதான் போயின.  அறிவுக்கண்களில் இரத்தக் கண்ணீர் வழிந்தோடின. ஓர் இனவழிப்பின் உச்சக் கட்ட அகோரத்தின் அரங்கேற்றம் மறக்கப்படாத நிகழ்வாக மனதினுள் உறைந்துதான் கிடக்கின்றது.

உருச்சிதைந்து கிடந்த யாழ்ப்பாண நூலகத்தை மீள புனரமைக்கும் சிந்தனைகள் 1984 ஆம் ஆண்டின் பின்னர் தோற்றம் பெறலாயிற்று. 


எனினும் 1997 ஆம் ஆண்டில் அரசியல் பிரமுகர் மங்கள சமரவீர அவர்களின் வெள்ளைத் தாமரை அமைப்பின் Book & Brick  வேலைத்திட்டத்தின்கீழ்  லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களின் ஒத்துழைப்புடன், முன்னர் கட்டிடம் இருந்த அதே இடத்தில் மீளக் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது. 2001 இல் மீள மறுசீரமைக்கப்பட்டு தற்போதை தோற்றத்துடன் விளங்குகின்றது. 


தீயில் எரிந்த புத்தகங்களை இங்கு சேகரிக்க முடியாமல் போனாலும் புதுப்பொலிவுடன் செயல்பட்டு வருகிறது.நவீன தொழில்நுட்ப அறிவினைப் பயன்படுத்தி புத்தக விபரங்கள் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளன. இன்றைய டிஜிட்டல் உலகில் புத்தகங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவது ஒரு ஆறுதல். 

 வாசிப்புப் பகுதி, இரவல் கொடுக்கும் பகுதி போன்ற பல பகுதிகள் தனித்துவம் பெற்றுள்ளன. நூலகத்தின் உட்கட்டமைப்பில் புத்தக விபரங்கள் நேர்த்தியாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.  


.இழப்பின் வலி அனுபவித்தவர்களுக்கே புரியும் என்பார்கள். சாம்பருக்குள் மூழ்கிய அரிய புத்தக பொக்கிசங்கள் மீளக் கிடைக்குமோ? அன்று நெருப்பில் வெந்த 97000 ஏடுகளும் இன்றிருந்தால் ஒரு பிரதேசத்தின் அறிவின் எழுச்சி சூரியோதயமாக மின்னிக் கொண்டிருக்கும். காகிதங்களுடாக எரியூட்டப்பட்ட சமூகங்களின் உணர்வின் திரட்சி, முழு உலகின் பார்வைக்குள் வீழ்ந்திருக்கும். 

நல்ல நூல்களுடனான நமது நேசிப்பை வளர்ப்பதுடன், நூலகங்களையும் பாதுகாப்பது நமது ஒவ்வொருவரின் தார்மீக பொறுப்பென்றால் மிகையில்லை.

ஜன்ஸி கபூர் - 02.06.2021 

2021/06/01

தொட்டுவிடும் தூரம்தான்

ஆற்றல்களும், திறமைகளும் மனிதனுக்கு இறைவன் அளித்த பொக்கிசங்கள்தான். ஒவ்வொருவரும் தன்னிடம் இருக்கின்ற அறிவினை தானே இனங்கண்டு, பொருத்தமான சந்தர்ப்பத்தில் அதனை பிரயோகிக்கையில் சாதனையாளர் என்கின்ற கௌரவம் அவரது அடையாளமாகின்றது.

அந்தவகையில் இன்று பேசப்படுகின்ற சாதனையாளன் பிரதீப்

இந்தியா கர்நாடகா குக்கிராமத்தில் ஏழை விவசாயியின் மகனாகப் பிறந்த இவர், இன்று உலகமே திரும்பிப் பார்க்கின்ற அளவிற்கு சாதித்துள்ளார்.

மாணவ பருவத்தில், கல்லூரியில் கற்கின்ற காலத்தில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடத்துறையிலும் ஈர்ப்பு ஏற்படுவது இயல்பே!

இவருக்கும் எலக்ரோனிக்ஸ் துறையில் ஈர்ப்பு ஏற்படவே, +2 படித்துக் கொண்டே, அத்துறையிலும் தனது ஆர்வத்தை, தேடலை, ஆற்றலை வளர்த்துள்ளார். தனது சந்தேகங்களை Scientist id emailக்கு அனுப்பி தெளிவு பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார். பல மின்னஞ்சல் அனுப்பினால்தான் ஒன்றுக்காவது பதில் கிடைக்குமென்ற ஆதங்கம்.

பொறியியல் கல்லூரியில் கற்க ஆசைப்பட்டாலும் தனது வறுமை காராணமாக BSc Physicsல்  இணைந்து கற்கின்றார். மூன்றாம் வருடம் மைசூரில் கற்கின்ற வாய்ப்புக் கிடைத்தபோது, அறியாத ஊரில் தெருவோரமே இருப்பிடமாகின்றது.   ரியூசன் மூலம் சம்பாதிக்கின்ற சொற்ப பணம் அடிப்படைச் செலவுகளுக்கு போதுமாகின்றது.

இத்தகைய வறுமையிலும் இந்த இளைஞனின் இலட்சிய வேட்கை தீரவில்லை. குறைந்த செலவில் பறக்கின்ற இயந்திரம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கனவு அவரது வலியெல்லாவற்றையும் உறிஞ்சிக் கொள்கின்றது.  

Courceல் சேருவதற்கு பணம் கிடையாது என்ற காரணத்தினால் C++ Java Core Python Adobe Cloud Computing போன்ற Softwareகளை எல்லாம் சுயமாகக் கற்று, அவை அனைத்திலும் தேர்ச்சி பெற்றார். பின் Bombay, Visakappattinam     போன்ற ஊர்களில் மலைமலையாக குவிக்கப்பட்டிருந்த eWaste Scrap yardல் தேடி அலைந்தார். இப்படியாக தனது Drone Project க்கு ஆகும் செலவை  குறைத்துள்ளார். ஏகப்பட்ட முறை முயன்று தோல்வி அடைந்து பின் மனம் தளராது, தனது   முயற்சியில் வெற்றி பெற்றார்.

IIT நடத்தும் ஒரு Drone Competitionல் கலந்து  கொள்வதற்காக புது தில்லி செல்கின்றார். 3 நாள் இரயில் பயணம். வறுமையின் ஆக்கிரமிப்பின் மத்தியிலும் அப்போட்டியில் கிடைத்த இரண்டாம் பரிசு மாபெரும் உந்து சக்தியாக விளங்குகின்றது. நம்பிக்கை இன்னும் ஆழமாக தன் ஆற்றலை வெளிப்படுத்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கையில்,

அந்நாளும் அண்மிக்கின்றது.

அது....................

ஜப்பானில் நடைபெறுகின்ற போட்டி.

தனது கல்வி பெறுபேற்றுச் சான்றிதழ்களை அடமானம் வைத்தும், தாயாரின் தாலிக்கொடியை விற்று,ம் அறிந்த சிலரின்   இரக்க குணத்தின் உதவியாலும் ஜப்பான் செல்ல ஆயத்தமாகின்றார்.

இடையில் சிறு விடயமொன்று இவரைக் குழப்புகின்றது.

அது...............!

ஜப்பானில் நடக்கும் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றால் ஒரு Professor Phd  யிடம் இவரது Project Report எல்லாம் சமர்ப்பித்து Approval  வாங்க வேண்டும்.        

கையிலோ முந்நூறு ரூபா. சென்னைப் பயணத்திற்கு இது போதுமா?

ஆனாலும் மனந் தளரவில்லை. வீதியில் உறங்கி, வறுமையின் நெருக்கீட்டைக் குறைத்து, தன் முயற்சியில் வெற்றி பெற வலியுடான போராட்டம் அந்த மாணவனுக்கு.

அந்தப் பேராசிரியரின் கையெழுத்தினைப் பெற பல நாட்கள் காத்திருப்பு.

ஈற்றில் வறுமையையும் வென்று விடுகின்றது தன்னம்பிக்கைப் போராட்டம்.

இரக்க மனங்கள் இருக்கின்ற வரையில் ஏழ்மை இதயங்களின் வலி கொஞ்சம் குறைகின்றதுதானே..

அம்மாணவனின் முயற்சியின் பலனாக ஜப்பான் டோக்கியோ கண்காட்சியில் அவன் தயாரித்த பறக்கின்ற இயந்திரமும் காட்சிக்கு வைக்கப்படுகின்றது. அது 120 நாடுகள் பங்குபற்றுகின்ற எக்ஸ்போ கண்காட்சி.

பலத்த போட்டிக்கு மத்தியில் தன்னம்பிக்கையுடன் ஏதாவது ஆறுதல் பரிசென ஓரிடம் கிடைக்கும் எனக் காத்திருந்தவனுக்கு ........................

அந்த அறிவிப்பு அதிர்ச்சியளிக்கின்றது.

தன்னையே நம்பாதவனாக மீள அவ்வறிவிப்பை அசைபோடுகின்றான் தனக்குள்.

வெற்றியாளராக அவன் பெயர் அறிவிக்கப்படுகின்றது.

முதலாமிடம்!

அவனோ மகிழ்ச்சியின் உச்சத்தில். தாயின் முகம் கண்முன்னால் நிழலாடுகின்றது.

ஒரு ரூபா பணத்திற்காக கஷ்டப்பட்டவன், தன் ஆற்றலால், இலட்சத்தியத்தால் உலகின் கண்களுக்கு சாதனையாளனாக உயர்ந்து நிற்கின்றான்.

ஊரிலேயே அவனைத் திரும்பிப் பார்க்காதோர், விரும்பி இரசிக்கின்றனர் அவன் திறமையை.

உலக நாடுகளின் அழைப்புக்கு மத்தியில், இச்சாதனையாளன் தன் நாட்டில் தானாற்றப் போகின்ற சேவைகளுக்காக கனாக் காண்கின்றான் இன்னுமொரு அப்துல் கலாமாக!

வாழ்த்துவோம் வாழ்வில் இன்னும் வெற்றிகள் குவியட்டும்!

நமது முயற்சிக்கும் வெற்றிக்கும் வறுமை தடையல்ல!

(முகநூலில் அறிந்த தகவல்களை எனது வரிகளில் தந்துள்ளேன்.)

ஜன்ஸி கபூர் - 01.06.2021


எலான் மஸ்க்


பணம் மனித வாழ்வின் போக்கினையே தீர்மானிக்கின்ற மாபெரும் சக்தியாக விளங்குகின்றது. செல்வம் கொண்டோர் மனித சமூகத்தின் கௌரவ அடையாளமாகப் பார்க்கின்ற காலகட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம்.

பணம் சம்பாதிப்பதும், அதனை சேமிப்பதும், பாதுகாப்பதும் ஒரு கலைதான். இக்கலை நுட்பம் அறிந்தவர்களை இன்று உலகமும் பெருஞ் செல்வந்தர்களாக பிரமித்துப் பார்க்கின்றது.

"பணம் பாதாளம் வரை பாயும்" என்பார்கள். அந்தப் பணத்தைத் திரட்டுகின்ற வாழ்க்கைப் போராட்டத்தால் பலரது கனவுகளும், சந்தோசங்களும், இளமையுமே காணாமல் போய் விடுகின்றன.

உலகின் ஓர் மூலையை வறுமை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, மறுமுனையிலே செல்வத்தின் உச்சக் கட்டம் இமயம் வரை எட்டி நிற்கின்றது.

இன்றைய வாழ்வினைத் தீர்மானிக்கின்ற மையப் புள்ளியான செல்வத்தை ஆள்கின்ற செல்வந்தர்களுள், முதல் பத்து வரிசையில் இடம்பெற்ற ஒருவரே எலான் மஸ்க்.

இவர் 1971 ஜூன் 28, அன்று கனேடிய தாயிற்கும், தென்னாபிரிக்க தந்தைக்கும் பிறந்தவர். இவர் தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் வளர்ந்தார். 

பன்னிரெண்டு வயதாக இருக்கும்போதே, தமது வீடியோ விளையாட்டுக்கு அவரே குறியீடுகளை எழுதி விற்று, பணம் சம்பாதித்த இளம் வயது முயற்சியாளன்.

கனடாவில் ஒண்டாரியோ கிங்ஸ்டனில் உள்ள குவீன்ஸ் பல்கலைக் கழகத்திலும்,


பின்னர் 


பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலும் படித்தார். 

பொருளியல் மற்றும் தெரியியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டங்கள் பெற்றார். ஆய்வுகள் செய்து பட்டம் பெற கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் படிப்பை அங்குத் தொடரவில்லை.

இவர் டெஸ்லோ நிறுவனத் தலைவர். கனேடிய, அமெரிக்க தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும்  முதலீட்டாளர்.  இவரது சொத்து மதிப்பு 202  பில்லியன் டாலர்களாம். 

அடடா..... ஆச்சரியத்தில் என் விழிகளும் விரிந்து நிற்கின்றன. 

  • 1999 இல் பேபால் என்ற ஒரு நிதி நிறுவனத்தைத் தொடங்கினார்.

  • ஜிப் 2 ஐ தனது சகோதரர் கிம்பலுடன் இணைந்து நிறுவி சில காலம் கழித்து விற்றார். 
  • 1999 இல் எக்ஸ் டாட் காம் என்ற குழுமத்தை  தொடங்கினார்.
  • 2002 ஆம் ஆண்டில்  மஸ்க் விண்வெளி உற்பத்தியாளர் மற்றும் விண்வெளி போக்குவரத்து சேவை நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை நிறுவினார். 

  • 2004 ஆம் ஆண்டில்  அவர் மின்சார வாகன உற்பத்தியாளரான டெஸ்லா மோட்டார்ஸ் இன்க்  இல் தலைவராகவும் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் சேர்ந்தார். 
  • பிறருடன் இணைந்து இவர் உருவாக்கிய  டெஸ்லா மோட்டார்ஸ் தயாரித்த மின்சார மகிழுந்துகள்     ஜெனரல் மோட்டார்ஸ் குழுமத்தையும் விஞ்சிவிட்டது என 2017 ஏப்ரலில் அறிவிக்கப்பட்டது.

  • 2008 இல் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆனார். 
  • 2016 இல் சோலார் சிட்டி என்ற குழுமத்தை வாங்கினார்.
  • 2016 ஆம் ஆண்டில்  நியூராலிங்க் என்ற நரம்பியல் தொழில்நுட்ப நிறுவனத்தை அவர் இணைந்து நிறுவினார்.
  • மேலும் சுரங்கப்பாதை கட்டுமான நிறுவனமான "தி போரிங்" நிறுவனத்தை நிறுவினார்.  
  • ஓபன் AI என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் இவர் பொறுப்பேற்றுச் செயல்பட்டார். இது செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக் குறித்து ஆய்வு செய்கிறது. மேலும் நியுராலிங்க் என்ற அமைப்பில், மனிதர்களின் மூளையில் கருவியைப் பொருத்தி மென்பொருளுடன் இணைக்கும் முயற்சியை மேற்கொள்வதில் எலான் மஸ்க் முனைப்பாக இருக்கிறார்.
அடடா இவரது சொத்துக்களின் பட்டியல் இவ்வாறு நீண்டு கொண்டே செல்கின்றது. இவ்வாறாக மலை போல குவிந்து கிடக்கின்ற இந்த செல்வத்தின் சொந்தக்காரர் வயது 49 என்றால் வியப்பாகத்தானே உள்ளது.

ஒவ்வொருவர் மனதுக்குள்ளும் பெறுமதியான இலட்சியக் கனவுகள் இருக்கும். அவற்றின் உயிர்ப்பிற்காக ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் அயராது உழைக்கின்றார்கள். வணிக நோக்கில் விண்வெளிக் கலங்களை உருவாக்கி, விண்வெளி சுற்றுப் பிரயாணத்தினை நடைமுறைப்படுத்துகின்ற கனவில், முயற்சியில் இருக்கின்றார். 

அதுமாத்திரமல்ல 2024 ஆம் ஆண்டில் மனிதர்களை செவ்வாய்க்கிரகத்தில் குடியமர்த்தும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றார்.

                                                 

இவரின் நம்பிக்கை பலிக்குமா?
காலம் பதில் சொல்லட்டும்!

ஜன்ஸி கபூர் - 01.06.2021


சினோபார்ம் தடுப்பூசியும் நாமும்



யாழ்ப்பாணத்தில் தற்போது கொரோனா தடுப்பூசியான சினோபார்ம்   கிராம சேவையாளர் மட்டத்தில் தற்போது ஏற்றப்பட்டு வருகின்றது. உண்மையில் இது இம்மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். பல வருட கால யுத்த வலியில் அல்லல்பட்ட மக்கள் அண்மைக் காலமாக இந்நோயின் பாதிப்பினாலும்; அவதியுறுகின்றார்கள். கடந்த சில நாட்களாக சிறு வயதினருக்கும் இந்நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது.

எனவே வீரியமிக்க கொரோனாத் தொற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள இத்தடுப்பூசி அவசியமாகின்றது. எதிர்வரும் நாட்களில் இத்தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள நானும் ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

உடலில் நோய் எதிர்க்கின்ற சக்தி குறைவடைகின்றபோதே எந்த நோயும் நம்மை ஆக்கிரமிக்கின்றது. இது ஆளுக்காள் வேறுபடக்கூடியது.

நோய் எதிர்ப்பு சக்தி என்பது யாது?

உடலை நோயிலிருந்து காக்கின்ற தன்மை என சுருக்கமாகக் குறிப்பிடலாம். நோய் எதிர்ப்பு மண்டலம் என்பது கலங்கள், இழையங்கள், உடலுறுப்புக்களால் ஆக்கப்பட்ட நமது உடலைப் பாதுகாக்கின்ற கட்டமைப்பாகும். நமது குருதியிலுள்ள வெண்குருதி சிறுதுணிக்கைகளே நம்மை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கின்றன.  

ஒரு மைக்ரோ லீற்றர் இரத்தத்தில் 4000 தொடக்கம் 11000 வரையிலான வெண்குருதி சிறுதுணிக்கைகள் காணப்படுகின்றன. இக்கூறுகள் குறைந்தால் உடலில் நோயை எதிர்க்கின்ற தன்மையும் குறைந்து விடுகின்றது.

சரி...... இத்தடுப்பூசியின் தன்மையை இனிப் பார்ப்போம்.

COVID-19 நோயை உருவாக்கும் வைரஸ் SARS-CoV-2 இனைக் கட்டுப்படுத்துவதற்காக இது சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள அரசுக்குச் சொந்தமான சினோபார்ம் என்ற நிறுவனம் மூலமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே   இத்தடுப்பூசி  பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அண்மைய ஆய்வுகளின் அடிப்படையில் திரிபடைந்த வைரஸூகளுக்கு எதிராகவும் இது பாதுகாப்பானது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலைப் பெற்ற 6வது தடுப்பூசி இதுவாகும். 22 இற்கும் மேற்பட்ட நாடுகள் இதனைப் பயன்படுத்தியுள்ளன எனும் தகவலை அறியக்கூடியதாக உள்ளது.

இது 80 சத வீதம் செயற்றிறன்மிக்கதாம். அதாவது இவ்வூசி பெற்றுக் கொண்டோரில் 80 சதவீதமானோருக்கு கொரோனாத் தொற்று ஏற்படாதாம். ஆனாலும் ஏனையோருக்கு தொற்று ஏற்பட்டாலும்கூட அது பாதிப்பின்றிக் காணப்படும்.

'நோய் எதிர்ப்பு ஆற்றல் செயல்பாட்டில் உங்கள் உடலை முழுக்க புதிய வகையான செயல்பாட்டுக்குத் தயார் செய்வதற்காக  இரண்டாவது முறையும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதில் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்'' என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியில் நோய் தொற்று சிகிச்சைத் துறை பேராசிரியர் டேன்னி ஆல்ட்மன் தெரிவித்தார்.

SAGE BIBP தடுப்பூசியை 2 அளவுகளாக (0.5 மில்லி) பயன்படுத்த WHO பரிந்துரைக்கிறது. 

எனவே 3 முதல் 4 வாரங்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்கள் செலுத்தப்பட வேண்டும். முதலாவது டோஸ் ஏற்றப்பட்டு 4 வார இடைவெளியின் பின்னர் இரண்டாவது டோஸ் ஏற்றப்படவேண்டும்.

முதலில் யாருக்கு தடுப்பூசி போட வேண்டும்?

 18 வயதுக்கு மேற்பட்ட  அதிக ஆபத்து உள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயதானவர்களுக்கு தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

  • அத்துடன் தொற்றா நோய் உள்ளவர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டால் பாதிப்பு அதிகம். எனவே நீரிழிவு, இருதய நோய், குருதி அமுக்கம் போன்ற தொற்றா நோய் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி ஏற்றவேண்டும். 
  • எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்கள் அது கட்டுப்பாட்டில் இருக்கும்போது இந்தத் தடுப்பூசியை ஏற்ற முடியும்.
  • பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுப்பாடில்லை

  • மேலும் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைப்பதற்கான மருந்து எடுப்பவர்களும் குருதி உறைதல் பிரச்சினை உள்ளவர்களும் கடும் ஒவ்வாமை உள்ளவர்களும் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று இத்தடுப்பூசியை செலுத்த முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • கொரோனாத் தொற்று உள்ள ஒருவர் இந்தத் தடுப்பூசியை ஏற்ற முடியாது. தொற்று மாறிய பின்னர் அதாவது இரு வாரங்கள் கழித்து அவர்கள் தடுப்பூசியைப் போட முடியும்.
  • கர்ப்பம் தரிப்பதற்கு எதிர்பார்ப்பவர்களும்  கர்ப்பிணித் தாய்மாரும்  இந்தத் தடுப்பூசியை ஏற்றக் கூடாது.
      X
  • 38.5ºC க்கு மேல் உடல் வெப்பநிலை உள்ள எவருக்கும் காய்ச்சல் வராத வரை தடுப்பூசியை ஒத்திவைக்க வேண்டும்.

 இந்தத் தடுப்பூசி உடலில் சென்று செயற்படத் தொடங்கும்போது தலையிடி, காய்ச்சல், உடம்பு நோ  போன்ற   பக்கவிளைவுகள் ஏற்படும். 

தடுப்பூசி நம்மை பாதுகாக்கின்ற ஒரு அரணே தவிர முழுமையான தீர்வல்ல. எனவே தடுப்பூசி ஏற்றிய பின்னரும் 

முகக்கவசம் அணிதல், 

சமூக இடைவெளி பேணுதல், 

கைகளை அடிக்கடி கழுவுதல் 

போன்ற செயற்பாடுகளைத் தொடரவேண்டும். ஏனெனில் தடுப்பூசி ஏற்றியவருக்கு கொரோனாத் தொற்றால் பாதிப்பு ஏற்படாதபோதும், அவர் கொரோனாக் காவியாக இருக்கலாம். அவர் ஊடாக தடுப்பூசி ஏற்றாத ஒருவருக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே ஊசி ஏற்றப்படுகின்ற சந்தர்ப்பங்களை அரசு நமக்கு வழங்கினால் நிச்சயம் நாம் அதன் மூலமாக நமது பாதுகாப்பினையும் நம்மைச் சூழவுள்ளோரின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 ஜன்ஸி கபூர் - 01.06.2021