About Me

2013/04/10

நாள் குறி



மெல்லன கவிழ்ந்தன விழிகள்
வண்டாய் நீயோ சுவைக்கையில்

ஹிருதயம் சிறகு முளைத்து பறந்ததுன்
பருவத் தோட்டத்தில் எனைத் தேடித் தேடி!

உன் கிறுக்கல்களையெல்லாம் கவிகளாக்கி
நான் சுவைக்கையில்
தமிழ் இலக்கணமே குடி கொண்டன
நம் நேசிப்புக்குள்!

கொஞ்சம் பொறு!

மெல்லப் புறாக்களை உன்னிடம்
தூதனுப்புகின்றேன்
உன் உள்ளடக் கிடங்கினுள்
பதுங்கிக் கிடக்கும் என்னை
உன் வசப்படுத்தும் நாள் குறிக்க!

- Jancy Caffoor-
    09.04.2013

மனைவி அமைவதெல்லாம்



"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்"

வானொலியில் ஜேசுதாஸ் அழகாகப் பாடுகின்றார். பாடலை ரொம்ப சுவாரஸியமாக ரசித்து மூழ்கிக் கிடக்கின்றான் ராஜா.......

"தம்பி நாங்க ரெடிப்பா..........டயம் ஆயிட்டுது"

அம்மா அவசரப்படுத்துகின்றபோதும், அந்த பாட
லின் லயிப்பிலிருந்து அவனால் விடுபட முடியவில்லை.

வாசலில் கார் வந்து நிற்கின்ற ஓசை மெதுவாக அதிர்கின்ற போது அம்மா இன்னும் பரபரப்பாகின்றாள்.

"டேய் அப்பா வந்தா என்னத்தான்டா ஏசுவார்... சீக்கிரம் வாடா"

அம்மாவின் அவசரம், அப்பாவின் எதிர்பார்ப்பு எதுவுமே அவனிடம் எடுபடவில்லை. மெதுவாக தன்னை ஆயத்தப்படுத்துகின்றான்..

"அம்மா...அண்ணா ரெடியாகிட்டானா"

தங்கையும் தனது பங்கிற்கு குரல் கொடுத்த போது, அதுவரையிருந்த பொறுமை அறுந்தது...

"என்னடி ..ரொம்பதான் அலட்டிக்கிறீங்க.....இன்னைக்கு பொண்ணு பார்க்கப் போறது எனக்கு...உங்கட அவசரத்திற்காக என் வாழ்க்கையை பலியாக்க மாட்டேன், புரிஞ்சுக்கோ, என் இலட்சிய மனைவிய சந்திக்கப் போறன் இன்னைக்கு"

வாய்க்குள் சிரித்தான் அவன்....

"ம்ம்..பெரிய்ய்ய்ய்ய்......இவரு......உலகத்தில இவரு மட்டும்தான் இலட்சியத்துக்காக கல்யாணம் முடிக்கிற மாதிரி"

அவர்களின் உணர்வலைகளை தந்தையின் குரல் தடுத்து நிற்க, அவனின் பொண்ணு பார்க்கும் பயணம் தொடர்ந்தது..

கார் உரிய இடத்தை நின்ற போது, அவனுக்கு மலைப்பாக இருந்தது. பெரிய இடத்துச் சம்பந்தம்..அப்பா தன் வசதிக்கு ஏற்ற பொண்ணத்தான் தெரிவு செய்திருக்கிறார்.....வருங்காலக் கனவு மெல்ல திரை விரித்தது.

மனசுக்குள் மகிழ்வு முகிழ்க்கும் போது சந்தியா கண்ணீருடன் எட்டிப் பார்த்தாள்.

மூன்று வருட முகநூல் காதல்........!

உயிர் , உணர்வுடன் பிணைந்து பல டயலாக் பேசி, கடைசியில் அவள் ஏழை என்றதும் காணாமல் போன தன் சுயநலம் சற்று வலித்தது.

"சொறீடி....சந்து, எனக்கு வேற வழியில்ல....காதல் கத்தரிக்காயெல்லாம் வாழ்க்கைக்கு உதவாது"

கடந்து போன காலத்தை மீண்டும் தனக்குள் வெளிக்கிளம்பாமல் தடுத்தவாறு, மெல்ல தன் தலையை நிமிர்த்தினான்...

தனக்கு தேநீர் கோப்பையை நீட்டிக் கொண்டிருக்கும் வருங்காலத்தை நேரில் பார்க்க வேண்டுமென்ற துடிப்பு எகிறிக் குதிக்க................

அவள் பார்வையில் இவன் பார்வை மோதி நின்றபோது..................

"சந்தியா"

அதிர்ந்தான்.....அவளேதான்...

அப்போ........நீ........நீ!

"நானோதான் நீங்க வேணாமென்று சொன்ன அவளேதான், வாழ்க்கையில பணம் வேண்டும்தான் ஆனால் அதுல வெறி இருக்கக்கூடாது. உங்களப் பற்றி அறியத்தான் நான் ஏழைன்னு பொய் சொன்னேன். பணமில்லாதவங்ககிட்ட பாசமோ உணர்ச்சியோ இருக்காதுன்னு நெனைக்கிறீங்களா, "

அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாகக் கூறியவள், எல்லோருக்கும் கேட்கும்படியாக உரத்த குரலில் கூறினாள்..........

"அப்பா எனக்கு இவரப் பிடிக்கல"

"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்"

பாடல் எங்கோ ஒலிக்கும் பிரமை!



ஞாபக வேலி


கொல்லைப்புற வேலியோரம்
தலை சிதைந்து நிற்கும் பனை போல்

மனசேனோ
இன்னும் இற்றுத்தான் கிடக்கின்றது!

சுபுஹூ.!

சுகமான மன சிலிர்ப்புக்களுடன்
சுகம் விசாரித்துச் செல்லும் அதானோசைகளுடன்!

பனி உதிரும் விடியல் வெளியில்
இனிமையாய் விழுந்தெறிக்கும் திருவெம்பாவையுடன்!

குவியலாய் மலைத்திருக்கும் மலைமேட்டில்
குஷியாய் தொலைந்திருந்த குழவிப் பருவத்துடன்!

மண்சோறு ஆக்கி சாதம் வடித்து
பரிமாறி களித்த பிள்ளை உள்ளத்துடன்

இன்னும் எத்தனையோ.......எத்தனையோ
நினைவுகளின் அரண்கள் மனவறையில்!

அழகான கனவுகளை அறுத்தெறிந்த - அந்த
கணப்பொழுதுகள்
பாழாய் போன மனசினில் - இன்னும்
அடம்பிடித்துத்தான் கிடக்கின்றது!

ஆட்லெறிகள் காவு கொண்ட றோட்டோரம்
ரோஷம் தொலைத்து எமக்காய் காத்து நின்று

பதுக்கி வைத்த காலடித் தடங்கள்- இன்னும்
செதுக்கித்தான் வைக்கப்பட்டுள்ளன இரத்தக் கறைகளில்!

போர் பார்த்த எம் தேசம் - எம்மை
போக்கிடமின்றி அலைக்கழித்ததால்

நாமோ!

மயானம் தேடும் பிரதிநிதிகளாய்
கானகம் தேடுகின்றோம் அவலத்துடன்!


- Jancy Caffoor-
    09.04.2013



மெல்லன


மெல்லன விழுந்தாய் விழியில் - என்
தேடலில் மொழிந்தாய் உன்னை!

விருப்போடிணைந்தாய் அன்று
வீம்போடு மறைந்தாய் இன்று

தொலைவினில் நீ இருந்தாலும்
அழியுமோ உந்தன் மீதுள்ள அன்பு

மாற்றங்கள் நீ தேடிச் செல்லு - அதுதான்
உன் வாழ்வின் ஏற்றப் படிக்கல்லு!

நீ
பறந்துதான் எங்கும் செல்லு - நானும்
விரைந்துதான் வருவேன் கொஞ்சம் நில்லு!

- Jancy Caffoor-
     09.04.2013

மார்கரெட் ஹில்டா தாட்சர்


வாழ்க்கை எனும் மைப்புள்ளியை நோக்கி பயணிக்கும் நம் வாழ்வினை பல எதிர்பார்ப்புக்கள் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. வாழ்க்கை குறுகியதாய் இருந்தாலும் கூட, அவ்வாழ்வில் நாம் சாதிக்கும் சாதனைகள்தான் நம்மை இவ்வுலகிற்கு அடையாளப்படுத்தும் அடையாளங்களாகிய நிற்கின்றன.
அந்தவகையில் இன்றைய தினம் என் சிந்தனையில்,  மறைந்த பிரிட்டிஷ் இரும்புப் பெண்மணி மார்க்கரெட் ஹில்டா தாட்சர்........எட்டிப்பார்க்கின்றார்.

அரசியல் மனிதனை வாழவும் வைக்கின்றது, விழவும் வைக்கின்றது. உலகப் புகழடைய மிகச் சிறந்த வழிமுறையாக அரசியல் விளங்குகின்றது. அந்த அரசியல் உட்பிரவேசமே தாட்சரையும் நமக்கு அடையாளப்படுத்தியுள்ளது எனலாம்.

இங்கிலாந்து திருச்சபை மதத்தைச் சேர்ந்த இவர் , 13.08.1925 ல் ஜனனமாகி 13.04.2013 ல் இவ்வுலகை விட்டும் நீங்கியுள்ளார்.

1959 ம் ஆண்டு  முதல் அரசியல் பிரவேசமாக இவருக்கு கை கொடுத்தது பின்ச்லே தொகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எனும் பதவியாகும். பின்னர் 1970ல் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.  1975 ல் பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவரானார். பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல்வாதியான இவர் 1979 முதல் 1990 வரை 3 தடவைகள் பிரதமர் பதவி வகித்துள்ளார்.

அன்னாரின் ஆம்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக!