About Me

2012/08/22

முன்மாதிரி



தான் பருகிய நீரை இளநீராக்கித் தரும் தென்னையைப் போல், தான் கற்ற , அறிந்த விடயங்கள் மூலம் சேவையை மூச்சாக்கி சமுகத்தினருக்கு வழங்கக் காத்திருப்பவரே அரச ஊழியர்கள்....

"கற்றவர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு"

இது தொன்மைக் காலம் தொடக்கம் நம் வரலாற்றில் பதிவாக்கப்பட்டு வருகின்ற குரல்........குறள் !

"அரச உத்தியோகம் புருஷ லட்சணம்"  என்பார் நம்மவர்கள் !

உண்மையில் சிறிதளவு கற்றவர்கள் பெறும் மாத ஊதியத்தை விட அதிகம். கற்றவர்கள் பெறும் மாத ஊதியம் குறைவாக இருந்தாலும் கூட, சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் கிடைக்கும் ஓய்வூதியமும், அதனால் கிடைக்கும் சுயமரியாதையும், நற்சமுகம் எப்பொழுதும் தருகின்ற மதிப்பும், கௌரவமும் எமக்குக் கிடைக்கும் வரப்பிரசாதங்கள்!

ஒரு அரச ஊழியரிடமிருந்து உச்ச பலனை எதிர்பார்த்து, அதன் மூலம் திருப்தியான சேவையைச் சமூகத்திற்கு நுகர்ந்தளிப்பதே அரசின் நோக்கம்..

எனவே ஓய்வுபெறுவதற்கென ஒருவர் தனது உடலாலும், உள்ளத்தாலும் ஒத்துழைக்கக்கூடிய இறுதி வயது  தீர்மானிக்கப்பட்டு , அவரது சேவைப் பயணம் கட்டாயப்படுத்தப்பட்டு நிறுத்தப்படுகின்றது.  இதற்கென இறுதி வயதினைத் தீர்மானிக்கும் அதிகாரம் அரசின் கரங்களில் உள்ளது.

ஓய்வுபெற்ற ஒருவர் கௌரவமாக, தன் காலில் நிற்கும் உழைப்பவர் போல் மாத வருமானமொன்றைப் பெற்றுக் கொள்ளக்கூடியவராக மாற்றப்படுவதன் மூலம் அவர் தனது வயதான காலத்தில் பிறரைச் சார்ந்திராது, முன்பு உழைத்த அதே மனநிலைக்குள் தக்கவைக்கப்படுகின்றார். இதன் மூலம் அவர் உளநிலையும் மேம்படுத்தப்படுகின்றது.

ஒருவர் தனது சேவையிலிருந்து ஓய்வுபெறும் போது, மனஅழுத்தத்திற்கு சிறிதளவாவது உள்ளாக  நேரிடும். ஏனெனில் அதுவரை கடமைகளுடன் தன்னைப் பழக்கப்படுத்தியவர், வீட்டில் எவ்வித வேலைகளுமற்று தனிமைப்படுத்தப்படும் போது அவரின் மன அழுத்தமும் அவரை லேசாக தொட்டுச் சொல்கின்றது. ......கொல்கின்றது..

உத்தியோக வாழ்வின் இரண்டாம் நிலையே ஓய்வு நிலை. அதுவரை அடிக்கடி அவரது நிறுவனங்களில் முதன்மைப்படுத்தப்பட்டவர், ஓய்வுபெற்றதும் வெறுமைப்படுத்தப்படுகின்றார். குடும்பம், உறவுகள் என அவரின் முழுக் கவனத்தையும் மானசீகமாகத் திசை திருப்புகின்றார். இது சாதாரணமான நிகழ்வாகின்றது.

ஓய்வு என்பது கடினமான உடலுழைப்புக்கே அன்றி நம்மிலெழும் மன  மகிழ்ச்சிக்கல்ல...அவர்களும் சிறு குழந்தைகள் போலவும்,, ஆலோசனை வழிப்படுத்தலை வழங்கும்  முதியோர் போலவும், அநுபவசாலிகள் போலவும் நம் கருத்தினை நிறைத்திருப்பார்...

ஓய்வூதியம் பெறும் வயதினை அண்மிக்கும் போது ஆரோக்கியமும் மெதுவாக அகல ஆரம்பித்து, நோய்ப்படுக்கையில் தேகம் விழ ஆரம்பிக்கின்றது..மருத்துவமே அவர்களின் வார்த்தைகளாகின்றன,

இத்தகைய மனப்பண்புகளால்  இலட்சியப்படுத்தப்பட்ட , சேவை மூலம் தன் சமூகத்தினருக்கு நல்ல விளைவுகளைப் பெற்றுக் கொடுத்த அரச ஊழியர்களைக் கௌரவிக்கும் நற்பண்பை முதன் முதலில் அநுராதபுரம் சீடீசீ குழுமம் வெளிப்படுத்தியுள்ளது .

அநுராதபுரம் மண்ணில் பிறந்து சேவையாற்றி ஓய்வுபெற்றவர்களும், வெளி மாவட்டத்திலிருந்து இங்கு வந்து சேவை செய்து ஓய்வுபெற்றவர்களும் கெளரவிக்கப்படவுள்ளார்கள். இக் கௌரவிப்பு எதிர்வரும் சனி (25.08.2012) மாலை 3.30 ற்கு நடைபெறவுள்ளது. சின்னம் வழங்குதல் , மலர் வெளியீடு என காலம் மறக்காத நினைவுத்தடங்களுள் இவர்களது சேவை பதிக்கப்படவுள்ளது

"வாழும் போதே வாழ்த்தப்படல் வேண்டும் " எனும் கொள்கை முனைப்புடன் நடைபெறவுள்ள இந்த விழாவில் பலர் கௌரவிக்கப்படவுள்ளார்கள். அதில் எனது தந்தை ஜனாப் ஓ.எஸ.எம். ஏ கபூர் (ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர்.. அதிபர் சேவைத்தரம் 1)அவர்களும் கௌரவிக்கப்படவுள்ளார்கள் எனும் செய்தி மகிழ்வு தருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!

இவ்வாறான ஓர் நிகழ்வுகூடலுக்குத் தன்னை அர்ப்பணித்துச் செயலாற்றும் அன்பு ஜவஹர்ஜா சேர் அவர்களும், டில்ஷானும், அவரது செயற்பாட்டுக்கு பக்க பலமாக நிற்கும் விழாக் குழுவினரும் நன்றியுடன் எம்மால் நினைவுகூறப்படுகின்றனர்.

இம் முன்மாதிரியும், முயற்சியும், வழிநடத்தப்படலும் தொடர்ந்தும் நடத்தப்பட்டு , காலத்தின் ஞாபகக் கரங்களுள் தன்னை எப்பொழுதும் முழுமைப்படுத்தப்படல் வேண்டுமென்பதே எமது அவவாகும் !

அல்லாஹ் வழித்துணையுடன் இவர்களின் இப்பயணம் தொடர வாழ்த்துக்கள்!


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!