About Me

Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

2013/04/10

மார்கரெட் ஹில்டா தாட்சர்


வாழ்க்கை எனும் மைப்புள்ளியை நோக்கி பயணிக்கும் நம் வாழ்வினை பல எதிர்பார்ப்புக்கள் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. வாழ்க்கை குறுகியதாய் இருந்தாலும் கூட, அவ்வாழ்வில் நாம் சாதிக்கும் சாதனைகள்தான் நம்மை இவ்வுலகிற்கு அடையாளப்படுத்தும் அடையாளங்களாகிய நிற்கின்றன.
அந்தவகையில் இன்றைய தினம் என் சிந்தனையில்,  மறைந்த பிரிட்டிஷ் இரும்புப் பெண்மணி மார்க்கரெட் ஹில்டா தாட்சர்........எட்டிப்பார்க்கின்றார்.

அரசியல் மனிதனை வாழவும் வைக்கின்றது, விழவும் வைக்கின்றது. உலகப் புகழடைய மிகச் சிறந்த வழிமுறையாக அரசியல் விளங்குகின்றது. அந்த அரசியல் உட்பிரவேசமே தாட்சரையும் நமக்கு அடையாளப்படுத்தியுள்ளது எனலாம்.

இங்கிலாந்து திருச்சபை மதத்தைச் சேர்ந்த இவர் , 13.08.1925 ல் ஜனனமாகி 13.04.2013 ல் இவ்வுலகை விட்டும் நீங்கியுள்ளார்.

1959 ம் ஆண்டு  முதல் அரசியல் பிரவேசமாக இவருக்கு கை கொடுத்தது பின்ச்லே தொகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எனும் பதவியாகும். பின்னர் 1970ல் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.  1975 ல் பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவரானார். பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல்வாதியான இவர் 1979 முதல் 1990 வரை 3 தடவைகள் பிரதமர் பதவி வகித்துள்ளார்.

அன்னாரின் ஆம்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக!


2013/03/10

மகளிர் தினம்

பெண்.................!

சுற்றிச் சுழலும் பூகோளத்தின்
அச்சாணி!

உயிரணுவுக்குள் உரு கொடுத்து
காத்திடும் தாய்மை!

அத்தகைய பெண்மைக்காக உலக நாட்காட்டியில் ஒதுக்கப்பட்ட தினமே இந்நாள்!

அன்று............

பெண்ணடிமைத்தன வீச்சங்களால் கறைபட்ட காலங்கள் அடக்குமுறைகளும் அவஸ்தைகளும் பெண்ணவள் பிரதிபலிப்புக்களாக உருமாற்றப்பட்ட காலங்கள்!

அத்தகைய சூழ்நிலைகளின் போது.....

1789-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி பிரெஞ்சு புரட்சியின் போது சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்று கோரிக்கைகளை முன்வைத்த பாரிஸ் பெண்கள் 
 
வேலைக்கேற்ற ஊதியம், 
எட்டு மணிநேர வேலை, 
பெண்களுக்கு வாக்குரிமை, 
பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும்

என்று பாரிஸ் தெருக்களில் கைகளில் கிடைத்த ஆயுதங்களுடன் பிரான்ஸ் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்! 

இவர் போராட்டம் கண்டு அஞ்சாத அரசன், 'இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும்' ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான். ஆனால் ஆத்திரமடைந்த பெண்கள் கூட்டத்தினர் தம் மீது அடக்குமுறை விதிக்கும் அரசனின் மெய்க் காப்பாளர்கள் இருவரை கொன்று விடவே, அரசன் சற்று அதிர்ந்து பணிந்து அவர்களின் கோரிக்கையை ஏற்பதாகக் கூறிய அரசன் தனது வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலையில் அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான்.

இந்தச் செய்தி ஐரோப்பிய முழுவதும் பரவ, போராட்டமானது இன்னும் பலமடைந்து, கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் போன்ற நாடுகளிலும் பரவியது.

இத்தாலியிலும் பெண்களும் தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு போராட்டக்களத்தில் இறங்கினர். 

இவ்வாறான முறுகல் நிலைகளின் போது,

பிரான்ஸ், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். 

அந்த நாள் 1848-ம் ஆண்டு மார்ச் 8-ம் நாளாகும்! அந்த மார்ச் 8-ம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது. 

ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இதுவென்றாலும் பெண்ணடிமைத்தனம் முற்றாக இன்னும் அறுத்தெறியப்படவில்லை.

2012/12/19

தஞ்சை பெரிய கோயில்



சரித்திரங்கள் புரட்டப்படும் போதுதான், நம்மை விட்டு விலகிப் போன, மறைந்திருக்கின்ற பல விடயங்களை அறிய முடிகின்றது. இவ்வாறான
ஒவ்வொரு சரித்திரங்களின் பின்னாலும் பல உயிர்களின் ஆற்றல்களும், உழைப்புக்களும், புதுமைகளும் இருக்கும். அவற்றைத் தேடியறிதலே சுவாரஸியமான ஓர் கலைதான்.

அந்த வகையில் என்னை வியப்புக்குள்ளாக்கிய தஞ்சாவூர் பெரிய கோயில் தொடர்பான சரித்திரங்களைத் தேடியறிவதற்காக வலம் வந்த இணைய உலா வில்  பெற்றுக் கொண்ட தகவல்களையே உங்களுடன் பகிரப் போகின்றேன்.

தஞ்சாவூர் காவிரி சமவெளிப் பகுதியில் 15 தளங்களைக் கொண்ட சுமார் 60 மீற்றர் நீளமான கோயிலே தஞ்சை பெரியார் கோயிலாகும். சோழர்களின் சிறப்பை வெளிப்படுத்தக் கூடிய இக்கோயிலில் பல சிற்பங்கள், ஓவியங்கள், கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.



இது  10ம் நூற்றாண்டில் (கி.பி 985 - 1070 வரை)  சோழர்கள் தமிழ்நாட்டை ஒரே குடையின் கீழ் ஆண்ட    பொற்காலத்திலேயே,   சோழ மன்னனாகிய இராஜ இராஜசோழனால்   கட்டப்பட்டது. அரசனின் சிவபக்தியுடன் 1006 ம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கோயிலைக் கட்டி முடிக்க 7 ஆண்டுகள் சென்றனவாம்.  இன்று இக்கோயிலின் வயது 1002 ஆகும். இராஜ இராஜ சோழன் மன்னன் கோயில் கட்டும் கலையில் பல புதுமைகளை ஏற்படுத்திய மன்னனாவான். இக்கோயில் கட்டடக் கலையானது, தென்னிந்திய கட்டடக் கலைகளுக்கு சிறந்த அத்திவாரமாக விளங்குகின்றது.


இக்கோயிலானது, இராஜ இராஜ சோழன் மன்னன் காலத்தில் இராஜ இராஜேஸ்வரம் என்றும், நாயக்கர்கள் ஆண்ட காலத்தில் தஞசை பெரியார் கோயில் என்றும்,  மராட்டியர் காலத்தில் பிருகதீசுவரம் என்றும் அழைக்கப்பட்டது.

இதன் நீளம் 150 அடியாகும். கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்துள்ள கூர்நுனிக் கோபுரமாக இதன் விமானம் அமைந்துள்ளது. இதன் இராஜ கோபுரம் மிகவும் அழகிய கலைநயத்துடன் காணப்படுகின்றது.

உண்மையில் தமிழர்களின் சாதனையாக இக்கோயிலைக் குறிப்பிடலாம். இங்குள்ள சிற்பங்களில் மகரங்களும், போர் வீரர்களும், வாயைப் பிளந்து கொண்டிருக்கும் குதிரைகளும், அவற்றின் மீதேறி பயணம் செய்பவர்களின் உருவங்களும் காணப்படுகின்றன. 50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோயிலிருந்ததாக கல்வெட்டுச் சான்றுகள் பகர்கின்றன. நாயக்கர் காலத்தில் ஒரே கல்லால் கட்டப்பட்டுள்ள நந்தியானது, 14 மீற்றர் நீளமும், 7 மீற்றர் அகலமும்,3 மீற்றர் உயரமுமானதாகும்.


1987ம் ஆண்டு  ஐக்கிய நாட்டு கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால், இக்கோயில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
இந்திய மத்திய அரசானது 1954ம் ஆண்டில் ஆயிரம் ரூபாய்த் தாளையும் ,1995ம் ஆண்டில் மாமன்னர் ராஜ ராஜ சோழன் உருவம் பதித்த இரண்டு ரூபாய் முத்திரையையும் , ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு 2010 ம் ஆண்டு 5 ரூபாய்முத்திரையும் நாணயத்தையும் நினைவாக வெளியிடப்பட்டது.

                               Tanjai1000.jpg

இத்தகைய சிறப்புமிகு கோயிலில், 2 வித்தியாசமான உருவங்களுள்ளன. அவற்றிலொன்று தலையில் தொப்பியுடன் காணப்படும் மேலைத்தேசத்தைச் சேர்ந்தவனின் உருவச் சிலையாகும்.
மற்றைய உருவம் இப் பெண்ணின் சிலையாகும்.


இச் சிலைகளுக்கும்  சோழ மன்னனுக்கும் என்ன தொடர்புண்டு? 
இவை புலப்படுத்தும் கருத்துக்கள் என்ன?

எனும் வினாக்கள் நம்முள் தொக்கி நிற்கின்றன. இச்சரித்திரத்தை இன்னும் ஆழமாகத் துளாவினால் நமக்குரிய விடை கிடைக்குமா! பொறுத்திருந்து பார்ப்போம்!

- Jancy Caffoor-

2012/12/12

மாயன் கலண்டர்


(இந்தப் பதிவை வாசிப்பவர்கள் கவனத்திற்கு, மாயன் கலண்டர் பற்றியே தற்போது பேசப்படுவதால், அது தொடர்பான பார்வையே இது. எல்லாவற்றி்ற்கும் மேலாக, படைத்த இறைவனை மீறி உலகை அழிக்கும் சக்தி ஏதுமில்லை எனும் நிலைப்பாட்டுடனேயே இப்பதிவை வெளியிடுகின்றேன்.

அல்ஹம்துலில்லாஹ்!

2012 டிசம்பர் 21....................!

உலகம் பரபரப்புடன் விழி வைத்துக் காத்திருக்கின்றது. உலக அழிவு என்ற ஒன்று இருப்பதை சகல சமயங்களும் ஏற்றுக் கொண்டாலும், அந்த தினம் நிச்சயமாக 2012 டிசம்பர் 21 ஆக இருக்காது என அடித்துக் கூறுகின்றது.

உலக அழிவு தொடர்பாக புனித குர் ஆனில் பல அறிகுறிகள் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் சில தஜ்ஜால் வருகை, கடும் புகை, ஈஸா நபி மீள் பிறப்பு ஆகும்.

கிறிஸ்தவ சமயமும் பின்வருமாறு கூறுகின்றது-

உலக அழிவு என்பது இறுதித் தீர்ப்பு நாள், அது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். நல்லவர்களாக மரணிக்க வேண்டும் என்கின்றது.

பௌத்தம் பின்வருமாறு கூறுகின்றது.

உலகம் உடையக் கூடியது. அதர்மம் செய்பவர்கள் அதிகரிக்கும் போது உலகம் தானாக உடைந்து விடும் என்கின்றது.

விஞ்ஞானிகளோ, மனிதனின் செயற்பாடுகள் காரணமாக ஏற்படும் இயற்கைச் சீற்றமே உலகை நசுக்கி விடக் கூடியது என்கின்றனர்.

ஆக மொத்தத்தில் உலகம் அழியாது என நாசாவும், விஞ்ஞானிகளும், சமயங்களும் உறுதியாகக் கூறும் போது மாயன் கலண்டர் மட்டும் அழியும் எனச் சுட்டி நிற்கின்றது. இவ்வாறான பரபரப்பினால் உலகம் அழியுதோ இல்லையோ மாயன் நாட்காட்டி தொடர்பான விபரம் பலருக்கு தெரிந்திருக்கின்றது.

மாயன் நாட்காட்டி  அல்லது கலண்டர் என்றால் என்ன எனும் தேடலில் நானும் ஈடுபடத் தொடங்கிய போது கிடைத்த தகவல்களை இங்கு பகிர்கின்றேன்.

உலக நாகரிக வரலாற்றில் அதிகம் பேசப்பட்ட எகிப்திய நாகரிகம் நிலவிய காலத்தில், கி்மு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னமேரிக்காவில் உள்ள மெக்சிக்கோ, குவாதிமாலா, ஹூந்திராஸ் போன்ற இடங்களில் வாழ்ந்த உயர் நாகரிகத்தை உடைய மக்கள் கூட்டமே மாயன் கூட்டமாகும். கி்மு 2600 வருடங்களுக்கு முன்னர் இவர்களின் மாயன் கலாசாரம் உருவாக்கப்பட்டது. கி.மு 150 வருடமளவில் இவர்களின் மாயன் கலாசாரம் உச்சநிலையை அடைந்தது.

3500 வருடங்களுக்கான வாழ்க்கைக் காலத்தைக் கொண்ட  இவர்கள் கடந்த 15ம் நூற்றாண்டில் அழிந்து போனார்கள். மாயன் இனத்தவர்கள் கட்டிடக்கலை. வான் சாஸ்திரம், கணித சூத்திரம், ஜோதிடம், எழுத்து போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கினர். 20 அடிமான எண் முறையைப் பயன்படுத்தினர். அவர்களின் பூஜ்ஜிய பயன்பாட்டு முறை மிகச் சிறப்பானதொன்று.

மாயன்கள் இரும்பு போன்று உலோகங்களைப் பயன்படுத்தாமலே, உறுதிவாய்ந்த மிகப் பெரிய பிரமிட்டுக்களையும் கட்டினர்.

சூரியன், சந்திரன் சுழற்சி பற்றி நுட்பமாக அறிந்து வைத்திருந்தனர். ட்ரெடெக்ஸ் என்பது மாயன் பஞ்சாங்கக் கலண்டராகும்.

உண்மையில் இவர்கள் விஞ்ஞானிகளை விடவும் புத்திசாலிகளாக இருந்தனர்.

கி.மு 350 - 400 ஆண்டுகளில் வாழ்ந்த மாயன் மன்னனின் கல்லறை கண்டுபிடிக்கப்ட்ட போது, அதில் பல சித்திர வேலைப்பாடுகள் அவதானிக்கப்பட்டதாம். நான்கைந்து நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தால் மாயன் இன பூர்வீகக் கலாசாரமும் முற்றாக அழிக்கப்பட்டது. ஐரோப்பிய குடியேற்றம், விசித்திர மூடநம்பிக்கைகள், பங்காளிகளின் சண்டைகள் போன்ற பல்வேறு காரணங்களால் மாயன் இனம் அழிவடைந்தது.

இவர்களால் உருவாக்கப்பட்ட நாட்காட்டியே மாயன் நாட்காட்டியாகும். இது கி.மு 313 ல் உருவாக்கப்பட்டு 2012 டிசம்பர் 21 உடன் ஓய்வடையப் போகின்றது.  நமது கலண்டருக்கும் முரண்படாத தன்மையைக்  கொண்டுள்ள
மாயன் கலண்டர்  உலகின் பல நிகழ்வுகளின் எதிர்வுகூறலாக விளங்கியதை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

பிரச்சினையே இனித்தான் ஏற்படப்போகின்றது!

இக்கலண்டரின் இறுதி நாளாக 2012.12.21 காலை 11:மணி 11 நிமிடம் 11 விநாடி எனக் குறிப்பிடப்பட்டிருப்பதால், இதுவே கடைசி நாளாக இருக்கலாம் எனும் யூகத்தில் மக்களால் உலக அழிவு தொடர்பான கதைகள் வெளியே கிளம்பியிருக்கின்றன. ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் நாம் பயன்படுத்தும் திகதி உள்ளிட்ட பல விடயங்களை உலகிற்கு முன்வைத்தவர்கள் இந்த மாயன் கூட்டத்தினர். இவர்கள் சூரியன் 2012 உடன் செயலற்றுப் போகும் என எதிர்வு கூறியுள்ளனர்.

சூரிய மண்டலத்திற்கு 7 நாள் என்பது பூமியைப் பொறுத்தவரை 25,662 வருடங்களாகும். இதனை மாயன் கலண்டர் 5 பிரிவுகளாக வகுத்துள்ளது.
ஒவ்வொரு பிரிவும் 5125 வருடங்களைக் கொண்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 21ந் திகதி 5 வது கட்டம் முடிவடைவதால் உலகம் அழியும் எனக் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

மாயன் கருத்துக்கணிப்பின்படி, கி.மு  3113 வருடங்களுக்கு முன்னர், பாரிய வெள்ளப்பெருக்கினால், நான்காவதாக வாழ்ந்த சமுதாயம் அழிந்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

உண்மையில் அன்றைய தினத்தில், சூரியன் எமது விண்மீன் மண்டலத்திற்கு நேரடியாகப் பயணிக்கின்றது. இந்நேரத்தில் விண்மீன் மையத்திலுள்ள சூப்பர்நோவா கருங்குழி, சூரியன் மற்றும் பூமி என்பன ஒரே நேர்கோட்டில் சந்திக்கவுள்ளன. அப்போது விண்மீன் மையத்தில் இருந்து வரும் காந்த அலைகளால் சூரியன், பூமி நன்கு பாதிக்கப்படவுள்ளது. இந்நேரத்தில் சூரியப்புயல்  ஏற்படும். இது 26,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் என மாயன் கலண்டர் கூறுகின்றது.


 இச்செயற்பாட்டின் பின்னணியை நோக்கி, விஞ்ஞானம் தனது கருத்துக்களை இவ்வாறு அலசுகின்றது.சூரியனிலிருந்து வெளிப்படும் மிகப்பிரகாசமான  சுவாலையின் கதிர்த்தாக்கத்தினால் செய்மதிகள் பாதிக்கப்படும். வானொலி அலைகள் பாதிக்கப்படுவதனால், வானொலி, தொலைபேசிச் சேவைகள் பாதிக்கப்படும். வெளித்தள்ளப்படும் ஒளி வட்ட வெளித் தள்ளல்களால் மனித இனம் பாதிக்கப்படும். கதிரியக்க நச்சு வாயுக்கள் வெளியேற்றப்படும்.  இவை 5 நாட்களுக்குள் புவியை அடையும். மின்சாரம் கூடத் தடைப்படலாம். இது விஞ்ஞானிகளின் பார்வையாகும்.

மேலும் மாயன் கலண்டர் இது தொடர்பாக கூறுவதாவது,

இப்பாதிப்பினால் பூமியிலும் காந்தப்புலங்கள் பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக துருவப் பகுதிகள் இடம்மாறும் என்றும், புவியின் துருவப்பகுதிகள் இடமாறுவதால், புவியில் பாரியளவில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுமென்றும், அதனால் ஏற்படக்கூடிய பாரிய அளவிலானப் புகை மற்றும் எரிமலைக் குழம்புகள் போன்றவற்றால் ஏற்படும் புழுதி சூரியனை மறைக்குமென்றும், இதன் காரணமாக 40 வருடங்களுக்கு சூரியனைப் பார்க்க முடியாதென்று மாயன் சமுகத்தினர் எதிர்பார்ப்பை முன்வைத்தனர். 

துருவங்களின் இடப்பெயர்ச்சியை  ஏற்றுக் கொண்ட  விஞ்ஞானம், அது 2012ம் ஆண்டுதான் என உறுதிப்படுத்தவில்லை.

மாயன்களின் விண்வெளி ஆய்வு தொடர்பான சில படங்கள் இதோ...

                                                                 ராக்கெட்


                                                       விண்வெளிக்கு பயண நிலை


                                                            விண்வெளிப் பயணம்




முற்றாக அழிந்த ஓர் இனம், உலக அழிவைப் பற்றிக் கூறியதால், மீண்டும் இன்றைய சந்ததியினரின் பார்வையில் தளிர்த்துள்ளது. ஓர் அழிந்த சந்ததியின் வரலாற்றை மீண்டும் வாசித்தறிவது புதுமையான அநுபவமே!

உண்மையில் உலகம் அழியும் என பல தீர்க்கதிசிகள் முன்னர் கூறிய  பல நாட்களெல்லாம் அமைதியுடன் எந்த ஆபத்துமின்றி கழிந்து விட்ட நிலையில் , மீண்டும் நாம் இப்போது  மாயன் கலண்டர் பற்றியும் பேசிக் கொண்டிருக்கின்றோம்.

 உண்மையில் சூரியனின் மேற்பரப்பில் நிகழும் மாற்றங்கள் திடீரென உலகம் ஒரேநாள் ஸ்தம்பிதமடையாது. இயற்கைச் சீற்றங்கள்  பல தன் கோர முகங்களைக் காட்ட வேண்டும். சமயங்கள் முன்வைக்கும் அறிகுறிகள் தென்பட வேண்டும். அப்பொழுதே இவ்வுலகின் சுவாசம் நிறுத்தப்படும். அது படிப்படியான நிகழ்வுகளே!

இயற்கையை விட அதனைப் படைத்த சக்தி வாய்ந்த அந்த இறைவன் அசைத்தாலன்றி, இந்த உலகம் எந்த மாற்றத்தையும் காட்டப் போவதில்லை.

இன்ஷா அல்லாஹ்........டிசம்பர் 22 நாம் மீண்டும் சந்திப்போம்! சந்திக்கலாம்! நம்மைச் சுற்றி இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டால், அந்த அனுபவத்தையும் பகிரலாம்.

வீடியோ

உலக அழிவு பற்றி திருமறையின் திருவசனத்திலொன்று
-------------------------------------------------------------------
"அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்;நீர் கூறும்:"அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கின்றது; அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது. அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும், அது உங்களிடம் வரும் அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கின்றார்கள், அதன் அறிவு நிச்சயம் அல்லாஹ்விடமே இருக்கின்றது. எனினும் மனிதர்களில் பெரும்பாலானோர் அதை அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக" (ஸூரதுல் அ ராப் - 187)

-Jancy Caffoor-


2012/12/05

வியப்பின் எல்லையில்!


சூரிய குடும்பத்தை விட்டு வெளியேறும் வொயஜர் - 1 விண்கலம்
------------------------------------------------------------------------------------------
வாழ்க்கை!

எல்லோருக்கும் படைத்தவனால் வகுக்கப்பட்ட ஓர் ஒப்பந்தம். வாழும் வரை எப்படியே நம்மைச் சூழவுள்ள உறவுகள், இயற்கை என்பவற்றை அனுசரித்தே நாம் வாழ வேண்டியவர்களாக இருக்கின்றோம். அப்போதே வாழ்வு நமக்குள் நெருங்கி நின்று, நிறைய பல விடயங்களைக் கற்றுத் தருகின்றது.

வாழ்க்கையை நாம் கற்றுக் கொள்ளும் போதுதான், நமது தேவைகளும் அதிகரிக்கின்றது. அத்தேவைகளை நிறைவேற்ற, அவற்றினை வெற்றி கொள்ள பல முயற்சிகளுடனான தேடல்களில் நம்மை நனைத்துக் கொள்கின்றோம். அவ்வாறான ஓர் முயற்சியில், சிந்தனையோட்டத்தின் பயனாக பெறப்பட்ட விளைவே அறிவியல் விஞ்ஞானம்! இவ்விஞ்ஞானம் இயற்கையை நாடி பிடித்து சகல விடயங்களுக்கும் ஆருடம் தெரிவிக்கின்றது. விளக்கமளிக்கின்றது. இவ்வாறான விஞ்ஞான செயற்பாட்டினை வழிநடத்தும் ஆற்றலும் சக்தியும் படைத்தவனாலேயே வழங்கப்பட்டதென்பதை நாம் மறுக்க இயலாது.

"அவனின்றி அணுவும் அசையாது"

அவ் அணுக்களைப் பிரித்துப் போடும் அறிவை, சக்தியை  விஞ்ஞானம் வழியாக மனிதன் கற்றுக்கொள்ள வழியமைத்துத் தந்தவனும் இறைவனே!

விஞ்ஞானமானது, இயற்கையை, உயிரினங்களின் படைப்பை படம் பிடித்துக் காட்டி,  விளக்கமளிக்கும் போதுதான்,  இறைவனின் அற்புதங்களைக் கண்டு, நாம், வியந்து போகின்றோம்.

மண்ணில் நிலையூன்றப்பட்ட மனிதன், தனக்கு அருளப்பட்ட அறிவை தக்க விதத்தில் பகுத்தாராய்ந்து இவ்வுலகையே தனக்குள் அடக்க முயலும் சாகசங்களை விஞ்ஞானம் பறைசாட்டி நிற்கின்றது.

அழகான நிலாதான் அருகே சென்று பார்க்கும் போது கற்களும் குழிகளும் நிறைந்த தளமாகக் காணப்படுகின்றது. அருகில்  இருக்கும் போது முக்கியத்துவம் பெறாத பல விடயங்கள் தொலைவாகும் போதுதான் அருமையாகின்றன. அதிசயங்களாக நம் விழிகளை ஈர்க்கின்றன. இதுவே மானுடத்தின் மனசின் ஆளுகை...

இப்புவியில் நிலையூன்றப்பட்ட மனிதன் தன்னுள் பல யுகங்களை உருவாக்கி,
வாழ்ந்த, வாழ்கின்ற வரலாறு நாம் கற்றவுண்மையாக உள்ளது. இரும்பு யுகத்தில் பல தொழினுட்பங்களை உலகிற்கு அறிமுகப்படுத்திய விஞ்ஞானம் தான், விண்ணுக்குள்ளும் மனிதனின் தடத்தைப் பதித்து விண்ணியலின் பார்வைக்குள்ளும் உலகை வீழ்த்தியுள்ளது.

விஞ்ஞானம் நான் கற்பிக்கின்ற பாடம். இதன் பல விந்தைகளை விரித்து மாணவர்களுள் உட்செலுத்தும் போது, அவர்களுக்கு பாடம் மட்டுமல்ல, கற்பிக்கும் ஆசிரியையும் பிடித்து விடுகின்றது. காரணம் விஞ்ஞானத்தின் விந்தையின்பால் ஏற்பட்டுள்ள ஈர்ப்புத்தான்.

வானம் ஏன் நீல நிறமாக உள்ளது?
வானவில் ஏன் வளைந்து காணப்படுகின்றது.?
நாம் எவ்வாறு நிமிர்ந்து நிற்கின்றோம்?
ஏன் பழுத்த இலை மஞ்சளாகக் காணப்படுகின்றது?
எவ்வாறு சுனாமி ஏற்பட்டது?

இவ்வாறு பல வினாக்கள் மாணவருள் அடுக்கடுக்காக வெளிப்படும் போது, அவற்றுக்களிக்கும் விடையின்பால் சுவாரஸியமுற்றவர்களாக மறு வினாவைத் தொடுத்து விடுவார்கள்.

சிந்தனை என்பது மனிதனுக்கு இறைவன் அளித்த கிரீடம்.ஏனெனில் சிந்திக்க மறந்தவனும், மறுத்தவனும் தனது பெறுமதியான வாழ்வை இழந்து தவிக்கின்றான். தனது சிந்தனையை நல்ல விதமாக வலுவூட்டி, பயனடையச் செய்பவர்கள் காலத்தின் கரங்களில் வெற்றியாளர்களாக அரவணைக்கப்படுகின்றனர். வரலாற்றின் இதழ்களில் இவர்களின் பெயர்கள் பதிக்கப்பட்டு, சந்ததி சந்ததியாக பல காலம் மக்கள் மனதில் நிலையூன்றப்படுகின்றனர்.

விஞ்ஞானம் கண்டறிந்தவற்றை புனித திருக்குர்ஆனும் அழகாக விளக்கிக் கூறியுள்ளதும் நோக்கற்பாலது.

இவ்வாறு வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களுடனும், செயலுடனும் பிணைந்துள்ள விஞ்ஞானத்தின் விண்சாதனைகளுள் ஒன்றைப் பற்றி பதிவிடுவதே என் நோக்கமின்று.

நாசா...........!

(அல்லது தேசிய வானூர்தியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் Or National Aeronautics and space Administration)

கற்றோருள் அறியாதோர் இலர். அமெரிக்கா வடிமைத்த விண்வெளி ஆய்வு மையமே இதுவாகும். "அனைவரின் நலனுக்காக" எனும் குறிக்கோளுடன் 1958ம் ஆண்டு ஜூலை மாதம் 28ந் திகதி உருவாக்கப்பட்டது. எனினும் இதன் செயற்பாடு அதே ஆண்டு ஒக்டோபர் 1லேயே மேற்கொள்ளப்பட்டது.. அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட இவ் வானியல் மையத்தின் தலைமையகம் வாஷிங்டனில் உள்ளது.

விண்வெளி ஆய்வு, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வானூர்திகளின் ஆராய்ச்சிகளின் முன்னோடியாக விளங்கும் இம் மையம், வானின் கால் பதிக்காத இடங்கள் அரிதாகவேயுள்ளது. முயற்சி, சிறந்த பயிற்சி, அர்ப்பணிப்பு, அதிக முதலீடு போன்ற பல்வேறு தூண்களால் நாசாவின் வெற்றிகரமான விண்வெளிப் பயணம் உறுதிப்படுத்தப்படுகின்றது.

இவ்வாறு வானியலின் சாகசம் பல புரியும் விண்வெளி ஆய்வு மையமான
நாசா, 1977 ம் ஆண்டு ஆகஸ்ட் 22 ம் திகதி வியாழனை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய விண்கலமே "வொயஜர்-1 " ஆகும்.

 8 ஜிகாபைட் சிறிய ரக ஜபோட்இன் தொழினுட்பமே பயன்படுத்தப்பட்டுள்ள இவ் விண்கலமே, முதன் முதலாக, யுரேனஸ், நெப்டியூன் போன்ற கோள்களை  படம் பிடித்து அனுப்பியதும், செவ்வாயில் மண் உள்ளதா என்பதை ஆராய்ந்ததுமாகும்.


          செவ்வாயில் மண் உள்ளதா என ஆராய அனுப்பப்பட்ட கியூரியாசிட்டி            இயந்திரம்

காபன், சல்பர், குளோரின், நீர் என்பன செவ்வாய் மண்ணில் காணப்பட்டாலும் கூட, இம் மண்ணிலுள்ள காபன் சேர்வைகள் உயிர் வாழ்வதற்கான சாத்தியங்களை அதிகளவு கொண்டிருக்கவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.


வொயஜர்-1 விண்கலத்தில்,1988 ம் ஆண்டில் நெப்ரியூன் கோளைக் கடந்த நிலையில், சக்தியை சேமிக்கும் விதமாக கமெராவொன்றும் பொருத்தப்பட்டது.

இவ் விண்கலம் தற்போது பூமியிலிருந்து 18 பில்லியன் கிலோ மீற்றரில் உள்ளது. இதனால், இவ்விண்கலத்தில் இருந்து பூமிக்கும் அனுப்பப்படும் செய்திகள் நம்மை வந்தடைய 17 மணித்தியாலம் பிடிக்குமாம் .(யப்பா...........எவ்வளவு தூரம்)

 35 வருடங்களுக்கு முன்னர் சூரிய குடும்பத்துள் உளவு பார்க்க அனுப்பப்பட்ட இவ் விண்கலம் தன் கடமையை கச்சிதமாக நிறைவு செய்து விட்டு வெளியேறவுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

மனிதன் ஏவிய விண்கலத்துள், சூரிய குடும்பத்தை விட்டு வெளியேறும் விண்கலம் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியனின் காந்தப்புல எல்லைக்கும், அதற்கு அப்பாலுள்ள விண்வெளியின் எல்லைக்கும் இடையில் இது உள்ளது. அதாவது இது சூரியனின் விளிம்பில் உள்ளது. சூரியனிலுள்ள மின்னூட்ட துகள்களை விட வெளி மண்டலத்திலுள்ள அதிக ஆற்றலுள்ள துகல்களையே இது அதிகமாக பதிவு செய்துள்ளதாம். இந்நிலையையே தற்போது இதன் வெளியேற்றத்தை ஊர்ஜிதம் செய்துள்ளது.

வயது அதிகரிக்கும் போது, நமது செயற்றிறனும் குன்றி விடுகின்றது என்பது போல், வொயஜர்- 1 உம்  மனிதன் கண்டுபிடித்த கலமாகையால் 35 வயதானதும் அதற்கு ஓய்வளிக்கும் காலமும் வந்து விட்டது என நாம் முடிவுக்கு வருவோமா!!


-Jancy Caffoor-










2012/10/11

இமைக்க மறுத்த விழிகள்


சூரிய தீப்பந்தமொன்று
மெதுவாய் அணைந்த பிரமை
எனக்குள்!

வெட்ட வெளிகளின் பசுமையில்......
ஒட்டிக்கொண்டது வெம்மையின்
பிசுபிசுப்பொன்று!

என் பேனாக்கள்
பயணித்த வரம்போரங்களெல்லாம்.........
முள்வேலியாய்
ஈரம்சொட்டுதுங்கள் மௌன யாகம் !                          

வண்ணச்சிட்டுக்களுக்காய்
பா விசைத்து ...........
களிப்பால் பறக்க வைத்த வுங்கள்
சிறகுகளில்  யாரிட்டது மரணச்சிலுவை !

எழுத்தணியில்
அழுத்தமாய் முற்போக்கு நுழைத்து.........
இலக்கிய வேள்விக்குள்
இரசனையோடு யதார்த்தம் நுழைத்த
நீங்களின்று..............
இரகஸியமாய் சுவாசமறுத்தே
மீளாத்துயிலுக்குள் நிரம்பிக் கொண்டீர்கள்!

வெள்ளிச்சிறகடித்த வுங்கள்
வெண்புறாவோ..............
இன்று
சுதந்திரமாய் தேசம் தொடுகையில்.........
தொலைதூரத்தி லும் வுரு துறந்து
ஏதுமறியாத குழந்தையாய் நீங்கள்!

தினகரன்
புதுப்புனலில் தடம் நெய்து - எனை
புதுவுலகில்   நிலைநாட்டிய
உங்கள் ........
பேனாக்களின் ஈரலிப்பினை
உலர்த்தியது யாரோ!

எனை வார்த்த வுங்கள்
இலக்கியச்சாளரம்
சாய்ந்துதான் போனாலும் - என்
விழிச்சாரளத்தின்
விம்ப வெளியெங்கும்..........
உலா வருகின்றதே - உங்கள்
ஆசிபெற்றவென்
இலக்கிய நீரோடையின்று !

உதிர்ந்து விட்ட பல வருடங்கள்
இன்னும் நேற்றுப் போல்...................
நெஞ்சிலாணி யறைந்தே செல்கின்றது
உங்கள் ஞாபகங்களை
இலக்கியங்களாய்ப் பரப்பி!

உங்கள்.........
மரணத் தூரிகையின் வடு
இன்னும் என்னுள்
உலராத மேடுகளாய் வலிப்புடன்
விட்டுச் செல்கின்றது வெடிப்புக்களை!

மீள வரமாட்டீர்கள்!
புரிகிறது - இருந்துமென்
பதிவுகளின் ஸ்பரிசிப்பெல்லாம்.........
குருதாட்சணையாய்
உங்கள் ஞாபகத்தில் தொக்கி நிற்கும்
நல்ல மாணவராய்!

- Ms.A.C.Jancy -


(காலம் சென்ற எழுத்தாளர்  ஸம்ஸ் சேர்..............அவர்கள்!

முன்னர் தினகரன் பத்திரிகையில் (சனிக்கிழமையில் )பிரசுரிக்கப்பட்ட  புதுப்புனல் இலக்கிய சோலையில் என்னையும் உட்பதித்தவர்....அன்று துணிச்சலாக அவர் ஏற்றுக்கொண்ட என் கதைகளும், கவிதைகளும் தான் இன்று எனக்குள் ஓர் அடையாளத்தைப்பதித்து சர்வதேசத்தில் என்னையும் உலாவ , எழுத வைக்கின்றது!)

2012/09/15

வண்ணத்துப்பூச்சி


 

குழந்தை இறைவனின் அற்புதப் படைப்பு...........

தாம்பத்திய நிழலுள் இணைந்த ஓராணும், பெண்ணும் தம் அன்பின் பரிமாற்றத்தின் மூலம் உற்பத்தியாக்கும் உயிரே குழந்தை. தந்தை உயிர் கொடுப்பான். ஆனால் தாயோ, அக்குழந்தைக்கு நல்ல வாழ்வின் வழிமுறைகளை அன்புடன் கற்றுக்கொடுக்க பயிற்றுவிக்கும் இதயமாக இருப்பாள்...அன்னையின் மேன்மையை மறுக்கும் எந்த ஆண்மகனும் இல்லையென்றே கருதுகின்றேன்..

குழந்தையின் மழலையில், மனம் லயிக்காதோர் யாருளர். அதன் கள்ளங்கபடமற்ற வெள்ளையுள்ளம் அள்ளித்தரும் அற்புத ரசிப்புக்களில் மனம் கிறங்காதோர் யாருளர்!

குழந்தை மனம் வெண்களி போன்றது. நாம் அதனை நமக்கேற்றவாறு மாற்றிக்கொள்ளமுடியும். குழந்தையின் ஒவ்வொரு செயல்களையும் நன்கு உற்றுப்பாருங்கள். நாம் செய்பவற்றையே, அவ்வாறே செய்யத்துடிப்பார். பிடிவாத குணமும், அழுது சாதிக்கும் தன்மையும் குழந்தையிடத்தில் தாராளமாகக் காணப்படும் பண்புகளாகும்!

குழந்தைகள் தம்முலகமாக வரித்துக் கொள்வது, தம்மைச் சூழவுள்ள பெற்றோர் உள்ளிட்ட நெருங்கிய உறவுகளை மாத்திரமே! நல்லது கெட்டது என இனங் காணாமலே தமது செயல்களை, தாம் நினைப்பவற்றை உடனுக்குடன் செய்து கொள்கின்றனர். குழந்தைகள் பண்ணும் குறும்புகள், விளையாட்டுக்குள் நமக்குள் ஆத்திரமாக மாறும் போது நாமவர்களைத் தண்டிக்கின்றோம். சின்னப் பிஞ்சுகளின், பஞ்சு மேனியின் ரணங்கள் பற்றி நாம் அந்நேரம்  அக்கறை கொள்வதில்லை

குழந்தைகள் அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள். அதனாற்றான், எங்கு அன்பு கிடைக்கின்றதோ, அத்திசை நோக்கி தம் மனவேர்களை நகர்த்தி யின்புறுகின்றனர். குழந்தைப் பருவத்தின் அடி மனதில் கௌவிப்பிடித்திருக்கும் சில நினைவுகள், பிள்ளையின் பிற்கால வளர்ச்சிப் பருவத்தில் பல்வேறு நடத்தைகள் உருவாகக் காரணமாகவுள்ளதை பியாஜே உள்ளிட்ட உளவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே சூழ்நிலைகள் தான்  குழந்தையின் மனநிலையை போஷிக்கும் மருந்து. எனவே ஒவ்வொரு பெற்றோரும் தமது குழந்தையின் வளர்ப்பில் அதிக கரிசனை காட்டி கண்காணிக்க வேண்டும். நல்லவற்றை ஊக்குவித்தும், தீயவற்றை அகற்றியும் கற்றுக்கொடுப்பது பிள்ளையாகும். குழந்தையை வளர்த்தெடுக்கும் அன்னை, தந்தை இருவரினதும் தலையாய கடமையாகும்! பிள்ளையைப் பண்படுத்துவதும், புண்படுத்துவதும் பெரியோர் கரங்களிலேயே உள்ளது. எனவே குழந்தைக்கு அனுபவம் வழங்கும் பாடசாலையே நாமே!

ஏனெனில்
நாம்

  • குறை கூறும் குழந்தை கண்டனத்தையும்,
  • விரோதமாக வளர்க்கும் குழந்தை சண்டையையும்
  • கேலி செய்யும் குழந்தை நாணத்தையும்
  • அவமானப்படுத்தும் குழந்தை வக்கிரத்தையும்
  • சகிப்புத்தன்மையைக் கற்றுக் கொடுக்கும் குழந்தை பொறுமையையும்
  • அமைதிச் சூழலில் வளர்க்கும் குழந்தை தன்னை விரும்பவும்
  • நட்பை போதித்து வரும் குழந்தை அன்பையையும் கற்றுக் கொள்ள 

காரணமாக இருக்கின்றோம்

குழந்தைச் செல்வமில்லாத வீடுகள் இருண்டிருக்கும். அந்த மழலைகளுக்கு ஆரோக்கியமான பார்வை கொடுப்பது நம் பணியாகும். வருங்காலத்தில் உங்கள் குழந்தை பற்றிய எண்ணங்களும், அபிலாஷைகளும் வெற்றி பெற வேண்டுமானால், இன்றே அதன் ஒவ்வொரு துடிப்புக்களையும் நன்கறிந்து வழிகாட்டவேண்டிய பொறுப்பு உயிரூட்டியவர்களின் பொற்கரங்களிலேயே தங்கியுள்ளது. குழந்தைகளின் விழிகள் மூலம் சமுகத்திற்கும் ஒளி கொடுப்போம். குழந்தை பிள்ளையாகும் போது, அவன் பயணிக்கும் பாதச்சுவடுகளை அப்பிள்ளையின் ஆற்றலுக்கேற்ப, நீங்களே செதுக்குங்கள்...........

அன்பை அதிகமாகவே அள்ளி வழங்கி, அன்பை அடுத்தவர் மீது சொறியக் கற்றுக் கொடுங்கள். வருங்காலத்தில் பிள்ளையின் வருகைக்காக இவ்வுலகே, மாலையோடு காத்திருக்கும். சாதனைகளின் கனத்தில் பிள்ளையின் வாழ்க்கைச் சரித்திரங்கள் வாழ்த்துக்களைத் தூவி கரகோஷிக்கும். பிள்ளைகள் சுமைகளல்ல. தட்டிக் கொடுக்கப்பட வேண்டிய சிந்தனையோட்டங்கள். இன்றே அவர்கள் வருங்காலத்தை, நம் நிகழ்காலத்துடனிணைத்து வாழ்வைக் கற்றுக் கொடுப்போம். வாருங்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே !



பிள்ளையருமை உணர்த்தும் பாடலிது......... இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூக்களில் .............ஆராரோ என்று இவர்கள் பாடுவதையும் கொஞ்சம் கேளுங்கள் !

- Ms. Jancy Caffoor -


குழந்தை



குழந்தை இறைவனின் அற்புதப் படைப்பு. தாம்பத்திய நிழலுள் இணைந்த ஓராணும் , பெண்ணும் தம் அன்பின் பரிமாற்றத்தின் மூலம் உற்பத்தியாக்கும் உயிரே குழந்தை. தந்தை உயிர் கொடுப்பான். ஆனால் தாயோ, அக்குழந்தைக்கு நல்ல வாழ்வின் வழிமுறைகளை அன்புடன் கற்றுக்கொடுக்க பயிற்றுவிக்கும் இதயமாக இருப்பாள். அன்னையின் மேன்மையை மறுக்கும் எந்த ஆண்மகனும் இல்லையென்றே கருதுகின்றேன்..

குழந்தையின் மழலையில், மனம் லயிக்காதோர் யாருளர்...அதன் கள்ளங்கபடமற்ற வெள்ளையுள்ளம் அள்ளித்தரும் அற்புத ரசிப்புக்களில் மனம் கிறங்காதோர் யாருளர்..........!

குழந்தை மனம் வெண்களி போன்றது.. நாம் அதனை நமக்கேற்றவாறு மாற்றிக்கொள்ளமுடியும். குழந்தையின் ஒவ்வொரு செயல்களையும் நன்கு உற்றுப்பாருங்கள். நாம் செய்பவற்றையே, அவ்வாறே செய்யத்துடிப்பார். பிடிவாத குணமும், அழுது சாதிக்கும் தன்மையும் குழந்தையிடத்தில் தாராளமாகக் காணப்படும் பண்புகளாகும்!

குழந்தைகள் தம்முலகமாக வரித்துக் கொள்வது, தம்மைச் சூழவுள்ள பெற்றோர் உள்ளிட்ட நெருங்கிய உறவுகளை மாத்திரமே! நல்லது கெட்டது என இனங் காணாமலே தமது செயல்களை, தாம் நினைப்பவற்றை உடனுக்குடன் செய்து கொள்கின்றனர். குழந்தைகள் பண்ணும் குறும்புகள், விளையாட்டுக்குள் நமக்குள் ஆத்திரமாக மாறும் போது நாமவர்களைத் தண்டிக்கின்றோம். சின்னப் பிஞ்சுகளின், பஞ்சு மேனியின் ரணங்கள் பற்றி நாம் அந்நேரம்....அக்கறை கொள்வதில்லை

குழந்தைகள் அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள். அதனாற்றான், எங்கு அன்பு கிடைக்கின்றதோ, அத்திசை நோக்கி தம் மனவேர்களை நகர்த்தியின்புறுகின்றனர். குழந்தைப் பருவத்தின் அடி மனதில் கௌவிப்பிடித்திருக்கும் சில நினைவுகள், பிள்ளையின் பிற்கால வளர்ச்சிப்பருவத்தில் பல்வேறு நடத்தைகள் உருவாகக் காரணமாகவுள்ளதை பியாஜே உள்ளிட்ட உளவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே சூழ்நிலைகள் தான்  குழந்தையின் மனநிலையை போஷிக்கும் மருந்து.. எனவே ஒவ்வொரு பெற்றோரும் தமது குழந்தையின் வளர்ப்பில் அதிக கரிசனை காட்டி கண்காணிக்க வேண்டும். நல்லவற்றை ஊக்குவித்தும், தீயவற்றை அகற்றியும் கற்றுக்கொடுப்பது பிள்ளையாகும் குழந்தையை வளர்த்தெடுக்கும் அன்னை, தந்தை இருவரினதும் தலையாய கடமையாகும்! பிள்ளையைப் பண்படுத்துவதும், புண்படுத்துவதும் பெரியோர் கரங்களிலேயே உள்ளது. எனவே குழந்தைக்கு அனுபவம் வழங்கும் பாடசாலையே நாமே!

ஏனெனில்
நாம்
  • குறை கூறும் குழந்தை கண்டனத்தையும்,
  • விரோதமாக வளர்க்கும் குழந்தை சண்டையையும்
  • கேலி செய்யும் குழந்தை நாணத்தையும்
  • அவமானப்படுத்தும் குழந்தை வக்கிரத்தையும்
  • சகிப்புத்தன்மையைக் கற்றுக் கொடுக்கும் குழந்தை பொறுமையையும்
  • அமைதிச் சூழலில் வளர்க்கும் குழந்தை தன்னை விரும்பவும்
  • நட்பை போதித்து வரும் குழந்தை அன்பையையும் கற்றுக் கொள்ள 
காரணமாக இருக்கின்றோம்
குழந்தைச் செல்வமில்லாத வீடுகள் இருண்டிருக்கும். அந்த மழலைகளுக்கு ஆரோக்கியமான பார்வை கொடுப்பது நம் பணியாகும். வருங்காலத்தில் உங்கள் குழந்தை பற்றிய எண்ணங்களும், அபிலாஷைகளும் வெற்றி பெற வேண்டுமானால், இன்றே அதன் ஒவ்வொரு துடிப்புக்களையும் நன்கறிந்து வழிகாட்டவேண்டிய பொறுப்பு உயிரூட்டியவர்களின் பொற்கரங்களிலேயே தங்கியுள்ளது. குழந்தைகளின் விழிகள் மூலம் சமுகத்திற்கும் ஒளி கொடுப்போம். குழந்தை பிள்ளையாகும் போது, அவன் பயணிக்கும் பாதச்சுவடுகளை அப்பிள்ளையின் ஆற்றலுக்கேற்ப, நீங்களே செதுக்குங்கள்...........

அன்பை அதிகமாகவே அள்ளி வழங்கி, அன்பை அடுத்தவர் மீது சொறியக் கற்றுக் கொடுங்கள். வருங்காலத்தில் பிள்ளையின் வருகைக்காக இவ்வுலகே, மாலையோடு காத்திருக்கும். சாதனைகளின் கனத்தில் பிள்ளையின் வாழ்க்கைச் சரித்திரங்கள் வாழ்த்துக்களைத் தூவி கரகோஷிக்கும் பிள்ளைகள் சுமைகளல்ல. தட்டிக் கொடுக்கப்பட வேண்டிய சிந்தனையோட்டங்கள். இன்றே அவர்கள் வருங்காலத்தை, நம் நிகழ்காலத்துடனிணைத்து வாழ்வைக் கற்றுக் கொடுப்போம். வாருங்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே !



பிள்ளையருமை உணர்த்தும் பாடலிது......... இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூக்களில் .............ஆராரோ என்று இவர்கள் பாடுவதையும் கொஞ்சம் கேளுங்கள் !

Ms. Jancy Caffoor -


2012/09/08

உலக எழுத்தறிவு தினம்


செப்ரம்பர் 8ம் திகதியன்று உலக எழுத்தறிவு தினம் கொண்டாடப்படுகின்றது. 

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, வளர்ந்தோர்க்கு எழுத்தறிவைப் போதிக்கும் இலக்கினடிப்படையில் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 1965 ம் ஆண்டு தெஹ்ரான் நகரில் இடம்பெற்ற கல்வியமைச்சர்களின் மாநாட்டில் தீர்மானம்பெறப்பட்ட து. இதனடிப்படையில் 1965 நவம்பர் 17 ல் கூடிய யுனெஸ்கோ செப்ரெம்பர் 8 ஐ இத்தினமாக கொண்டாட வேண்டுமென தீர்மானித்தது. அத்தீர்மானமே, உருப்பெற்று, உயிர்பெற்று  1966 ம் ஆண்டிலிருந்து  எழுத்தறிவு தினமாக நம்முன்னால் பார்வை தந்துள்ளது.

"ஓதுவீராக" என்பது அல்குர்ஆன் அருளிய முதல் வசனமிதுதான்.

மனித வாழ்வின் அடிப்படையானது  கல்வியறிவின் மீதே உறுதியாகக் கட்டியெழுப்பப்படுகின்றது.  நம்மை, நம்மைச் சார்ந்தோரை, நம் சூழலைப் புரிந்து கொள்ளவும், அதற்கேற்ப தீர்மானங்களைப் பெறவும், நமக்குப் பொருத்தமான வாழ்வியல் அனுபவங்களை உள்வாங்கிக் கொள்ளவும், வாழ்வை செப்பனிடவும் , சிறப்பாக வாழவும் கல்வியறிவு மிகஅவசியம்....

கல்விக்கான வழிப்படுத்தலில் மொழி அத்தியாவசியமானதொன்றாகின்றது. எழுத்து, வாசிப்பு, கிரகித்தல், பேச்சு போன்ற திறன்கள் மொழியால் போஷிக்கப்பட்டு வந்தாலும் கூட, இவற்றுக்கெல்லாம் கிரீடம் வைத்ததைப் போன்ற தேர்ச்சி எழுத்தறிவிலேயே அதிகமாக தங்கியுள்ளது. ஏனெனில் தான் கேட்ட, வாசித்த, கிரகித்த விடயங்களை உள்வாங்கியதால் பெறப்பட்ட எண்ணங்களை எழுத்து வடிவமாக மாற்றும்போதே, அம் மொழித்திறன் முதன்மையடைகின்றது.

ஜப்பான், அமெரிக்கா போன்ற வளர்முக நாடுகளில் வாழும் மக்களின் எழுத்தறிவு வீதம் அதிகமாகவிருப்பதாலேயே, அக்கற்றலறிவின் பயனால் , தமக்கும், நாட்டுக்குமேற்ற பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்த அம்மக்களால் முடிகின்றது...

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வரிசையில் இலங்கையின் எழுத்தறிவு வீதம் அதிகளவிலுள்ளது. தெற்காசியாவிலேயே இலங்கையின் எழுத்தறிவே முதல் நிலையிலிருப்பது இலங்கையர்க்கு சிறப்பான செய்தியே!

எமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இலவசக்கல்வியின் வரப்பிரசாதமேயிது. 6 வயது தொடக்கம் 14 வரை இங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்ற கட்டாயக் கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வி எனும் நடைமுறையானது, மக்களின் எழுத்தறிவின் உயர்விற்குக் காரணமாகியுள்ளது. இலங்கை நகரப்புறங்களில் எழுத்தறிவு வீதம் 95% ஆகவும், கிராமப் புறங்களில் 93% ஆகவும் உள்ளது. எனினும் இத்தொகையை விட குறைவான படித்தவர்களே மலையகப் பெருந்தோட்டத்துறைகளில் காணப்படுகின்றனர். மலையக மக்களின் வறுமைப்பட்ட நிலையின் தாக்கமாகக் கூட இது காணப்படலாம். தமது வறுமை காரணமாக, தமது பிள்ளைகளுக்கு முறைப்படியான அடிப்படைக் கல்வியை வழங்காது, சட்டத்திற்கு மறைவாக வீட்டுத் தொழிலாளிகளாக உருவாக்குவதில் இம் மக்களிற்பலர் முனைப்புடன் செயற்படுவதால் மலையக மக்களின் எழுத்தறிவு வீதம் 76% ஆகக் காணப்படுகின்றது.  இம் மலையக மக்களின் பின்னடைவான நிலையினால் இலங்கையின் எழுத்தறிவு வீதம் ஏறக்குறைய 90.6% ஆகக் காணப்படுகின்றது.

கிராமம் என்பது ஓர் நாட்டின்  இதயம்..கிராமத்தின் விழுதுகளில் கல்வியறிவு ஊன்றிப்பற்றிப்பிடிக்கப்படுமானால், மக்களின் வாழ்விலும் அபிவிருத்தி உயர்மட்டத்தில் பேணப்படும்.

எம் மொழியாயினும் இலகுவாக வசனங்களை எழுதவோ, வாசிக்கவோ முடியாத நிலையையே எழுத்தறிவின்மையென ஐ.நா சாசனம் வரையறுக்கின்றது. சிறப்பாகத் தொடர்பாடலைப் பேணும் ஓர் சமுகத்தில் எழுத்தறிவும் சிறப்பாகக் காணப்படுகின்றது.

இன்றைய கல்விமுறையானது தேர்ச்சிக்கல்விமுறையாகும். தேர்ச்சியென்பது ஒரு பிள்ளை தான் பெற்றுக்கொள்ளுமறிவை ஆற்றலாக மாற்றி தன் வாழ்நாள் முழுவதும் பிரயோகிக்கும் திறனாகும். எனவே பாடசாலைகளில் பல்வேறு நுட்ப முறைகளினூடாக போதனையும் வழிகாட்டலும் இடம்பெறுவதால் மாணவர்களிடம் இத்தகைய மொழித் தேர்ச்சி கிடைப்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. எனினும் ஆசிரியர் செயற்பாடு மாத்திரமல்ல, பிள்ளையினதும், அவர்கள் வீட்டுச்சூழலினதும் முயற்சியிலும், பயிற்சியிலுமே இவ்எழுத்தறிவின் உயர்தர வெற்றி தங்கியுள்ளது.

"எண்ணும் எழுத்தும் கண்ணெணத் தகும் " என்பது ஆன்றோர் வாக்கு.

இன்றைய நவீனத்துவத்தின் பல சவால்களை வெற்றிகரமாக எதிர்நோக்கி, அவற்றிலிருந்து சிறப்பான பயன்களைப் பெறவேண்டுமானால் நமக்கு இவையிரண்டும்  அடிப்படையாகின்றது. கணனிப்பயன்பாட்டின் உச்சளவு கூட இக்கல்வியறிவுடன் வரையறைக்கப்பட்டுள்ளது. எழுத்தினைக் கற்றவன் தன்னம்பிக்கையை வளர்க்கின்றான். அந்நம்பிக்கையின் விளைவாக இவ்வுலகின் சவால்களை எதிர்கொள்ளுமாற்றலையும் தனக்குள் திறமையாக வளர்க்கின்றான். இன்று பல துறைகளில் நிகழும் ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புக்களும் மொழி வளர்ச்சியுடன் தொடர்புபட்டுள்ளது என்பதனால் உலகமயமாதலிலும் இம் மொழி தாக்கம் செலுத்துகின்றது.

தனியாளொருவர் தனது இலக்கை அடைவதற்காக பல்வேறு திறன்களை வளர்க்கவேண்டியவராக இருக்கின்றார். தனது அறிவை அவர் உள்வாங்கி, தன்னுள் ஆழப்பதிப்பதன் மூலம் அதனை ஆற்றலாக மாற்றி. அவ்வாற்றலை தனக்கும் சமுகத்திற்கும் ஏற்றவிதத்தில் பொருத்தமுடையதாக மாற்றும்போதே, அந்நபரை சமுகம் தனது ஆரோக்கிய அங்கத்தவனாக ஏற்றுக்கொள்கின்றது. தனிமனிதனொருவனின்  ஆரோக்கியத்தின் அடியொற்றலிலிருந்தே கலை, கலாசார, பண்பாடும் தனது முகத்தைக் காட்டத் தொடங்குகின்றது.  

எனவே கற்காத ஒருவன் சமுக நிகழ்வுகளிலிருந்து தானாகவே விலகிக்கொள்கின்றான். அல்லது விலக்கப்படுகின்றான்.  இதுவே  இன்றைய யதார்த்தமாகின்றது . இவ்வடிப்படையில் நோக்கும் போது, எழுத்தறிவுப் பிரச்சினையானது ஓர் சமுகப்பிரச்சினையாகவே நோக்கப்படுகின்றது. நோக்கப்படல் வேண்டும்.

கல்வியை இடைவிட்டவர்கள், கற்றலில் நாட்டமில்லாதோர் போன்ற மக்களே இவ்வாறாக எழுத்தறிவில்லாமல் காணப்படுகின்றனர். இவ்வாறாக உலகில் 776 மில்லியன்  வயதுவந்த மக்கள் எழுத்தறிவில்லாமல் இருக்கின்றார்கள். 103 மில்லியன் சிறுவர்களும் தமது கல்வியை பாதியில் நிறுத்தியவர்களாக உள்ளனர். உலகம் ஓர்பக்கம் உலகமயமாதலால் நவீனத்துவத்துள் சுருங்கிக் கிடக்க, மறுபுறம் இவ்வாறான பின்னடைவுகளால் மனித அபிவிருத்தியை பாதக வீழ்ச்சியை நோக்கி தள்ளிவிடுகின்றது..

இம் மக்களுக்குரிய பரிகாரக்கல்வியை வழங்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு நாட்டரசுக்குண்டு. இவர்கள் கவனிக்கப்படவேண்டியவர்கள். எனவே இவர்களுக்காக, மேம்படுத்தப்பட்ட முதியோர் கல்வியும், அனைவருக்குமான கல்வியும், பரிகாரக்கல்வியும் வினைத்திறனுடன் முன்னெடுக்கப்படல் வேண்டும். இவ்வாறான முன்னெடுப்புக்கள் ஒவ்வொரு நாட்டு அரசாலும் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதும் நாம்  சிந்திக்க வேண்டிய வினாவாகும். 

இன்றைய போட்டிமிகு உலகில் அரசியல், கலை, சமுக, பொருளாதார எழுச்சிகளுக்கும், சவால்களுக்கும் முகங்கொடுக்கும் இவ்வரசுக்கள் இவ்விடயம் தொடர்பாக தமது மானசீகப்பார்வையைச் செலுத்தி, அதற்கான செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக மேற்கொள்வார்களா என்பதும், அவ்வாறாக வடிவமைக்கப்படும் செயற்றிட்டங்களில் பாமர, படிப்பறிவற்ற இம்மக்கள் ஆர்வங்காட்டுவார்களா என்பதும் சிந்திக்க வேண்டியதொன்று!இப்பின்னடைவால் நாடுகளின் எதிர்காலம் வெட்கப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றது.

அரசியல், போஷாக்கின்மை, வறுமை, சமூகநிலை, கலாசாரம், இனப் போராட்டங்கள். அடிமைப்படுத்தப்படல் போன்ற பல கூறுகளின் அழுத்தங்களே, இவ் எழுத்தறிவின்மையின் பின்னணியாகக் காணப்படுகின்றன. 

மனிதவுரிமை, சிறுவர் உரிமை சாசனத்தில் கல்வி பெறுதலும் ஓர் உரிமையாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது. அவ்வுரிமையை அனுபவிப்பதும், அனுபவிக்கச் செய்வதும் நமது கடமையாகின்றது.

ஆசியாவில் மிகக்குறைவான படிக்காதோரே உள்ளனர். ஏனெனில் இங்கு கல்வியின் முக்கியத்துவம் பெருமளவு பெற்றோரால் உணரப்பட்டு, பிள்ளைகளுக்கு கல்வி வழங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் இந்தியாவில் காணப்படும் பல கிராமங்களில் படித்த பெண்கள் தொகை மிகக் குறைவாகவேயுள்ளது. இந்தியாவின் சனத்தெகை அதிகமாக இருப்பதால் அவர்களின் எழுத்தறிவு வீதம் பின்தள்ள காரணமாகின்றது.

மனித அபிவிருத்தி உள்ளடக்க அறிக்கையின் பிரகாரம் ஜோர்ஜியா மக்கள் 100% எழுத்தறிவைப் பெற்று முதலாமிடத்திலும், இலங்கை 90.8% ஐ பெற்று 99 வது இடத்திலும், இந்தியா 65.2% பெற்று 159 வது இடத்திலும் உள்ளது.

இவற்றை நோக்கும் போது மனிதன் பெறும் கல்வியானது, அவனது ஆளுமையிலும் செல்வாக்குச் செலுத்துகின்றது என்பது உறுதியாகின்றது.. ஒருவர் தனது எண்ணங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தி, தனக்கேயுரிய வாழ்வை வகுத்துக் கொள்ள இன்றியமையாத இவ் எழுத்தறிவினை, கல்லாதோருக்கும் குறிப்பாக வீட்டிலுள்ள முதியோருக்கும் பெற்றுக் கொடுப்பது ஒவ்வொருவரினதும் கடமையாகின்றது.

ஆசிரியன் மாத்திரமே இப்பணியைச் செய்ய வேண்டுமென்ற மனப்பாங்கையகற்றி, எழுத்தறிவின்மையைப் போக்கி, பிறர் வாழ்வில் ஒளியேற்றுவது இறைவனுக்கு மிகவும் உவப்பான செயல் !

"கற்பிப்பவனாக இரு அன்றேல்
கற்பவனாக இரு "

இவ்வெழுத்தறிவின்மைப் பிரச்சினையைக் களைவதற்காக கல்வி, கலை, பண்பாட்டுடன் தொடர்பு பேணி அதற்காக செயற்பட்டு வரும் யுனெஸ்கோ தனது அபிவிருத்தி திட்டங்களிலும் எழுத்தறிவித்தலுக்கு முக்கிய கவனம் செலுத்தி, தனது செயற்றிட்டங்களில் பல நாடுகளை இணைத்தும், மேற்பார்வை செய்தும் , திட்டங்களை நடைமுறைப்படுத்தியும் வருகின்றது என்பது சற்று நிம்மதியான விடயமாகின்றது..!


2012/09/01

என் பார்வையில் குறிஞ்சிப்பாட்டு


எண்ணும் எழுத்தும் கண்ணெணத் தகும். நம் வாழ்விற்கு  இவையிரண்டுமே அடித்தளமாகின்றன எனும் உண்மையை நாம் ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. ஏனெனில் எழுத்தறியாதவன் இவ்வுலக வாழ்வியலிலிருந்தும், பண்பிலிருந்தும் நெறி தவறுகின்றான். சங்க காலமாயினும் சரி, சங்கமருவிய காலமாயினும் சரி, தற்காலமாயினும் சரி தமிழுக்கென்று தனி அந்தஸ்து எப்போதுமுண்டு. அதனால்தான் அது அமுதத் தமிழாகின்றது. நமக்கும் இன்பத்தமிழாகின்றது.

எனது பள்ளிவாழ்வில்,  பதினொராம் வருட பள்ளிவாழ்வு வரைக்குமே தமிழ்ப்பாடம் என்னுடன் நடைபயின்றது. கம்பராமயணம், மகாபாரதமென அவ் இலக்கிய சொல்வீச்சில் மதிமயங்கி, வரிகள் தந்த காட்சிப்புலத்தை என் மனக்கண்ணில் நிறுத்தி, மானசீகமாக காட்சிகளை வரிகளால் விரித்து மகிழ்ந்த, வியந்த, பாக்கள் ஆக்கப்பட்ட அக்கருத்துச் செறிவில் இரண்டறக் கலந்த அந்தக்காலம் அழியாத பதிவுகளாய் இன்னும் நினைவிலிருக்கின்றது.

அதன்பிறகு உயர்தரக் கற்கைக்காக நான் விஞ்ஞானப் பாடத்தைத் தெரிவு செய்த போது, தமிழின் பல புராதன இலக்கிய பக்கங்களை ஆழமாக நுகரும் வாய்ப்பினையும் இழந்துவிட்டேன். எனினும் கிடைக்கும் ஓய்வுப் பொழுதுகளில் மெல்ல மெல்ல என் விழிகளுக்குள் தமிழ்ப்புலமை சுட்டும் இலக்கியங்களுடன் உறவாடியதால், இன்று என் உணர்வுகளுக்கும் கவிதை, கதை, கட்டுரை என ஓரளவு இலக்கிய வடிவம் கொடுக்க முடிகின்றது..

பிள்ளைப் பருவத்தில் அம்புலிமாமா கதைப்புத்தகத்தில் ஆசை கொண்ட  என் தமிழ்மொழிப்பற்று, பின்னர் பண்டைத் தமிழிலக்கியங்களை ஆராய ஆவல் கொண்டது. அவை சிந்தும் கருத்துச் செறிவின் ஆழத்தைக் கண்டு வியந்து நின்றது,

அவ்வாறு நான் வாசித்து, ரசித்த ஓர் கருத்துளியே இங்கே சிந்திக்கிடக்கின்றது என் எழுத்துக்களில் நசிந்து...............!

தமிழ்நடை பயிலும் இலக்கியங்களின் சுவை இன்னும் இனிமையானது. அவ்விலக்கியங்கள் நம்முள் சிதறும் அழகியல் என்றும் ரசிப்பைச் சிந்தி நிற்பது.  படித்தவர்கள் மட்டுமல்ல, இப் பாக்களின் பொருள் தெரிந்தால் படிக்காதவர்கள் கூட  மயங்கிக் கிடப்பா் என்பது திண்ணம்.

தமிழர் நிலத்திணைகள்!

பண்டைத் தமிழர் தமது இயற்கைச் சூழலுக்கு ஏற்ப வாழ்ந்த நிலங்களான முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்பன மக்களின் வாழ்வியல்புக்கேற்ப ஐந்து திணைகளாக வகுக்கப்பட்டன. இவையே தமிழர் நிலத் திணைகள் எனப்படுகின்றன.

காடும் காடு சார்ந்த நிலம் முல்லைத் திணையெனவும்,
மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணை எனவும்,
இவையிரண்டுக்குமிடைப்பட்ட நிலம் பாலை எனவும், 
(முல்லையும், குறிஞ்சியும் வளங்குன்றிய நிலை)
வயலும் வயல் சார்ந்த நிலம் மருதம் எனவும்,
கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் எனவும் அழைக்கப்பட்டது.

மக்கள் வாழ்வியலானது சமுகத்தில் பிரதிபலிக்கின்ற கண்ணாடியாகும். ஒவ்வொரு மக்களும் தம் வாழ்க்கைப் போக்கிற்கேற்ற கலை, கலாசார, பண்புகளைக் கொண்டிருக்கின்றனர். அவற்றை வெளிப்படுத்துவனவாக இலக்கியங்கள் மாறும் போது நாமும் அதன் ரம்மியமான சுவையில் இனங்கலந்து விடுகின்றோம்.

பாலை நிலத் தலைவர் விடலை எனவும், மக்கள் எயினர் என்றும் அழைக்கப்பட்டனர். இங்குள்ள மக்கள் விடலை, மறவர், காளை, மறத்தியர் எனக் கொள்ளப்பட்டனர். பாலை நிலத்தின் உரிபொருட்களாக அக ஒழுக்கம் பிரிதல் எனவும், புற ஒழுக்கம் வாகை எனவும் கொள்ளப்பட்டது.

நெய்தல் நிலத்தலைவர்கள் கொண்கன், சேர்ப்பன் , துறைவன் , புலம்பன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர். மக்கள் சேர்ப்பன், நுழைச்சி, நுழையர், பரதவர், பரத்தியர் என அழைக்கப்பட்டனர். நெய்தல் நிலத்தின் உரிபொருட்களாக அக ஒழுக்கம் இரங்கல் எனவும், புற ஒழுக்கம் தும்பை எனவும் கொள்ளப்பட்டது.

மருத  நிலத்தலைவர்கள் மருதன், ஊரன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர்.  மக்கள் மள்ளர், உழவர், உழத்தியர், கடையர், கடைசியர் என அழைக்கப்பட்டனர். மருத  நிலத்தின் உரிபொருட்களாக அக ஒழுக்கம் ஊடல்  எனவும், புற ஒழுக்கம் உழி​ைஞ எனவும் கொள்ளப்பட்டது. மருதம் பற்றிய தகவல்களைத் தரும் பிற்கால இலக்கியங்கள் பள்ளு நூல்கள் ஆகும்.

அக்கால தமிழ் இலக்கியங்களில் எடுத்தாளப்படும் விடயங்களின் பின்னணியாக இத்திணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இங்கு இயற்றப்பட்டுள்ள பாக்களை பார்க்கும் போது அவற்றின் கருக்கள் இச் சூழ்நிலையின் பின்னணியை பிரதிபலிப்பாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளன.

கி்பி 4 ம் நூற்றாண்டில் புலவர் மாறன் பொறையனார் எழுதிய ஐந்திணை ஐம்பது எனும் நூலில் ஒவ்வொரு நிலத்தின் ஒழுக்கத்தை பிரதிபலிக்கும் பத்துப் பாடல்களுண்டு. இவ்வாறாக ஐந்து திணைக்கும் ஐம்பது பாடல்களுண்டு.

பாலை நில காதல் ஒழுக்கத்தினை மேவும் பா வொன்று ,
"சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் ...................................................."
எனத் தொடர்கின்றது . இதன் பொருளானது ,

கலைமான், பிணைமான் எனும் இரு மான்கள் பாலை நிலத்து நீர்ச்சுனை ஒன்றின் முன்னே நிற்கின்றன. வரண்டு போன அச்சுனையில் இருக்கும் நீர் இரண்டுக்கும் போதுமானதாக இல்லை. தான் அருந்தாவிட்டால் பெண்மானும் அருந்தாது என்பது ஆண்மானுக்குத் தெரியும். எனவே பெண்மான் அருந்தட்டும் என தான் அருந்துவது போல பாசங்கு செய்கிறதாம் ஆண்மான்"
என புலவர் காதல் ஒழுக்கம் பற்றிக் கூறுகின்றார்.

உண்மையில் பாலை நிலம் மிகவும் வரண்ட பூமி, இந்த இயற்கைச் சீற்றத்தின் கொடுமைக்கு ஈடுகொடுத்து, தமக்கிடையே விட்டுக்கொடுத்து தமது காதல் நினைவுகளை மேம்படுத்தி நெருக்கமாகின்றனர் இந்நில தலைவனும், தலைவியும்! உண்மைதான் விட்டுக்கொடுப்பும், புரிந்துணர்வுமில்லாத காதல் மனங்களால் நிராகரிக்கப்படுகின்றன.

இவ்வாறே நான் ரசித்த இன்னுமொரு பக்கம் குறிஞ்சிப்பாட்டாகி நிற்கின்றது. குறிஞ்சிக்குரிய பொருளை உணர்த்துவதால் குறிஞ்சிப்பாட்டு  எனப் பெயர்கொண்ட இப் பாடல்களை  கபிலர் எனும் புலவர் இயற்றியனார். இக்குறிஞ்சிப்பாட்டில் 99 வகையான பூக்களைப் பற்றிச் சொல்லப்படுகின்றது.

அவற்றுள் சில பூக்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளன.


வாழ்வின் அச்சாணி ஒழுக்கமாகும். அகவாழ்வின் ஒழுக்கம் மனதினைச் சார்ந்ததாகவும், புறவாழ்வின் ஒழுக்கம் நடைமுறை வாழ்வுடன் ஒட்டியதாகவும் காணப்படுகின்றன.


இக் குறிஞ்சி நில மக்களின் பிரதிநிதியான கபிலப் புலவரும் இம் மக்களின் அகவாழ்வு ஒழுக்கத்தினை கற்பு, வாழ்க்கை என இரு கூறுபடுத்தி, அவற்றினூடாகப் பாக்களை ஆள்கின்றார்.

நான் ரசித்த ஒரு  குறிஞ்சிப்பாடலைக் கருவாக்கி,  புலவர் எடுத்துக் கொண்ட அதன் கருத்துச் சிதையாமல் , காதல் நயம் ரசம் சொட்ட எனது  வரிகளில்  எழுதியுள்ளேன் கீழ்வரும் பதிவை!
அன்னாய் வாழி வேண்டு அன்னை ஒள்நுதல் ..........
எனத்  தொடரும் குறிஞ்சிப்பாட்டில் காதலொழுக்கம் ஆழமாகத் தொட்டுக்காட்டப்படுகின்றது

தலைவனும் தலைவியும் ஊழ்வினையால் எதிர்ப்பட்டு வாழும் நிலையில், தலைவன் தலைவியை இரவிலேயே சந்திக்க வருவான். பல பொழுதுகளில் அவர்களால் சந்திக்க முடியாமற் போகும். அத்துக்கத்தில் தலைவி மெலிந்து போய் நோய்வாய்ப்படுகின்றாள்.  அதனைக் கண்ட அவளது செவிலித்தாய் வருத்தமுற்று குறி சொல்பவரிடம் காரணம் கேட்டறிகின்றாள். தெய்வத்திடம் வழிபடுகிறாள். ஆனால் அவள் நோய் தீரவில்லை. மறுகணம் இத் துன்பத்திலிருந்து மீளும் பொருட்டு தலைவியோ, தன் தோழியிடம் தன் காதலை தாயிடம் கூறலாமா என உணர்த்த, தோழியும் அவளைப் புரிந்து கொண்டவளாய் அறத்தோடு வழி நின்று தலைவியின் காதல் விடயத்தை செவிலித் தாயிடம், அவள் கோபமுறாத வகையிலும், தலைவன் தலைவி எந்தக் குற்றமுமிழைக்காதவர்களாகவே இரவில் களவில் சந்திக்கின்றார்களெனவும், அவர்களுக்கிடையில் நடைபெற்ற சகல செயல்களும் நல்வினையின் பயனே எனவும் அச்செவிலித்தாய் உணருமளவிற்கு தோழி செய்தி கூறுகின்றாள் எனத் தொடர்கின்றது இக்குறிஞ்சிப்பாட்டு!

இப் பா  தோழியின் உணர்வுபூர்வமான சிந்தனையூட்டத்தின் மூலமே செவிலித் தாய்க்குரைக்கப்பட்டு உயிர்ப்படைகின்றன. காதலுக்கு துணை நிற்கும் தோழியே, அக் காதலின் திருமண சங்கமத்திற்கும் பாதை வகுக்கின்றாள்.

செவிலித் தாய்க்கு,  தன்  தலைவி எவ்வாறு தலைவனைச் சந்தித்தாள் என தோழி எடுத்துக் கூறும் வரிகள்,  நாம் நேரில் சந்தித்த யதார்த்தமொன்றை நமக்குணர்த்தும் பிரமையை அனுபவபூர்வமாக  அது தந்துநிற்கின்றது.

குறிஞ்சிப்பாட்டில் நான் ரசித்த சில கருத்துக்களை முன்வைக்கும் பாக்களின் முதல் வரிகள் இவை-(..35-  251ம் பாடல் வரை)
---------------------------------------------------
நெல்கொள் நெடுவெதிர்க்கு அணைந்த யானை....(035-039)....
கலி கெழு மரமிசைச் சேணோண் இழைத்த ...........(040-045)
விசும்பு ஆடுபறவை வீழ்பதிப் படர .............................(046-053)
அண்ணல் நெடுங்கோட்டு இழி தரு தெள்நீர் ...........(054-061)
------வள் இதழ் ஒண் செங் காந்தாள் , ஆம்பல்..........(061-098)
புள்ளார் இயத்த விலங்கு மலைச் சிலம்பின் ...........(099-106)
எண்ணெய் நீவிய சுரி வளர் .............................................(107-116)
பைங்கால் பித்திகத்து ஆய் இதழ் அலரி ....................(117- 127)
முனை பாழ் படுக்கும் துன்னருந் துப்பின்..................(128-134)
மாறு பொருது ஓட்டிய .....................................................  (135- 142)
அதன் எதிரே............................................................................(143-152)

உண்மையில் காதலென்பது ஓர் வசீகர உணர்வு. இவ்வுணர்வுக்குள் மதிமயங்கும் ஆன்மாக்கள், தம் புறவுலகை மறந்து சொர்க்கபுரியாக விளங்கும் காதலுலகினுள் அமிழ்ந்து விடுகின்றனர். நண்பர்கள், உறவினர், குடும்பம் சுற்றுப்புறம் யாவருமே அந்நியமாக, தாம் நேசம் கொண்டவரையே, தம் உலகாக வரித்து வாழ முற்படுகின்றனர். காதல் போற்றும் பல இலக்கியங்களிலும் இப் பண்பு சிதைக்கப்படுவதில்லை. கவிகளினூடாக புலவர்கள் இவற்றை அழகாக எடுத்தியம்புகின்றனர்.

குறிஞ்சிப்பாட்டின் பத்துப் பாடல்களுள் ஒரு பாடலைத் தெரிவு செய்தேன். அதில் ஒளிந்திருக்கும் காதலின் சிலிர்ப்பைக் கண்டு  நானும் உவத்து, ரசித்து அதனை உங்கள் பார்வைக்குள்ளும் எத்திவைக்கின்றேன் இதோ  .

தலைவியின் அன்பான காதலையும் , ஆழமான உணர்வோட்டத்தையும், நாமும் ரசிக்கலாம். ரசிப்போமா! இங்கு புலவர் சொன்ன தன்கூற்று  நடையை ,,என் மொழி வழக்கில் பிறர் கூற்றாக்கி மாற்றி, புலவரின் கவிக் கரு சிதையாமல் என் மொழிநடை யில் உங்களை அழைத்துச் செல்கின்றேன் இந் நாயகியை தரிசிக்க

மென்மையான தலைப் பகுதியைக் கொண்ட வளைந்த பெரிய கதிர்களைக் கொண்ட தினையை, திண்பதற்காக வரும் கிளி போன்ற பறவைகளை விரட்டும் காவலில் ஈடுபடுவதற்காக, ஆரவாரமிக்க மரத்தின் மேல் பரண் ஒன்றையமைத்து, அதிலமர்ந்து எந்த கருவியில் எப்படி இசைத்தால் பறவைகள் விரண்டோடுமோ, அவ்வாறு அதற்குரிய சில இசைக்கருவிகளான தழல், தட்டை, குளிறு , கவண் போன்ற இசைக்கருவிகளால் இசையெழுப்பிக் கொண்டிருந்தாள் தலைவி . அது  வெப்பமான உச்சிப் பொழுது. அவளெழுப்பிய ஒலி கேட்டு கிளிகள் மிரண்டோடின. அந் நண்பகல் நேரம் வெப்பப் பொழுது திடீரென மாற்றம் பெற, இடி, மின்னலுடன் கூடிய  மழை மலையின் மீது பெய்தது. தலைவியும் அவள் தோழியும் நனைந்தனர். ஆனால் அந்நனைவு அவர்களுள் மகிழ்வைப் பிரட்டிக் கொடுத்தது.

மலையுச்சியிலிருந்து பளிங்கினைச் சொரிவதைப் போல் வீழும் வெள்ளருவியில் அவர்கள் மனமகிழ்ந்து ஆடிப்பாடினார்கள். அவளோ கூந்தல் கவர்ந்தெடுத்த நீரினைப் பிழிந்து ஈரம் உலர்த்தி மீண்டும் மீண்டும்.  நீரிலே விளையடியதால் அவள் கண் உள்ளிடமெல்லாம் சிவந்தது

மழை நின்ற பொழுதில், அந்த அடர்ந்த காட்டின் பல பகுதிகளிலும் மனமகிழ்ச்சியோடு உலாவித் திரிந்து, ஆசையோடு பல மலர்களைப் பறித்து , மழை பெய்ததால் கழுவிச் சுத்தம் செய்யப்பட்ட அகன்ற மலைப் பாறையின் மீது அனைத்துப் பூக்களையும் குவித்து வைத்தாள். குறுக்கிட்டுக் கிடந்த பக்க மலையெங்கும் பறவைகளின் ஒலி நிறைந்திருந்தது. அவ்விடத்தே, கூர்மையான ஓசையோடு தெளிந்த சொற்களை இடையிடையே கூறி கிளிகளை விரட்டத் தலைவி தவறவில்லை.

சேகரித்த மலரிதழ்களை ஒன்றாகக் கோர்த்து, தான் அணிந்திருந்த தழையாடைக்கு ஏற்றவாறு சரி செய்து கட்டிக் கொண்டாள். பல்வேறு நிற மலர்களால் மாலை கட்டி, மென்மையான கொண்டையில் அழகாகச் சூட்டி அலங்கரித்தவளாய், தன் தோழியுடன் அசோக மரத்தின் குளிர்ச்சியான நிழலில் அமர்ந்தபோது...................!

அவனைக் கண்டாள். அவன் எண்ணெய் தடவி சுருண்டு வளர்ந்திருந்த தனது தலைமயிரில், மணம் வீசும் அகில், சந்தனம் போன்றவற்றை பூசி மணக்கப்பெற்றவனாகவும், தலைமயிரின் ஈரத்தை தன் விரல்களால் நீவியும், கரிய அகிலையிட்டு உண்டாக்கிய புகையினாலும்  உலர்த்துபவனாகவும் இருந்தான். அத்துடன் மலையிலுள்ள பல்வேறு வண்ணங்களாலும் குணங்களாலும் ஆன மலர்களைக் கொண்டு, தயாரிக்கப்பட்ட குளிர்ச்சியான மணம் வீசும் மலர்மாலையையும் அணிந்திருந்தான். அவற்றுடன் அவனைக் கண்டவர் அச்சப்படும்படியாகவும் வெண்தாழை மடலான மாலையினையும் அழகாக தலையில் சூடியிருந்தான்.

அவன் காதில் செருகியிருந்த அசோகத் தளிர், அவனின் திரண்ட தோளில் அசைந்து கொண்டிருந்தது.  அவன் அழகிய மார்பில் அணிகலன்களும், மாலைகளும் தொங்கிக் கொண்டிருந்தன. சிவந்த இரேகைகள் உடைய உள்ளங்கைகளுக்கேற்ற இறுகி பருத்த முன்கையில், வில்லை ஏந்தியிருந்தான். அம்புகளை அசைவில்லாதவாறு கோலமிடப்பட்டிருந்த துணிப்பையில் பிணைத்திருந்தான்.

அப்போது பகைவர்களின் இடங்களைப் பாழ் செய்யும், நெருங்குதற்கரிய வலிமையும் மிகுந்த சினமும், கூரிய வாள் போன்ற பற்களையும், கூர்மையான நகங்களையும் கொண்ட நாய்கள் தலைவியின் இருப்பிடத்தை நோக்கி வந்தன. அவற்றைக் கண்டு நடுங்கிய அவர்கள், அச்சத்துடன்  இருந்த இடத்திலிருந்து எழுந்து யாதும் செய்ய முடியாத நிலையில் மனம் வருந்தினார்கள்.

அப்போது அவன் அவர்களின் தடுமாற்றத்தைக் கண்டு அருகில் சென்று, அவர்கள் அச்சம் தீரும் வகையில் மென்மையாகப் பேசி, அவள் அழகினையும் கூந்தல், கண்கள் உள்ளிட்ட உடலழகையும் புகழ்ந்தான்.

"என்னிடமிருந்து தப்பிச்சென்ற விலங்கொன்று இவ்வழியால் போனதோ "

எனத் தலைவியின் விழிகளைப் பருகியவாறு வினவினான்.

அவளோ, இயற்கை ஆக்கிரமித்த நாணத்தினால்  பதிலேதும் சொல்லாமல் மௌனித்துக் கிடந்தாள். அவள் மௌனம் அவனை வருத்தியது. மனம் வருந்தியவாறு

"என்னிடம் பேசுவது குற்றமோ "

என்றான். பின்னர் வலிந்த மரக்கிளையொன்றை உடைத்து  அந்நாய்களை தேடியடக்கிய பின்னர், அவர்களுடன் பேசும் ஆர்வத்தில் மீண்டும் அவளை நெருங்கி, பேசும் வார்த்தைகளுக்காக ஆவலோடு எதிர்பார்த்திருந்தான். ஆனால் அவள் உதடுகள் அசையவேயில்லை. அவனுள் ஏமாற்றம் வழிந்தது.

மௌனமாக  நிமிடங்கள் கரைந்து கொண்டிருந்தன,

தினைத்தாள்களால் நாட்டப்பட்டிருந்த குடிசையொன்றில் காவலிருந்த கானவன் ஒருவன், தன் எழிலான மான் போல மிரளும் தன் மனைவியின் பார்வையினால் ஈர்க்கப்பட்டவனாய்,  அவள் மீதுள்ள காதலால் தன் தொழில் மறந்து அவளுடன் கூடினான், காதலில் மலர்ந்த  குலைவு அவன் காவலை மறக்கடித்தது . அப்போது எதிர்பாராதவிதமாக அவர்களின் தினைப்புனத்தில் புகுந்த யானை எல்லாத் தானியங்களையும் உட்கொண்டது. தினை ஓரளவு எஞ்சிய நிலையிலிருக்கும் போதே, மோகித்திருந்த அந்தக் கானவன் சிந்தை தெளிந்து, ஒலி எழுப்பி யானையை விரட்டினான்.

விரட்டப்பட்ட யானை சினங்கொண்டு, அவளிருப்பிடத்திற்குள் நுழைந்தது. எதிர்பாரதவிதமாக அவளை  நோக்கி , மதங் கொண்ட யானையாக வருவதைக் கண்ட அவள், அச்சமுற்று தன் நாணங் கலைத்து, தனது பதிலுக்காக காத்திருக்கும் அவனருகே போய் நின்றாள். அவன் தன்னைப் பாதுகாப்பான் எனும் நம்பிக்கை அவளுக்குள் வலிமை பெற்றது.

அவன் முகத்தை அச்சம் பிசைய விழிகளால் துலாவினாள். விழிகள் நான்கும் ஓர் நொடியில் சந்தித்து மீண்டன. அச் சிலிர்ப்பின் உத்வேகத்தில். அவனும்  தன்னுள் சிறைப்படுத்தியிருந்த வில்லையெடுத்து, அதில் அம்பைச் செருகி யானையின் நெற்றியில் குறிபார்த்து தன் அம்பைச் செலுத்தினான். தாக்கப்பட்ட யானையின் நெற்றி சிதைந்து முகத்திலிருந்து  குருதி வழியும் நிலையில் அது புறமுதுகிட்டோடியது. அவள் பெருமூச்செறிந்து நன்றியுடன் அவனைப் பார்த்தாள். அவள் பார்வையை விழுங்கிய அவனும் புன்னகையை மெல்ல அவளுள் பரப்பினான். நாணத்தால் அவள் முகம் கவிழ்ந்தது. இருதயத்தில் ஓர்மூலையில் அவன் நினைவுகள் கௌவிக் கொண்டன. தன் பார்வையைத் தாழ்த்தி மறைவாக அவனை ரசித்தாள்.  ஆனாலும் அவள் கரங்கள் இன்னும் அவள் தோழியின் கரத்துடன் பிணைத்துக் கொண்டிருந்தன. உடல் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது.

"அழகிய கூந்தலையுடையவளே! அஞ்சாதே, உன் அச்சம் போக்க இனி நானிருக்கின்றேன் "
எனக் கூறியவாறு, அவளை அவன், அவள் தோழியின் பிடியிலிருந்து தளர்த்தி, தலைவியின் நெற்றியில் வடிந்த வியர்வைத்துளிகளை தன் கரத்திலேந்தி மெதுவாக அவளை அணைத்துக் கொண்டான் அவள் நாணத்தையும் பொருட்படுத்தாதவனாய்!
அவள் நாணிப் புன்னகைத்தவறே அவனிடமிருந்து விடுபட நெளிந்தாள்.

அச்சமும், நாணமும் அவளை ஆட்கொள்ள, அவனின் பிடியிலிருந்து நழுவ முயற்சித்தும். அவனோ அவளை விடுவதாக இல்லை. அவள் மார்பு, தன் மார்புடன் பொருந்த , இறுக்கியணைத்தான். உஷ்ணம் மூச்சுக்காற்றிலடங்கி, இடமாறத் தொடங்கின. கூடவே காதலும் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டது அவர்களுக்குள்!.

அவன் மலைநாட்டுத் தலைவன், இயற்கையை வசீகரித்து வாழ்பவன், செல்வச் செழிப்பினன், பண்பானவன், அவள் மனமறிந்து, தன் காதலைப் பற்றி எடுத்துக்காட்டி, அவள் விரும்பும் விதத்தில் அறம் சிதையாத இல்லறம் பற்றிப் பேசினான். அவளும் மகிழ்வோடு தன் துணையாக அவனை வரித்துக் கொண்டாள். மனங்கள் பேசத் தொடங்க வானமும், பூமியும் மலர்கள் துவி வாழ்த்தின. அவளைப் புரிந்தவளாய் தோழி விலகிச் செல்ல, அவள் அவனின் அன்புக்குள் கட்டுண்டாள்.

மிதமான மகிழ்வில் தலைவன் பருகிய அருவி நீரில் கூட கள் கலந்து அவனை போதைப்படுத்தியது. மகிழ்வின் உச்சத்தில் இறக்கை கட்டி பறந்தனர் அச்சோடியினர். அவள் அவனுடன் தன் இராப் பொழுதைக் கழித்தாள்.

ஒருமித்த மனங்களின் அன்றைய அந்தச் சந்திப்பே, இறுக்கமான இதமான காதலாக முகிழ்த்தது.  கூடலில் கழித்த அவள் பொழுதுகள் விடிந்தன. அவன் பிரியப் போகும் தருணத்தை எண்ணி வருந்தினாள். அவனோ ஊர், சுற்றமறிய விரைவில் அவளை மணந்து , தன்னிருப்பிடம் அழைத்துச் செல்வதாக உறுதியளித்து அவளது இருப்பிடத்தில் அவளை நிறுத்தியவனாக அவளைப் பிரிந்து சென்றான்.

அவள் கண்ணீரில் நனைந்து நின்றாள். ஒரு நாள் பொழுதில் ஏற்பட்ட வலிமையான அன்பு அவள் மனநிலையின் இயல்பைக் குலைத்த போது வாடி நின்றாள்.

நாட்கள் விரைந்தன. அவர்களின் சந்திப்பும் இரவில் களவாக ரகஸியமாகத் தொடர்ந்தது. யாருமறியாது களவில் அவளை இவன் சந்திப்பது ஒழுக்கமற்ற செயல் என தலைவி நினைந்து விலக முற்பட்டாலும் கூட, அவனைச் சந்திக்காமல் அவளால் இருக்கமுடியவில்லை. சில பொழுதுகளில் அவன் சந்திக்காமல் செல்லும் இரவுகளில் இவள் சிந்தும் கண்ணீர் மார்பை மட்டுமல்ல, இரவின் நிழலினையும் ஈரப்படுத்தியது. அவளழகை அழிக்கும் இந்தத் துன்பம் அவளுக்குச் சொந்தமாகிப் போனது.

அவன் அவள் உயிர்! நல்ல குலத்தில் பிறந்தவன். அன்பு சிந்தும் காதலில் வெறும் காமம் மட்டும் கலப்பவனல்லன். அவன் ஒருபோதும் ஏமாற்றமாட்டான். தன் பரிவாரங்களுடன் அவளை தனக்குள் உரிமையாக்க நிச்சயம் வருவான். அவள் மனதிலிருந்து அவன் சிந்தும் காதல்த்துளிகள் நிஜமானவை !

ஆனால் அவளின் இந்தக் கண்ணீருக்குக் காரணம் அவனது பிரிவுத்துயராக இருந்தாலும் கூட, அவன் அவளைச் சந்திக்க  வரும் காட்டுப்பாதையில் வாசம் செய்யும் சிங்கம், கரடி, புலி போன்ற கொடிய மிருகங்களால் இவனுக்கேதும் இடர் ஏற்பட்டிருக்குமோ, அதனால்தான் அவன் சந்திக்க வரவில்லையோ எனும் துக்கத்தில் இடைக்கிடையே கரைந்து கொண்டிருக்கின்றாள் இக்கன்னி!

காதல் அழகானது.......அழிவில்லாதது........!


-Jancy Caffoor -










2012/08/14

அஜந்தா இணைப்பு


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் அஜந்தா எனும் ஊரில் உள்ள குகையில் இயற்கை முறையில் வரையப்பட்ட ஓவியங்களே அஜந்தா ஓவியமெனப்படுகின்றது.

இவை கி.மு 200 முதல் கி.பி 650 வரையிலான காலப்பகுதியில் வரையப்பட்ட பௌத்த மதக் கொள்கையை முதன்மைப்படுத்தி வரையப்பட்ட ஓவியங்களாகும்.

குகையின் மீது களிமண்ணும் சாணியும் கலந்து கலவை பூசப்பட்டு அதன் மேல் சுண்ணாம்புச் சாந்து பூசப்பட்டு இறுக்கப்பட்ட பரப்பில் பல வண்ணக் கூழாங்கற்களை அரைத்து உருவாக்கப்பட்ட நிறங்களைக் கொண்டு வரையப்பட்டவையாகும். இவை தாவர வர்ணங்களல்ல என்பதால் மங்காதிருக்கின்றன. எனினும் இங்குள்ள 5 குகையோவியங்கள் மங்கியுள்ளன.

முன்பக்கத்திற்குச் செல்ல

- Ms. Jancy Caffoor -



சித்திரம் பேசுதடீ


மனிதனது அறிவின் வெளிப்பாடாக அறிவியற் கலைகளும், உணர்வின் வெளிப்பாடாக அழகியற் கலைகளும் தோற்றம் பெற்றுள்ளன. ஓவியம் அல்லது சித்திரம் என்பது அழகியற் கலையாகும்.

ஓவியம் எனக்கு மிகவும் பிடித்தமான கலை. என் தந்தை மிகச்சிறந்த ஓவியர். தனது ஆசிரியர்ப் பயிற்சிசாலையில் அவர் வரைந்து தயாரித்த ஓவிய ஆல்பத்தினைப் புரட்டிப் புரட்டி பார்த்து ரசித்தே, என் பிஞ்சு விரல்கள் அன்றைய நாட்களில் பலதடவைகள் பூரித்திருக்கின்றன. அந்தப் பரம்பரை வழிக்கடத்தலால் எங்கள் குடும்பத்தில் நானும் என் சகோதரிகளும் பாடசாலை நாட்களில் ஓவியத்தில் மிக விருப்புடன் வரைந்துமுள்ளோம். அந்த ஓவிய ஈர்ப்பு அதன் வரலாற்று நகர்வுகளையும் என் வலைப்பூவில் விருப்புடன் பதிக்கின்றதின்று.

உலக வரலாற்றில் கிரேக்கர். எகிப்தியர், உரோமர் , சீனர் , இந்தியர் போன்றே முஸ்லிம்களும் கலைத்துறையில் தம் முத்திரை பதித்துள்ளனர். இஸ்லாம் மனித, மிருக உருவங்கள் வரைவதைத் தடைசெய்வதால், அவர்களின் கவனம் அரபு எழுத்தணிக்கலையில் சிறப்புற்று விளங்கியது.

"அல்லாஹ் அழகானவன். அவன் அழகை விரும்புகின்றான்" எனும் ஹதீஸின் எண்ணக்கரு இக்கவின்கலைக்கு ஆதாரமாகக் காணப்படுகின்றது. அல்குர்ஆனாலும், ஸூன்னாவாலும் தூண்டப்பட்ட இவ் எழுத்தணிக்கலை முஸ்லிம்களின் அழகுணர்ச்சியை மேவிநிற்கின்றது எனும் முகவுரையுடன்
ஓவியத்தின் மீதுள்ள என் ரசிப்பை எழுத்தாக்கி நகரவிடுகின்றேன் நளினத்துடன்!

ஓவியம் என்ற சொல்லானாது " ஓவம்" எனக் குறிப்பிடப்பட்டு, சங்க காலத்தில் செய்யுள்கள் பலவற்றில் இயற்றப்பட்டுள்ளன. இது அக்காலத்தில் ஓவியம் வளர்ச்சியடைந்துள்ளதை நிருபிக்குமொரு சான்றாகும்.

ஓவத் தன்ன வுருகெழு நெடுநகர்
              (பதிற்றுப்பத்து.88 : 28)
ஓவத் தன்ன இடனுடை வரைப்பின்
              (புறநானூறு. 251 1)
வத் தன்ன வினைபுனை நல்லில்
              (அகநானூறு. 98 11)

நற்றிணைப் பாடல் (118:7) ஒன்று ஓவியரை 'ஓவ மாக்கள்' என்கிறது. 

மதுரைக் காஞ்சியோ, ஓவியர்களை பின்வருமாறு கூறுகின்றது எக்காட்சியினையும் தமது ஓவியத்திற்குள் கொண்டு வந்து ஒப்பிட்டுக் காட்டுவர்; ஓவியர்கள், எதனையும்  நுட்பமாக உணர்ந்தவர்கள். ஆழமான நோக்குடையவர் என்று கூறுகிறது. 
இதனால் 
அவர்களைக் 'கண்ணுள் வினைஞர்' என்று பெயரிட்டு அழைக்கிறது அது!

உண்மையில் ஓவியர்கள் தாம் வரையும் ஓவியத்தினூடாக காட்சிகளின் உயிர்ப்புத்தன்மையை நம் கண்ணுக்குள் ஊடுகடத்தி நிறுத்தி வைப்பவர்கள் என்பதை அக்கால மக்கள் ஏற்றுக்கொண்டதன் வெளிப்பாடே  மேற்கூறப்பட்ட செய்யுளின் கருத்தாக அமைகிறது.


ஓவியர்களின் எழுதுகோல்கள் தூரிகை எனப்படும். சங்க காலத்தில்  இத்தூரிகையை  நற்றிணைப் பாடலொன்று " துகிலிகை"  என அழைக்கின்றது. இதன் கருத்தாவது , பாதிரி மலரானது அரக்கு மூலமாக இறக்கை ஒட்டப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதாகும்.

ஓவ மாக்கள் ஒள்ளரக் கூட்டிய
துகிலிகை யன்ன துய்த்தலைப் பாதிரி (நற்றிணை. 118)


ஓவியமானது தூரிகையால் முதலில் இரேகைகளால் வரையப்படும். இவ்வாறு வரையப்படும் வர்ணங்கள் தீட்டப்பட முன்னர் காட்சிப்படுத்தப்படும் இவ்வோவியங்களை சங்ககாலப் பாடல்கள்  "புனையா ஓவியம் " என விளித்துள்ளன.


சங்க காலமென்பது காதலொழுக்கத்தை மேவிய காலமாகும். இக் காலத்தில் காதலனொருவன், தன் காதலை தலைவி ஏற்காவிட்டால்,  அவள் உருவத்தை புனையா ஓவியமாக வரைந்து, அதனை பனை மடலில் செய்யப்பட்ட குதிரையில் அமர்ந்து ஊருக்குக் காட்சிப்படுத்தி முறையிடுவான்

நாமின்று ஓவியங்கள்  வீடுகள், கடைகள், காட்சிசாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் வைக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். சங்ககால மக்களும் தாம் வரையும் ஓவியங்களை  வீடுகள், பொது இடங்களிலும், மன்னர்கள் தமது அரண்மணை , அந்தப்புரங்களிலும் காட்சிப்படுத்தினார்கள்.

"சித்திர மாடத்துத் துஞ்சிய மணிமாறன் " என பாண்டியன் மன்னன் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுவதற்குக் காரணம் அவர் தனது தங்குமிடத்தில் நிறைய சித்திரங்களைக் காட்சிப்படுத்தியிருந்தார்.


பாண்டிய மன்னரின் அரண்மனை அந்தப்புரச் சுவர்களிலும் அழகிய மலர்க்கொடிகளினாலான சித்திரங்கள் வரையப்பட்டிருப்பதாக  "நெடுநல்வாடை  -  ( 110  - 114  )  யிலுள்ள செய்யுட்பாக்கள் குறிப்பிடுகின்றன.


17ம் நூற்றாண்டைச் சேர்ந்த மதுரையிலுள்ள சுவரோவியங்கள்

அவ்வாறே சோழர் மன்னரின் அரண்மனைச் சுவரின் வெளிப்புறத்திலும் பல ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. சாலைகளில் செல்லும் தேர்கள் எழுப்பிய புழுதிகள் வெந்நிற அச் சுவர்கள் மீது படிந்து சாம்பலில் புரண்ட யானையொன்றின் தோற்றத்தை ஏற்படுத்தியிருந்ததாக பட்டினப்பாலை  பாக்கள் அழகுற விளக்கின்றன.












சோழர்கால ஓவியங்கள் பாண்டி மாதேவி அமர்ந்திருந்த அந்தப்புரக் கட்டிலுக்கு மேலே இருந்த விதானச் சுவரில் ஓவியங்கள் வரையப் பெற்றிருந்தன. இவற்றில் மேட இராசி முதலிய இராசிகளின் உருவங்கள் இருந்தன. மேலும் பாண்டியரது குல முதல்வனான சந்திரனோடு அவனது காதல் மனைவி உரோகிணி சேர்ந்திருக்கும் காட்சியும் தீட்டப் பட்டிருந்ததென நெடுநல் வாடை கூறுகிறது.


அவ்வாறே மதுரைக்கண்மையிலுள்ள திருப்பரங்குன்றத்திலுள்ள "எழுத்து நிலை மண்டபத்தில்"  ரதி, மன்மதனின் உருவங்கள் வரையப்பட்டுள்ளன என பரிபாடல் விளக்குகின்றது.

                                  மன்மதனும் ரதியும்
அரசர்களின் சிந்தையையே வென்ற ஓவியங்கள், சாதாரண நம்மனங்களைச் சுண்டியிழுப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஓவியங்களின் வரலாற்றை விழிகள் மேயும் போது பல சுவாரஸியமான விடயங்களுடன் நாம் ஒருமித்து விடுகின்றோம்.

ஓவியத்தின் உரிமையாளர் ஓவியராவார். ஓவியர் என்பவர் தன் உள்ளத்தில் நிழலாடும் நகர்வுகளை தூரிகை வழியாக உயிர்ப்பிக்கின்ற கலைஞராவார். ஓவியர் தன்னகத்தே கொண்டுள்ள கலைத்துவம் படிந்துள்ள அருந்திறன் கருத்துப்புலப்படுத்தலோடு வெளிப்படுத்தப்படும் போது அவ்வோவியம் உயிர்ப்படைகின்றது. அழகான உயிரோட்டமுள்ள எந்தவொரு  ஓவியமும் என் ரசிப்பைத் தொட்டு நிற்கும்.


ஓவியத்துறையானது 16ம் நுற்றாண்டிலிருந்து இன்றுவரை பரிணாமவளர்ச்சி கண்டுள்ளது. இந்த வளர்ச்சியின் விளைவுகளை நம்முன்னால் நிலை நிறுத்திய ஓவியர்கள் பலர். அவர்களுள் சிலராக ரவீந்திரநாத் தாகூர்,  ரவி வர்மா, மைக்கல் ஏஞ்சலோ, எம்ரான் வான்கோ பிக்காசோ  என்போரை இப்பட்டியலில் இணைத்துள்ளேன்.


                   லியாடோனோ டாவின்சி மொனோலிசா


                             இந்திய ஓவியர் ரவிவர்மாவின் ஓவியம் -
                            அர்ச்சுனனும் சுபத்திரையும் தனித்திருத்தல்


    பிக்காஸோ 


                       மைக்கல் ஏஞ்சலோவின் ஓவியமொன்று

சிகிரியா, அஜந்தா (அழுத்தி இதனைப் பார்க்க ) குகை ஓவியங்கள் இன்றும் ஓவியத்தின் மகிமைகளை உலகிற்குப் பறைசாற்றும் சிறப்புமிகு குகை ஓவியங்களாகும்.பழைமையான குகை ஓவியமானது பிரான்ஸ்- ஸ்பெயின் எல்லையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ள சான் ஓவியங்களாகும். இங்கு மிருக உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சான் மக்களின் தலைவனான மருத்துவன் மிருகங்களின் உடலில் கூடு விட்டு கூடு பாய்ந்து வலிமை பெற்று அவ்வலிமையால் , தன் குடியானவர்களை காக்கும் செயற்பாடுகளின் பின்னனியில் இவ்வாறான மிருகங்களின் உருவங்களை அவர்கள் விரும்பிப் பொறித்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் பல தகவல்களை நமக்கு முன்வைக்கின்றனர்.


                  சீகிரியா குகை ஓவியம் ( இதனை அழுத்திப் பார்க்க)


                                                    அஜந்தா குகைச்சிற்பங்கள்


                        அஜந்தா குகை ஓவியமொன்று

குகையோவியங்களுக்குப் பிறகு ஓவியக்கலை ஆசிய, மற்றும் எகிப்தில் நன்கு வளர்ச்சி பெற்றது.

எகிப்தியர்கள் தமது ஓவியங்களை கணிதசூத்திரத்தைக் கொண்டு வரைந்தார்கள். இவை இருபரிமாண முறையில் வரையப்பட்ட ஓவியங்களாகும். இவர்களின் ஓவியங்களில் தலை,கால் எல்லாம் பக்கவாட்டில் வரையப்பட்டுள்ளது. தசை, விரல்கள் காணப்படாது. பொருட்கள் ஒரே சீரான அளவில் காணப்படும். இதில் உயிரோட்டத்தைக் காணமுடியாது. எல்லோரின் முகங்களும் அந்தஸ்து, பால் வேறுபாடின்றி ஒரே விதமாகவே காணப்படுகின்றன.
எகிப்தியர் ஓவியம்
மூவாயிரம் வருடமாக எகிப்தியர் ஒரே விதமான ஓவியங்கள் , சிற்பத்தையே வரைந்தார்கள். இதனால் இவர்களின் ஓவியத்திலும், மெசப்பதேமியர்களின் ஓவியத்திலும் மலர்ச்சி பெறப்படவில்லை. ஏனெனில் இவர்களின் ஓவியத்தில் கற்பனையே இருந்தது.

எகிப்தியர்களை அடியொற்றி ஓவியத்தினுள் நுழைந்தவர்கள் கிரேக்கர்கள் ஆவார்கள். இவர்கள் தமது  கண்களால் உள்வாங்கியதை தம் ஆத்மாவுக்குள் செருகி உயிரோட்டமுள்ளதாகவும், ஒளிமயமானதாகவுமுள்ள ஓவியங்களை வரைந்தார்கள். அங்க  அசைவுகளும், தசை, நரம்பமைப்புக்களும் துல்லியமாகத் தெரியும் விதத்தில்  நுட்பமாக அவதானித்து வரையப்பட்டது. இயற்கையாக உள்ளதை உள்ளபடியே தந்தவர்கள் இக்கிரேக்கர்களே.. !



ஓவியத்திற்கான விதி, எடை, சமனிலை என்பவற்றை நிர்ணயித்து அழகான ஓவியங்கள் பிறப்பெடுக்க கிரேக்கர்கள் ஆற்றிய பங்களிப்புக்கள் அளப்பரியது. இவர்களது ஓவியங்கள் முப்பரிமாணத்தைக் காட்டி நின்றன. இங்கு நரம்பு, தசையமைப்புக்கள் வெளிப்படுத்தப்படுவதால் உயிர்ப்புத்தன்மையை நாம் காணலாம்



                                     கிரேக்க ஓவியம்
யதார்த்த வாழ்வியலின் செயற்பாடுகள், இயற்கைக் காட்சிகள், வரலாற்றுச் சம்பவங்கள், உயிரினங்கள், இறைவனின் அற்புதப் படைப்புக்கள், திருவிழாக்காட்சிகள், சமய நிகழ்வுகள், கடவுளின் உருவம், அரச வாழ்வியலின் பிரதிபலிப்புக்கள் போன்ற பலவற்றுடன் தொடர்புபட்டே பெரும்பாலும் ஓவியங்கள் வரையப்படுகின்றன.        வரையப்பட்டுள்ளன.


இவ் ஓவியங்களில் மக்களின் கலை, கலாசார, பின்னணிகளும், சமூக நலன்பாடுகளும் , அரசியலீடுபாடுகளும் வெளிப்படுத்தப்படுகின்றன.


                                                    ராஜஸ்தானியப் பெண்கள்
ஓவியமானது நமது வாழ்வின்  நிகழ்வுகள், தேவைகளை பிரதிபலிப்பவையாக அமையும் போதே காலத்தையும் வென்று நிற்கின்றன. நவீனத்துவம் ஓவியத்திலும் புகுத்தப்படுகின்றது. ஆனால் அவை தலைமுறையினரை நெறிப்படுத்தக்கூடியதாக அமைதல் வேண்டும். இல்லாவிடில் காலக்கண்ணாடி அதனை நிராகரித்து விடும். அந்த நவீனத்துவ சிந்தனை நமக்குள் கேலி எண்ணத்தை ஏற்படுத்தி விடும்.


                           ரிமெக்ஸ் செய்யப்பட்டுள்ள மொனோலிசா

 ஓர் ஓவியத்தின் உயிர்ப்புக்கு அவற்றின் வண்ணக்கலவையின் பொருத்தப்பாடே காரணமாக அமைகின்றதெனலாம். ஆரம்ப காலங்களில் இயற்கை வர்ணங்களாகத் தாவரச்சாறுகளைப் பயன்படுத்தி வந்தாலும், இன்றைய நெருக்கடி வாழ்வுக்குள் சிக்குண்டதன் பிரதிபலிப்பாக இயற்கை வர்ணங்கள் தயாரிப்பிற்கான நேரமின்மையாலும், நீண்டகாலம் வர்ணங்கள் மங்காமலிருப்பதற்காகவும் கடைகளில் விற்பனை செய்யப்படும் இரசாயன வர்ணங்களே பயன்படுத்தப்படுகின்றன.


முற்காலத்தில் சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்கள் தற்காலத்தில் பெரும்பாலும் கடதாசிகளிலேயே வரையப்படுகின்றன. ஓவியம் வரையும் கடதாசி சாணம் நனைத்த நீரில் தோய்த்து வரையப்படும் போது சுவர்களில் வரையப்படும் தோற்றத்தை அளிக்கின்றது எனக்கூறப்படுகின்றது.

எந்தவொரு சிறப்பான செயலொன்றை நாம் முன்வைக்க வேண்டுமாயின் அதற்கான உரிய பயிற்சியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.


ஓவியம் வரையும் ஆர்வம் பெரும்பாலும் சிறுவர்களிடத்தில் அதிகமாக காணப்படுகின்றது. இதனாலேயே அவர்களின் மனங்களில் மகிழ்ச்சியை நிரப்புவதற்காக கார்ட்டூன் சித்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அரசியல் எண்ணக்கருக்கள் கேலிச்சித்திரங்களாக வெளிப்படுத்தப்படும் போது அவற்றை நாம் நமது மூளையைப் பயன்படுத்தி கருத்துக்களை ஆராயவும் வேண்டியுள்ளது.

நாம் பார்ப்பதை வரைவதை விட, பார்த்ததை மனதுள் உள்வாங்கி அவற்றை வரையும் போதே அவ்வோவியங்களும் பேச ஆரம்பிக்கின்றன. எனவே ஓவியம் வரைவதாயின் நாம் நமது மனக்கண்ணில் வரைய வேண்டிய சித்திரத்தை நிலை நிறுத்த வேண்டும். ஒரு காட்சியை அவ்வாறே நகலெடுப்பதும், அதனை வரைவதும் ஓவியர்களின் உத்தியாகக் கருதப்படுகின்றது. தான் கண்டு ரசித்தவற்றை, அதே ரசனையுடன் வாசகர்களுக்கு வழங்குவதில் பெரும் சவால்கள் ஓவியர்களுக்கு ஏற்படும். அச் சவால்களை அவர்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் போது நமக்குள் சிறப்பான ஓவியங்கள் கிடைக்கின்றன.


நான் முன்பு "இண்டியன் இங்க் " எனப்படும் வர்ணத்தை , நிப் பேனாவால் நனைத்து வரைந்த ஓவியங்கள் என் கண்முன்னால் நிழலாடுகின்றன இத் தருணத்தில் !

கருத்து வெளிப்பாடுகளாகவோ, அலங்காரமாகவோ ஓவியத்தை வரையலாம். பொருத்தமான கடதாசி, உரிய இலக்கம் கொண்ட தூரிகை பொருத்தமான வர்ணங்கள் மற்றும் துடைப்பதற்கான துணி, பென்சில் அல்லது நிப் பேனா உள்ளிட்ட எழுதுகருவிகளுடன் நாம் நமது சித்திரப்பயணத்தைத் தொடரலாம்.


முதலில் அகக்கண்ணில் நிறுத்தப்பட்ட உருவத்தை பென்சிலில் அல்லது நிப் பேனாவால்  நேர்த்தியாக அதாவது ஒருசீராக வரையவேண்டும். உருவம் வரைந்த பின்னர் பொருத்தமான வர்ணங்களை உபயோகித்து அதன் வெளிப்புறக் கோடுகளை வரைய வேண்டும் (Out line). அதன் பின்னரே பிரஷ்ஷை உரிய விதத்தில் வர்ணங்களில் நனைத்து, அவ் வர்ணங்களை ஓவியத்தின் உட்பகுதிகளில் சீராக நிரப்ப வேண்டும். ஏனைய பகுதிகளில் வரணங்கள் தவறுதலாகப் பட்டுவிட்டால் அதனை துணி மூலம் அகற்றலாம். அவ்வாறே தூரிகையையும் நன்றாக நீரில் கழுவியே பயன்படுத்த வேண்டும். சிறப்பான ஓவியங்களாயின் அதற்குரிய சட்டகமிட்டு (பிரேம்) வீடுகளில் காட்சிப்படுத்தலாம். அல்லது விற்பனை செய்யலாம்.


ஓர் சினிமா வெற்றி பெற வேண்டுமாயின் அதில் காட்சியமைப்புக்கள் சிறப்பாகக் காணப்படல் வேண்டும். இதற்கும் ஒவியத்திற்குமிடையிலான தொடர்பு அவசியமாகப்படுகின்றது. எனவே திரைப்படம் சார்ந்த தொழினுட்ப வளர்ச்சி, ஆன்மீகம், அரசியல், வாழ்க்கைத்தரம், புகைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஓவியம் தன் முத்திரையைப் பதித்துள்ளது. சினிமா நடிகர் சிவகுமார் அவர்களின் பல சிறப்பான ஓவியங்களை நான் ரசித்துள்ளேன். அவ்வாறே எனது பாடசாலை நண்பி ஆசிரியை சிசிலியா பெட்டர்ஸன் அவர்களின் ஓவியங்களையும் நான் ரசித்துள்ளேன்.


ஓவியமானது மனநிறைவுடன் கூடிய பொழுதுபோக்கு மாத்திரமல்ல, வருமானத்தையும் நமக்குப் பெற்றுத் தரக்கூடிய துறையாகவும் விளங்குகின்றது.

 நமது கரங்களால் ஓவியம் வரைந்து அது மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்தினால் அந்த இன்பத்திற்கு எல்லைகள் வகுக்கமுடியாது.


இன்று நாம் காணும் இந்த ஓவியத்துறையானது பல தசாப்தங்களில் பல்வேறு பரிமாணங்களைத் தாண்டி வந்துள்ளன. பல வரலாறுகளைக் கொண்டுள்ளன. கண்களால் ஓவியங்களைப் பார்க்கும் போது நம்மனக்கவலைகளை உறிஞ்சி நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் சக்தி இவ் ஓவியத்திற்கு இருக்கின்றது
நான் ரசித்த சில ஓவியங்களை நீங்களும் ரசித்திருப்பீர்கள்  மகிழ்ச்சியே !


இதில் என் கைவண்ணமுள்ளது. விரும்பினால் இதனை அழுத்திப் பாருங்கள்.

- Ms. Jancy Caffoor -