About Me

2012/07/28

தவிக்கும் மனசு



"இந்த அநியாயத்த கேட்க ஆருமில்லையா"

காற்றோடும் உரசும்  தாயின் அலறலும், வார்த்தைகளில் "இடி" யை இணைத்துக் கொண்ட தந்தையின் வீரமும் நெஞ்சத்தினை பிறாண்டவே கண்களை இறுக்க மூடுகின்றேன். நான் இவ்வுலகத்தில் கண்ட மிக மோசமான மிருகம் அவர்தான். என் சின்ன வயதில் முகிழ்த்த கனவையெல்லாம் அறுத்தெறிந்த வீரர். என் பெற்றோர் இருவரும் குணங்களால் முரண்படும் ஈர் துருவம். ஒருவர் கூறுவதை மற்றவர் குறை, குற்றம் காணும் மானசீக நோயாளிகள். இவர்கள் அடிக்கடி தேவையில்லாத விடயத்திற்கெல்லாம் சண்டை பிடிக்கும் போது நானோ மன சறுந்தவளாய் மௌனித்து என் அறைக் கதவைத் தாழித்து விக்கலோடு கரைந்து விடுவேன். இது என் அன்றாட நிகழ்வு 

இன்றும் சண்டைதான் பிடிக்கின்றார்கள். மௌனித்துக் கிடப்பதைத் தவிர வேறெதும் தெரியவில்லை.

தந்தையின் பாசத்துக்காய் ஏங்கிய போராட்டங்களெல்லாம் நாளடைவில் அவர் மீதான வெறுப்பாய், விரக்தியாய் மாறிக் கிடப்பதைக் கூட அறியாதவராய் அவர் ...............

எனக்கும் அப்பாவுக்குமிடையிலான இடைவெளி நீள நீள குடும்பத்திலிருந்து மெது மெதுவாக விலகிக் கொள்ளும் பிரமை.......

"சந்தோஷம் எப்படி இருக்கும்"

உணர்வுபூர்வமாக விடை தெரியாத வினாவுக்குள் என் மனம் சிக்குண்டு பல நாட்கள். சந்தோஷங்களை வெளிப்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கும் மற்றக் குடும்பத்தினரைக் காணும் போதெல்லாம் நெஞ்சவெளியின் பசுமையை பொறாமை மயானமாக்கிக் கொண்டிருந்தது..

தலை நரம்புகள் விண்ணென வலிக்க, மனசின் வலி கண்ணீராய் கரைந்து கன்னம் நனைத்துக் கொண்டிருந்தது.

எத்தனை நாட்கள் தான் இந்த நரக வேதனை.............

நினைவு தெரிந்த காலமுதல் இந்தத் தாய் படும் அவஸ்தையும், கண்ணீரும், புலம்பலும் முடிவுறாத தொடர்கதைகள்.................

என் வாலிப வோரங்களில் வந்த காதல்களில் சுருளாமல் தப்பித்துக் கொண்ட வீரத்தனம் இந்த வில்லங்கத்திற்காகத்தானா...........

கண்களை மூடுகின்றேன்...............மீண்டும் கோரங்களின் அரங்கேற்றம் மனக் கண்ணில் !

"தாயின் தலைமுடிச் சிதறலை  தந்தையின் கரங்கள் மூர்க்கத்தனமாகப் பற்றிப் பிடித்து சுவரில் மோதி சிதறிய ரத்தத்துளிகளால் அவர் விரல்களே சிவக்க"

"ஐயோ.......விடுங்கப்பா..........அம்மா பாவம் "

தடுக்க முயன்ற என்னிடம் அவர் ஆத்திரம் திரும்ப, அன்று நானும் உடல் புண்ணாகி காயங்களுடன் அம்மாவுக்கருகில் குற்றுயிராகிக் கிடந்தேன்.....

கதறல் பூச்சியமான நிலையில் இப்பொழுது நாங்களும் ஊமையாகி மரத்துப் போனோம்...

ஒவ்வொரு அழிவிலும் தான் புது விடியல் உருவாக வேண்டும்..அந்த விடியலின் குளிர்ச்சி தந்தையின் மரணத்திலா?

ஆனால் அதற்கிடையில் என் இளமை மனசு கரைந்து விடும். இருந்தும் நானும் முடிவு தெரிந்த பயணத்திற்காக பக்குவப்பட வேண்டியதாயிற்று!

தான் விடுகின்ற தவறுகளுக்கெல்லாம் எம்மீது காரணம் தேடும் இந்தத் தந்தை என் பாவப்பட்ட வாழ்வின் சேமிப்பு............!

மனம் அடிக்கடி புலம்பத் தொடங்கியது. எனக்கு யாரையும் பிடிக்கவில்லை. தனிமையைத் தவிர !

தந்தையின் முழக்கமும், அதனைத் தொடர்ந்து தன் புலம்பலை என்னிடம் கொட்டித் தீர்க்கும் தாயும் என் வாழ்வின் போக்கினை மாற்றி, மனசை வெறுமைப்படுத்தி விட்டனர். பிடிப்பற்ற வாழ்க்கை. மரணம் அண்டும் வரை வாழத்தான் வேண்டும்.........

பெற்றவர்களை உதற முடியவில்லை. என்னையிந்த மாயத்திலிருந்து மீட்கவும் யாருக்கும் துணிவுமில்லை. இறை பிரார்த்தனை மட்டுமே ஆறுதலாய் தோழமையோடு ஒட்டிக் கொள்ள அந்நியப்பட்டுப் போனேன் நிம்மதியான வாழ்விலிருந்து........

"உம்மா"

தந்தையின் கொடுமையால் கதறிக் கொண்டிருந்த தாயின் பார்வை என்மீது விழுந்தது..

"முடியலம்மா...................ரொம்ப தலைவலிக்குது.....நெஞ்சு கூட நோகுற மாதிரி இருக்கு "

வார்த்தைகளை நான் சிரமப்பட்டு கோர்த்த போது, தாய் நடுங்கிப் போய் தன் சோகத்திலிருந்து கழன்று வெளியே வந்தார்.

"ஏன்டீ................என்னை நீயும் கொடுமைப்படுத்துற.......வாடீ டாக்டர்கிட்ட போகலாம்"

தாய்  வற்புறுத்தி அன்றைய தினமே என்னை டாக்டரிடம் சேர்க்க, வைத்திய பரிசோதனை முடிவு என் வாழ்வின் விதிக்கு முன்னுரையாய் அமைந்தது......

"டாக்டர் .......என் புள்ளக்கு.........................."

தாய் தன் வார்த்தைகளை முடிக்காமல் விம்மினார்....அவருக்குள்ள ஒரே ஆறுதல் நான்தானே!

அழுது விடுவேனென்று அடம்பிடிக்கும் குரலில் தாய் கேட்கும் போது டாக்டர் மெதுவாக சொல்லுவது எனக்கும் புரிகிறது................

"ஓ........ப்ளட் கான்சரா..............ரொம்ப நோய் தீவிரமாகிட்டுதோ.........இன்னும் கொஞ்ச நாள்ல போய்ச் சேர்ந்திடுவேனோ "

டாக்டர் சொல்லச் சொல்ல உம்மா அழும் சத்தம் கேட்கிறது.

உம்மா அழுகின்றார்.......நானோ சிரிக்கின்றேன்.........

"இனி வாப்பாட  கொடுமை இல்ல.....உம்மாட கதறலும் புலம்பலும் நெஞ்சுக்குள்ள இறங்கப் போவதில்லை...........சமூகத்தோட விமர்சனங்களும் நெருங்கப் போவதில்லை "

எனக்கென்று நாளை யாருமே இல்லாத  இந்த வாழ்வில் என் தாயின் கண்ணோட போய்ச் சேர்ந்தா ஒரு சொட்டுக் கண்ணீராவது என் இத்தனை நாள் வாழ்வுக்காக கிடைக்கும்.

விழிகளை மீள இறுக்கிப் பொத்துகின்றேன்.............சூடான கண்ணீர் என் கன்ன வரம்பிலிருந்து மெதுவாக கசிகிறது..........

இது ஆனந்தக் கண்ணீரல்ல......அவலக்கண்ணீர்.............

என் இழப்பால் தாய்க்கேற்படும் அவலத்தை நினைந்து திர்ந்த வலிக்கண்ணீர்...

கண்களைத் திறக்க மனமின்றி. மீண்டும் மூடிக் கொள்கின்றேன் விரக்தியாய்!

கதீஜா முராத்

என் சகோதரி மகள்
---------------------------
இடம் - கட்டார் தோஹா







































2012/07/27

கவிதை எழுதலாமே

இது கவிதை எழுத ஆர்வப்படுவோர் மட்டுமே வாசிக்க வேண்டிய பதிவு.கவிஞர் அல்ல. ஏனெனில் என்னை விட கவிஞர்களுக்கு இன்னும் நன்றாகத் தெரியும். கவித்துறையில் நான் சிறு கிள்ளையே. என் அனுபவங்களை வைத்து பிண்ணப்பட்ட பதிவிது.

கவிதை என்பது உணர்வுகளின் வெளிப்பாட்டு வடிவம். அது அனுபவங்களை நாம் நேரடியாக உள்வாங்குவதாலோ அல்லது பிறரின் அனுபவத் தெறிப்புக்களால் நமக்குள் உள்வாங்கப்பட்ட படிப்பினையாகவோ இருக்கலாம்.

இன்று முகநூலில் உலா வரும் புதுவிதமான கவிதைகளின் சிறப்பு பிரமிக்கத்தக்கதாக உள்ளது. அவை சொந்தக் கவிதையாகட்டும் அல்லது பிறரின் கவிதைகளை கொப்பி பேஸ்ட் பண்ணியதாக இருக்கட்டும். அவை யாவும் மனித உணர்வுகளின் பிரதிபலிப்புக்களே!

கவிதை எழுதுவதென்பது சிறப்பானதோர் ஆற்றல். ஆவலால் தூண்டப்படக்கூடிய ஆற்றல். இந்த ஆற்றல், ஆவல் எல்லோருக்கும் இயல்பாகவே உள்ளது. ஆனால் அவர்கள் அதற்கு முயற்சிப்பதோ பயிற்சியெடுப்பதோ இல்லை. ஒருவரின் ஆக்கங்களை தன் ஆக்கம் போல் வெளியிடும் இலக்கிய திருட்டைச்  செய்வதை விட, தனது உணர்வுகளை தானே கிறுக்கி கிறுக்கல்களாக வெளியிடுவது எவ்வளவோ மேல்.
-----------------------------------------------------------------------------------------
கவிதையெழுதும் போது பின்வரும் விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தல் வேண்டும்
-----------------------------------------------------------------------------------------
1. நிறைய இலக்கியப் புத்தகங்களை வாசிக்க வேண்டும். அப்பொழுது நம்மால் பலவிதமான நிறைய சொற்களை அறிய முடியும். மொழிச் செம்மைக்கு இது உதவும். ஏனெனில் கவிதையின் உயிர்ப்போட்டத்திற்கு மொழி அவசியமாகின்றது.

2. எழுதும் மனதை வேறு சிந்தனைகள் குழப்பாமல் அமைதிப்படுத்த வேண்டும்

3.எழுதப் போகும் கருப்பொருள் எது என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அல்லது ஒரு படம் ஒன்றைத் தெரிவு செய்து அதற்கேற்ப எண்ணங்களை ஓட விட்டு எழுத முயற்சிக்கலாம்.

4.அந்தக் கருப்பொருளை மனதிலிறுத்தி அதற்கு வரக்கூடிய கவிதைகளை சந்தத்துடன் கவிதைப்பாணியில் நமக்குள் நாமே சொல்லிப் பார்க்க வேண்டும்.

5.வார்த்தைகள் வெளிப்பட வெளிப்பட அவ் வார்த்தைகளை ஒரு தாளில் குறித்துக் கொள்ள வேண்டும்.

6. மீண்டும் எழுதியவற்றை வாசித்துப் பார்க்கும் போது அதனைத் திருத்தம் செய்யத் தோன்றும். அவ்வாறு நினைப்பவற்றை திருத்தம் செய்யலாம். இவ்வாறு பல திருத்தங்களின் பின்னர் முழுமையான கவிதையொன்று பிறக்கின்றது.

6. கவிதை எழுதும் போது சில வார்த்தைகளை பிரித்தும், சிலவற்றை சேர்த்தும் எழுதும் போதுதான் கவிதை சிறப்பானதாக மாறுகின்றது

5. கவிதை எழுதும் போது எதுகை, மோனையையும் கவனித்தல் வேண்டும்.

6. கவிதைகளில் எளிய வார்த்தைகளைப் பயன்படுத்துவதிலும் பார்க்க வெகு சிலருக்கு மட்டுமே புரியக்கூடிய  வார்த்தைகளைப் பயன்படுத்தும் போதே அக் கவிதை எழுதுவோர் பிறரின் கவனிப்புக்குள்ளாகின்றார். கவிதையும் சிறப்படைகின்றது. (உதாரணம் - மௌவல் - மல்லிகை)

7.கவிதை பிறக்க நேரகாலம் சொல்லமுடியாது. எப்பொழுது எழுத வேண்டுமென மனம் நினைக்குதோ, அப்பொழுதே அக் கவிவரிகளை குறித்தல் வேண்டும்.

8. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவற்றை சம்பந்தப்படுத்தி , வார்த்தைகளை கவியில் புகுத்தும் போதுதான் அக் கவிதை பிறரின் பாராட்டைப் பெறுகின்றது

9.பிறரின் கவிதைகளை வாசித்து அனுபவியுங்கள்.  நமக்குள்ளும் அவ்வாறு எழுதவேண்டுமென்ற தாக்கம் ஏற்படும்

10.தொடர்ந்த முயற்சி, பயிற்சி, பாராட்டு, ஊக்கம் காரணமாக நமது கற்பனை ஆழம், சொல் வார்ப்பு என்பவற்றில் முன்னேற்றமும், அழகும் ஏற்பட்டு கவிதை உயிரோட்டமுள்ளதாக மாறும்.

11.தொடர்ந்து ஒரே கருப்பொருளில் எழுதாமல் வித்தியாசமான அன்றாட வாழ்வோடு தொடர்புபடக்கூடிய விடயங்களுடன் பொருந்தக்கூடிய எண்ணங்களை சற்று கற்பனையும் கலந்து பதிவிட வேண்டும்.

12.நாம் கற்பனையில் கிறுக்கிய கிறுக்கல்கள் பிற மனங்களில் நிஜமெனும் மனத் தாக்கத்தை, நெருடலை ஏற்படுத்துமேயானால் நிச்சயம் அக்கவிதை உயிர்ப்புத்தன்மை வாய்ந்ததாகும்.

12.நல்ல கவிதையொன்றை எழுதி பிறர் அதனைப் பாராட்டும் போது கிடைக்கும் மனதிருப்தியை வார்த்தைகளால் அளவிடமுடியாது.

ஒவ்வொருவர் பாணியும் வித்தியாசமானது. ஒருவரைப் போல் மற்றவர் எழுத முடியாது. கண்ணதாசனும், வைரமுத்துவும், வாலியும், அப்துர் ரஹ்மானும் எழுதும் பாணி வேறுபடக்கூடியது. நாம் நிச்சயமாக அவர்களைப் போல் வரமுடியாது. 

இருந்தும்..........

நம் ஆற்றலை நாம் ரசிக்கலாம்!
வளர்க்கலாம்!
நமக்கென ஒரு பாணியைக் கடைப்பிடிக்கலாம்!
கர்வமில்லாத நல்ல ரசிகனால் நல்ல கவிஞனாக மாறலாம்!

கவிஞராக மாற வாழ்த்துக்கள்.

பாட்டி எங்கே போறியள்



மதியம் 12 மணி...........

சுட்டெரிக்கும் வெயில் அன்றேனோ எட்டிப் பார்க்கவில்லை. லேசான சிணுங்கலுடன் கூடிய மழைச் சிவிறல்களில் வவுனியா பஸ் நிலையமும் நனையத் தொடங்கியது. என் வகுப்பு முடிந்ததும் அவசர அவசர ஆட்டோ பிடித்து ...........................பஸ்ஸூக்குள்  தாவி ஏறினேன்......ஓரிரு இருக்கைகளே என்னைப் பார்த்து கையசைக்க யன்னலோரம் அமர்ந்து கொண்டேன். மழைப் புழுக்கம் தேகத்தை வேறு வறுத்திக் கொண்டிருந்தது. பின்சீட்டில் பாட்டியொருவர் அமர்ந்திருந்தார். பெரிய நெற்றி பொட்டும் சிவப்புக்கல் மூக்குத்தியும் அவர் அடையாளங்களாக.............

பாட்டி.......

சூழ்நிலையைச் சமாளிக்கிற அளவுக்கு கொஞ்சம் சிங்களத்தை நுனி நாக்கில வைத்திருந்தார்..

"மணிக்கூட்டு கோபுரம் பக்கத்தில இருக்கிற ஆமி காம்ப் பக்கத்தில இறக்குங்க"

தன் அருகிலிருந்த எல்லோரிடமும் சிங்களத்தில் கூறிக் கொண்டே இருந்தார்..
பஸ்ஸின் பயணப்பாதையில் அவர் கூறும் அந்த இடம் இல்லாததால் எல்லோரும் குழம்பி ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தனர்..ஆனால் பாட்டி விடுவதாக இல்லை. தனது வார்த்தைகளை திருப்பித் திருப்பிச் சொல்லி எல்லோரையும் குழப்பிக் கொண்டிருந்தார். அப் பாட்டிக்கு காது வேறு கேட்காத நிலை.....உரத்து பதில் ​சொல்லுவதால் பஸ்ஸில் இருந்த எல்லோரின் பார்வையும் பாட்டி மீது நிலைப்பட்டுக் கிடந்தது...

" பாட்டி .......நீங்க போக வேண்டிய இடத்தைச் சொல்லுங்கோ"

ஒரு இளைஞன் கேட்டதற்கு தெரியாது என்று தலையாட்டினார்..

"ஏன் அம்மா.......வயசான காலத்தில இப்படி அட்ரஸ் தெரியாம அலைகிறிங்க...காலம் கெட்டுக்கிடக்கு"

அருகிலிருந்த பெரியவர் சற்று சினத்தார்.

அருகிலிருந்த பெரும்பான்மையைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் சொன்னார்

" அவ சிங்களம் கதைத்தாலும் கூட தமிழ்தான்........எங்கட ஆட்கள் மூக்குத்தி போட மாட்டார்கள்....நீ அவகிட்ட தமிழில பேசு "

என்னை உசுப்பி விட, நானும் பாட்டியிடம் பேச்சுக் கொடுத்தேன். நான் தமிழில் பேசியதைக் கண்டு பாட்டிக்கு சரியான மகிழ்ச்சி.......
இறங்க வேண்டிய இடத்தின் அடையாளம் சொன்னார்...அவரை நான் தைரியப்படுத்தினேன்.

"பிள்ள......இறங்க வேண்டிய இறக்கம் வந்தால் சொல்லும் என்ன"

பாட்டியின் வேண்டுகோளை நான் ஏற்றுக்கொண்டதில் அவர் மகிழ்ச்சி இரட்டிப்பானது...

அவருக்கு பக்கத்தில இருந்த எனது பாடசாலை மாணவன் அவர் கூறும் இடத்தை ஊகித்தவனாக,

"பாட்டி பயப்படாதிங்க...அநுராதபுரத்தில இறங்கினதும் நான் ஆட்டோ பிடிச்சு தாரேன்.............நீங்க சொல்ற இடத்துக்கு போகலாம்"

இப்பொழுது பாட்டி மனதில் நிம்மதி ............................அது சொற்ப நேரமே ...........!
மீண்டும் புறுபுறுக்கத் தொடங்கினார்.

"உது என்ன இடம் பிள்ள"

பஸ் தரிப்பையெல்லாம் காணும் போது என் உயிரை வாங்கத் தொடங்கினா.....நானும் அவர் மேல் அனுதாபப்பட்டு இடத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டே வந்தேன்.......

" ஈரப்பெரியகுளம்...............பூனாவ..........மதவாச்சி"

ஐயோ......ஏன் பஸ் இந்த றோட்டால போவுது?  ஏன் இவ்வளவு நேரம் எடுக்குது...

பாட்டியின் புறுபுறுப்பு கேட்டு பலர் எரிச்சலுடன் முகம் சுளிக்க, சிலர் அனுதாபத்துக்குள் நனைத்தனர்..

மதவாச்சி.......

சற்று பெரிய ஊர்..பாட்டி அத்தரிப்பிடத்தில அவசரமாக இறங்கப் போக, நாங்கள் வலுக்கட்டாயமாக அவரை பஸ் இருக்கையில் உட்கார வைத்தோம்..

வஹமல்கொல்லாவ....இக்கிரிகொல்லாவ......ரம்பாவ....சாலியபுர..அநுராதபுரம்

ஊர்கள் கடந்தன. அடுத்து அநுராதபுரம் பழைய பஸ் நிலையம்...............

பஸ் கன்ரக்டரின் கூவலைத் தொடர்ந்து பாட்டி இறங்கப் போனார்....

"இல்ல பாட்டி.....இது தூரம்........என்னோட  புதிய நகரத்தில இறங்குங்கோ"

மீண்டும் நம்பிக்கையூட்டினேன்...நான் சொன்ன பேச்சு அவர் காதில் விழவில்லை...என்னிடம் விடை பெற்றார்...நானும் பொறுமையிழந்து மௌனித்தேன்...

பாட்டியின் செயலால் பஸ்ஸிலிருந்த அனைவர் கவனமும் பாட்டியின் மீதுதான்...

"இந்த வயசான காலத்தில உது தேவையோ"

இன்னுமொருவர் முணுமுணுத்தார்...பாட்டி தன்னிருக்கையை விட்டெழுந்து சற்று முன்னே நடந்தவர் திடீரென இன்னுமொரு இருக்கையிலிருந்தவரிடம்
சிங்களத்தில் ,

'உதுல இறங்கினா எனக்குப் போகலாம் தானே"

பாட்டி.........தன் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக்கி ஆளுக்காள் அபிப்பிராயம் கேட்டுக் கொண்டிருந்தா.....வயசானாலே பிடிவாதமும் சந்தேகமும் தான்................... என்  மனது அலுத்தது..

அம் மனிதர் பாட்டியை உற்றுப் பார்த்தவாறு தன் புருவங்களைச் சற்று உயர்த்தினார்.......

" அக்கா...நீங்க நொச்சியாகம யில இருந்தனீங்கள் தானே....மாணிக்கத்திட பெண்சாதியே நீங்க.......உங்கட வீட்டுக்கு ஒருக்கா நான் வந்திருக்கிறன்...நான் செல்வராசன்..........மறந்திட்டியள் போல...மாணிக்கம் அண்ணா சுகமே"

பாட்டி சற்று நேரம் யோசிக்கத் தொடங்கும் போதே பஸ் மீண்டும் தன் இலக்கு நோக்கி புறப்படத் தொடங்கியது..

"ஓமடா......செல்வா.........ஞாபகம் வருது...........பக்கத்தில இருக்கிறவ உன்ர மனிசியே........பார்த்து கனநாளாகுது உன்ன"

அவர்கள் பேச்சு தொடர்ந்தது....

"அக்கா.......கணேசன்ர வீட்டுக்கே போறியள்..........அவன் திசாவையில இருக்கிறான்...அவன்ர பக்கத்து வீட்டிலதான் நாங்க இருக்கிறோம்... எங்களோட வாங்கோ"

அவர்களின் உறுதிமொழியை பாட்டிக் ஏற்றுக் கொண்டே ஆகணும். உரிய இறக்கம் வந்ததும் என்னிடம் விடைபெற்றுக் கொண்டு அவர்களுடன் பாட்டி இறங்கினார்....

"வயதான காலத்தில் தெரியாத இடத்திற்கு பயணிப்பது எவ்வளவு பிழையான விடயம்" எனக்கு நானே கூறிக் கொண்டேன்...!