About Me

2021/04/13

உன்னிடம் மன்றாடுகின்றேன்

 

உன்னிடம் நானும் மன்றாடுகின்றேன் ஜானு

உடைத்து விடாதே மல்லிகைச் செடியினை

நிதமும் மல்லிகை மொட்டுக்களில் மணக்கின்றது 

உன் அழகான புன்னகையின் வாசம் 

உன் கள்ளமில்லா மனதின் பிம்பத்தில்

உயிர்க்கின்ற உயிர்ப்பூக்களை நானும் நேசிக்கின்றேன்


உன்னிடம் நானும் மன்றாடுகின்றேன் ஜானு

சுவரேறி என்னைச் சந்திக்க முயற்சிக்காதே

மதிலில் படர்ந்திருக்கின்ற பாசியின் பசுமைக்குள்

தெரிகின்றதே நம் உலராக் காதலும்

சூரிய ஒளியின் சுகத் தரிசிப்புக்களில்

பூரிக்கின்ற இயற்கையை நானும் நேசிக்கின்றேன்

உன்னைப் போல பாதுகாத்திடத் துடிக்கின்றேன்.


உன்னிடம் நானும் மன்றாடுகின்றேன் ஜானு

முற்றத்து தாமரைக் குளத்தின் நீரை

அவசரப்பட்டு வெளியே இறைத்து விடாதே

அழகிய குட்டிக் குளத்தின் சாம்பிராஜ்யத்தின்

அங்கித் தொடர்புகளில் நிழலாடுகின்றன நம்முறவுகள்

தளம்பும் நீருக்குள் தள்ளாடுகின்ற இலைகளை

நனைக்காத நீர்த்துளிக்குள் தெளிவாகத் தெரிகின்றது

உதட்டோரப் புன்னகையுடன் பிரகாசிக்கின்ற முகம்


உன்னிடம்   மன்றாடுகின்றேன் ஜானுக் குட்டி

உன் காலடிக்குள் பற்றையாகப் பூத்திருக்கின்ற 

தொட்டாச்சுருங்கிப் பூவினை நீயும் மிதிக்காதே 

தொட்டதும் சுருங்குகின்ற இலைகளுக்குள் காண்கின்றேன்

ஊடலால் முகம் சோர்கின்ற உன்னை


உன்னிடம் மன்றாடுகின்றேன் ஜானுக் குட்டி

மழைக்குள் நசிந்து சிதறுகின்ற மலரிதழ்களை

நீயும் மிதித்து மென்மையைச் சிதைக்காதே

உன் மென்மையான இதயத்தின் வருடலை

இழக்கின்ற பிரமைக்குள் தவிக்கின்றது மனதும் 

நம்மைப் பிரிகின்ற பெற்றோரின் கண்ணீராகி

என்னையும் நனைக்கின்றது அந்த ஈரம்

அஞ்சுகின்றேன் என் சகோதர்களும் உன்றன் 

உணர்வினைக் காயப்படுத்தி நம்மைப் பிரிப்பார்களோவென்றே


உன்னிடம் மன்றாடுகின்றேன் ஜானுக் குட்டி

வேலிக்குள் விளக்கேற்றும் ரோசாச் செடிகளை

என் நினைவாகத் தொட்டுப் பார்த்திடாதே

வெட்கத்தில் சிவக்கின்ற என் கன்னத்தை

நீயும் காணாமல் போய் விடுகின்றாய்

பக்கத்தில் விரிந்திருக்கின்ற முட்களைப்போல் பாதுகாக்கின்ற

பெற்றோரின் வெஞ்சினத்தில் நீயும் துன்பப்படுவாயென

அஞ்சுகின்றேன் நானும் உன்மீதான அன்பினால்


ஜன்ஸி கபூர் - 18.12.2020

 

Kesavadhas

ஜன்ஸி கபூர்

தனது தனித்துவத்தை மீண்டும் நிரூபிக்கிறார் கவிஞர் இக்கவிதையின் வாயிலாக!

மாதிரிக் கவிதைகளின் கருத்தோ எதிர்மறைக் கருத்தோ கூட கவிஞர்களின் கவிதைகளில் வரலாம்!

ஆனால் சொல்லும் வகையில் சொற்களில் வார்த்தைகளில் உவமங்களில் வர்ணனைகளில் படிமங்களில் சொல்லோவியமாக தரும் வகையில் தான் தனித்துவம் தெரியும்!

இந்த கவிஞர் கொடுக்கப் பட்டப் பொருள் மற்றும் கருத்திலிருந்து மாறுபடுவதில்லை!

ஆனால் அணுகும் விதத்தில் சொற்பிரயோகங்களிவ் படிமங்களில் வெற்றியை தனது வசமாக்கிக் கொள்ளும் வித்தை இவரிடமுளது!

கவிதைக்குள் போகலாம்!

ஜானு முறித்துவிடாதே ஜாஸ்மின் செடியை!

மல்லிகைச் செடியில் மணக்கிறதுஉன் புன்னகையின் வாசம்!

கள்ளமில்லா மனத்தின் பிம்பம் உயிர்க்கின்ற உயிர்ப்பூக்கள்

சூரிய ஒளியின் சுக தரிசுப்புகளில் பூரிக்கும் இயற்கையாக நானும் நேசிக்கிறேன்!

பாசியின் பசுமைக்குள் தெரிகிறது நமது உலராக்காதல்

முற்றத்து தாமரைக் குளத்து நீரை இறைக்காதே!

குட்டிக்குளம் அங்கித் தொடர்புகள் நிழலாடுகின்றன. நம்முறவும் தளும்பும் நீருக்குள் தள்ளாடும் இதயம் நனையாத நீர்த்துளிக்குள் தெரிகிறது!

தொட்டாச் சுருங்கி இலைகள் சுருங்குகையில் ஊடலில் சுருங்கும் உன்முகத்தை ஞாபகமூட்டுவதால் அப்பூக்களை மிதிக்காதே!

(தொடரும்)

 

Kesavadhas

 

ஜன்ஸி கபூர் தொடர்ச்சி


மழைக்குள் நசிந்து சிதறும் மலரிதழ்களை மிதித்து மென்மையைச் சிதைக்காதே!

மென்மையான இதயவருடலை இழக்கின்ற பிரமைக்குள் தவிக்கிறது மனம்!!

பெற்றோர்களின் கண்ணீரின் ஈரம் என்னை நனைக்கலாம்!

அதனால் எழும் சகோதர கோபம் நம்காதலைச் சிதைக்கலாம்!

ரோசாப்பூக்கள் சிதைந்தால நாணத்தால் சிவக்கும் என்கன்னங்களை நீ பாராய்!

என் பெற்றோரின் வெஞ்சினத்தால் நீயும் துன்புறுவாய்!

உன் காதலுக்காகவே அத்தனையும் சொல்கிறேன்!

காதலே பெரிதாகத் தெரிகிறது

இக்கவிதையில்!

சில வார்த்தை பிரயோகங்கள் பிரத்யேகமானவை!

சமூக ஒளியின் சுகதரிசிப்புகள் பூரிக்கின்ற இயற்கை

தளும்பும் நீருக்குள் தள்ளாடுகின்ற இலைகளை நனைக்காத நீர்த்துளிக்குள்

தெளிவாகத் தெரியும் உதட்டோரப் புன்னகை

இதயத்தின் வருடலை இழக்கின்ற பிரமைக்குள் தவிக்கின்ற மனது

இவைகளுக்காகவே தனியொரு சபாஷ் தரலாம்!

சாம்ராஜ்யம் சரிபார்க்கவும்!

அங்கிகள் எப்பொருளில் பயன்படுத்தப்பட்டது!

மொத்தத்தில் பிரமிப்பு!

வாழ்த்துகள்!

கவிஞர்/கவிதாயினி 

கவிதை வடித்தக் கவிஞர் அனைவருக்கும் வாழ்த்துகள்!

இவண் பைந்தமிழ்ப்பூம்புனல்.

அழகென்னும் அபாயம்

 


குடையென விரிந்திருக்கின்ற மரக் கிளைகள்
ஓன்றோடொன்று மோதி விரிக்கின்றனவோ நிழலை
மறுப்பின்றி இருளும் விழுந்து கொண்டிருக்கின்றது
ஆதவன் மேலிருந்தும்கூட சாமத்துச் சாயலில்
அகன்ற வனமும் மாறிக் கொண்டிருக்கின்றது.

ஒளியைத் தனக்குள்ளே உறுஞ்சாப் பாதையில்
உராய்ந்து நிற்கின்றது என்றன் ஊர்தி.
இயந்திர அதிர்வின் துடிப்பொலி கேட்டு
எட்டிப் பார்க்கின்றன கானகத்துச் சருகுகள்

ஆதவச் சுவாலையின் அணைவை சூட்சுமமாக
அறிவித்துக் கொண்டிருக்கின்றது மாலை நேரமும்
தரைக்குள் பதிக்கின்ற காலடிச் சத்தமும்
விரட்டத் தொடங்குகின்றது கானக அமைதியை
 
இலைச் சருகுகளில் ஒளிந்திருக்கின்ற எறும்புகள்
விளையாடத் தொடங்குகின்றன கால் விரல்களுக்கிடையில்
குறும்பான கருவண்டுகளின் சிறகடிப்பின் ஓசையும்
செவிக்குள் நுழைகின்றது இரைச்சலை நிரப்பியபடி

சிறகுகளை மடித்து உறங்குகின்ற பறவைகள்
சீற்றத்துடன் பறக்கையில் காற்றும் அலறுகின்றதே
மென்மேனியைத் தழுவிய இம்சையின் முறைப்புக்குள்
தைரியத்தையும் மெல்லத் தொட்டுப் பார்க்கின்றேன்

மங்குகின்ற வெளிச்சத்தில் தொங்குகின்ற குளவிக்கூடு
மொய்க்கின்ற பிரமையில் நிம்மதியும் அறுந்துவிட
வேகமாக நடக்கின்றேன் ஒற்றையடிப் பாதையில்
சோகமாகச் சரிகின்றன பற்றைப் புற்கள்  
என்னாடையின் உரசலினால் மெல்ல நிமிர்கின்றன
வெட்டவெளிக்குள் பூத்துக் கிடக்கின்ற பூக்களின்
உறக்கத்தினை கலைக்கின்றேன் போலும் அவற்றின்
கலக்கப் பார்வைகூட துளைக்கின்றது உயிரை

தொலைவில் நகர்கின்றனவோ பெரும் மலைகள்
பிளிறல் ஓசைக்குள்ளும் பின்னலிடுகின்றது பீதி
அலறுகின்ற உணர்வினை அடக்கிக் கொண்டே
மெதுவாகப் பதுங்குகின்றேன் பெருமரத்தின் பின்னால்

உயர்ந்த மரக்கொப்பை முறிக்கின்ற ஆவேசத்தில்
ஊஞ்சலாடுகின்ற செங்குரங்குகளின் கண்களும் பளிச்சிடுகின்றன
வெஞ்சினத்தின் எதிரொலியாய் குரங்குகள்  வீசுகின்ற 
காய்களின் மோதலில் வலிக்கின்றதே தலையும்

பறக்கின்ற  வண்ணாத்திகளின் சிறகுத் தொடுகையும்
உயிரின் உயிர்ப்பைத் தடுக்கின்ற நஞ்சோ
காதோரம் வெடிக்கின்றது அச்சத்தின் பிரமை
படர்கின்ற வியர்வைக்குள் மூச்சும் கரைகின்றதே

அனுபவங்கள் திணிக்கின்ற மரண பயத்திலிருந்து
உணர்வுகள் மீள்கின்றபோது சுவாசமும் சுகமாகின்றது
புன்னகைக்கும் சிறு குழந்தைபோல் பிறப்பெடுக்கின்றேன்
மனதுக்குள் மகிழ்வையும் நிறைத்துக் கொள்கின்றேன்

ஜன்ஸி கபூர் - 12.12.2020
 
Kesavadhas
 
ஜன்ஸி கபூர் அழகான கற்பனையில் தோட்டத்தில் விரிந்த வெவ்வேறு வகையான மலர்களின் வாசனைகளாய் கவிதையின்
ஒவ்வொரு வரியும் பேசுகிறது!
குடையென விரிந்த மரக்கிளைகள் ஒன்றோடொன்று மோதி விரிக்கும் நிழல் அழகு..
இயந்திர அதிர்வின் துடிப்பொலி கேட்டு எட்டிப்பார்க்கும் சருகுகள் அழகு...
இலைச்சருகுகளில் மறைந்திருக்கும் எறும்புகள் விளயாட்டு
செவிக்குள் நுழையும் குறும்பான கருவண்டிகளின் சிறகடிப்பு...
அடுத்து வருகிற வர்ணனைகள் எல்லாமே தனிமனித அச்சத்தை மனதில் உருவாக்குகின்றன்!
அபாய உணர்வு தனிமனிதனுக்கானது!
ஆனால் சான்று கவிதையில் சொல்லப்பட்ட அபாயம் சமுதாயத்திற்கானது!
கவிதை அழகிற் குறைவில்லை!
எட்ட வேண்டிய கருத்து எட்டப்படவில்லை!
வாழ்த்துக்கள்!
★★★★++

பாரதம் ஒளிர்கவே

 


கவிச் சிற்பி
******************
பாரதம் செதுக்கிய கவிச் சிற்பி/
பாரினில் படர்ந்தார் மொழிப் புலமையால்/

வேரூன்றும் தன்னம்பிக்கையால் வெற்றிகளைப் பெற்றிடவே/
நீரூற்றினார் நமக்கும் உறுதியுடன் வாழ்ந்திடவே/

பெண்ணின் விடுதலைக்கும் எண்ணம் தந்தார்/
பாரதியே உம் புகழ் ஒளிர்கவே/

ஜன்ஸி கபூர் - 11.12.2020

வெற்றியும் தோல்வியும்

 


 
வீழ்கையில் எழுவது ஆற்றலின் பலமே/
மூழ்கினாலே முத்துக்களைத் தொடுகின்றது கரமும்/
வெற்றியும் தோல்வியும் முயற்சியின் பலனே/
கற்றிடலாம் பாடங்களை பெற்றிடலாம் அனுபவங்களை/ 

தவறிப் போகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களும்/
தரிக்கின்றதே பிறிதொரு நன்மைக்குள் என்றுமே/
குறைகளைக் கண்டறிந்தால் துலங்குமே நிறைகளும்/
குன்றாப் புகழில் இணைக்குமே நம்மையுமே/

சிறப்பான எண்ணத்துள் சிறகடிக்கும் நல்லறிவு/
சிந்தையை ஆள்கையில் உணர்கிறோம் உயர்வை/
விந்தை வாழ்வுக்குள் விளையாடும் விதியென/
விமர்சிக்கின்றோம் நாமும் தோற்ற பொழுதுகளை/

கழிகின்ற பொழுதுகளை கருத்தோடு செலவழிக்கையில்/
வழிகின்றதே உற்சாகம் வருத்தமும் தொலைகிறதே/
விடிகின்ற பொழுதுகளில் படிகின்றதே ஆனந்தம்/
விருப்புடன் உழைக்கையில் எதிர்காலமும் உயர்கிறதே/

ஜன்ஸி கபூர் - 6.12.2020