About Me

2012/06/14

முதுமையினில்!

நம் வசந்த வாழ்வின்
கடைசி வரிகள் 
மறுமைத் தேடலுக்கு
மனுப்போடும் விண்ணப்பம்!

நம் வாலிபப் பாறையைக்
பெயர்த்தெடுத்து - காலம்
வரையும்
கடைசிச் சிற்பம்!

விழிச் சுருக்கத்தின் கிறக்கத்தில்
இறுகிக் கிடக்கும் சோகம் 
நம் தளர் நடையிலோ
பாதச்சுவடு
உலர்ந்து வெடிக்கும்!

வாழ்க்கை தேசம்
தாழ்போட்டமிழும்  
ஆன்மீகக் குளியலுக்காய்!
சுவாச நீரோட்டமோ 
சுகம் காட்டும் நோய்களுக்கு!

மனப்புலத்தின் நிழலிலே
மங்கிப் போகும் ஞாபகம் !
ஐம்புலன் ஒலிபரப்பில்
இயலாமை உலாவாகும்!

வாலிப மிடுக்கெல்லாம்
தொலை நோக்கி வழிந்தோடும் 
அநுபவங்களின் வீரியங்கள்
வந்தமரும் வாழ்வினிலே!

வேரறுந்த கனாக்கள்
வேவு பார்க்கும் உறக்கத்தை 
விரக்திக் களைப்போ
உயிரை அறுத்துப்போகும்!

இரங்காத உறவுகளின் இம்சையில்
இதயம் இளைப்பாறும் 
உறக்கத்தின் அருமை
ஏக்கத்தில் வீழ்ந்து கிடக்கும்!

காலத் தேய்வில் வயசோ
நழுவிப் போக 
வீணாய்ப் போன விழுதாய்
நீண்ட தனிமை
கதறித் துடிக்கும்!

நரை வடுக்களுடன்
நாடியும் தளர்ந்து 
மூப்புத் திரையோட்டத்தில்
மூச்சும் அந்நியமாகிப் போகும் !

விறைத்த மனசுக்குள்
சிறைப்பிடிக்கும் ஆசையொன்று!
மறை கழற முன் - என்
ஆவி பிரியாதே இப் புவிதனை நீங்கி !


ஜன்ஸி கபூர் 




2012/06/13

ஓர் நாள்!


இப் பிரபஞ்சத்துள் தடம் பதிக்கின்றேன்
உறக்கத்திலிருக்கும் 
வண்ணப்பூச்சிகளின் சிறகுகள்
என் ஹிருதயத்துள்
நீயாகி 
முத்தமிடத் துடிக்கின்றன!

விண் தொடுகின்றது - என்
காட்சிப்புலம் !
விண்மொட்டுக்களின் வில்லத்தனத்தில்
உன் ஞாபக விம்பங்கள்
மயங்கிக் கிடக்கின்றன!

இருளோடு சரசமாடும்
மல்லிகையின் மோகனத்தில் - என்
கூந்தல் 
தன்னைத் திணிக்க தடுமாறிக்
கொண்டிருக்கின்றது
அப்பாவித்தனமாய்!

ஊர்க் குருவிகளின் அட்டகாசம்
என் கனவுகளையறுத்து
விழிப்புத் தொட்டிலை
நிறைத்துக் கொண்டிருக்கின்றது
வீம்பாய்!

அந்த மயானப் பொழுதினின்
தூறல்களில் 
தூசி படிந்து கிடக்கும் - என்
தனிமைச் சாளரத்தை உடைத்தே
உன் நினைவுகள் - என்
மனவெளிகளில் அப்பிக் கிடக்கிறது
விதவைப் பெண்ணாய்!

நீ தந்த 
இதய வலிகளிலேனோ - என்
உதயமும் வழி தவறி
எங்கோ அலைந்து கொண்டிருக்கின்றன 
வெறும் பிரமையாய் 
உன்னைப் போல!

என்னாச்சு என்னுயிருக்கு!
உன் 
(ஏ)மாற்றங்கள் நகம் பிடுங்கியதால்
கண்ணீருக்குள் தன்னை
அடகு வைத்தே 
அது சோரம் போனதோ!

எங்கோ ஓர் மூலையில்
பதுங்கியிருக்கும் உன் நிழல் மாத்திரம்
ரகஸியமாய் - நம்
பந்தத்தை மறு ஒலிபரப்புக்காய்
ஆவணப்படுத்திக் கொண்டிருக்கின்றது!

உன்னால் மறுக்கப்படும் - என்
நியாயங்கள் 
ஊமை வலியில் முனகிக் கிடக்க
நீயோ 
எனை இராட்சகி முடி சூட்டி
குருதிப் பிழம்புக்குள் தள்ளிவிட்டே
வேடிக்கை பார்க்கின்றாய்!

தோல்விகள் நிரந்தரமல்ல 
நேச வேள்வியில் வெந்து கருகும் - நம்
நெஞ்சின் சாலைப் பரப்பு
என்றோவொரு நாள் - நம்
பிரிவுக்கு நாள் குறித்து
வழி தரும் 
வலி போக !


ஒளி நாயகன் !

இந்தப் பிரபஞ்சத்து மேடையின்
ஒளி நாயகன் நீ! - இருந்தும்
உன் பார்வையின் செழுமையில்
வெட்கித்துக் கிடக்கிறது என்னிளமை!

மேகங்களுள் லொள்ளு விடும் - உன்
மோகன லீலைகளிற்காக
பலயுகங்கள் தவமிருக்கின்றேன் - நீ
இன்னும் எட்டா தொலைவினில்
என் தொல்லையின்றி இருக்கின்றாய்!

பஞ்சணைக்குவியலுக்குள்
பரிதாபம் காட்டும் உன் முகமெனக்குள்
பதிவானதே பசுமரத்தாணி போல!

உன் சந்தனமேனியின்
கதிர்க்கிறக்கத்தின் மயக்கத்தில் - நான்
எப்பொழுதும் சயனிப்பதால்
அடுத்தவர் பார்வையில் நம் சந்திப்புக்கள்
இன்னும் இணையா சமாந்திரங்கள்!

உனை நினைந்து நினைந்து புகையும்
ஏக்க வெம்மைத் திரட்சி
கன்னத்திரட்டில் பருக்களாய் முறைக்கிறது
கறைப்படிவுகளாய் பிறர் பார்வையில்!

உன் தனிமைச் சந்திப்பிற்காய் நான்
காரிருளில் காத்துக்கிடக்கின்றேன் - நீயோ
என் விழிக்கனவுகளையல்லவா
கிள்ளியெறிந்துவிட்டு உலா வருகின்றாய்
பகலில்!

நம் தேசமொன்றாகும் போது - மன
இருப்புக்களில் மட்டுமென்ன பேதமை!
ஆதவனே நிலாவென் மனம்
உன் வசமே
உந்தன் காதல் வேண்டுமென்னாளும்!

ஒளியாதே - நான்
உலா வரும் இரவினில்!


- Jancy Caffoor-

பெண் மனசு


என் 
புலர்ந்த பொழுதின் விரல்களில்
மயங்கிக் கிடக்கின்றது வறுமை!

நிதம் 
சூரியக் குளியலில் தோயும் - என்
மேனியின் நிறம்
அழகை இருட்டடிப்புச் செய்வதால்
காளையின் காதல் மோகம்
காணாமல்தான் போகின்றது!

மாதப்பூக்களில் அவிழும் - என்
குருதி மகரந்தங்களால் 
பெண்மையின் சிதைவுகள்
கண்ணீர் சிந்திச் சிந்தி 
அறிவிப்புச் செய்கின்றன
நாளைய இருப்புக்கு ஆளில்லையென!

முகம் முத்தமிடும் 
வியர்வைத் துளிகளின் சரிதங்களில் 
என்னுழைப்பின் ரகஸியம்
பத்திரப்பட்டுக் கொண்டிருக்கின்றது
காலத்தின் ஆணைக்காய்!

பெண்மை அரிதாரங்களில்
இச்சையேந்தும் 
அணிவகுப்புக்கள்
அமிலம் ஊற்றுகின்றன - என்
விழி நீர்த் திடலில்!

சதை உறிஞ்சும் வல்லூறுக்களின்
மாமிச வேட்டையில் 
நழுவும் ஜீவனாய் என்னுயிர்
பதுங்கு குழு தேடித் தேடி
களைத்துக் கிடக்கின்றது
தினம் தோறும்!

அக்கினிக்குள் அடகு வைத்த - என்
கனவுகளை மீட்டெடுக்க
வழியின்றி 
வலியோடு காத்திருக்கும் - என்
வாலிப மனசை சிறையெடுக்க
கண்ணீர்க்கம்பிகள்
போர் தொடுக்கின்றன!

என் உயிர்ப்பற்ற செல்களை
வெறுப்பேற்ற  
காத்துக் கிடக்கும் காளையரால் - என்
நாளைய பொழுதுகள்
நாட் குறிக்கப்படுகின்றன

மயானத்துக்குள் ஏலமாக !
மலினப்படும் உணர்வுகளால்
விசம் தடவும் விட்டில்கள்
தம் 
இறக்கை கழற்றி
இறங்கத் துடிப்பதென்னவோ 
தூசி படியாத - என்
புன்னகைத் திடலில் தான்!

சந்தோசங்களின் சமாதியில்
தோசம் கழிக்கும் - என்
வாழ்க்கையில் 
மிஞ்சியதென்னவோ
முட் தேசத்தின் சாம்ராஜ்யம்தான்!

கனவுக்குடியிருப்புக் கூட
என் 
கண்ணீர்ச்சுவட்டோரங்களுடன்
தொட்டுக் கொள்கின்றது ரகஸியமாய்!

ஜன்ஸி கபூர் 

2012/06/12

அருவி !


அந்தக் காலைப் பொழுதினில்
மலையடி வாரத் தலைவனின்
கொஞ்சலில்
அவள்
வெட்கித்துக் கிடந்தாள்
கனநேரமாய்!

அவள்
மேனியைச் சூரிய கதிர்களோ
மஞ்சளுடன் சந்தனமுமரைத்து
ஈரப்படுத்திக் கொண்டிருந்தன
காதலால்!

அவள்
மேனி ரகஸியங்கள்
வெள்ளாடை முந்தானை விலகலால்
பகிரங்கமாய்
பறைசாட்டப் பட்டுக் கொண்டிருந்தன!

அவள்
முத்தத்தில் நனைந்த கற்களோ
நாணச் சிலிர்ப்பில்
விறைத்துக் கிடந்தன
கரைக் கொதுங்கி

அவள்
குரற் சலங்கைச் சலசலப்பில்
மோகங் கொண்ட குயில்கள்
மெட்டுக்களை - தம்
குரலுக்குள் திணித்துக் கொண்டன
களவாய்!

காற்றின் ஸ்பரிசத்தை
தன் நீர் விரல்களில் பூட்டி
நளினமாய் நர்த்தனம் புரியும்
அருவி மகளை
பூமியேந்திக் கொண்டது
பூத் தூவி!

அவள்
பாற் சுரப்புக்களில்
மோகித்த அன்னங்கள்
அணி வகுத்தன- நீரைப்
பிரித்தறியும் ஆவலுடன்!

மனித மௌனிப்புக்கள்
அவள் புன்னகையில்
கழற்றின - தம்
சோகங்களை!


அவளுள் செருகுண்ட - அந்த
இயற்கையின் இதயம் மட்டும் என்னுள்
ரசிப்பாகி
கவியைத் துடிப்பாக்கிக் கொண்டிருந்தன
காதலுடன் !


- Jancy Caffoor-