About Me

2012/07/30

அன்னை


உதிரத்தில் கரு தந்து
உணர்வினில் மருதாணி வாசம் பூசி
விழிகளில் எனை முடிச்சிடும்
முக்காடிட்ட வெண்ணிலா!

சந்தனக் காகிதத்தில்
நிதமென் பெயரெழுதி
உச்சரித்து...............
மடியணைக்கும் உயிரோவியம்
என் தாயவர் !

வேதனையில்...............
என்னிதயம் வழுக்குகையில் - தன்
நெஞ்சக்கூட்டில் நேயம் நிரப்பி
தஞ்சமாய் என்னுள் உறைந்திடும்
தங்கத் தாயவர்!

என் உள்ளத் தொட்டிலில்
உவகைப் பண்ணிசைத்து..........
புன்னகைப் பூக்களால்
என்னுள் வசந்தம் நிரப்பி
வாழ்வை நகர்த்திடும்
வசந்தத் தேரவர்!

தன்னாத்மாவில் நிதம்
எனை நிறைத்து...........
அணு தினமும் என் கனவில்
கலந்து.................
காலத் தேய்விலும் பொலிவிழக்கா
பொற்சுடரவர்!

நோய் படுக்கையிலென்
தேகம் குளிர்கையில்................
வலி பொறுக்கியெடுக்க........
வழி தேடும்
மாணிக்கச் சுடர்
மாதா என்னன்னை!

தீ நாக்கின்
மேனி தொடுகையில்,,,,,,,,,,,,,
தன் முந்தானைத் திரையாலே
வெம்மை விரட்டிடும்
குளிர் நிலவவர்!

ஆணாதிக்கக் கரங்களால்.........
பெண்ணவள் எரிகையில்..........
தன் மூச்சில் அமிலம் நிரப்பி
துடித்திடும்
மென் தாயவர்!

அவர்...........
என்னன்புத் தேடலில்
நான் கண்டெடுத்த உயிர்ச்சுவடு!
என்............
ஞாபகத் தெருக்களின்
நீண்ட தூண்!

அன்னையின் அருகாமை
கற்றுத் தந்த நேயங்கள் யாவும்...........
பத்திரப்படுத்தப்பட்டுள்ளன - என்
உறவுச் சேமிப்பகங்களில்!

தன்னிழற் பரப்பில்
என் சிறகு பொருத்தி..........
தன் விழிக்குள்
என் பார்வை பொருத்தும்............
அன்னையின் அன்புக்கு
அணையுண்டோ - இக்
கிரகமதில்!

ஜன்ஸி கபூர் 

செல்வம்


இந்த இரவு
உறிஞ்சிக் கொண்டிருக்கின்றது - சுற்றம்
யாருமற்ற
ஒற்றை நிலாவின் வெறுமையை!

தொலைசாலையொன்றின்
ஓர் புள்ளியில் 
ஓயாமல் ஊளையிடும் நாயோ..
நிசப்தத்தைக் கிழித்தவாறே
மனப் பைக்குள்
பீதியை நிரப்பிக் கொண்டிருக்கின்றது!

காற்றின் கிசுகிசுப்புக்களால் - கிடுகு
முந்தானையவிழ்க்கும்
ஓலைக்குடிசையின் மேனி கண்ட
மின்மினிகள் 
கண்ணடித்துச் சிரிக்கின்றன
கனநேரமாய்!

ஒட்டியுலர்ந்த குப்பி லாம்பின்
மூச்சிரைப்பில் 
ஒளி கூட ஒளிந்து போனதில்
இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன
விம்பங்கள்!

உதரத்தின் உதிரம் நிதம்
தரிசானதில் 
சோமாலியாக்களின் தேசமாய் 
சோர்ந்து போகின்றன - என்
வனப்பு மேனி!

இலைச்சருகின்
மூலை முடுக்குகளில் - தசைப்
பிணம் தேடும் அட்டைகளாய் 
ஒட்டிக் கொண்ட அவலங்களும்
உடைந்த பாத்திரங்களும்
உதிர்ந்த புன்னகையும்- எம்
வறுமைத் தேசத்தின்
குடியிருப்புக்களாகின்றது!

ஆடைக் கிழிசல்களினூடு 
நழுவும்
இளமை ரகஸியங்களால்
கற்பும் காயம் பட்டு
வெட்கமிழந்து போகின்றது!

வெம்மை மறந்த அடுப்புக்களோ
அக்கினி விரல்
ஸ்பரிசிப்பிற்காய்
தவித்துக் காத்திருக்கின்றன
பல நாட் பொழுதுகளாய்!

தரை விரிப்புக்களில் 
பரவும்
கண்ணீர்க்கசிவுகளில்
அவிந்து போன கனாக்கள்
கதறி சிதைந்து போகின்றன!

இத்தனைக்கும் மத்தியில்
இடுப்பின் மடிப்புக்குள் நசுங்கும்
சின்ன ரோசாவின்
உயிர்ப்போசை மட்டும்
மௌனித்த மனதின்
சலங்கையாகின்றது!

கனவுக்குள் முகம் வரைந்து
காத்திருக்கும் 
தாய்மைக் காத்திருப்பால்

ஏழ்மை காலாவதியாகின்றது
எந்தன் வளர்பிறைக்காய்!

ஜன்ஸி கபூர் 






தேர்தல்


அமைதித் தெருக்களிலெங்கும்
ஆரவாரக் கோஷங்கள் !
தெருச் சுவரெங்கும்
சுதந்திரமாய்ச் சிரிக்கும்
மனித முகங்கள் !

காணாத முகங்கள்
படியேறி வாக்குக் கேட்கும்!
வார்த்தைக் கோஷங்களால்
எதிரணிகள் நாற்றமெடுக்கும்!

அச்சுப் பதிப்புக்களில் பல கனாக்கள்
அழகாய்ச் சிரிக்கும்! - அது
பழகிய மாந்தராய்
உரிமையோடு வீட்டுக்குள் வந்து போகும்!

ஒலிபரப்புக்களின் உரப்பு செவிக்குள்
ஓஸியில் நுழையும்!
ஓடியுழைக்கும் கூஜாக்கள் - தெருக்களில்
கூடிப் புகழ் பாடும்!

வாக்குறுதிகளின் கனம்
விண்ணேறி நம்மை எட்டிப் பார்க்கும்!
நம்பிக்கையின் வேரூன்றல்
பொது ஜனங்களைச் சூழ்ந்து கொள்ளும்!

ஆட்சிக் கொடிகள் தலையாட்டும்
தினம் அவசர அபிவிருத்திகளில்!
வோட்டுக்களின் வேட்டைக்காய் - அவை
முகமன் பாடித் திரியும்!

மோதல்களில் மோகங் கொண்டோர்
மெல்ல விழித்திருப்பார் கணங்களுக்காய் !
வெற்றி முரசறைந்தால் - அவர்
வெளுத்தும் வாங்குவார்!

பட்டாசுக்கள் படபடக்கும்........
பணமும் றெக்கை கட்டிப் பறக்கும்!
கள்ள வோட்டும் நல்ல வோட்டும்
களத்தில் மோதிக் குதிக்கும்!

குருதி பூசும் ஜனநாயகம்
குனிந்து கும்மி பாடும்!
தேர்தல் வெற்றி கண்டால்
வாக்கும் தோற்றுப் போகும்!





தகுமோ சொல்


நேற்று வரை தொலைவாயிருந்த - என்
தொடுவானம் 
இன்றென் கரங்களுக்குள் பிரமிக்கின்றது
பட்டாம் பூச்சியாய்!

தனிமை நீள் பரப்புக்குள் - செந்
தணலோடு வீழ்ந்து கிடந்த வென்னை
தாங்கினாய் தாயாய் - என்
தரணிக்கும் வேராய்!

முழு நிலவாம் உந்தன்
பழுதில்லா அன்பால் நானே
எழுதுகோலாய் உருப் பெற்றேனின்று 
என்னுள்ளுன்னைச் செதுக்க!

உன் நிழல் சுமக்குமென்
பாதவோர கொலுசொலி சப்தங்களை
கழற்றியெடுத்தேன் - என்
செவி வெளிக்குள் நிதமுலாவ விட!

கார்த்திகைப் பூவே!
உனக்கென்ன ஐயம் 
என் இருதயத் துடிப்புக்களின்
ஒவ்வொரு அலைவுகளிலும்
பத்திரமாய்த்தான் அசைகின்றாய்!

உன் புன்னகையும் 
புதுமையும்
இலக்கிய ரசிப்பும் - உன்
இதமான  அன்பும்
எனக்குள்ளுன்னை மட்டும்
அடையாளப்படுத்தும் சின்னங்கள்!

உன் காதலும்
ஊடலும்
கூடலும் - என்
உணர்ச்சிப்பிழம்பின் உயிர்ச்சத்துக்கள்!

உன்னருகாமைக் கணங்களின்
மலர்த்தூவல்களில்  - என்
மடி தாலாட்டும் சோகம் துறந்து 
மழலையாகின்றேன் மானசீகமாய்
பல பொழுதுகளில் !

நிலா என்னைக் கடக்கையில்
நினைவுகளால் எனை வருடுமுன்
முத்தங்களால் 
நம் மிடைவெளிச் சமுத்திரங்கள்
குறுகுகின்றன
மன தரைகளில் நம்மைச் சங்கமித்தவாறே!

கனகாலமாய் நான் சுமந்தவென்
கற்பனை வாழ்வின் 
கனாதிப் போராட்டம்
கலைந்தோடியதுன் தரிசனம் கண்டு!

என் மணிக்கட்டில் உனைக் கிடத்தி
நாடித்துடிப்பில் காதல் பாய்ச்சி - நாம்
நாட் கணக்காய் பேசித் தீர்த்தும்
ஏனோ 
மௌனத்துளிகள் நம்மை
ஆக்கிரமிப்பதாய் பிரமிப்பு !

உன்னன்னையாய் நண்பியாய்
வாழ்க்கைத் துணையாய்
உருமாறிக் கிடக்கும் என்னிடத்தே 
புல்லரிக்கு முன் நினைவுகள்
இப்பொழுதெல்லாம்
புதுப் பாதையில் பயணிக்கின்றன!

வசீகரிக்குமுன் வைரவிழிகளில்
சிறைப்பட்ட என் விம்பங்கள் 
உன்னுலகோடு பிணைந்ததால்
என்னுள் உனைக் கண்டேனின்று!

என்  யதார்த்தங்கள்
உன் நினைவுச்சாலையோரங்களில் 
மலர் தூவித் தழுவுகின்றன
நாளைய என் வாழ்வின் இருப்புக்காய்!

இருந்தும் 
முரண்பட்டாய் வேடிக்கையாய் !
மிரட்டி நிற்கின்றாய் செல்லமாய்!
உன் வசமான என்னிதயத்தை- நீ
என்னிடமே தேடுதல் தகுமோ!

ஜன்ஸி கபூர் 

2012/07/29

நீயின்றி


அந்தச் சாலையோரப் பூக்கள்
நீயின்றி விதவைகளாகின!

மழைத்துளிகளையேந்திய
மலர் முகங்கள்
சருகாய் வீழ்ந்து மடிந்தன!

அலை நுரைகள் யாவும்
உன்
புன்னகையில் கரைந்தே
என் மனக்கரையில் சங்கமித்தன!

கைபேசியும் கணனியும்
கல்லறைச் சுவர்களுள்
தம்மைக் கிடத்தப் பேரம் பேசின!

இருதயக் கடிகாரத்தின்
நகர்வோசைகள் 
கண்டனப் பேரணிக்கு
தலைமை வகித்தன!

என் விழி நூலகத்தின்
பார்வை நூல்களிலுன்
செய்திகளே தலைப்புக்களாகி 
முடிசூட்டிக் கொண்டன!

நெஞ்சின் எரிமலைக் குழம்பு
பனிப்புகார்களாய்
உருமாறிக் கிடந்தன
உன்னை நினைந்து!

என் வாழ்க்கைச் சாலையில்
நீ பதித்த சுவடுகள்
அடையாளங்களாகி
முறைக்கின்றன அடிக்கடி!

நீயின்றி ஒவ்வொரு நொடிகளும்
யுகங்களாய் எனை மிரட்டுகையிலுன் 
மடி தேடுகின்றேன் - நீயோ
எகிறிக் குதிக்கின்றாய்
விண் மேட்டை நோக்கி!


ஜன்ஸி கபூர்