About Me

2012/08/05

பிர் அவ்ன் அழிப்பு


திருக்குர்ஆன் - அத்தியாயம் 28
----------------------------------------------
 திருமறையின் இறை வசன ஆதாரங்களிலிருந்து திரட்டிக் கொண்ட  பிர்அவ்ன் அழிவு தொடர்பான சம்பவங்கள்
-------------------------------------------------------------------------------------
மென்மையான மனிதமானது பொறாமை, ஆணவம், கபடம் போன்ற துர்க்குணங்களால் சூழும் தருணத்திலிருந்தே அழிவுக்காக அத்திவாரமிடப்படுகின்றது.

அத் தீயகுணத்தின் சரித்திரமாக இன்றும் நம் நினைவுக்குள் விழுந்து கிடப்பவன் பிர்அவ்ன்.....தானே இறைவன் எனும் மமதையில் இருந்தவனை இறைவன் அழித்தமை பற்றி திருக்குர்ஆனில் அல் கஸஸ் (சரித்திரம்) எனும் அத்தியாயத்தில் இறைவன் தெளிவாக விளக்குகின்றான்.

மூஸா அலை அவர்கள் எகிப்தில் பிறந்த இஸ்ரேல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் . அப்பொழுது எகிப்தில் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த (பார்வோன்) பிர் அவ்ன் குறி சொல்பவர்களை நம்பும் பழக்கத்தைக் கொண்டிருந்தான். எகிப்தில் பிறக்கும் ஒரு ஆண் பிள்ளையின் கையால் பிர் அவ்ன் கொல்லப்படுவானென குறிகாரன் சொல்ல, குறிப்பிட்ட காலம் வரை பிறக்கப்போகும் அனைத்துக் குழந்தைகளையும் கொல்லும்படி அவன் கட்டளையிட்டான்.

எகிப்திய பூமியில் தன் ஆட்சியைப் பலப்படுத்திய பிர்அவ்ன் மனிதர்களை பல பிரிவாக்கி அவர்களை பலஹீனப்படுத்தி தானே இறைவன் என மார் தட்டிய ஒருவனாவான்..

அவ்வாறான ஓர் சூழலிலேயே மூஸா நபி (அலை) அவர்களும் பிறந்தார்கள். பிர் அவ்னால் அக்குழந்தைக்கு ஏதும் நடந்துவிடுமோவென அவர்களின் தாயார்  அஞ்சிய போது அவர்களுக்கு இறைவனிடமிருந்து வஹீ வந்தது.

மூஸா நபி (அலை) அவர்களுக்கு பாலூட்டும்படியும், அவரது பாதுகாப்பு பற்றி பயமேற்பட்டால் பேழையில் வைத்து ஆற்றில் போடும்படியும், அவர்கள் மீள திருப்பி தாயிடம் சேர்க்கப்படுவார்களெனவும், தூதர்களில் ஒருவராக மாற்றப்படுவார்களெனவும் வஹீயில் அறிவிக்கப்பட்டது.

மூஸா நபி (அலை) அவர்களின் தாயாரும் அவ்வாறே செய்தார்கள். வைக்கோலினால் படகு போன்று செய்து  நைல் நதியில் மூஸா  (அலை) அவர்கள் விடப்பட்டார்கள், பேழையில் மிதந்து வந்த மூஸா நபி (அலை) அவர்களை பிர் அவ்னுடைய மனைவி நைல் நதிக்கு குளிக்கச் சென்ற போது கண்டெடுத்தார். பிர் அவ்னனிடம் மனைவி தன் கணவனிடம் , அக் குழந்தையைக் கொல்ல வேண்டாமெனவும், சுவீகார புத்திரராக வளர்க்கலாமென்றும் கூறினாள்.

மூஸா (அலை) அவர்களின் தாயாரோ தன்னிதயம் வெறுமையடைந்து மிக்க கவலையுற்றார்கள். அந்த இரகஸியத்தை வெளிப்படுத்தாமல் இறைவன் அவர்களின் மனதைக் கட்டுப்படுத்தினான். எனினும் அக் குழந்தை தூரத்திலிருந்து அக் குழந்தையின் சகோதரியால் கண்காணிக்கப்பட்டது.

மூஸா (அலை ) அவர்கள் பிர் அவ்ன் வீட்டிலேயே வளர்ந்தார்கள். அக்காலத்தில் எகிப்தியரிடம் அடிமைகளாக இஸ்ரேலியர்கள் இருந்ததால், மூஸா (அலை)யை வளர்க்கும் பொறுப்பு அவரின் சொந்தத் தாயிடமே ஒப்படைக்கப்பட்டது.. தன்னினத்தின் அடிமைத்தனம் கண்டு அவர்கள் மனம் வருந்தினார்கள்.

மூஸா (அலை )அவர்கள் வாலிபத்தையடைந்த போது இறைவனால் அவர்களுக்கு ஞானமும், கல்வியும் வழங்கப்பட்டது. மீண்டும் அவர் , அவர் குடும்பத்தவரிடம் சேர்க்கப்பட்டார்கள்.


"அவர் வாலிபத்தையடைந்து, (வாழ்க்கையில்) அவர் நிறைவு நிலை பெற்றபோது அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் நாம் வழங்கினோம், இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் ( நற்) கூலி வழங்குவோம்" (28:14)


ஒருசமயம் அந்நகரத்தில் இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஒருவன்  இஸ்ரேலிய இனத்தையும், மற்றவன்எகிப்தியனாகவும் காணப்பட்டான். இஸ்ரேலிய இனத்தை சார்ந்தவன் மூஸா (அலை ) அவர்களிடம் விடுத்த கோரிக்கைக்கேற்ப அவ் எகிப்தியனைக் அவர் குத்திக் கொன்றார்கள்.. எனினும் பின்னர் அச் செயல் அவர்களுக்கு வருத்தமளிக்கவே மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்புக்கேட்டார்கள். இறைவனும்  மன்னிப்பை வழங்கினான்.


" என் இராட்சனே! என் மீது நீ அருள் புரிந்ததன் காரணமாக (இனி) குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக நான் ஒரு போதும் இருக்க மாட்டேன்" என்று அவர் கூறினார் (28:17)


தன் எகிப்தியனைக் கொன்றதற்காக பிர் அவ்னால் மூஸா அவர்கள் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. இதனைக் கேள்வியுற்ற   பட்டணத்திலிருந்த ஒருவன் ஓடி வந்து அச்  செய்தியை  மூஸா (அலை) அவர்களிடம் கூறினான்.


" மேலும் , பட்டணத்தின் கோடியிலிருந்து ஒரு மனிதர் விரைவாக (ஓடி) வந்து, "மூஸாவே ! நிச்சயமாக உம்மைக் கொலை செய்து விட , (இந்நகரப்) பிரதானிகள் ஆலோசனை செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆதலால் நீர் (இங்கிருந்து) வெளியேறிவிடும். நிச்சயமாக நான் (உம்முடைய நன்மையைக் கருதி) உபதேசம் செய்பவர்களிலுள்ளவனாவேன் " என்று கூறினார். (28:20)


இதனைத் தொடர்ந்து மூஸா அலை அவர்களும் தனது குடும்பத்தினருடன் இரவோடு இரவாக வெளியேறி பாலைவனத்தையடைந்தார்கள். நீண்ட பயணத்தின் பின்னர் மதியன் எனும் இடத்தையடைந்தார்கள். இஸ்ரேலிய மக்களுக்கு இறை தூதராக அனுப்பப்பட்ட சுஹைப் (ரலி) அவர்கள் மூஸா (அலை) யை அடையாளம் கண்டு தன்னுடன் தங்க வைத்ததுமல்லாமல் தன் மகளையும் திருமணம் செய்து வைத்தார்கள்.

அவர்களுடன் சிறிது காலம் வாழ்ந்த பின்னர் எகிப்திற்கு திரும்ப வேண்டுமென்ற எண்ணத்தை இறைவன் மூஸா (அலை) அவர்களிடம் ஏற்படுத்தினான். திரும்பிச் செல்லும் போது , பாதை எதுவும் தெரியாத நிலையில் தடுமாறினார்கள். அப்பொழுது தூரத்தில் நெருப்பைக் கண்டார்கள். அந் நெருப்பிலிருந்து ஏதும் தகவலறிந்து வருவதாக மூஸா அலை அவர்கள் தன் குடும்பத்தினரிடம் கூறி விட்டு அந் நெருப்பை நோக்கிப் புறப்பட்டார்கள்

நெருப்பை அண்மித்ததும்


"மூஸாவே"


என அழைக்கப்பட்டார்கள். அது "சினாய்" மலை. இறைவனுடன் பேசும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது

"நிச்சயமாக நான்தான் உன் இறைவன். உன் காலணிகள் இரண்டையும் கழற்றி விடும். நிச்சயமாக நீ துவா எனும் புனித பள்ளத்தாக்கில் உள்ளீர்"

"இன்னும் நான் உம்மை என் தூதராகத் தேர்வு செய்தேன். ஆதலால் வஹியின் வாயிலாக உமக்கு அறிவிக்கப்படுவதற்கு நீர் செவி ஏற்ப்பீராக"


"நிச்சயமாக நான்தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயகன் இல்லை. ஆகவே என்னையே நீ வணங்கும். என்னைத் தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலை நிறுத்துவீராக "


என இறைவன் பேசினான்.


"மூஸாவே ! உம்முடைய வலது கையில் இருப்பது என்ன" என்று இறைவன் கேட்க,



(அதற்கவர்)"இது என்னுடைய கைத்தடி இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன். இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன். இன்னும் இதில் எனக்கு வேறி தேவைகளும் நிறைவேறுகின்றன. " எனக் கூறினார்.


அவர் கையிலிருந்த தடியை கீழே போடும்படி பணிக்கப்பட்டார்கள்.

அப்பொழுது அத் தடி பெரிய மலைப் பாம்பைப் போன்று நெளிந்தது. அதனைக் கண்டு அச்சமுற்றவராக திரும்பிப் பார்க்காமல் புறமுதுகிட்டு ஓட முற்பட்டார்கள்.. அப்பொழுது இறைவன் அவரைப் பயப்பட வேண்டாமெனவும், அவர் பயமற்றவர்களில் ஒருவராவார்கள் எனவும் கூறினான்.


" உம்முடைய சட்டைப்பைக்குள் உம்முடைய கையை நுழைப்பீராக. அது எவ்விதத் தீங்குமின்றி (பிரகாசமுள்ள) வெண்மையாக வெளிப்படும். பயத்திலிருந்து (விடுபட) உம்முடைய புஜங்களை உம் (விலாவின்) பால் சேர்த்துக் கொள்வீராக. இவ்விரண்டும் பிர் அவ்னுக்கும், அவனுடைய பிரதானிகளுக்கும் ( நீர் எடுத்துச் செல்வதற்கு) உரிய உமதிரட்சகனிடமிருந்துள்ள இரு அத்தாட்சிகளாகும். நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் கூட்டத்தினராகவே இருக்கிறார்கள்" (என்றும் அவருக்குக் கூறப்பட்டது) (28:32)



"இவ்வாறு என்னுடைய பெரிய அத்தாட்சிகளிலிருந்து சிலவற்றை உமக்கு காண்பிக்கின்றேன்  பிர் அவ்னிடம் நீர் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்."


அதனைக் கேட்டதும் , மூஸா அலை அவர்கள் அச்சப்பட்டார்கள்.
பிர் அவ்ன் கூட்டத்தில் உள்ள ஒருவனை ஏற்கனவே தான் கொலை செய்தமையால் அவர்கள் தன்னைக் கொலை செய்யக்கூடுமென அஞ்சி, தன் சகோதரனான ஹாரூன் அவர்களையும் தன்னுடன் அனுப்பி வைக்கும்படி இறைவனிடம் வேண்ட, இறைவனும் அவர் வேண்டுதலை நிறைவேற்றினான்.

" (அதற்கு அல்லாஹ்) " உம் சகோதரரைக் கொண்டு உம் புஜத்தை நாம் வலுப்படுத்துவோம். நாம் உங்களிருவருக்குமே வெற்றியைத் தருவோம். ஆகவே அவர்கள் உங்களிருவர் பால் நெருங்கமாட்டார்கள். நீங்கள் நம்முடைய அத்தாட்சிகளுடன் (செல்லுங்கள்) நீங்களிருவரும், உங்கள் இருவரைப் பின்பற்றுவோரும்தான் வெற்றி பெறக் கூடியவர்கள் " என்று கூறினான்.  (28:35)

14:6. "மூஸா தம் சமூகத்தாரிடம்: ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து (அல்லாஹ்) உங்களைக் காப்பாற்றிய போது, அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருள் கொடையை நினைத்துப் பாருங்கள்; அவர்களோ, உங்களைக் கொடிய வேதனையால் துன்புறுத்தியதுடன், உங்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)தும் உங்கள் பெண்மக்களை (மட்டும்) உயிருடன் விட்டுக் கொண்டும் இருந்தார்கள் - இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மகத்தான சோதனை (ஏற்பட்டு) இருந்தது” என்று கூறினார்

10:83." ஃபிர்அவ்னும், அவனுடைய பிரமுகர்களும் தங்களைத் துன்புறுத்துவார்களே என்ற பயத்தின் காரணமாக, மூஸாவின் மீது அவருடைய சமூகத்தாரின் சந்ததியினர் சிலரைத் தவிர (வேறு) ஈமான் கொள்ளவில்லை, ஏனெனில், நிச்சயமாக ஃபிர்அவ்ன் அந்த பூமியில் வலிமை மிக்கவனாக இருந்தான்; வரம்பு மீறிக் (கொடுமை செய்பவனாகவும்) இருந்தான்"

அவ்வாறே இறைவன் கட்டளைப்படி மூஸா அலை அவர்கள் இறைவன் பற்றிய தெளிவான அத்தாட்சிகளை எடுத்துக் காட்டியபோது பிர் அவ்ன் கூட்டத்தினர் அது இட்டுக்கட்டப்பட்ட சூனியம் என நிராகரித்தனர்.

0:77. "அதற்கு மூஸா: “உங்களிடம் சத்தியமே வந்த போது, அதைப்பற்றியா நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? இதுவா சூனியம்? சூனியக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்” என்று கூறினார்"

10:80. "அதன்படி, சூனியக்காரர்கள் வந்ததும், “நீங்கள் (சூனியம் செய்ய) எறிய விரும்புவதை எறியுங்கள்” என்று மூஸா அவர்களிடம் கூறினார்"


10:81அவர்கள் (எறியக் கூடிய கைத்தடிகளை) எறிந்தபோது, மூஸா: “நீங்கள் கொண்டு வந்தவை (அனைத்தும்) சூனியமே; நிச்சயமாக அல்லாஹ் விரைவிலேயே இவற்றை அழித்துவிடுவான் - அல்லாஹ் விஷமிகளின் செயலை நிச்சயமாக சீர்படச் செய்யமாட்டான்” என்று கூறினார்


26:43. "மூஸா அவர்களை நோக்கி, நீங்கள் எறியக் கூடியதை எறியுங்கள்” என்று கூறினார்"


26:44. "ஆகவே, அவர்கள் தங்கள் கயிறுகளையும், தடிகளையும் எறிந்து, ஃபிர்அவ்னுடைய சிறப்பின் மீது ஆணையாக, நாமே வெற்றியடைவோம்” என்று கூறினார்கள்"


26:45. "பிறகு மூஸா தம் கைத் தடியைக் கீழே எறிந்தார்; உடன் அது (பெரும் பாம்பாகி) அவர்களுடைய பொய்(ப் பாம்பு)களை விழுங்கி விட்டது"


26:46." (இதைப்பார்த்தவுடன்) சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர்"


26:47. "அகிலங்களெல்லாவற்றின் இறைவன் மீது நாங்கள் ஈமான் கொண்டோம் என்றனர்"


 ஆனாலும் பிர் அவுன் தானே இறைவன் எனக் கூறினான்

 “மூஸாவே! உங்களிருவருடைய இறைவன் யார்?” என்று கேட்டான். 



(7:115) "பிர் அவ்னே ! நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்" என்று மூஸா கூறினார் "



20:57“மூஸாவே! நீர் உம் சூனியத்தைக் கொண்டு, எங்களை எங்கள் நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காகவா நம்மிடம் வந்தீர்?” என்று கூறினான்."

20:61. "(அப்பொழுது) மூஸா சூனியக் காரர்களிடம் “உங்களுக்குக் கேடுதான்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள், (அவ்வாறு செய்தால்) அவன் வேதனையினால் உங்களை அழித்து விடுவான்; எவன் பொய்யை இட்டுக் கட்டுகிறானோ, திடனாக அவன் (நற்பேறு கெட்டு) அழிந்து விட்டான்” என்று கூறினார்"


எனினும் பிர் அவுன் தன் கருத்திலிருந்து மாறாமல் தன்னையே இறைவனாகக் கூறினான்-


" (அதற்கு) பிர் அவ்ன், "பிரதானிகளே ! என்னைத் தவிர வேறொருவரு (வணக்கத்துக்குரிய) நாயகன் உங்களுக்கு இருப்பதாக நான் அறியவில்லை. ஆகவே ஹாமானே! களிமண்ணின் மீது ( செங்கல் சூளைக்கு) எனக்காக நெருப்பை மூட்டி (அவற்றைக் கொண்டு மிக உயரமான ) மாளிகையை எனக்காக நீ கட்டுவாயாக, (அதில் ஊறி) மூஸாவுடைய இராட்சனை நான் எட்டிப் பார்க்க வேண்டும்.(அவர் தனக்கு வேறு இராட்சன் இருப்பதாக கூறுகிறாரே, இவ் விஷயத்தில் நிச்சயமாக அவரைப் பொய்யர்களில் உள்ளவராகவே நான் எண்ணுகிறேன் " என்றும் கூறினான் (28:38)

இவ்வாறு பெருமையடித்துக் கொண்டு திரிந்தான்  பிர் அவ்ன் .

7:127. "அதற்கு, ஃபிர்அவ்னின் சமூகத் தலைவர்கள் (அவனை நோக்கி) “மூஸாவும் அவருடைய சமூகத்தாரும் பூமியில் குழப்பம் உண்டாக்கி, உம்மையும் உம் தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீர் அவர்களை விட்டு வைப்பீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “(அவ்வாறன்று!) நாம் அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிக் கொன்றுவிட்டு, (அவர்களைச் சிறுமைப் படுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை மட்டும் உயிருடன் வாழவிடுவோம் - நிச்சயமாக நாம் அவர்கள் மீது பூரண ஆதிக்கம் பெற்றுள்ளோம்” என்று கூறினான்"

பிர் அவ்ன் மூஸா ( அலை) அவர்களுக்கு துன்பம் விளைவிக்க தொடங்கிய தருணத்தில் இறைவனின் வஹீ மூஸா (அலை) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது

26:52. "மேலும், “நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு, இரவோடு இரவாகச் சென்று விடும்; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்” என்று நாம் மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம் "

மூஸா (அலை) வஹீயின் பிரகாரம் செயற்பட்டார்கள்.


20:77. "இன்னும்: “நீர் என் அடியார்களுடன் இரவோடிரவாகப் பயணம் செய்து, அவர்களுக்காக கடலில் உலர்ந்த பாதையை உண்டாக்கிக் கொள்வீராக! (ஃபிர்அவ்ன் உம்மைப்) பிடித்துவிடுவான் என்று பயப்படாமலும், (கடலில் மூழ்கி விடுவோம் என்று) அஞ்சாமலும் இருப்பீராக!” என்று மூஸாவுக்கு நாம் திட்டமாக வஹீ அறிவித்தோம்,"

26:61. "இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது: “நிச்சயமாக நாம் பிடிபட்டோம்” என்று மூஸாவின் தோழர்கள் கூறினர்"


26:63. "உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது"


26:64. "
(பின் தொடர்ந்து வந்த) மற்றவர்களையும் நாம் நெருங்கச் செய்தோம்"

26:65"மேலும், நாம் மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பற்றினோம்."

ஆனால் பின்தொடர்ந்த பிர் அவ்ன் அவனது படையினருடன் பிடிக்கப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டான்.

இது தொடர்பாக இறைவன் திருமறையில் கூறும்போது பின்வருமாறு கூறுகின்றான்:-

" ஆதலால் நாம் அவனையும், அவனுடைய படையினரையும் பிடித்தோம். பின்னர் அவர்களைக் கடலில் எறிந்து விட்டோம். ஆகவே ( நபியே) அநியாயக் காரர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை நீர் கவனிப்பீராக!" (28:40)


(7:103) " அவர்களுக்குப் பிறகு மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் பிர் அவ்னிடத்திலும் அவனுடைய தலைவர்களிடத்திலும் நாம் அனுப்பி வைத்தோம், அப்போது அவர்கன் அவற்றை (நிராகரித்து) அநியாயம் செய்து விட்டார்கள், இத்தகைய குழப்பக்காரர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதை கவனிப்பீராக " என்று இறைவன் கூறினான்.


இவ்வாறாக இறைவனை நிராகரித்துத் திரிந்த முந்திய பரம்பரை அழிக்கப்பட்ட பின்னர் மூஸா அலை அவர்களுக்கு" தவ்றாத் "எனும் வேதம் வழங்கப்பட்டதன் மூலமாக மனித குலம் நேர் வழியையும் , அருளையும், படிப்பினையையும் பெற்றதாக அல்லாஹ் தஆலா "அல் கஸஸ் " எனும் அத்தியாயத்தின் மூலமாக எம் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கின்றான். (அல்ஹம்துலில்லாஹ்)

மூஸா (அலை அவர்கள் "கலீம் அல்லாஹ்" (இறைவனுடன் பேசியவர்) என அழைக்கப்பட்டவர். திருக்குர் ஆனில் அதிக தடவை பெயர் இடம் பெற்ற நபியாவார்கள். இவர்கள் 120 வயது வரை வாழ்ந்தார்கள்.

இறை நிராகரிப்பவர்களுக்கு ஒரு படிப்பினையாக இருப்பதற்காக இன்றும் பிர் அவ்ன் உடல் சிதைவடையாமல் உள்ளது.



இதயம் நுழைந்து



ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு.......இன்று  (05.08.2012) !

உலக அரங்கினிலே தன் அன்பான கரங்களை அசைத்து வருகின்றது உலக நட்பு தினம்.

1935 ம் ஆண்டுப் பொழுதொன்றில், கொல்லப்பட்ட தன் நண்பனுக்காக மறுநாள் தற்கொலை செய்து கொண்ட நண்பர்களின் உயிர்த்தியாகமே இன்று உலக நட்பு தினமாக அமெரிக்க அரசின் அங்கீகாரம் பெற்று நம்மையும் அணைத்து நிற்கின்றது.

இங்கு நான் பேசப் போகின்ற நட்பு உண்மையான நட்பைப் பற்றியே!

ஏனெனில் சுயநலம் அதிகரித்த நிலையில் தம் தேவைகளை நிறைவேற்றும் குறுகிய நோக்கோடு நட்பு வேடமிடும் வேடதாரிகள் இன்று சமூகத்தில் தாராளமாக உலவுகின்றார்கள். அவ்வாறான  நட்பை மாசுபடுத்தும் கொடுங்கோலர்களை   புறந்தள்ளியவளாகவும், பஞ்சமா பாதகங்களுடன் கூடிய , காமம், இனவாதம், வன்முறை, போதைப் பொருள் பாவனை போன்ற தீமைகளின் ஒன்றுகூடலுக்காக தீய நட்பைக் கூடி சமூகத்தையும், தனி மனிதரையும் சீரழிக்கும் தீய நட்பினரின் வேரை அடியோடு கத்தரித்து விடத் தயங்கக் கூடாது எனும் சிந்தனையோடும் என் கரங்கள் இணைய வலைப்பூவை உயிர்ப்பிக்கின்றன இப்போது !.

மனித உணர்வுகளிலேயே உன்னதமான உணர்வே நட்பு. இங்கு இதயங்கள் தம் வேறுபாடுகளைக் களைந்தெறிந்தே பேசுகின்றன..இன்பத்தில் சிரித்தும், துன்பத்தில் கண்ணீர் விட்டும் அழக்கூடிய உன்னதமான  உயிரின் நெருடலே நட்பாகும்!

நம் வாழ்வுப் பயணத்தில் நம்மோடு பயணிக்கக்கூடிய ஒத்த மனவெண்ணமுள்ளவரே நமக்குள் நண்பராக முகங் காட்டுகின்றார்கள். நமது சிந்தனைகளை வழிப்படுத்தக் கூடிய ஆற்றல் இந்த நட்புமுகங்களுக்கே உள்ளது. ஏனெனில் இரத்த உறவுகளுக்கிடையே ஊடுருவும் பாச அதிர்வுகளையும் விட, எவ்வித எதிர்பார்ப்புமில்லாத இந்த நட்பினரின் நேச அதிர்வுகளின் வலிமை அதிகமானதுதான். நம்மை நாமே உணர்ந்து கொள்ள முகங் காட்டும் கண்ணாடியே இந்த நட்பினர்.....நம் வாழ்க்கைப் போக்கைத் தீர்மானிக்கும் விதிக் கரங்களாக இந் நட்பினர் திகழ்கின்றனர்...

நட்பினருக்கிடையே பேதமைகள் பெரிதாக முளைவிடாது, முளைவிடவும் கூடாது. சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் எட்டிப்பார்த்தாலும் கூட  அவை உடனடியாக அகற்றப்பட்டு தம் அன்பை மென்மேலும் விசாலப்படுத்துவதாகவே அமையும். ஒழுக்கம், விழுமியம், கலாசாரம் என்பவற்றினை உயர்ந்த மட்டத்தில் வழங்குபவராக இந் நண்பர் விளங்கும் போது அது நம்மில் நிரந்தரப் பதிவாகி நம் ஆளுமையிலும் செல்வாக்குச் செலுத்துகின்றது..

ஆண்- ஆண், பெண்- பெண் எனும் ஒருபால் நட்பானது கலாசாரத்தின் சிறந்த பேணலாக எப்பொழுதும் விளங்கினாலும் கூட, இன்று உலகமானது நவீனத்தின் பால் நகர்ந்து கொண்டிருப்பதாலும், உலகத்தின் செயற்பாடுகள் தகவல் தொழினுட்பத்தினூடு  விரைவுபடுத்தப்பட்டிருப்பதாலும் ,ஆண்- பெண்  நட்பானது சாதாரண விடயமாகவே  இவ்வுலகத்தில் உலா வருகின்றது.ஆண்- பெண் நட்பானது கண்ணாடியில் பயணிக்கும் பயணத்திற்கு ஒப்பானது. ஏனெனில் நட்பில் காட்டப்படும் அதிக நெருக்கமானது காதலாக மாறக்கூடிய அதிக சந்தர்ப்பங்களுண்டு. ஆனால் இப்பொழுதெல்லாம் பெரும்பாலான காதலின் இதயங்கள் இளைப்பாறத் துடிப்பது காமத்தின் மடிதனிலேயே! இக் காமத்தின் முதல் தொடுகையாக இருப்பதென்னவோ முத்தப்பரிமாற்றமே!இந்த நெருக்கம் சற்று இடறினால் சேதமடைவது பெண்கள் வாழ்க்கையே......!
இருந்தும் இன்று ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் பழகக் கூடிய தூய்மையான பல ஆண்- பெண் நட்புக்கள் தம பெயரை ஆரோக்கியமாக காலத்தின் சுவற்றில் பதித்து வருவது மனநிம்மதி தரக்கூடியதே!

நம் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் பல நண்பர்கள் முகங் காட்டியிருப்பார்கள்.
பால்ய பருவத்தில் ஆண் பெண் பேதமில்லாத, விளையாட்டிலும் கல்வியிலும் அக்கறை செலுத்தும் சிறு வயது நண்பர்  கூட்டங்கள்...

கல்லூரியில் கற்கின்ற காலத்தில், வாழ்க்கையைப்  ஓரளவு புரிந்து அதற்கேற்ப நாம் இலட்சியங்கள் வகுத்து நடைபயில முயற்சிக்கையில் அதற்கு  ஊக்குவிப்பும், ஒத்துழைப்பும், நேசமும் ,அறிவுத் தேடலில் பங்களிப்பும் தருவதுடன், நமக்குள் முகிழ்க்கும் கனவுகளை அரங்கேற்ற அழகான மடி தரும் வாலிப வயதைச் சார்ந்த நட்பினர்...

கல்வி கற்று முடிந்து தொழில் தேடும் தருணத்தில் வாழ்வில் நாம் பல பொழுதுபோக்கு அம்சங்களில் இணைந்து கொள்வதுடன் , நாம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு ஆறுதலும், தீர்வும் தரக் கூடிய நம் தேவைகளை இனங்கண்டு உதவக்கூடிய வாலிப வயது நட்பினர்............

தொழில் வாழ்வில் இணையும் போது அத் தொழில் உலகோடும், புற வாழ்வின் இயல்பான போக்கோடும் ஒத்துப் போகக்கூடிய, ஆலோசனை தரக்கூடிய, அனுபவங்களோடு நட்பையும் திரட்டக்கூடிய இள வயது நட்பினர்...

முதுமை வாழ்விலோ தம் கடந்த காலத்தில் உதிர்க்கப்பட்ட  இளமையான ஞாபகங்களையும், தம் குடும்ப உறவுகளின் செழிப்புக்களையும் , வாழ்க்கை கண்டெடுத்த வெற்றி , தோல்விகளை மீட்டும் மனநிலையை பகிரக்கூடிய, வாழ்வின் இறுதிநாட்களை நகர்த்துகின்ற முதுமைப் பருவ நட்புக் கூட்டத்தினர்.........

இவ்வாறு வாழ்வின் ஒவ்வொரு படிநிலையிலும் நாம் மறக்க முடியாத ஒவ்வொரு முகங்கள்...நம்மைப் பிண்ணிப்பிணைந்து கொண்டுதான் வருகின்றன.

நம் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாத போது, அங்கு எட்டிப்பார்ப்பவை ஏமாற்றங்கள் மட்டுமல்ல பிரச்சினைகளும் தான். பிரச்சினைகள் நம் வாழ்வைத் தொட்டுப்பார்க்கும் போதெல்லாம் தேவைகள் நம்மால் நிறைவேற்றப்பட முடியாமற் போகின்றன. எனவே பிரச்சினையெனும் இந்தச் சிக்கலை அவிழ்க்கும் ஆலோசகர்களாக நம் முன்னே வருபவர்களும், நாம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தெரிவு செய்திருப்பவர்களும் நமது நண்பர்களே! ஏனெனில் வாழ்க்கையானது பிரச்சினைக்குள் அமிழ்ந்து விடும் போது நாம் மனஅழுத்தங்களோடு போராடுபவர்களாகவே இருக்கின்றோம். அத் துயரத்தைத் தூசாக்கும் கரங்களாக நம்மை அரவணைப்பவை இந் நட்பினர் கரங்களும், அவர்களது ஆறுதலான வார்த்தைகளும் தான்!

"உன் நண்பனைக் காட்டு, உன்னைப் பற்றிக் கூறுகின்றேன்"

இது ஓர் அனுபவ மொழி....!

உண்மையில் நம் நண்பர்களின் நடை, உடை, பாவனை நம்மில் செல்வாக்குச் செலுத்தக்கூடியது..அதுமட்டுமல்ல நாம் அறிவைத் தேடக் கூடிய, கண்டெடுத்த விடயங்களைப் பரிமாறக்கூடிய நம் அந்தரங்கங்களைக் கூட நம்பிக்கையோடு பகிரக்கூடிய இடம்தான் நண்பர்களின் மனம்!

உண்மை நட்பின் நேச ஆழம் சமுத்திரங்களை விட ஆழமானவை..இந்தப் பிரபஞ்சத்தை விட பரந்தது..அதனை அளவிடமுடியாது. உணர்வுகளால் மட்டுமே பசுமைப்படுத்தவே முடியும்.இவ்வுலக வாழ்வின் போக்கு செல்வத்தால் தீர்மானிக்கப்படக்கூடியதாக இருந்தாலும் கூட, அவற்றையெல்லாம் ஓரந் தள்ளிவிட்டு இந் நட்புச் செல்வம் நம் மனங்களை மங்களகரமாக முடிசூட்டிக் கொள்ளும் என்பது மறுக்கமுடியாத உண்மை!

மதம், மொழி, நாடு, இனம், வயது , அந்தஸ்து போன்ற அனைத்து வேறுபாடுகளும் களையப்பட்டு, மனங்களால் ஒன்றிணைந்து மகிழ்வோடு நாம் நடமாடும் உலகமே இந்த நட்புலகம். நம் பரஸ்பர நட்பின் இதமான பரிமாற்றம் உயிர், உணர்வுகளை ஊடுருவக்கூடியதென்பதால்தான்  நம் பழைய சிந்தனைகள் களையப்பட்டு ஒவ்வொரு கணங்களும் நட்பால் மீளப் புதுப்பிக்கப்படுகின்றோம்.

தத்தமது விருப்பு வெறுப்புக்களை மறந்து, மறுத்து பொதுப்படையான ஒருமித்த எண்ணத்துடன் பயணிக்கும் இந்த  நட்பின் ஆரோக்கியம், ஆயுள் அழகான கவிதையாய் வார்க்கப்படுகின்றது. நட்பின் மகத்துவத்தை வெறும் வார்த்தைகளால் நாம் வடிக்க முடியாது. ஒவ்வொரு நெஞ்சுக்குள்ளும் பிடித்தமான நட்பின் ஞாபகங்கள் அவர்கள் மனதை சிறைப்பிடித்து ரசித்துக் கொண்டுதானிருக்கின்றது..உண்மை நட்பால் அன்பைத் தவிர வேறெந்த பலனையும் எதிர்பார்க்கமுடியாது.

"உயிர் காப்பான் தோழன்"

எனும் இந்த வாக்கியமே அதன் ஆழச்சிறப்புக்குப் பொருத்தமான முகப்பாகும். இரு மனங்கள் வரைந்திடும் இந்த நேசச் சாதனம் நாள்தோறும் பொலிவிழக்காது வளர்பிறையாய் வளரக்கூடியது. வாழ்க்கையில் முகம் காட்டிச் செல்லும் நட்பினரின் பாசமும், முகங் காட்டாத முகநூல் நட்பினரின் நேசமும் நம்முள் தந்து நிற்கும் அழகிய நினைவுகளை ஆழ் மனதிலிருந்து மீட்டும் தருணமிது.

நாம் நேசிப்பவர்களை கைகுலுக்கி, வாழ்த்துக்களைப் பரிமாறும் ஆனந்த நாளின்று! நாம் இன்றைய நாளில் நம் எண்ணங்களில் நறுமணம் பூசி நம் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை வார்த்தைகளாகவோ அன்றி செய்திகளாகவோ பரிமாறும் போது அந்த நட்பின் பெருமை இன்னும் பல படிகள் மேலே உயர்த்தப்படுகின்றது..அன்பின் அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்படுமிந்த நட்பை மதங்களும் , நூல்களும் , காவியங்களும் போற்றத் தவறவில்லை.

பொய்யா மொழிப்புலவராம் வள்ளுவர் தன் திருக்குறளில் நட்பின் சிறப்பை மேன்மைப்படுத்தியுள்ளார். "நட்பு" , "நட்பாராய்தல்". "பழைமை", "தீ நட்பு", "கூடா நட்பு" எனும் ஐந்து அதிகாரங்களில் நட்பின் பண்பு சொல்லப்பட்டுள்ளது. வெறும் முக பாவத்திலல்ல உள்ளத்தின் மேற்பரப்பிலிருந்து இந் நட்பு எழ வேண்டுமென்பதே வள்ளுவரின் ஆதங்கம் என்பதனை இக் குறள் துல்லியமாக நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.

"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு" (குறள் 786)

எம் பெருமானார் நபி (ஸல்) அவர்களின் தோழர்களும், மகாபாரத்தில் செஞ்சோற்றுக் கடன் செலுத்தும் கன்னனும், இராமாயணத்தில் ராமன் உயிர் காக்கும் சடாயுவும், அனுமானும் இன்னும் பலரும் நட்பின் இதிகாசங்களாய் நம் ஞாபகப் பரப்பில் வந்து போகின்றனர்.

"அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே வந்ததே நண்பனே" என உயர்ந்தவர்களில் நடிகர் திலகமும், மேஜர் சுந்தரராஜனும் நம்மை நெகிழ்வித்தனர். நட்பின் பிணைப்பைப் பற்றி பல சினிமாப் பாடல்கள் அன்றாடம் வந்து கொண்டுதானிருக்கின்றன.

உன்னதமான  இந் நட்பைப் பகிர்ந்து கொண்ட நாம், இன்றைய தினம் மட்டுமல்ல என்றும் அந் நட்பைக் கௌரவப்படுத்தி அதனை நம்முடன் அணைத்துக் கொள்வோமாக

என் நட்பினர் அனைவருக்கும் நண்பர் தின வாழ்த்துக்கள்..

ப்ரியத்துடன்-

       -----ஜன்ஸி கபூர் -------











2012/08/04

மயக்கம்


தொலைவின்................
நிசப்த நெருடலில் - தன்
ஒளி விரல்களால் எனை வருடும்
நிலாக்கசிவில்.........
அலைந்து கொண்டிருக்கின்றது
மங்கலாய் உன் முகம்!

அன்றுன்னால்............
அழுகிப் போன - என்
கருவளையங்களின் மூச்சிரைப்பில்
மீண்டுமுன்............
ஆத்மாவின் முனகல்
ரகஸியம் பேசுகின்றது!

எல்லாமே நேற்றுப் போலிருக்கின்றது
உன்னிடம் தோற்றுப் போன
என் அன்பும்...........
கரைந்து போன கன்னமும்.........
கனவாகிப் போன நிஜங்களும்.........
எல்லாமே தோற்றுப் போய் !

எதுவுமேயில்லை என்னிடம்
இப்போது............!
நீ தந்த சோகங்களும்
காயங்களும்
அவமானங்களும் தவிர!

என் உயிரணுக்களைப் பிழிந்து
நீயிட்ட தீ..........
இன்னும் வெம்மைக் கசிவோடு
நசிந்து கொண்டுதானிருக்கின்றது
இன்னொரு ஆதவனாய்!

உன் மனதோரத்தில்
மரித்துக்கிடந்த என் ஞாபகங்கள்
மீண்டும் உயிர்த்தனவோ
உன்னுள்!
மெல்லக் கதவைத் தட்டுகின்றாய்
என்னுள் - ஆனால்
நான் மரணித்ததையறியாமலே!

அன்றுன் சுயத்திற்காய்- என்
சுயவரக் கனவுகளில்
முட்கீரீடம் வார்த்தவுன்
கரங்கள்...........
மீண்டுமென் திசைநோக்கி
அணைக்கத் துடிக்கின்றன
அப்பாவித்தனமாய்!

உன்னால்
எனக்குச் சொந்தமாகிப் போன
சமுத்திரமும்...........
பாலை நிலங்களும்
எனைப் பரிதாபமாய் பார்க்க
நீயோ
புறப்பட்டுவிட்டாய்- என்
சாலைகளில் உலா வர!

ஜன்ஸி கபூர் 










2012/08/03

என்றும் நேசத்துடன்


முகநூலில் நான் கலைப் பயணம் மேற் கொள்ள, நீங்களும் தடமாகியுள்ளீர்கள் என்பதை நன்றியுடன் நினைவுகூறுகின்றேன். என் பதிவுகளுக்கு விருப்புக்களும், பின்னூட்டங்களும் தந்துள்ள உங்களுக்கு என் நன்றி.......என்றும்


முத்து சதீஷ் குமார்


மலீக்  Sfn ***



சீனா ஷரீப் ***



உதயதர்சினி குமார் ***




பிரதீபன் ஸ்ரீனிவாசன் ***



செல்வ குமாரன் ***




Rasna Sajith



Selvi Maran



MJ Rita Raj ***





Fazaan Abdul ***



Siman  Tg




Jaffna Menan ***


Shiyam Sahana ***
Sree Dhandapani
 Mohamed Gani






இறைவனிடம் கையேந்துவோம்


புகழ் அனைத்தும் அவன் ஒருவனுக்கே!

மனித இனத்தை அற்புதமாகப் படைத்து அருள் பரிபாலிப்பவன் இறைவன் ஒருவனே. எமக்குரிய அழகிய வாழ்க்கையை , வாழ்வின் ஒழுக்க நெறிகளை அழகாக கற்றுத் தந்தவனும், கற்றுத் தருபவனும் அவனே!

நம்மைப் படைத்து நமது செயல்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும் அவனே, நம் எண்ணங்களை அளந்தும், அடையாளமிட்டும் அதற்கேற்ற கூலியைத் தருபவனாக இருக்கின்றான்.

இம்மை, மறுமையின் விளைநிலம். எனவே நாம் செய்கின்ற செயல்கள் இவ்வுலகத்துடன் முற்றுப் பெறாமல், மறுமைக்கான நிகழ்வுகளின் அடித்தளமாகவும் இருக்கின்றது. மறுமை நமது நிம்மதி கூடமாக இருக்க வேண்டுமானால் இம்மையில் நாம் செய்யும் நமது செயல்கள் யாவும் இறைவனின் அருளைப் பெற்றுத் தருபவையாக இருக்க வேண்டும். அந்த வகையில் இறைவனுடன் நாம் நேரடியாகப் பேசவும், அருளையும், இறை மன்னிப்பையும் பெற்றுத் தரக்கூடியதுமான  மாதமாக ரமழான் மாதமிருக்கின்றது.

இம் மாதத்தில் ஒருவர் நோன்பிருப்பது இறைவனுக்காகவே. அந்த நோன்பினூடாகவே இறைவன் தன் அடியார்களுடன் நெருக்கமாகின்றான் .நமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக இறைவன் நோன்பை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளான்.

அல்லாஹ் முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக நபி (ஸல்) அவர்கள் அடையாளம் காட்டியுள்ளார்கள்.

"ரமளானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் ரஹ்மத் எனும் அருட்கொடையாகவும், நடுப்பத்து நாட்கள்  மக்ஃ  பிரத் எனும் பாவ மன்னிப்புக்குரியதாகவும், கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து விடுதலை அளிக்கக்க;டியதாகவும் உள்ளது "

என நபி (ஸல்) அவர்கள் கூறுவதாக  நூல் இப்னு குஜைமா வை ஆதாரப்படுத்தி ஸஹ்ல் ரளியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நாம் நமது வாழ்வில் பல நல்ல செயல்களைச் செய்யவே முயற்சிக்கின்றோம். ஊக்கப்படுத்தப்படுகின்றோம்.  எனினும் நமது தேவைகளை நிறைவேற்ற நாம் முற்படும் போது நம்மையுமறியாமல் பலஹீன நுழைவாயினுள் தள்ளப்படுகின்றோம். சுயநலம் என்பதும் ஓர் பலஹீனமான உணர்வே. ஏனெனில் சுயநலத்தின் பொருட்டு நமது உளம் உறுதியற்று தளம்பலடைந்து பிறருடன் முரண்படக்கூடிய, பாவம் தரக்கூடிய செயல்களிலும் ஈடுபட்டு விடுகின்றது. நாம் ஒருபுறம் இறையருளை நாடி நற்செயல்களிலீடுபட்டுக் கொண்டிருக்க மறுபுறம் நம்மையமறியாமல் சில பாவங்களையும் தொட்டு விடுகின்றோம். பொய் பேசுதல், புறங் கூறுதல், விரோதம் கொள்ளுதல், பொறாமைப்படல், களவெடுத்தல் போன்ற உணர்வுகள் கூட பாவத்திற்கான சமிக்ஞ ஆகும்.

எனவே எம்மை நாம் உணர்ந்து, எமது செயல்களை அடையாளப்படுத்தி அவற்றில் அதிகமதிகமான நன்மைகளைச் சேர்க்கவும்,  அறியாமற் செய்த தவறுகளை மானசீகமான உணர்ந்து, இறையோனிடத்தில் மன்றாடி பாவ மன்னிப்புக் கோரவும்  நமது சிந்தனையை வழிப்படுத்த வேண்டும். எனவே இந்த மாதம் அல்லாஹ்வுடன் நம்மை அதிகம் நெருங்க வைப்பதால் நமது சிந்தனையை அவன் பால் பொருத்தி அதிக சிரத்தையுடன் நம்மை வழிப்படுத்த முயலவேண்டும்.

றமழான் மாதத்தில் அதிகமாக "லாஇலாஹா இல்லல்லாஹ் "என்ற திருக்கலீமா ஓதுவதும், குர் ஆனுடன் அதிக தொடர்பு கொள்வதும், அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்பதும், அல்லாஹ்விடம் சொர்க்கம் தரும்படி கேட்பதும், நரக நெருப்பிலிருந்து பாதுகாப்புப் பெறுவதும் நாம் இம் மாதத்தில் செய்ய வேண்டிய முக்கிய விடயங்களாக உள்ளது. இவை அல்லாஹ்வுடனான நெருக்கத்தை மேலும் பலப்படுத்தும். இந்த மாதத்தில் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்காக நாம் செய்கின்ற எந்த நன்மைகளும் பர்ளுக்கான அந்தஸ்தைப் பெற்று விடுகின்றது என்பது அண்ணல் நபிகளாரின் வாக்காகும்.

எனவே முதல் பத்து நோன்பிருந்து அல்லாஹ்வின் அருளையும், கருணையையும் பெற்றுக் கொண்ட நாம், தற்போது அடுத்த பத்திற்குள் உள்ளடங்கும் நோன்பிலிருக்கின்றோம். இரண்டாவது பத்து நோன்பு நமக்கு பாவமன்னிப்பு பெற்றுத் தருகின்ற நாட்களாகும். எனவே இந் நாட்களில் நாம் இறைஞ்சுகின்ற பாவமன்னிப்புக்கள் அங்கீகரிக்கப்படுகின்றன.

இது தொடர்பாக எம் பெருமானார் (ஸல் ) அவர்கள் கூறுகின்றார்கள்.

"நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ்வானத்திற்கு இறங்கி, இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் பாவமன்னிப்பு கேட்டால் அவரை நான் மன்னிக்கின்றேன்"

எனக் கூறுகின்றார்கள். (ஆதாரம் - நூல் புகாரி )

இந்த மாதத்தில் அல்லாஹ்விடம் நாம் உதவிகோரி கையேந்தும் போது அவன் தன் அருளினாலும், நோன்பின் பரகத்தினாலும் நம் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்றான். ஷிர்க்கைத் தவிர நாம் செய்த தவறுகளையும் மன்னித்து தனது கருணையால் நமக்குள் ஈடேற்றம் தருகின்றான்.

இறைவன் கூறியதை நபிகள் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்:-

"ரமளானில் நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து (தொழுது) வணங்குகிறவரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்"

(நூல் - புகாரி)

ஒரு நோன்பாளி, இறைவன் தன்னை எந்நேரமும் அவதானித்துக் கொண்டிருக்கின்றான் எனும் சிந்தனை மேலீட்டால் , கடந்த காலத்தில் தான் செய்த பாவங்களை நினைத்துப் பார்ப்பான். அப்பொழுது அப்பாவ நினைவுகள் அவன் மனதை வருத்தும். அப் பாவங்களை மீண்டும் செய்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாக வேண்டுமன்ற எண்ண மேலீட்டால், மீண்டும் அப்பாவங்களின் பால் தான் செல்லக்கூடாதென உறுதியெடுத்தவனாக, மனமுறுகி முறையாக பாவ மன்னிப்புக் கேட்கும் போது, அவனது நோன்பின் பரகத்தால் அல்லாஹ்வும் பாவ மன்னிப்பைத் தருபவனாக இருக்கின்றான். ஒவ்வொரு தொழுகையின் பின்பும் , தஹஜ்ஜத் தொழுகையின் பின்னும் பாவ மன்னிப்பு நாம் கோர வேண்டும்.

நம்மை இறைவன் எந்நேரமும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். அதனால் நமது நல்ல செயல்களுக்கு நன்மையும், தீய செயலுக்கு தீமையும் நிச்சயம் வழங்குபவனாகவும் இருக்கின்றான் எனும் எண்ணத்தை உள் வாங்கி
நோன்பிருப்போமானால், அந் நோன்பு நிச்சயம் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, ரஹ்மத் எனும் கருணையை நமக்குப் பெற்றுத் தரும். அது மாத்திரமின்றி இறை மன்னிப்பால் நரக நெருப்பில் வீழாமல், ஈடேற்றம் பெற்று சுவர்க்கத்தில் நுழையும் பாக்கியவாதிகளாக மாறுவோம்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்-

"சொர்க்கத்தில் "ரய்யான்" என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள். (அவர்களைத் தவிர) வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும்
அவ்வாசல் அடைக்கப்பட்டு விடும்"

(அறிவிப்பவர் :- ஸஹ்ல் ரளியல்லாஹூ அன்ஹூ , நூல் - புஹாரி )

நமது குற்றங் குறைகளின் கறை போக்கிடவே, அல்லாஹ் த ஆலா விடம் பாவமன்னிப்பைப் பெற்று ஈடேற்றம் காண எமது நோன்பும், துஆ ப் பிரார்த்தனைகளும் வழி தரட்டும்........மனதில் ஈமானிய பசுமைகள் பூக்கட்டும்!

வஸ்ஸலாம்