About Me

2020/08/06

அஃதாண்டு அவள் செய்தது


சோலைத் தென்றலில் சிறகுவிரித்த வாலைக்குமரியவள்/
காளையைக் கண்டதுமே காதலும் மலர்ந்ததுவே/  
கூர் விழிகளிற் இசைந்திட்ட காதலும்/
கூடியே களித்ததே மகிழ்வின் பேரொளியாய்/

கசிந்த காதலும் கனிந்ததே திருமணத்தில்/
கன்னி மனதை காளையும் வென்றான்/
இணைந்தனரே இன்பவெளியிற் இதயங்களும் சிரித்திடவே/
இல்வாழ்வின் அமுதத்தில் தித்தித்தனர் ஆருயிராய்/

மன்னவனும் பொருளீட்ட பிரிவதாய் சொன்னதும்/
மங்கையவள் துடித்திட்டாள் பிரிவின் வலியுணர்ந்து/
தொலைவிலவர் நீங்கிடின் மெலிந்திடுமே தோள்களும்/
வளையலுமே நழுவிடுமே கரங்கள் விட்டே/

உளத்துயர் தாங்கிடாதே உயிரதுவும் பிரிந்திடுமே/
உறவின் திசையினில் பாதங்களும் போகுமே/
உன்னதக் காதலின் குறிப்புணர்ந்த தோழியும்/
உரைத்தாலே தலைவனுக்கே தலைவியின் மனதினையே/

ஜன்ஸி கபூர் - 05.08.2020
யாழ்ப்பாணம் 





 

2020/08/05

காதோடு குழையாட


காதோடு குழையாட கன்னமெல்லாம் நாணமா/
கருத்தோடு இசைந்த புள்ள கண்ணம்மா/
கரும்புக் காட்டுப் பக்கம் தான் வாறியா/
அரும்பியிருக்கிற ஆசகளத்தான் பேசிடலாம் கண்ணால/

ஒத்தயடிப் பாதையில ஒய்யாரமாய் நடக்கையில/
சித்தமெல்லாம் ஒன்மேலதான் சாயுதடி செல்லம்மா/ 
சிக்கினேனடி உன்னிடம்தான் விக்கலெடுக்குது நெனவுக்குள்ள/ 
பக்கம் வந்து பேசடி மாதுளம்பிஞ்சே/ 

தாமரை மொட்டெடுத்த சாற்றிலதான் ஒடம்பிருக்கு/
சாமத்து கோழிபோல  நீளுறே கனவுக்குள்ள/
பூமரத்து வாசம் நெஞ்சுக்குள்ள பேசும்/
பூமாதேவியும் பூரிப்பா ஒன்னப்பாத்து மனசுக்குள்ள/ 

சொப்பனச் சொக்கியே மச்சான மயக்கித்தானே/
சொல்லாமப் போறியே ஆத்துப்பக்கம் தனித்துதான்/
மல்லிகை வாசம் மனசோட பேச/
அல்லியே வாறேன்டி உந்தன் பின்னாடி/

ஆக்கத்தான் பொறுத்திட்டேனே ஆறத்தான் பொறுக்கலயே/
ஏக்கங்கள் வெட்டுதடி எந்தன் நெஞ்சுக்குள்ள/
ஏழு மணிக்குள் வந்திடி ஏலத்தோப்புக்குள்ள/
விழுந்திட்ட மனச இழுக்கிற ஒனக்குள்/

நீயும் வாழும் நெஞ்சக்கூடு தனியாத்தாயிருக்கு/
சாஞ்சிட தோளத் தந்திடடி சொகமாயிருக்கும்/
கொஞ்சிடும் குழைதான் மிஞ்சிடுது அழகில்/
வஞ்சியே வாக்கப்படு தவிப்படங்கும் நெஞ்சுக்குள்ள/

ஜன்ஸி கபூர் 
 



கவிபாடும் காந்தப்பூக்கள்

காற்றும் துளைத்திட துள்ளிடும் அலைகளெல்லாம்/
ஒற்றிடுமே மணலைத்தான் ஈரத்தையும் பிழிந்தே/
கற்றையாய் புன்னகைக் கொத்துக்கள் வதனமேற/
ஊற்றாறாய் நீந்துகின்ற நீரோடைகளாய் சிறார்களிங்கே/

வெண் மணலைக் கோர்த்தெடுக்கும் மொட்டுக்களால்/
நண்டூறும் குழிகளும் நிரம்பிடுமே குறும்புகளால்/
கண்களுக்குள் வாசப்பூக்கள் நளினத்துடன் விரிந்திடவே/
எண்ணச் சிறகின் தொடுகையில் உயிர்த்திடுமே ஆகாயம்தான்/

உருள்கின்ற சோகிகள் உதிர்க்கின்ற குறுநகையில்/
வருமே யின்பமும் நுரைக்கும் கடற்பூக்கள் பிசைந்தே/
விரும்பியே ரசித்திடலாம் மொட்டுக்களின் தாளவோட்டம்/
கரும்புச்சாற்றிலும் நனையுமிந்த அலைத் தோப்பு/

உணர்வுடன் கலக்கும் நட்பின் பேரானந்தம்/
திணறுமே ஒய்யாரக் கனவின் தித்திப்பிலே/
உணரும் உள்ளங்களும் இளமையின் சுகந்தங்களை/
கணந்தோறும் அனுபவித்திடும் வசந்தப் பேருவைகையில்/

தரை தட்டுமிந்த மனிதப் படகினில்/
கரையும்தானேது.../
கறையில்லா அன்பின் களிப்புடனே இடர்/
திரை நீக்கி மலருமிந்த
கவிபாடும் காந்தப்பூக்கள்/

ஜன்ஸி கபூர் 

  

நல்லாட்சி

வாக்குரிமை உரிமை காக்கும் மக்களாட்சியில்/
ஆக்கிடும் அபிவிருத்தியை வாழ்வின் நலன்களுடன்/
போக்கிடும் ஊழலையும் பொல்லாத ஆட்சியையும்/
வாக்கிடுகையில் சிந்தித்தால் நல்லாட்சியும் நமதாகுமே/

ஜன்ஸி கபூர்