About Me

2021/04/14

மனித நேயம்

 

மனித நேயம் என்பது அன்பு அல்லது தன்னலமற்று இருத்தலாகும். இளகிய இதயமும், இரக்கமும் அடங்கியிருக்கின்ற நேயத்தினால்தான் மனிதன் தான் தனித்திருக்காது தன்னைச் சுற்றி குடும்பம், சமூகம் போன்ற கட்டமைப்புக்களினால் சமூக இசைவாக்கம் அடைகின்றான்.  

"கொடையும் தயையும் பிறவிக் குணம்" என்பது சான்றோர் மொழி. 

இவ்வுலகம் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது எனும் சிந்தனை நம்மிடையே எழுமாயின் நம்மைச் சூழவுள்ள பிற உயிரினங்களின்மீதும் நமக்கு கருணை ஏற்படும்.

மனிதநேயத்தை வெளிப்படுத்தி பல தமிழ் இலக்கிய பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. இதிகாசங்கள், திருக்குறள் என்பவற்றிலும் மனித நேயம் முன்னிலப்படுத்தப்பட்டுள்ளன. சமய நூலான புனித அல்குர்ஆன் திருமறையிலும் மனித நேயம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித நேயம் கொண்ட பலர் மக்களால் மதிக்கப்படுகின்ற மதத் தலைவர்களாகவும் இவ்வுலகினை  வழிப்படுத்தியுள்ளார்கள். பாரி, பேகன் போன்ற மன்னர்கள் மனித நேயத்தின் உச்சநிலையில் வைத்துப் போற்றப்பட்டவர்கள். 

கணியன் பூங்குன்றனார் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' எனவுரைத்தார். இது சமத்துவத்தின் குரல்.

மனித நேயம் என்றவுடன் நம் கண்முன்னால் தோன்றுபவர், மானுட சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த அன்னை திரேசா அவர்கள். நெல்சன் மண்டேலா அவர்களும் நிறவெறிக்கு எதிராகப் போராடி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.

 அன்பு, அஹிம்சை எனும் தடங்களினூடாக,  உண்மைக்கும், நல்லிணக்கத்திற்கும் இடையில் பயணப்பட்டவர்கள் இறந்தும் மறையாத கல்வெட்டுக்களாகப் பரிணமிக்கின்றார்கள்.

பிறரை வருத்தி அதற்குள் தனது நலன்களைப் பேணும் இன்றைய உலகில் மனிதநேயம் கொண்டவர்களைத் தேட வேண்டிய நிலையில் இருப்பது கவலைக்குரிய விடயமே!.

ஜன்ஸி கபூர் - 03.11.2020

துடுப்பில்லாத் தோணிகள்

 


 இலக்கது இல்லாது இயங்கிடும் வாழ்வினில்/

இரணமே துரத்துகின்றது இன்னலுக்குள் வீழ்த்தி/

உழைப்பைத் தேடி ஊருக்கு வெளியே/

உலாவுகையில் இழக்கின்றனர் உறவுகளின் அருகாமையை/


கல்வியைச் சுமக்கும் கரங்களில் சுமைகள்/

கசக்குவார் தொழிலாளிகளாக கருக்குவார் வருங்காலத்தை/

பெண்மையைக் கசக்கி பெருவலிக்குள் திணிக்கும்/

பொல்லாத மாந்தரால் பெருந்துயரில் மங்கையும்/


பெற்ற பட்டத்துக்குள் பொருந்தாத உழைப்பு/

பெற்றாலும் ஏற்கார் பொழுதுகளை வளமாக்கார்/

முயற்சியும் பயிற்சியும் முன்னேற்றத்தின் வளங்களே/

முயன்றிடாமல் புறந்தள்ளுவார் முகாமிடும் சந்தர்ப்பங்களை/


அடுத்தவர் தயவுக்காக அல்லலுடன் காத்திருந்து/

அலைக்கழிவார் வீணாக அடைந்திடுவார் சிறுமைதனை/

நிலையில்லா மனதோடு நிதமும் அலைந்தே/

நிற்கின்றனர் நிர்க்கதிக்குள் துடுப்பில்லாத் தோணிகளாக/


ஜன்ஸி கபூர்  - 13.11.2020

இராணி மங்கம்மாள்

 


அடுப்பூதும் பெண்ணென்றே அடக்கினார் பெண்மைதனை/

அடிமைத்தளை அறுத்தே அரசாண்டாள் மங்கம்மா/

ஆண்களின் கரந்தனில் ஆட்சியெனும் மரபுடைத்தே/

அணிந்தாள் மகுடமும் அலங்கரித்தாள் சிம்மாசனமும்/


கணவன் இறப்பில்  காணவேண்டும் உடன்கட்டை/ 

கட்டாய மரபினையும்  காரிகை யுடைத்தே/

காத்தாள் நாட்டை  கணவர் தடமொற்றி/


தாயின் அறிவுரைகளைத்  தங்கமகனும் ஏற்றே/

தரணியை ஆள்கையில்  தவித்தானே நோயினில்/

தன்னுயிரும் நீத்தே விண்ணேகையில் துணையவள்/

தானும் பறந்தாள் தன் துணையுடனே/


மதுரையும் ஆண்ட  மங்கையிவள் தினமும்/

மக்களும் செழித்திட மாண்போடு ஆண்டாளே/

மதிநுட்ப செயல்கள் மலைபோல் குவிந்திட/

மங்கள முரசினில்  மகிழ்வுற்றதே மாநகரும்/


பேரனும் முடிசூட்ட  போர் நுட்பங்களால்/

பேராட்சி புரிந்தே பெருவெற்றியும் கண்டாள்/

போரில்லாச் சூழலே  பேருவகை என்பதை/

பொருத்தியே மனதினில்  மதித்தாளே மதங்களை/


பாசனசாலைகள் கோயில்களென  பாரதத்தில் சிறந்திடவே/

பாதைதனைக் காட்டிய  பாவைதானே மங்கம்மா/

தர்மசாலைகளை அமைத்தே தானமும் புரிந்தாள்/

தந்திரோபாய யுத்திகளால் தன்படைக்கும் வழிகாட்டினாள்/


முகாலயர்களின் இன்னல்கண்டும் முகமது சுளிக்காதே/

முன்னின்று விரட்டினாள் நாயக்கர் படைதனை/

மதிநுட்பம் தந்திரங்களால் மன்னர்களை வென்றே/

மங்கம்மாவும் கண்டாள் மாண்பான வெற்றிகளையே/


வறட்சி போக்க  வடிவமைத்தாள் குளங்களை/

வளங்கள் பெருகவே  வரம்புகளும் உயர்ந்தனவே/

சத்திரங்களும் கல்விச்சாலைகளுமென சமுதாயப் பணியிலும்/

சளைத்திடா இராணியிவள் சமுகத்தின் ஏணிதானே/


இதயங்களில் உயர்ந்தே  இமயமாக மிளிர்ந்தவள்/

இரக்கமில்லாப் பேரனால்  இறக்கினாள் மணிமுடியை/

இறக்கையில் ஊமையாய் இவ்வுலகையும் நீத்தாள்/

இராணி மங்கம்மா  இராச்சியங்களின் சொப்பனம்தான்/


அறிவின் ஒளியாய் அழகின் சுடராய்/

ஆணுக்கு நிகராய் அவனிக்கும் தலைமையாய்/

அணிந்திட்ட பொறுமையால் அடையாளமுமானாள் நமக்கும்/ 


சரித்திர நாயகியின்  சாதனைகள் என்றும்/

சரியாதே நானிலத்தில் சப்தங்கள் ஓயாதே/

மங்காது வாழ்வாள் மக்கள் மனங்களில்/

மங்கம்மா என்றுமே மகத்தான இராணியவள்/


ஜன்ஸி கபூர் - 4.11.2020

வண்ணக் காதல்

 

 

 பசுமை நினைவுகளின் இதமான அணைப்பினில்

பரவுகின்றதே மகிழ்வும் தேகமும் சிலிர்த்திட

கொஞ்சும் விழிகளின் காதல் பார்வையில்

பஞ்சு மேனியும் நாணத்தில் சிவக்கிறதே 

 

தழுவுகின்ற சிறகினில் உரசுகின்ற தென்றலும் 

மஞ்சள் முகத்திலே முத்தங்களைப் பொறிக்கையில் 

வட்டக் கருவிழிதனில் மொய்த்திருக்கும் அன்பினைச்

சூடுகின்றதே கனவும் சூழுகின்றதே வனப்பும் 

 

இரகசியச் சந்திப்பில் இசைகின்ற உயிர்களில் 

இரேகைகளாகப் படிகின்றதே ஊடற் சுகமும் 

இதயம் குளிர்கின்றதே உதயத்தின் அலைவினில் 

இரசிக்கின்றேன் வண்ணங்களைத் தெளிக்கின்ற காதலையே 

 

ஜன்ஸி கபூர் - 30.09.20