About Me

2021/04/21

காலமும் கவிதை எழுதும்

நரைக் கோடுகள் கிழிக்கும் சிரசு

முதுமைத் திரைக்குள் மூச்சடங்கும் தேகம்

சுருக்கத் தளர்வில் முணங்கும் மூச்சு

உருவங்களை மறைத்திடும் கதிராளிப் பூ

பருவங் கடந்த தோற்றத்தின் முத்திரையாய்

முகங்காட்டி நிற்கின்றேன் உலகில்


இருந்தும் முதுமை மனதுக்கல்லவே

வாலிபத்தின் வனப்பினை எனக்குள் உணர்கின்றேன்

உணர்வின் வடிகாலாக வழிகின்றன கவிகள்

படைத்திடும் படைப்புக்கும் முதுமையுண்டோ

உடைந்தோடுகின்ற இரசிப்பில் தினமும் மூழ்கின்றேன்


சில மணிநேரங்கள் தனிமையின் இம்சிப்பில்

கலகலக்கின்ற நினைவுகள் கருவாகி

நிரப்புகின்றன வெள்ளைத் தாள்களில் தம்மை

உறவுகள் உதிர்க்கின்ற கண்டு கொள்ளாமை

உறவாடுகின்றன என்னுள்

எனக்காக நான் வாழ்வதில் ஆத்ம திருப்தி


என் வழிப்பாதையில் கிடக்கின்ற இலக்கியங்களைக் 

கண்டெடுத்துச் சுவைக்கின்றேன்

இப்பொழுதெல்லாம்

தனிமை என்னைத் தோடாமல் தொடாமல்

எங்கோ விலகிச் செல்கின்றது


வயதின் சடுதி ஏற்றத்தில்

வனப்பழிந்து தள்ளாடுகின்றன கால்கள் நிதமும்

சுவையற்ற நாவுக்குள் இசைகின்ற காற்றும்

தடுமாறியே வீழ்த்துகின்றது சொற்களை

இருந்தும் உடைந்து விடவில்லை நானும்

உணர்வின் ஊட்டத்தை வரிகளாக்கி

பா இசைக்கின்றேன் தென்றலுக்குள் குரலிணைத்து


சூழ்ந்திருப்போர் விரல் எண்ணுகின்றனர்

ஆழ் துயிலுக்குள் நனைந்திடும் நாட்களுக்காக

நானோ ஆறாம் விரலாக ஏந்துகின்றேன்

பேனாவை.......

உள்ளத்தில் குமுறும் என் உணர்வினைப்

பிழிந்தூற்றிப் படைப்பினை உருவேற்ற.....


பரிகசிக்கின்றனர்

கிழமெனும் உருவுக்குள்

கிளர்ந்தெழும் செந்தமிழின் வேட்கையை

உணராதவர்களாக


அனுபவத்தையும் ஆற்றலையும் சிந்தைக்குள் பதித்தே

எழுத்துக்களால்

அடையாளப்படுத்துகின்றேன் என்னையே

இளமைத் துடிப்பினை இன்னும் விட்டுக் கொடுக்காதவனாக

சந்தி வழிச் சந்ததிகளின்

சிந்தனைக்குள் என்னை ஊற்றுகின்றேன்

அடையாளப்படுத்துகின்றேன் என்னை அடுத்தவர் முன்னிலையில்


வனப்பினைத் தேடுகின்ற

புறத் தோற்றத்தினுள் அகப்படாதவனாக நான்

இருந்தும்

எழுத்துக்களாக எழுகின்ற என்னை

மறந்து விடாத கலைகளின் மடி

எனைத் தழுவும் வரை விழாமல் எழுவேன்

வரிகளாக மாறிக் கொண்டிருப்பேன்

அரிக்கின்ற கறையான்களுக்குள் ஆவியடங்கிப் போனாலும்

வரிகளால் வாழ்ந்து கொண்டிருப்பேன்

எனக்காக காலமும் கவிதை எழுதும்


கனல் கவி ஜன்ஸி கபூர்  

யாதும் ஊரே யாவரும் கேளிர்


யாதும் ஊரே யாவரும் கேளிரென்ற

கணியர் கருத்தால் காசினியும் உவக்கும்

காலம் போற்றும் வாழ்வியல் முறையினை

உணர்ந்தே ஏற்றால் வாழ்வும் சிறக்கும்


உலக மக்கள் யாவரும் ஒன்றென

உறவாய்க் கருதி உணர்வால் கலப்போம்

எல்லா ஊரும் எமக்கு ஒன்றே

ஏற்போம் மக்களை அன்பால் கவர்ந்தே


வாழ்வில் தொடரும் நன்மை தீமை

வந்தணையும் இன்பம் துன்பம் யாவுமே

வருமே ஊழால்தானே தருவாரோ பிறரும்

அறத்தின் நிழலாய் ஒழுகுவோம் உணர்வினை


இறப்பும் பிறப்பும் புதுமை நிகழ்வோ

இறைவன் சித்தம் இயற்கை வழியே

இவ்வுலக இன்பமும் துன்பமும் நீடிக்குமோ

வெறுப்பினால் உரைத்திடலாகுமோ உலகம் இனிதன்று


கார்மேகம் பிணைந்தே ஊற்றும் மழைநீர்

களிப்பினில் ஒன்றாகுமே பேராற்று நீராகி

இயற்கையின் மடியினில் இசைந்திடுமே வாழ்வும்

இன்மொழி நவின்றனரே ஆன்றோரும் முன்னர்


பெரியோரைப் பெருமையில் வியந்தே பார்த்திடலும்

எளியோர் சிறியோரை இகழ்ந்தே தூற்றலும்

தவறென்றே உணர்ந்திடுவோம் சரிநிகராக மதித்திடுவோம்

தரணிக்குள் சமத்துவம் பேணியே வாழ்ந்திடுவோம்


ஜன்ஸி கபூர் - 28.10.2020



சிறுகோட்டுப் பெரும்பழம்

 

இயற்கை இசைவின் இதயக் காதல்/

இனிமையின் பொழிப்புரையாம் குறிஞ்சித் திணையில்/

காமச் சுவையும் கருவாகிப் பிறந்திட/

காவிய வரிகளும் உயிர்த்திடும் மனக்கண்ணில்/


இரவும் பிழிந்திடும் தனிமைச் சாரலில்/

உறவாகிக் களித்தன காதல் மலர்கள்/

உணர்ச்சிப் பிழம்பாக பூத்திட்ட மோகத்துள்/

புணர்ந்தன அன்பின் இதயங்கள் தமக்குள்/ 


புத்தியில் விதையாகி தடுமாற்றும் காமத்தின்/

சொத்தெனக் கனிந்ததே காதலர் நெஞ்சும்/

நித்திரைக்குள் உறைந்திடா விழிகளின் ஏக்கத்தில்/

முத்துப் புன்னகையும் வாட்டத்தில் சுருங்க/


இம்சையையும் இரசித்திடும் பருவத்தின் ஈர்ப்பில்/

இதயமும் தொலைந்திடத் தலைவனும் தலைவியும்/

கூடியே களித்துப் பிரிந்திடும் வேளையில்/

தேடியே வந்திட்டாள் தலைவியின் தோழி/


சந்தித்தாள் தலைவனை செப்பினாள் தன்னுரையை/

சிந்தனைச் சுழியினில் சுழல்காற்றாய்த் தலைவனும்/

வேரும் சுமந்திடும் வேர்ப்பலாச் செறிந்திடும்/

பெரும் மலையினில் வாசம் செய்பவனே/


மூங்கில் வேலியினில் முக்காடிடும் பலாவைத்/

தாங்கிடுமே உம்மூரும் பலாவினைக் காத்தே/

பொங்கிடும் உம் காதலும் அவ்வாறன்றோ/

பங்கமின்றி தங்கமாக மின்னுமே உமக்குள்/


அலரும் பரந்திடாது பழிச்சொல்லும் உரையார்/

மலருமே உம்மில் நினைவுகளும் பாதுகாப்பாக/

தலைவியின் காதலோ சிதைந்திடும் வலியில்/

அலைந்திடும் பழிச்சொல்லும் விழிநீராகி வீழ்ந்திடுமே/


சிறிய கிளையில் தொங்கிடும் கனியவள்/

அறுந்து வீழ்ந்திடுவாள் உயிரும் வருந்திட/

பாதுகாப்பில்லா அவள் காதலும் முறிந்திடின்/

பறிபோகுமே உயிரும் அக்கணமே வெந்து/


அறிந்திடார் அடுத்தவரும் பெண்ணவள் மெய்க்காதலை/

அனலும் மொய்த்திடும் அச்சத்தின் உச்சத்தில்/

மனதினை அறிந்திட்ட நீயே விரைவினில்/

கனவும் மெய்ப்பட கரம்பிடித்திடு விரைவினில்/


என்றுரைத்தாளே தோழியும் தலைவியின் குறிப்பறிந்து/

இனித்திடும் பலாவின் முதிர்ச்சிக் காதலும்/

இதயத்தின் வெளியினில் இன்பத்தைக் குலைத்திடும்/

ஈருயிரை இணைத்திடும் ஆருயிர்ப் பிணைப்பினில்/


ஜன்ஸி கபூர் - 7.10.2020

 

Kesavadhas

ஜன்ஸி கபூர் இலக்கியக் கவிதையமைப்பில் படிமங்கள் பளிச்சிட

இனிய தமிழில் வனையப்பட்ட கவிதைப் புனைவு இஃது!

இந்த சொல்லாட்சிப் படிமங்கள் மலைக்க வைக்கின்றன!

இனிமையின் பொழிப்புரை

இரவும் பிழிந்திடும் தனிமைச் சாரலில்

உணர்ச்சிப் பிழம்பாக பூத்திட்ட மோகம்

புணர்ந்தன அன்பின் இதயங்கள் தமக்குள்

நித்திரைக்குள் உறைந்திடா விழிகளின் ஏக்கம்

இம்சையை இரசித்திடும் பருவத்தின் ஈர்ப்பு

அனுபவப் பட்டவர்க்கே ஆனந்தம் தெரியும் ஆனால் அதற்குமொரு கவித்துவம் வேண்டும்!

அலைந்திடும் பழிச்சொலும் விழிநீராகி வீழ்ந்திடுமே!

அனலும் மொய்த்திடும் அச்சத்தின் உச்சத்தில்..

ஈ மொய்க்கும் தீ மொய்க்குமா?

அபரிமித கற்பனை!

வென்றும் வாழுமே முதிர்ச்சிக் காதல்!

கவிதை சிறப்பு!

வாழ்த்துகள்!

அழகான அன்பு

 

நம்மைச் சுற்றிப் படர்ந்திருக்கின்ற அழகான அன்பு வாழ்வின் ஒவ்வொரு நகர்வுகளையும் ரசிக்க வைக்கின்றது. அன்பின் அதிர்வுகள் தருகின்ற இன்பங்கள் மனதில் வண்ண மயங்களாகின்றன. 

நமது எதிர்பார்ப்புக்களையும், ஆசைகளையும், கனவுகளையும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் விழுங்கும்போது அமைதிக்குள் அடங்கி விடுகின்றோம். வலுவான மௌனத்தின் பிடிக்குள் நம்மைச் சிறை வைக்கின்ற அத்தருணங்களில்கூட,  அழகான அன்பின் பிம்பங்கள் நம் மனதை மகிழ்வூட்டுகின்றதென்பதே யதார்த்தம்.

ஜன்ஸி கபூர் - 21.04.2021