About Me

2021/06/24

முரண்பாடுகளுக்குள் உடன்பாடு

மனிதர்கள் தம்முடைய சிந்தனைகளின் பொருட்டே தனித்துவமானவர்களாக மாறுகின்றார்கள். ஒவ்வொரு மனிதரினதும் கைரேகைகள் எவ்விதம் ஒத்திருப்பதில்லையோ அவ்வாறே சிந்தனைகளும் வேறுபடுகின்றன. சிந்தனைகள்   ஒத்திருப்பதில்லையாதலால் முரண்பாடுகள் தோன்றுகின்றன.

வாழ்க்கை என்றால் என்ன?

அந்த வாழ்க்கை எல்லோருக்கும் சுகமானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருக்கின்றதா?

ஆனாலும் வாழ்வின் சவால்கள் போராட்டங்களுடன் போராட நம்மில் எத்தனை பேருக்கு தன்னம்பிக்கை இருக்கின்றது.?

நிறைய பேரின் மனதில் இந்த வாழ்க்கை பற்றிய சலிப்பே இருக்கின்றது.

நம் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் பொய்யாக மாறும்போது இயல்பாகவே நாம் நம்மிடமே தோற்று விடுகின்றோம். இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு எழ நமக்கு மன தைரியம் வேண்டும். நேர்ச்சிந்தனைகள் வேண்டும்.

எம்மை நாமே நம் சூழ்நிலைக்கேற்ப தயார்படுத்திக் கொண்டோமானால் நம்மைத் துரத்துகின்ற எந்த முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் சமாளித்து விடலாம்.

நம்மை எதிர்கொள்கின்ற முரண்பாடுகள் நம்மை விழுங்க நாமே அனுமதித்தால் அந்த முரண்பாடுகளிடம் நாம் நம் நிம்மதி கலந்த வாழ்வையே இழந்து விடுகின்றோம்.

வேறுபட்ட இலக்குகள் அல்லது பெறுமானங்களை கொண்டிருக்கும் இருவருக்கிடையில் அல்லது இரு குழுக்களுக்கிடையில் தோன்றக்கூடிய வெளிப்படையான இயக்கமற்ற தன்மை முரண்பாடு எனப்படும்.' 

முரண்பாட்டுக்கான வரைவிலக்கணத்தை மேற்கண்டவாறு கல்வியலாளர்கள் வழங்கியுள்ளனர். அதாவது நபர்களுக்கிடையில் சிந்தனைகள் வேறுபடும்போது வெளிப்படுகின்ற ஓரு இயக்கமற்ற தன்மையாக இதனைக் கொள்ளலாம்.

நீர் சொல்வதை நான் செய்ய வேண்டுமா அல்லது நான் சொல்வதை நீர் செய்ய மாட்டீரோ என விரிந்து செல்கின்ற மனப்போக்குகளால் விட்டுக்கொடுப்பு இங்கு இடம்பெறாது.

முரண்பாடு என்பது ஒருவரிடத்தே அல்லது இருவருக்கிடையில் அல்லது இரண்டுக்கு மேற்பட்டோரின் கருத்து வேறுபாட்டின் அல்லது எதிர்ப்பின் பெறுபேறாகத் தோன்றுவதாகும்.  இந்த முரண்பாடுகள் குடும்ப   உறுப்பினர்களுக்கிடையலோ அல்லது உறவினர்களுக்கிடையிலோ அல்லது தொழில் நிறுவனங்களிலோ ஏற்படலாம்.

முரண்பாட்டுச் சிந்தனை நமக்குள் ஏற்பட்டால் சூழ்நிலைக்கெதிரான மனநிலையைக் கொண்டிருப்போம்.

உறவுகளுக்கிடையிலான முரண்பாடுகளின் விளைவு பகைமை

கணவன் மனைவிகளுக்கிடையில் ஏற்படுகின்ற முரண்பாடுகள் விவாகரத்தில் நின்றுவிடும்.

குடும்பங்களில் ஏற்படுகின்ற முரண்பாடுகளால் ஒருவருக்கொருவர் முகம் பார்க்க முடியாத பாதகநிலை.

தொழில் நிலையங்களில் சந்திக்கின்ற முரண்பாடுகள் நம் வாழ்வில் பல பிரச்சினைகளைத் தோற்றுவித்து விடுகின்றது.

இந்த முரண்பாடுகள் ஏன் ஏற்படுகின்றன. வேற்றுமைக்கு வித்திட்டு பற்பல மோதல்களுக்கு வடிகாலாக காணப்படுகின்ற இந்த முரண்பாடுகள் தோன்றாவிடில் இந்த உலகமோ அழகான அமைதிப் பூங்காவாக அல்லவா காணப்படும். மனிதர்களுக்கிடையில் சாந்தியும் சமாதானமும் சேர்ந்த நிம்மதியான வாழ்வும் கிடைக்குமே. முனம் இவ்வாறாக ஆசைப்பட்டாலும்கூட யதார்த்தநிலை நம்மை சிந்திக்க வைக்கின்றதே

மனித எண்ணங்களுக்கிடையில் காணப்படுகின்ற பல்வகைமைகளின் செல்வாக்கு அன்பெனும் உணர்வின் எல்லைகளையும் தகர்த்து விடுகின்றது.

இந்த முரண்பாடு ஏன் ஏற்படுகின்றது எனப் பார்ப்போமா

ஆளுக்காள் தோன்றுகின்ற பக்கச்சார்பு நிலை.

தனிநபர் பிறர்மீது செலுத்துகின்ற செல்வாக்கு

வேறுபட்ட இலட்சியங்கள்

பொருட் தேவைகள்

தவறான தொடர்பாடல்

அந்தஸ்தை வெளிப்படுத்தல்

அதிகமான வேலைச்சுமை

ஆளுமை மோதல்

தெளிவற்ற பொறுப்புக்கள்

வேறுபாடான எண்ணக்கருக்கள். 

இவ்வாறாக பல காரணங்கள் காணப்படலாம்.

இந்த முரண்பாட்டுக்கும் பண்புகள் காணப்படுகின்றன.

குறித்த நபர் அல்லது நபர்கள் தொடர்பில் வெறுப்பை வெளிப்படுதல்.

குறை கூறல்.

தமது கருத்துக்களை வெளிப்படுத்தாமல் இருத்தல். 

ஒதுக்கி வைத்தல். 

தனித்திருத்தல். 

பேசுவதை தவிர்த்துக் கொள்ளல். 

கண்கள் நேருக்கு நேர் பார்த்து பேசாதிருத்தல். 

இவ்வாறாக மன அவஸ்தைகளைத் தருகின்ற முரண்பாடுகள் நமக்குத் தேவைதானா நிச்சயமாக முரண்படுகின்றபோது நமக்குள் எழுகின்ற சிந்தனைகளால் நாம் நம்மையே திரும்பிப் பார்க்கின்றோம்

முரண்பாடு மூலம் கிடைக்கும் நன்மைகள் 

புதிய கருத்துக்கள் உருவாகும். 

இணக்கமாக வாழக் கற்றுக் கொடுக்கிறது. 

தேவைகளை நிறைவு செய்கிறது. 

நடத்தை கோலங்களை கற்றுக் கொடுக்கிறது. 

பிரச்சனைக்கான தீர்வு தேடித் தரும். 

தொடர்பாடல் திறனுக்கான பயிற்சி. 

உணர்ச்சிவசப்படுவதை தடுக்கும். 

வித்தியாசமான அனுபவங்களைத் தரும். 

புதிய சந்தர்ப்பங்கள் உருவாகும். 

உண்மையான பிரச்சனை வெளிப்படும்.

குறைபாடுகளை இனம் கண்டு கட்டுப்படுத்த முடிகிறது. 

இரு தரப்பும் இணங்கும் வெற்றிகரமான தீர்வு. 

புரிந்துணர்வு வளர்ச்சி. 

முரண்பாடுகள் மூலம் கிடைக்கும் தீமைகள் 

சக்தி நேரம் வீணாகும். 

தாமத முடிவு. 

ஆரோக்கியமற்ற சமூகம். 

எரிச்சலூட்டுதல். 

பின்தங்கிய நிலை. 

குழுவினர் விலகுதல். 

குறிக்கோளை அடைய முடியாது.

ஒழுங்கமைப்பினுடாக முரண்பாட்டுக்கான தீர்வுக்காக  கடைபிடிக்கப்படும் பல்வேறு உபாயங்களாவன : -

தவிர்த்தல். 

தீர்வொன்றை விதித்தல். 

மிருதுவாக்குதல். 

ஒழுங்கமைப்பின் குறிக்கோளை நிறைவுபடுத்திக்  கொள்ளல். 

பிரதிநிதியுடன் கலந்துரையாடல்.

கட்டமைக்கப்பட்ட இடைத்தாக்கம். 

பேச்சுவார்த்தையும் பேரம் பேசுதலும். 

மத்தியஸ்தம். 

பிரச்சினை தீர்த்தல். 

ஒழுங்கமைப்பை மறுசீரமைத்தல். 

எனினும் நமக்கு தீங்கினையும் தரக்கூடிய இத்தகைய முரண்பாடுகள் எம்முள் தோற்றம் பெறுவதை நாம் அனுமதிக்கக்கூடாது.

பிரச்சினைகளை இனங்கண்டு அதனைத் தீர்த்தல் வேண்டும். இதற்கு பொறுமையும் பிறரை நேசிக்கின்ற அன்பான குணமும் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்கின்ற பக்குவமும் வேண்டும். பிறர் நலத்தின்மீது மதிப்பு வைக்கின்ற மனநிலை வேண்டும். தவறுகளைக் கண்டறிந்து களைந்தெறிதல் வேண்டும். ஒருவரும் பாதிப்படையாமல் தொடர்பாடல்கள் மூலம் குறைகளைக் களைந்தெறிந்து நல்ல விடயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

முரண்பட்டோர் கருத்துக்களை 'நேருக்கு நேர் நோக்குதல்' போன்ற நுட்ப முறைகளையும் பயன்படுத்தி பிணக்குத் தீர்க்கலாம் 

ஈகோ நீக்கப்பட்டாலே பாதி முரண்பாடும் மறைந்து விடும்.

அடுத்தவரின் உணர்வுகள் தேவைகளைப் புரிந்து கொண்டாலே முரண்பாட்டுக்கான பாதைகளும் மறைந்து விடும்.

விட்டுக்கொடுங்கள். அடுத்தவர்களின் உணர்வுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். இவ்வுலகின் உயர்ந்த மனிதப் பிறவிகள் சமாதானத்தின் மிகச்சிறந்த அடையாளங்களாக மாற்றம் பெறுவார்கள்.

அடுத்தவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களைப் பின்தொடர பலர் முன்வருவார்கள்.

பிறரின் குறைகளைக் கண்டுகொள்ளாதீர்கள். உங்கள் நிறைகள் பிறரால் பாராட்டப்படும்.

ஒவ்வொருவரும் தம்மை அடுத்தவர்களை நேசிக்கின்ற மனிதர்களாக மாற்றும்போது இப்பிரபஞ்சத்தின் அன்பின் செழுமைக்கும் குறைவுதான் ஏது.

அன்பு ஆட்சி செய்கின்ற மனிதர்கள் வாழ்கின்ற இப்பூமி மயானங்களல்ல. சொர்க்கத்தின் சுவடுகளால் பாதைகள் செய்யப்பட்ட அழகான பூமியாக மாறும்.

நாமும் மாறுவோம். மற்றவர்களையும் மாற்றுவோம். மாற்றங்களாலேயே வாழ்வில் ஏற்றம் பெறலாம்.

ஜன்ஸி கபூர் - 24.06.2021


2021/06/16

வாழ்க்கை நம் கையிலே



 மனம் எப்பொழுதும் மகிழ்ச்சியையே தேடுகின்றது. ஆனாலும் அந்த மகிழ்ச்சி நமக்குள்ளேயே இருக்கின்றது என்பதை மறந்து அடுத்தவர்களின் எதிர்பார்ப்பிற்காக நமது வாழ்க்கையை குறுக்குகின்றோம். மகிழ்ச்சியை உணர வேண்டிய மனம் அதை வீணாக இழந்து தவிக்கின்றதே!
---------------------------------------------

-
ஆசைகள் உள்ளத்தில் எழுகின்ற சிறு உணர்வுதான். ஆனாலும் ஆசைகளுக்குள் நாம் நம்மை அடக்கி வாழ முயற்சிக்கும்போதுதான் நம்மைச் சுற்றி வலி கசிகின்றது. கட்டுப்படுத்தப்படாத ஆசைகளின் நீட்சியில் கண்ணீர்க் கசிவு இருக்கின்றது என்பதை நாம் மறந்துதான் போகின்றோம்.
--------------------------------------------------


அமைதியாக நகர்ந்து கொண்டிருக்கின்ற வாழ்வினுள்  பல எதிர்பார்ப்புக்களை நமக்குள் தேக்கிக் கொள்கின்றோம். நாம் விரும்புகின்ற எல்லாம் நிறைவேற வேண்டுமென முயற்சிக்கின்றோம். போராடுகின்றோம். இருந்தும் ஏமாற்றங்கள் நம்மைத் துரத்துகின்ற போது எல்லாவற்றையும் இழந்ததைப் போல் தனிமைக்குள் சுருண்டு விடுகின்றோம்.

--------------------------------------------------

நமக்குள் அடங்கியிருக்கின்ற ஆற்றல்கள்தான் நமது அடையாளங்கள். பலம் நமது நம்பிக்கையின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். ஆனாலும் நாம் ஏனோ பலத்தை மறந்து பலகீனங்களை நமக்குள் நிரப்பி அப்பலகீனங்களால் சந்தோசங்களை இழந்து விடுகின்றோம். தடுக்கி வீழும்போதெல்லாம் நம்மீது ஏறி மிதிக்காமல் எழுந்திருக்க கை தருவது நம்மீது அன்பு கொண்டவர்கள் மாத்திரமே!
----------------------------------------------------------

இலக்குகள் நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றோம். ஓவ்வொரு தொலை புள்ளியும் தொட்டு விடும் தூரமெனும் நம்பிக்கையில் முயற்சிக்கின்றோம். ஒவ்வொரு முயற்சிக்குள்ளும் ஒளிந்திருக்கின்ற தன்னம்பிக்கை நமது பயணப் பாதையின் வலியை உறுஞ்சி வழி காட்டி நிற்கும்.
----------------------------------------------------------

நாம் நேசிப்பவர்கள் எல்லோரும் நம்மை நேசிக்கின்ற போது மனதில் புத்துணர்ச்சியுடன் வலிமை பிறக்கின்றது. புன்னகை நமக்குச் சொந்தமாகின்றது. இன்பமோ துன்பமோ நாம் தேடிச் செல்கின்ற செயல்களின் தீர்ப்புக்களே. வெற்றியை தேடும் மனம் சந்திக்கின்ற தோல்விகளையும் வலிகளையும் அக்கணமே மறந்து விடுகின்றது.    

----------------------------------------------------------


தோல்விகளிடம் நாம் தோற்றுவிடும்போது எம்மைத்  தேடி துன்பங்கள்தானே வருகின்றன. ஒவ்வொரு கணமும் நம் நிம்மதியும் தொலைகின்றதுதானே. இருந்தும் கடந்து போன சந்தோசங்கள் உதிர்ந்து போகாமல் கொஞ்சமாவது நமக்குள் நினைவுகள் எனும் பொக்கிசமாக மாறிக் கிடப்பதனால் வாழ்க்கை இன்னும் நமக்காக காத்துக் கிடப்பதாக உணர்ந்து வாழ்கின்றோம். வாழ்க்கை நம் கையிலே வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும் நமக்கான வாழ்க்கை அனுபவங்களைக் கற்றபடி வாழ்வோம். வாழ்வை ரசிப்போம்.

- Jancy Caffoor - 16.06.2021


2021/06/15

வெற்றி(யின் இ)லை

உலகினை கொரோனா எனும் நோய் தன் பிடிக்குள் சிக்க வைத்து வாழ்வைக் கசக்கிப் பிழிகின்ற நேரம், அன்றாடம் உழைத்து உண்ணும் பலர் பசியுடன் போராடி வருகின்றனர். ஊதியம் கிடைக்கின்ற வழி உழைப்புத்தானே. நேர்மையான வழியில் உழைக்கின்ற எல்லாத் தொழில்களும் சிறந்தவைதான்.

 சென்ற வருடம் கொரோனாத் தொற்றுக் காரணமாக பாடசாலைகள் விடுமுறை விடப்பட்டிருந்தன. வீட்டில் இருக்கின்ற அந்நாட்களைப் பிரயோசனப்படுத்துவதற்காக வீட்டுத்தோட்டத்தில் நாட்டம் செலுத்தினேன். அதன் விளைவாகச் சிரிக்கின்றது வெற்றிலைச் செடி. 

சில வீடுகளின் சுவர்களில் இவ்வெற்றிலைச் செடி பரந்து வளர்கையில் அதனை ரசிப்பேன். ஏனோ வெற்றிலைச் செடி வளர்ப்பதென்றால் எனக்கு கொள்ளை ஆசைதான்.

இந்த வெற்றிலையைப் பற்றித்தான் இந்த வீடியோவில் கொஞ்சம் கதைக்கப் போகின்றேன்.

மலேசியாவில் தோன்றிய இச்செடி மருத்துவ மூலிகையாகும். அத்துடன் இந்துக்களின் பண்பாட்டு பாரம்பரிய அடையாளமாகவும் திகழ்கின்றது. வயிற்றுக்கோளாறு நீங்கவும் வெற்றிலை பயன்படுத்தப்படுகின்றது. இது மிளகுக் குடும்பத்தைச் சேர்ந்த பயிராகும். வெற்றிலையை பாக்குடன் மென்றோ அல்லது பீடாவாகவோ சாப்பிடுவார்கள். சிலர் வெற்றிலை ரசம் வைத்துச் சாப்பிடுகின்றார். 

தாய்ப்பால் சுரப்பிற்கும் வெற்றிலை பயன்படுகின்றது. கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் ஆண் வெற்றிலைகள் என்றும், இளம்பச்சை வெற்றிலைகள் பெண் வெற்றிலைகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. வெள்ளை வெற்றிலை   காரம் இல்லாததும், வெளிர்ப்பச்சை நிறமாகவும் இருக்கும். கருப்பு வெற்றிலை  காரம் உள்ளதாகவும், நல்ல பச்சை நிறமாகவும் இருக்கும். வெற்றிலையில் நடுக்காம்பிலிருந்து ஒரு புள்ளியில் இருந்து நரம்புகள் பிரிந்து இருந்தால் ஆண் என்றும், பல புள்ளிகளில் இருந்து பிரிந்து வந்தால் பெண் என்றும் கூறப்படுகிறது. 

வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. 

வெற்றிலைப் பயிருக்கு விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டி பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள் வெற்றிலை பயிராகும் நிலப்பகுதிக்கு வெற்றிலை கொடிக்கால் என்கிறார்கள். 

வெற்றிலையும், பாக்கும் ஒற்றுமைக்கு உகந்தது. ஒன்றோடு ஒன்றை இணைத்துதான் கொடுக்க வேண்டும். 'வேண்டாத உறவிற்கு வெறும் வெற்றிலை'  என்பது பழமொழி. 

வெற்றிலை, பாக்கு சுண்ணாம்பு, ஏலக்காய், கிராம்பு, வால்மிளகு, சாதிக்காய், சாதிபத்திரி, சுக்கு, காசுக்கட்டி ஆகியவற்றை சேர்த்து வாய் மணக்கஇ மணக்க தாம்பூலம் தரிப்பது தமிழர்களின் வழக்கம். 

இவ்வெற்றிலையின் மருத்துவ குணங்கள்

  • உடல் பருமனை குறைக்கும் மருந்து

2 வெற்றிலையில் 5 மிளகு வைத்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு சாறை மட்டும் விழுங்கிவிட வேண்டும். இதேபோல் இரண்டு மாதங்கள் வரை செய்துவர உடல் எடை குறையும்.

  • நரம்புகளை பலப்படுத்தும் மருந்து
  • மூளை பலம் பெறுவதுடன் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
  • மூச்சுதிணறல், நெஞ்சக சளியை போக்கும் மேல்பூச்சு மருந்து
  • நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்துவர ஞாபக சக்தியை அதிகரிக்கும். வெற்றிலை சாறை ஒரு சொட்டு காதில் விட்டால், காதில் ஏற்படும் வலி, சீல் பிடித்தல் போன்றவை குணமாகிறது

ஆனாலும் நன்மையின் மறுபக்கமாக தீமையும் உள்ளது. வெற்றிலை மென்று சிலர் வழி வழியே துப்பும்போது சூழலின் அழகு கெடுகின்றது. அது மாத்திரமல்ல தொடர்ந்து மெல்லும்போது பற்களில் கறைகளும், புற்றுநோய் போன்ற நோய்களும் ஏற்படுகின்றன.

இருந்தபோதும் மங்களகரமான அச்செடியை வீட்டில் வளர்த்து மன சந்தோசம் பெறுவோமாக!

உங்கள் அன்பின் ஜன்ஸி கபூர் - 14.06.2021