About Me

2012/06/26

மௌனம்




நிசப்தத்தின் சுவாசத்தில் 
வெட்கித்துக் கிடக்கின்றது
நம் மௌனம்!

மிரண்டோடும்
மின்மினிகளின் சிறகடிப்பில்- என்
புன்னகை நசுங்கிப் போகின்றது!

பூவுக்குள் தன் சிறகு தேடும்
பட்டாம் பூச்சியாய் 
உன்னுள் எனைத் தேடி
தோற்றுக் கிடக்கின்றேன் ஏக்கவெளியில்!

வேம்பின் விரலிடுக்கில்
குந்திக் கொண்டிருக்கும் - அந்த
ஒற்றைப் பறவையாய்
சயனித்துக் கிடக்கின்றேன் 
உன் வீதியோரங்களில்!


ஒற்றையாய் அலையும்
மேகத்தின் சில்மிஷத்தில் - உன்
நினைவுகள் பிறாண்டுவதால்- என்
விழிகள் வாந்தியெடுக்கின்றன தினமும்!

நீயென்னைக் கடந்து செல்லும்
தருணங்களெல்லாம்- என்
பேனாவின் வீரியமறுந்ததாய்
பிரமிப்பு என்னுள்!

நீயென்னை மறுத்த பொழுதுகளில்
அந்தரித்துக் கிடந்தேன்
இருள் கவிழ்ந்த நிலவாய்!

வான் விரட்டும் மழையாய்
என் மடி நனைத்த நீ 
ஏனோ இப்பொழுதெல்லாம்
நம்முள் இடைவெளி வளர்த்தாய்
மனசுள் வலி தந்தபடி!

இருந்தும் 
வெட்ட வெளியில்
ஒட்டிக் கொண்டிருக்கும் அந்த
நிலாக் கசிவில் - உன்
ஞாபகங்கள் புதுப்பிக்கப்படுகின்றன
மீண்டும் புளாங்கிதமாய்!

ஜன்ஸி கபூர் 










2012/06/25

என் பதிவுகள்



சிறு வயது முதல் எந்த சிறு விடயமாயினும் அதனை ஒழுங்குபடுத்தி நேர்த்தியாகச் செய்யும் இயல்புள்ளவள் நான். என் முகநூல் ஓட்டத்திலும் அந்தப் போக்கு தலை காட்டியதால், எழுத்து வடிவம் பெறும் சிந்தனைகளின் தனித்தன்மை பேண ஒவ்வொரு குறிக்கோள் வகுத்து சில குறுப் களையும், சில பக்கங்களையும் உருவாக்கியுள்ளேன். ஏனெனில் நமது சிந்தனைகள் எழுத்து வடிவம் பெறும் போதே ஆவணப்படுத்தப்படுகின்றது. ஆவணப்படுத்தல் என்பது நம் முயற்சியை, ஆற்றலை பிறர் அங்கீகரிக்கச் செய்யும் ஓர் உபாயமாகும்.


முகநூலில் என் பதிவு-
-------------
Jancy Caffoor


இணைய வலைப்பூ (Blogger)
-------------------------------------
கவிதாயினி




முகநூலில் என்னால் உருவாக்கப்பட்ட பக்கங்கள்
-----------------------------------------------------------------------


 
1. வானவில்-
அவ்வவ்போது மனதில் தோன்றும் பசுமையான எண்ணங்களின் வார்த்தை வரிகள்

2. அநு-
சர்வதேச தினங்கள் தொடர்பான பதிவுகளுக்கான பக்கம்
  
அந்தக் களத்தின் மீதான பயணமே இது. என் நட்பை ஏற்ற, புரிந்துணர்வுமிக்க நட்புள்ளங்களின் வாழ்த்துடன் இந்தப் பயணம் தொடரும்.  

என் பயணம் தொடர்கின்றது !

- Ms.Jancy Caffoor -






மைக்கல் ஜாக்சன்



இசையானது மொழிகளையும், மதங்களையும், பேதங்களையும் துறந்து மனித மனங்களை ஈர்க்கக்கூடிய அற்புத உணர்வு. இசைக்கு வரிவடிவம் கொடுப்பது பாடல்களே! பாடல்களுக்கு உருவம் கொடுப்பது காட்சிகள் அல்லது உடலசைவை வெளிப்படுத்தும் நடனங்கள்.


மைக்கல் ஜோசப் ஜாக்சன்........1958 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ந்திகதி அமெரிக்கா இண்டியானா மாகாணத்திலுள்ள புகழ்பெற்ற இசைக் குடும்பத்தின் வாரிசாகப் பிறந்தார். குடும்பத்தில் ஏழாவது பிள்ளை

ஜாக்ஸனுக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பது இஷ்டமான பொழுது போக்காக விளங்கியதால் "பப்புல்ஸ்" எனும் சிம்பன்சியும் , "மிஸ்டர் டிப்ஸ் 'எனும் பனி ஆடும் இவர் தோழமைக்குள்ளான ஐந்தறிவு ஜீவராசிகள். குழந்தைகள் மீது பற்றுள்ளவர். தன் வீட்டில் மிகப் பெரிய தீம் பார்க்கை உருவாக்கி ஆதரவற்ற குழந்தைகளை விளையாடச் செய்தவர்.

ஐந்து வயதிலேயே தனது அண்ணன்மாருடன் இணைந்து "ஜாக்ஸன் பிரதர்ஸ்" இசைக்குழுவில் இணைந்து பாடினார். 

"ஜாக்சன் 5" இசைக்குழுவிலிணைந்து புகழடையும் போது அவரின் வயது 11 ஆகும். இவரது இசைப்பயணம் 1967ல் ஆரம்பமாகி மரணிக்கும் வரை புகழோடிணைந்தே நகர்ந்தது. 1971ல் மேடையேறினார். 1980 ல் பொப் இசையுலகில் தனி முத்திரை பதித்து அமெரிக்கா மக்கள் மனதில் இடம்பிடித்த கறுப்பின இசைக்கலைஞராக முடிசூட்டினார். அவரது நடனம் தனித்துவமிக்கதாகவும், பாடல்கள் இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் இருந்ததால் பலரின் ரசிப்பில் பாடலும், நடனமும் உறைந்து கிடந்தன.



1982ம் ஆண்டு "ஈடி" படத்திற்கான ஒலிக்கோர்வையை தனது குரலில் பதிவு செய்தமைக்காக இவருக்கு கிராமிய விருது கிடைத்தது. அதே ஆண்டில் "த்ரில்லர்" ஆல்பத்திற்காக 8 விருதுகள் கிடைத்தன. அவ் ஆல்பம் உலகளவில் அதிகளவு விற்பனை செய்யப்பட்ட முதல் தர ஆல்பமாக இருந்தது. இவரது நான்கு இசைத் தொகுப்புக்கள் உலக சிறந்த பதிப்புக்களாக முத்திரை குத்தப்பட்டன. இவருக்கு பல "க்ராமி" அவார்டுகளும், கின்னஸ் சாதனைகளும் சொந்தமாகின. "கிங் ஆப் பொப்" பட்டம் ஜாக்சனுக்கு வழங்கப்பட்டது பொருத்தமானதே!

ஜாக்சனின் "ரோபார்ட்", மூன்வாக்" நடன வகைகள் பிரபல்யமானவை. "மூன்வாக்" அவர் கண்ணீர் வாழ்வின் சோகங்களின் பிரதிபலிப்பாகும்.

அவர் இசைத்துறையினதும் நடனத்துறையினதும் தடங்கலற்ற பயணத்திற்காக புவியீர்ப்பு விசையை மீறி இயங்கக் கூடிய பாதணிகளைத் தனக்காகத் தயாரித்து பயன்படுத்தி தேவைக்கேற்ப உடலசைவைப் பேணி பல வகையான நடனங்களஞடன் கூடிய பொப்பிசைப் பாடல்களை வெளிப்படுத்தினார்.

1992ம் ஆண்டு இவரால் பாடப்பட்ட"ஹீல் தி வேர்ல்ட்" எனும் பாடலுக்கு ஐ.நா சபையின் அங்கீகாரம் கிடைத்தது. அவரது "ஏர்த்" பாடல் உலக சுற்றுப்புறத் தினத்தின் அதிகாரபூர்வ பாடலானது. தென் கரோலினா மாநிலத்தின் பாடலும் இவர் குரல் பதிவே!

ஆர்& பி ,டிஸ்கோ, ராக், பொப் என்பன இவரது இசை வகைகளாக பலர் மனங்களைத் தொட்டன.

பாடகராக , நடன அமைப்பாளராக மட்டுமல்ல ஜக்ஸன் எழுத்தாளராகவும், நடிகராகவும் , வணிகராகவும், இசையமைப்பாளராகவும் , சமூக சேவையாளராகவும் தனது திறமையைப் புலப்படுத்தியவர்.

"மேன் ப்ரொம் தி சிங்கிள்" எனும் பாடலை இசைத்து கிடைத்த வருமானத்தை ஆதரவற்றோருக்கு வழங்கியவர். இவர் எயிட்ஸ் நோயாளிகள். ஏழைகளை நேசித்து நிதியுதவி செய்தார்.

இந்த பொப் இசை நாயகனின் மறுபக்கத்தில் பல அவலங்களும் குற்றச்சாட்டுக்களும் பரவிக்கிடந்தன. நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது பெறப்பட்ட தீக்காயங்கள் இவரது உடலின் வடுக்களாகியது. :விட்டிலிகோ" எனும் உடல் நிறமிக்குறைபாட்டாலும் ஆட்பட்டு சிரமப்பட்டார்..

அமெரிக்கா நூலகமொன்றில் பெற்றுக் கொண்ட பல நூல்களைத் திருப்பிக் கொடுக்காது பத்து இலட்சம் டாலர் அபாரதத்தையும் பெற்றுக் கொண்டவரிவர். 1993 ல் குழந்தைகளுடன் தகாத உறவுகளைப் பேணியவர் எனும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதில் பலரின் விரோதத்திற்கும் ஆளானார்.

அவரின் பலகீனம், கட்டுபாடற்ற வாழ்க்கை என்பன அவரை கடனாளியாக்கியது. அந்தக் கடன் சுமையிலிருந்து மீளமுடியாத நிலையில் 2012 ஜூன் 25 ந்திகதி தனது 50 வயதில் லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவில் தனது துடிப்புக்களை அடக்கினார். பலரை துள்ள வைத்த இந்தப் பொப் இசை மன்னனின் மறைவு க்கு இன்று மூன்றாண்டு நிறைவஞ்சலி..........நினைவஞ்சலி 


























2012/06/24

கவிஞர் கண்ணதாசன் அவர்கள் !


ஒவ்வொருவரும் அனுபவங்களை உள்வாங்குகின்றோம். அந்த அனுபவங்களை நம் உணர்வுகளால் மெருகூட்டத் துடிக்கும் போதே கவிஞன் பிறப்பெடுக்கின்றான். 

தன் வார்த்தை வருடல்களால் பிற மனங்களை வசியப்படுத்தும் போது இலக்கியவுலகின் சொந்தங்களும் நேசிப்புக்களும் தங்கள் இராச்சியத்துக்குள் இவர்களுக்கான செங்கம்பள விரிப்பை விரிக்கின்றனர்.வரவேற்கின்றனர்.

அந்த வகையில் கவிதைகளின் தேன் ஊற்று, காவியத் தாயின் இளைய மகனாய் பொன்முடி சூட்டிக் கொண்ட கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாளின்று (2012.06.24). தன் முகம் காட்டி நிற்கின்றது.

தமிழ்நாடு சிறுகூடல்பட்டியில் 1927ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் திகதி சாத்தப்பனார், விசாலாட்சி தம்பதிகளின் மகனாகப் பிறந்தார். இவர் இயற் பெயர் முத்தையா. உடன்பிறப்புக்கள் எண்மர். இருந்தும் குடும்பத்தின் பாச நீரோட்டம் இவரை நனைக்க முன்னரே ஏழாயிரம் ரூபா பணத்திற்கு தத்துப்பிள்ளையாகி வேறோர் பெற்றோர் வசம் போய்ச் சேர்ந்தார்.

"நாராயணன்" வளர்ப்புப் பெற்றோரிட்ட பெயர் . இவர் கல்வி எட்டாம் வகுப்புடன் தடைப்படவே பதினாறு வயதில் பணி புரியத் தொடங்கினார்..பொன்னம்மா, பார்வதி, வள்ளியம்மை எனும் மூன்று மனைவியர் மூலம் பதினான்கு வாரிசுகள்.இலர் இரத்த உரிமைகளாகின.

கவிஞர் கண்ணதாசன்.அவர்கள்....காலம் என்றும் உச்சரிக்கும் அற்புதமான கவிஞர்.இவரின் ஒவ்வொரு பாடல்களிலும் இழையோடிக் கிடக்கும் கவி வார்ப்பின் ஆழத்தினைக் காணும் போது நம்மனசுக்குள் வியப்பு சிறகடிக்கின்றது.


இவர் காலம் நமக்கு அடையாளம் காட்டிய அற்புத கவிஞர் . காதல், திருமணம், வாழ்க்கை, தொழில், ஏக்கம், சோகம், அன்பு, பாசம் எனும் பல உணர்வுக் கலவைகளில் சொற்சிலம்பாடிய உணர்ச்சிக் கவிஞர்.


நான்காயிரத்திற்கு மேற்பட்ட கவிதைகளையும், ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களையும் மக்கள் மனங்களில் நிறைத்தவர் கண்ணதாசன் அவர்கள். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்த இவருக்கு அரசு தன் கௌரவப்படுத்தலை சாகித்ய அகாதமி விருதின் மூலம் வழங்கியது.


சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல் திரை, முல்லை, கண்ணதாசன் போன்ற இதழ்கள் இவரின் மேற்பார்வையின் கீழ் பதிப்புரிமை பெற்ற இதழ்களாகும்.கம்பரும் பாரதியாரும் இவரின் மானசீக குருக்களாகும்.

இவர் இந்துமதத்தில் பிறந்தவராயினும் மதங்களுள் மதங் கொள்ளாமல் பிற மதங்களிலும் மனம் லயித்து இயேசுகாவியம் பாடினார்.

திரைப்படப்பாடல், அர்த்தமுள்ள இந்து மதம், மாங்கனி, இயேசு காவியம் இவரது படைப்புக்களாகும். அர்த்தமுள்ள இந்துமதம் பத்து பாகங்களாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தாய்ப்பாவை, கவிதாஞ்சலி, கண்ணதாசன் கவிதைகள் உள்ளிட்ட பத்து கவிதை நூல்கள் இவரின் சொந்தமாகின. கண்ணதாசன் கவிதைகள் ஆறு பாகங்களாக வெளியாகின.அவ்வாறே கடைசிப்பக்கம் உள்ளிட்ட பத்துக்குமேற்பட்ட கட்டுரைகளையும், விளக்கு மட்டுமா சிவப்பு உள்ளிட்ட இருபத்தொரு புதினங்களையும், வனவாசம் உள்ளிட்ட பத்து கட்டுரைகளையும் எழுதியுள்ளன அவரின் கரங்கள். ராஜ தண்டனை, அனார்கலி உள்ளிட்ட மூன்று நாடகங்களும், பகவத் கீதையுரை, அபிராமி அந்தாதியுரை என்பன அவர் நமக்கு விட்டுச் சென்ற இலக்கிய கலசங்களாகும்.

காலம் மறக்காத இந்த ஒப்பற்ற கவிஞர் 1981ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் திகதி அமெரிக்கா சிகாகோ நகர் மருத்துவ மனையில் தன்னுயிர்த்துடிப்பை நிரந்தரமாக அடக்கினார்.மதுபோதையின் நட்புக்கு பலியாகிய இந்தக் கவிஞன் மறைந்தாலும் இன்னும் கவிதைகளாலும், பாடல்களாலும் நம்மிடையே உயிர்த்துக் கொண்டுதானிருக்கின்றார்.

இவரது ஞாபகங்கள் இன்றும் கூட சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணதாசன் மணிமண்டபம் மூலம் மீட்டப்படுகின்றது. அங்கு அவரது நூல்கள் உள்ளிட்ட பல நூல்கள் வைக்கப்பட்டுள்ள நூலகமும், அவரது வாழ்க்கை வரலாற்றின் எச்சங்களாகப் பரிணமிக்கும் புகைப்படங்களின் தொகுப்புக் கண்காட்சியும் நடைபெறுகின்றது. 

அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது மார்பளவுச் சிலையும் அவர் விட்டுச் சென்ற கனச்செறிவான கவிதைகளின் புகழ் பாடிக் கொண்டிருக்கின்றன இன்றும் என்றால் மிகையில்லை

கண்ணதாசன் அவர்களின் மணக்கோல நிகழ்வைக் காட்டும் அபூர்வ புகைப்படமிது

ஒற்றையாய் !


நிசப்தக் காற்றின் சீண்டலில்
மூச்சு வியர்த்துக் கிடக்கும்
மெலிதாய் எனைச் சீண்டியபடி!

வெளி வானில் உடைந்திருக்கும்
வட்ட நிலா மௌனத்தில் - ஏனோ
கனவுகள் மூச்சையற்றுக் கிடக்கும்!

தன் முகம் தேடியலையும்
காற்றின் மூர்க்கத்தன வேட்டையில் 
இருள் கசங்கிக் கிடக்கும்!

வெட்கம் துறந்த வண்ணப்பூக்கள்- தம்
ஆடை களைந்து வீழ்ந்து கிடக்கும்
இரவுச் சயனத்தில்!

அண்டவெளியில் விரல் தொடும்
நம் மௌனம் மட்டும் - அழகாய் 

ஏறுமுகம் காட்டிக்கிடக்கும்!

இந்த இரவோ 
இன்னும் தேடிக்கொண்டிருக்கும்
தொலைந்து போன என்னுறக்கத்தை!

ஒற்றையாய் உடைந்து கிடக்கும்
நம் நட்பு மட்டும்- விழியோரத்தில்
கண்ணீருக்குள் அடைக்கலமாகிக் கிடக்க 

நாமோ 
வறட்டுப் பிடிவாதத்தால்- நம்
கவிக்காதலை நசுக்கியபடி 

பயணிக்கின்றோம் நம்மை மறைத்தபடி!


ஜன்ஸி கபூர்