About Me

2012/07/22

நினைவகம்


தொண்ணூறின் விடியலொன்றில்- எம்
தேசம் தொலைந்துதான் போனது!

கற்பாதைச் சுவடுகளை
முத்தமிடும் முட்பாதணிகள்
வலியோடு வழி கேட்க...........!

பனையோலைச் சரசரப்பும்
கறுத்தக் கொழும்பான் வாசனையும்
மூச்சுக்காற்றுக்குள் விறைப்பைத் தர!

கேரதீவு நீர்ப் பரப்பில்
சோகங்கள் தலைப்புச் செய்தியாய்.................
முகங் காட்டிய அப் பொழுதுகளால்
விழியோரம் நீர் தாரை வார்க்க!

பொம்பரின் சாகஸமும்
சீ பிளேனின் தந்திரமும்
தும்பியின் வட்டமடிப்பும்- எம்
நெஞ்சத் தசையின் உளுக்கெடுக்க!

ஓடித் திரிந்த தெருக்களெல்லாம்
ஒப்பாரியில் கிடந்து தவிக்க...........!

தேசம் தொலைத்துப் போனோம் !
எம் தாயகம் துறந்து வாடுகின்றோம்!

ரெண்டு மணி நேர
கெடு வைப்பில் - எம்
தாயகக் கனவுகளை கருவறுத்தாரன்று..........
இன்றோ...............
தரணியிலிடமின்றி
தரித்து நிற்கின்றோம் அகதியாய்!

வெள்ளைக் கடற்கரையில்
சோகி பொறுக்கி பதித்த தடம்
கல்வெட்டாய் நெஞ்சிலின்னும் கனக்க........

பல மைல் தொலைவு நோக்கி
பொல்லாத பயணம் தான் கண்டோம் !

எம் உயிரணுக்களிங்கே
வெம்மைக்குள் புழுங்கி மடிய.........
நிழல் தந்த மனைகளோ
சூரியக் குளியலில் அங்கே  மோகித்துக் கிடக்க

நேசம் துறந்து போனோம்.........
தேசம் தொலைத்துப் போனோம்!

சேறாகிப் போன வாழ்வில்
சோற்றுக்கும் வேரூன்ற............
அகதியாகிப் போனதில்
அவலம்தான் சேமிப்பாச்சு!

உடமையிழந்து
உறவும் தொலைத்து
வேறிடம் முளைத்ததில்
வெறுமையும் உடன்பிறப்பாயிற்று!

அமில ஆக்கிரமிப்புக்களின்
தேசமாய் எம்முணர்வுகள் படிய...............
ஈர் தசாப்தங்கள் முகம் மாறின.......
இன்னும் விடியல் எட்டா வெளியில்!



தன்னம்பிக்கை


என்  
நிழலில் விசிறப்படும்
நெருப்புத்துண்டங்களிலும்
சுவடு பதிப்பேன் சுதந்திரமாய்

என் 
சறுக்கலின் ஒவ்வொரு நகர்வும்
படிகளாய் மாறும் 
முன்னேற்ற முகடுகளில்
முத்திரை பதிக்க!

என் 
கண்ணாடி மனசுக்குள்
கல்லெறிவோர்
புல்லரித்துக் கிடப்பார் - என்
வெற்றி முகம் கண்டு!

என் 
முயற்சி வேர்களின்
மூச்சுக் காற்றில் விசம் தடவுவோர்
மூச்சிறைத்து கிடப்பாரென்
வளர்ச்சி கண்டு!

தன்னம்பிக்கை 
பல தடைகளைத் தகர்த்தெறிய
வெற்றியின் அறைகூவலுக்குள்
சங்கமித்துக் கிடப்பேன்
என்னாளும்!

ஜன்ஸி கபூர் 









2012/07/20

வந்ததே ரமழான் !


நிலாக் கீற்றின் உதய தரிசனத்தில்
வான விழிகள் கிறங்கிக் கிடக்க.-எம்
"கல்பின்" கறை கழுவிடத்தான்
மாண்போடு வந்ததே புனித 'ரமழான்!

"திக்ர்" செய்தே  இறையோ னிறைஞ்சி
"இறையில்லம் தனை நோக்கி சிரந்தாழ்த்தி
திருமறையின் நேசிப்பிலெம்
வாழ்வைப் பொருத்தி - நிதம்
இறையோ னன்பில் வீழ்ந்து கிடக்க
வந்ததே ரமழான்
தந்ததே மாண்பு பல!

விடியல் தொடாத இருள் கூடலில்
மடி தரும் "ஸஹரில்" அமர்ந்தே
உதடு குவிந்து "நிய்யத்" மொழிந்து
உவகையோடு நோன்பு பிடித்திடவே
வந்ததே ரமழான்
தந்ததே மனத் தூய்மையை!

"ஈமானால்" நிரப்பப்பட்ட எண்ணங்கள்
"இபாதத்" தாய் எட்டிப் பார்க்க
இச்சையறுக்கப்பட்ட  வுடலும்- மன
தூய்மையோ டொன்றித்துக் கிடக்க
வந்ததே ரமழான்
தந்ததே நன்மை பல!

இடர்படுவோரின் துயரறிந்து
ஈகை பல செய்திடவே
"ஸஹாத்" பரிமாறலின் சேவகர்களாய்- எம்
மனசும் கரங்களும் உருமாற்றிக் கிடக்க
வந்ததே ரமழானும்
தந்ததே ஈடேற்றமும்!

அகிலத்தின் தரிப்பிடத்தில் 
ஈமானிய விருட்சங்களாய் எமை வேரூன்ற
உறவுகளும் நேசங்களு மெமக்களித்த
அல்லாஹ்வூக்கே நன்றி பகிர்ந்திட
வந்ததே இனிய ரமழான்
தந்ததே நல்லமல்களை!

மனசோரம் பாவம் விரட்டி
மாண்பான நன்மை பல கோர்த்தே
மாநபி வழியொற்றி தடமும் பதித்து- எம்
மனவெளியின் சந்தனத் தோப்புக்களில்
மானசீகமாய் நாம் வீழ்ந்து கிடக்கவே
வந்ததே புனித நோன்பும்
தந்ததே இனிய வசந்தமும்!

நரகத்தின் நாடி யறுத்தே
விரசங்களின் பாவமெரித்தே
சொர்க்க வாசலை நாம் நுழையவே
மார்க்க மெம் இஸ்லாத்தின்
புனித கடமையாய்
முகங்காட்டும் ரமழானே
வந்ததே ..............வாசத்தோடு!

"லைலதுல் கதிர்" ஒளியினிலே
எழிலாகும் ரமழான் இரவினிலே
வசந்தமே எம் காலடி நிழலாய்
வாசத்தோடு கதை பலபேசிச் செல்ல
வந்ததே இனிய ரமழான்
தந்ததே பல அருள்மொழிதனை!

ஆகாயம் அண்ணார்ந்து பிரமித்திருக்க.
பாதாளம் பரவசத்தில் வீழ்ந்து கிடக்க
சாகரங்கள் சரித்திரம் வாசித்துச் சொல்ல
புன்னகை உதிர்வோடு புளாங்கிதம் தரவே
வந்ததே புனித ரமழான்
தந்ததே பல மாண்புகளையெம்முள்!

இறையோனின் அருள் மாதத்தில்
நோன்பாளியாய் நாமும் அமல் செய்ய
கைகட்டி நிற்கின்றன எம் பொழுதுகள்
நாளைய விடியலுக்காய்!

(கல்பு = மனம் ) (ஸஹர் = நோன்பிருப்பதற்காக ஆயத்தமாகும் சூரியன் உதயம் காட்டாத நடு சாமப்பொழுது) (ஈமான் = நம்பிக்கை) (ஸஹாத் = வறியவர்களுக்கு கொடுக்கும் கொடை) (லைலதுல் கதிர் = 27 ம் நோன்பின் புனித இரவு) இவை என் சகோதர மத நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க பதிவிட்ட சில சொற்களின் விளக்கம்)




-Jancy Caffoor -

2012/07/19

உயிர்.........




கருத்தரித்தல் என்பது கருக்கட்டலில் இருந்து பிறப்பு வரையிலான காலமாகும். இது 266 நாட்களாகும் ( 38 வாரங்கள்)

இறுதியான மாதவிடாய் காலத்திலிருந்து 280 நாட்கள்
(40 வாரங்கள்) கணிக்கப்படுகின்றன.



கர்ப்பம் தரித்தலுக்கான ஆரம்ப அறிகுறிகள்
------------------------------------------------------------
1. மாதவிடாய் தடைப்படல்
2. வாந்தி
3. முலைகள் பருமனடைதல்
4.சில வகை உணவுகளில் விருப்பு
5. அடிக்கடி சிறுநீர் கழித்தல்

கர்ப்பமடைந்திருப்பதை அறியும் பரிசோதனைகள்
-----------------------------------------------------------------------
1. முதலாவது மாதவிடாய் நின்ற காலத்திலிருந்து 10 வது 14 வது நாட்களில் செய்யப்படும் hCG பரிசோதனை....



பெண்களில் மலட்டுத் தன்மை ஏற்படக்காரணங்கள்
----------------------------------------------------------------------------
1. சூல்கொள்ளல் தடைப்படல்
2.பலோப்பியன் குழாய், கருப்பை, கருப்பைக் கழுத்து ஆகிய பகுதிகள் சேதம்     அடைந்திருத்தல்.
3..விந்தினுடைய பிறபொருளெதிரிகள் இருத்தல்.



ஆண்களில் மலட்டுத்தன்மை ஏற்படக்காரணங்கள்
-----------------------------------------------------------------------
1. தன்நிர்ப்பீடனம் ஏற்படல் (Autommunity)
2.சுக்கிலத்தில் குறைந்த எண்ணிக்கை விந்துகள் காணப்படல்
3.அதிகளவான அசாதாரண விந்துக்கள் காணப்படல்
4. விந்துக்களின் அசையும் திறன் குறைவு.
5. விந்துக்களின் வாழ்க்கைக் காலம் குறைவாகக் காணப்படுதல்



கருக்கட்டலின்போது பெண்ணின் பலோப்பியன் குழாயின் மேலந்தத்தில் காணப்படும் துணை முட்டைக்குழியம் மீது விந்து மோதும். அப்பொழுது விந்தின் தலைப்பகுதியும், நடுத்துண்டும் முட்டைக்கலத்தின் உட்பகுதியிற்கு ஊடுறுவும். இந்நிலையில் துணைமுட்டைக்குழியம் உயிர்ப்படைந்து ஒடுங்கற்பிரிவடைந்து விந்தின் கருவிலுள்ள குரோமோசோம்களுடன் இணைந்து கருக்கட்டலை நிகழ்த்தும்..

இக் கருக்கட்டப்பட்ட முட்டை நுகம் எனப்படும்..



                                                 முசுவுரு நிலை




இந்நுகம் 30-36 மணித்தியாலங்களில் பிளவடைந்து முசுவுரு (Morula) நிலையை அடையும்.

3 நாட்களுள் இம் முசுவுரு பலோப்பியன் கான் வழியாக கருப்பையை அடையும். அங்கு இக்கலங்கள் மீள ஒழுங்குபடுத்தப்பட்டு பந்து போன்ற நிலையை அடையும். இது அரும்பர் சிறைப்பை (Blastocyst) எனப்படும்.

இவ் அரும்பர் சிறைப்பை திரவத்தால் நிரப்பப்பட்டு அரும்பர்க்குழியை (blastocoel) உருவாக்கும்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட கலத்திணிவு முதிர்மூலவுருவாக மாற்றப்படும்.

போசணையரும்பர்களின் சடைமுளைகளால் 7-14 நாட்களுக்குள் அரும்பர் கருப்பை அகத்தோலுடன் உட்பதிக்கப்படும்.
 தாயிற்கும் சேயிற்குமிடையிலான போசணைப் பரிமாற்றத்திற்கான முன்னோடியாக இப்போசணையரும்பர் சடைமுளை யுதவுகின்றது. இவற்றிலேற்படும் மாற்றம் காரணமாகவே சூல்வித்தகம் உருவாக்கப்படுகின்றது. இது சூல்வித்தகத்தையும் மூலவுருவையும் இணைக்கின்ற கொப்பூள் நாண் ( Umbilical) ஆகும்.

                               பிறப்பின் பின்னர்  கொப்பூள் நாண் அறுக்கப்படல்




.


இவ்வாறு விருத்தியடையும் மனித முளைய விருத்தியை 3 மும்மாதப் பிரிவுகளாக நோக்கலாம்.
---------------------------------------------
முதலாம் மும்மாதம் (First trimester)
-----------------------------------------------
6-7 நாட்களில் கருக்கப்பட்ட முளையம் கருப்பையை வந்தடையும்.

4ம் வாரமளவில் அங்கங்கள் உருவாகும்.

கண்கள் விருத்தியடையும்

இதயம் உருவாகி இதயத்துடிப்பு ஆரம்பமாகும்.

3ம் மாத முடிவில் கண்கள்,மூக்கு, வெளிக்காது காணப்படும்

விரல்களில் நகங்கள் தோன்றும்.

குருதிக்குழாய்கள் உருவாகியிருக்கும். இதயத் துடிப்பை அறியலாம்

தலை பெரிதாகக் காணப்படும்.

நிறை 30 கிராம்


              8ம் வாரம்                                              
-




இரண்டாம் மும்மாதம் (4,5,6 மாதங்கள்)





நீளம் 25- 35 செ.மீ

நிறை 550 - 750 கிராம்

கண் மடல்கள் மயிர்களைக் கொண்டிருக்கும்

மனித முக இயல்பு

தலை ஓரளவு பெரிதாகவும் உடல் தோல் சுருங்கியும் இருக்கும்

தலையில் மயிர் முளைத்திருக்கும்

என்புகள் உருவாக்கப்பட்டிருக்கும்



மூன்றாம் மும்மாதம் (9 ம் மாத முடிவில்)
----------------------------------------------------------
நீளம் 50 செ.மீ

நிறை 3000 கிராம்

உடல் மயிர்கள் உதிரும்

விரல் நகம் நீண்டிருக்கும்

தலை சிறிதாகும்

விதைப்பையினுள் விதைகள் இறங்கியிருக்கும்

உடல் நன்கு விருத்தி







 பிறப்புச் செயற்பாடு (Birth Process )
  ---------------------------------------------
முதிர்மூலவுருவின் தலை கருப்பைக் கழுத்தை நோக்கித் திரும்பும்.

முதிர்மூலவுருவின் தலை அளவிற்கு கருப்பைக் கழுத்து விரியும்.

கருப்பை தசை சுருங்கும்

வலுவான சந்த அசைவுகளால் பிறப்புக்கானை நோக்கி (யோனிமடல்) முதிர்மூலவுரு தள்ளப்படும்.

10-45 நிமிடங்களின் பின்னர் சூல்வித்தகம் ) கொப்பூள்) நாண் வெளியேற்றப்படும்.

இதன் போது 350 கன சென்ரிமீற்றர் குருதி வெளியேற்றப்படுகின்றது.


                                        பிறப்பிற்கு அண்மித்த நிலை



                              குழந்தை பிறந்த பின்னர் கொப்பூள் நாண் அறுக்கப்படல்




உண்மையில் ஓர் தாயின் கருவறை சுமக்கும் கர்ப்பத்தின் மாற்றங்கள் வியப்பளிக்கக் கூடியவை. தான் சுமக்கும் கருவை நோய் நொடியண்டாது இப் புவிக்கு ஆரோக்கிய மனிதராக வழங்கத்துடிக்கும் அந்தத் தாய்மைக்கு நிகரேது

----------------------------------------------------------------
கருத்தரிப்பைத் தடுக்கும் சில முறைகளாவன
----------------------------------------------------------------
                                                           Contraceptive Pills




                                                              Various Color of Condoms

                                                        Couple Selecting Contraception


                                                                 Couple in Bed


                                                                 Family Planning


                               Young Teacher Standing in front of the blackboard...talking about it



                                                                       Minipill 
இது Progesterone ஐ கொண்டுள்ளது. இதனால் கருப்பைக்கழுத்தில் காணப்படும் சீதம் அதிகரித்து உட்பதித்தல் தடைப்படும்
Intrauterine devices (IUD)



         Intrauterine device (IUD)

இம் முறையில் கருப்பையில் சிறிய சாதனம் வைக்கப்பட்டு அதன் மூலம் ஏற்படும் கருப்பை மாற்றங்களால் உட்பதிதல் தடுக்கப்படுகின்றது

                                                         
                                                           Periodic abstinence
                              கருக்கட்டல் நடைபெறக்கூடிய காலத்தை தவிர்த்தல்


                                                                        Norplant  
இதுவோர் நவீன சத்திர சிகிச்சையாகும். இவ்வில்லைகள் ஆறு மேற்புயத்தின் தோலின் கீழாக சிறிய சத்திர சிகிச்சை மூலம் உட்பதிக்கப்படும்


                                                                     Tubectomy  
இது பலோப்பியன் குழாய் வெட்டப்பட்டு குழாயின் முனை இறுக்கி கட்டப்படும். இதனால் முட்டை கருப்பையை அடையாது.


Ms . Jancy Caffoor