About Me

2012/08/09

காதலென்பது


என் தோழி சுஜா......................!

அனாதைப் பெணணவள். திருமணம் எனும் வாழ்வியலின் மறுபக்கம் அவள் வறுமை நிலையால் எட்டாக் கனியாயிற்று. அழகில் மயங்கிக் கிடக்கும் பல ஆண்களுக்கு அவளின் வறுமை, அழகின்மை கண்களை உறுத்த, அவளைத் திருமணம் செய்யத் தயங்கினர். அவள் கறுப்பென்றாலும் அம்சமாகவே இருந்தாள். புற அழகின்மையால் அவள் மன அன்பின் இனிமை கூட செல்லாக் காசாகிப் போனது.

வயது 30 ஜத் தொட்டும் கூட வறுமையால் வாழ்க்கை பற்றிய கனவுகள் நிஜம் தொடாமலே எட்டாத் தொலைவில்  அவளைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது 

அவள் குடும்பம் வறுமைப்பட்டிருந்தாலும் கூட அவளது கல்விப் பயணத்திற்கு ஒருபோதும் தடை விதிக்கவில்லை. படித்தாள். அரச வேலையொன்றைப் பெற்றுக் கொள்ளுமளவிற்கு அவள் கற்றல் வாய்ப்பளிக்கவில்லை.

சுஜா பெற்றோருக்கு ஒரே மகள்.   பெற்றவர்களிருவருவருமே   ஊமைகளானதால்    பேச்சுத்துணைக்கு கூட ஆள் யாருமேயில்லாத நிலையில்  தனிமைப்பட்டுத்தான் போனாள். காலவோட்டத்தில் பெற்றவர்கள் வயதாகிப் போனதால் அதுவரை காலமும் கூலி வேலை மூலம் கிடைத்த சம்பாத்தியமும்  நின்று போனது. ஒருவேளை உணவுக்கே போராடும் நிலையில் அவள் புற வாழ்வின் ஆடம்பரத்திலிருந்து அகன்று அந்நியப்பட்டுப் போனாள்.

என் உறவினரொருவரின் தொலைத்தொடர்பகத்தில் அவளுக்கேற்ற வேலை யொன்றைப் பெற்றுக் கொடுத்தேன். அவள் உயர்தரம் வரை கற்ற கல்வி அந்தத் தொழிலுக்குக் கைகொடுத்தது. அவள் அவ்வுழைப்பில் தன்னை யீடுபடுத்திய  பின்னர் வாழ்க்கைச் சுமையும் லேசாய் தணிந்தது. அத் தொலைத் தொடர்பகத்தில் கணனித் தட்டச்சுக்கள் , இணைய செயற்பாடுகளை இவளே நேர்த்தியாய் செய்து கொடுப்பாள். கிராபிக்டிசைன் வடிவமைப்பு, ஆட்டோசொப் போன்றவற்றிலும் முன்னர் பெற்றுக் கொண்ட பயிற்சி அவள் தொழிலுக்கு துணையானது. அவள் திறமை கூட ஓய்வுநேரங்களில் அவளுக்கு வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் துறையாக மாற, கடன் அடிப்படையில் கணனி ஒன்றையும் வாங்கியவளாய் இணையத் தொடர்பையும் பெற்றாள்.

அவள் வாழ்க்கையின் நெருக்கடிகள் ஓரளவு தணிய ஆரம்பிக்கவே முகநூல் பக்கமொன்றும் ஆரம்பித்து, அதில் பல டிசைன்களைக் காட்சிப்படுத்தத் தொடங்கினாள். அது அவளது பொழுதுபோக்காக அமைந்ததுடன் வருமானம் பெற்றுத் தரும் வழியாகவும் மாறியது.

அவள் முகநூல் நண்பர்களில் ஜெய்சங்கரும் ஒருவன். அதுவரை ஆண்களுடன் பழகியிராத அவளுக்கு ஜெய்யின் அன்புத் தாக்குதல் புதியதோர் அனுபவமாக மாற மனசு நெகிழ்ந்தாள். அவனது வார்த்தை நெருடல்களில் அவளுக்குள் கருகியிருந்த கற்பனைகள் மீண்டும் தளிரிடத் தொடங்கின .அவளும் உணர்ச்சியுள்ள சாதாரண பெண்தானே ..அவன் காதல் அவ​ளைப் பரவசப்படுத்தி வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்புக்குள் தள்ளியது.

அவன் அயல் நாட்டைச் சேர்ந்தவன். அவனால் கூறப்பட்ட வார்த்தைகளே அவளுக்கு நிஜமாக்கப்பட்டது. அவன் தன் காதல் ஞாபகங்களாகத் தினம் தவறாமல் அனுப்பும் செய்திகளும், தொலைபேசி அழைப்புக்களும் அவனது உலகத்தில் அவளையும் ஈர்த்துக் கொள்ளவே காதலின் நினைவுகளாக அவர்களுக்கிடையில் புகைப்படங்களும்,  முத்தங்களும், முகிழ்க்கும் கனவுகளும் , எதிர்கால எதிர்பார்ப்புக்களும் பரிமாறப்பட்டன.

நாட்கள் வேகமாக நகர்ந்தன.  அவர்கள் முகங்கள் சந்திக்காத காதல் பாதி கற்பனை வாழ்க்கையில் நகர்ந்து இரகஸியமாக குடும்பமும் நடத்தினர். அவர்கள் காதல் முகநூல் நண்பர்களுக்கிடையிலும் கசியத் தொடங்கியது்.

இச்சுகந்தமான நெருடலில் மாதமொன்று நாணியவாறே ஓட்டமெடுத்த பின்னரே. ஜெயசங்கரின் மறுபக்கம் பற்றி அவளுக்குள்ளும் லேசாகத் தெரிய ஆரம்பித்தது. அவன் பெண்களுடன் சகஜயமாக பழகுபவன். ஆரம்பத்தில் அவள் சாதாரணமாக அதை எடுத்துக்கொண்டாலும் கூட நாளடைவில் ஏதோ உறுத்தலுக்குள்ளானாள். ஜெய்யை ரகஸியமாகப் பின்தொடர்ந்தாள். அவன் தன்னைப் போலவே இன்னும் சில காதல் தொடர்புகளுடன் உல்லாசமாக இருக்கும் நாயகன் என்பது அவளுக்கு உறுதியான போது உலகமே இடிந்து அவளிதயத்தை நொறுக்கிய பிரமை. அழுகை மட்டுமே அவள் சொந்தமாக விரக்தி தணலில் விழும் புழுவாய் துடித்தாள்.

முன்பின் தெரியாத ஒருவனை, அவன் வார்த்தைகளை நேசித்த பயங்கரம் அவளுக்குள் உறுத்தியது. தன் மடமை, தவறு உணர்ந்தவளாக ஓர் மாலைப் பொழுதொன்றில் அவன் காதலை முற்றாகத் துண்டித்து அவனையும் தன் நண்பன் பட்டியலில் இருந்து நீக்கி விட்டாள். இவ்வாறான மன விகாரம் படைத்தவர்கள் காதலித்தவர்களை மட்டும் காயப்படுத்த வில்லை. புனிதமான காதலையும் கொச்சைப்படுத்துகின்றார்கள்.

அவள் அவனை நேசித்தது உண்மையான உணர்வே. அவ் வலி பல காலம் நீடித்திருந்தாலும் கூட, அவனிடம் ஏமாறாமல் அவளது வாழ்க்கை காப்பாற்றப்பட்ட திருப்தியில் மனசு லேசானது.

சில ஆண்களே.............!

காதலை நீங்கள்  கற்றறிந்த பின்னர் தூது விடுங்கள். முகநூல் தொலை பக்கம் என்பதால் பலர் பெண்களின் அன்பு செய்யும் மனதை பலகீனமாகக் கருதி, பொழுதுபோக்கிற்காக தினம் விளையாடும் தமது மைதானமாக அவர்களது வாழ்வை மாற்றி விட முயற்சிக்கின்றார்கள். தங்களுக்குத் தேவைப்படுகின்ற பொழுது அவர்களை நெருங்கவும், தேவையற்ற போது புறக்கணிக்கவும் ,தமது காமத்தின் வேட்டைக்கு அவர்களை இரையாக்குவதும் அநாகரிகமான செயல் என்பதை அவர்கள் ஏனோ மறுக்கின்றார்கள்.

"ஊசி இடம் கொடுத்தாலே நூல் உள்ளே செல்லும்."

பெண்கள் எப்பொழுதும் தமது துன்பத்துக்கு தாமேதான்  காரணமாகின்றார்கள். இவ்விடயத்தில் பெண்கள் அவதானமாக இருத்தல் வேண்டும். தம் வாழ்வில் சந்திக்கின்ற ஆண் நண்பர்களுடன் நட்புடன் பழகுவதில் தவறில்லை. ஆனால் அந்த நட்பெல்லையை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.காலவோட்டத்தில் நாம் ஒவ்வொருவரும் அனுபவங்களைப் பெற்று விடுவோம். ஆனால் அந்த அனுபவங்கள் கிடைப்பதற்குள் பல துன்பங்களும் நமக்குள் சொந்தமாகி விடும். இதுவே இன்றைய கால யதார்த்தம்!



2012/08/08

ஐ லவ் யூ சொன்னால்....


இப்பொழுதெல்லாம் .  வீதியோரங்களில் அநாவசியமாக   வீசியெறிப்படுகின்ற உணர்வே காதலாகி விட்டது. காதலாகி கசிந்து மனமுருகி உணர்வுகளை வார்க்க வேண்டிய இந்தக் காதல், இன்று நாகரீகவுலகில் அதன் அர்த்தம் தெரியாமல் அலைமோதுகின்றது.

பல போலிக்காதல்கள் சிறு சலன தூறல்களில் காளான்களாகி கண்காணும் இடங்களிலெல்லாம் பூத்திருக்க, உண்மைக் காதல்களும் உயிர் தளிர்த்து  கண்களை குளிர்ச்சிப்படுத்துகின்றன.

இத்தகைய இயல்புமிகு இக் காதலை என் பார்வையின்று "ஐ லவ் யூ" எனக் குதூகலிக்கும்  அசையும் படங்களினூடாக ரசிக்கின்றது. இப்பதிவைக் கண்டதும் சிலர் ரசிக்கலாம். சிலர் முகம் சுளிக்கலாம். 

வார்த்தை "தீ"யென்று உச்சரிக்கும் போது நா சுடுவதில்லை. காதலைப் பற்றி சொல்பவர்கள் எல்லாம் காதல் அனுபவம் கொண்டவர்கள் அல்ல.

இந்த முன்னுரையோடு உங்களுக்கும் "ஐ லவ் யூ " சில விசயங்களை ரகஸியமாகச் சொல்லப் போகின்றது.


வாலிபப் பருவமென்பது வசந்தங்களைத் தேடியழைக்கும் பருவம். சுடுகின்ற யதார்த்தங்களை விட சுகமான கனவுகளை நாடிக் கிடக்கும் பருவம். உள்ளம் ரகஸியமாய்த் தேடும் சுகந்தமான உணர்வின் அறைகூவலில் எதிர்பாலினர் தொடர்பான இரசாயனமாற்றங்கள் அதிகளவில் கசிந்து பொசிந்து கலவையாகும் போது தூதுக்கள் மன்மத அம்புகளாகி குறித்த இதயத்தின் காலடி தேடி ஓடும்.

ஏற்றுக் கொள்ளப்படும் காதல்கள் முத்தத்தை மொத்தமாய் கொள்வனவு செய்ய, நிராகரிக்கப்படும் காதல் தூது தன் வாழ்வை சோகத்துள் நனைத்து நிற்கும்.குறித்த இருவரிடத்தில் பற்றுதல் கூடுதலாகி ஈர் இதயங்களும் கிறக்கத்தில் ஓரிதயமாய் வீழ்ந்து தமக்கிடையே தம் உயிர்சாசனத்தில் காதல் ஒப்பந்தத்தை எழுதிவிடுகின்றனர். மன்மதன்களின் கூடலிலே பல ரதிக்கள் மயங்கிக் கிடக்க காதல் வரலாறு அவர்களுக்குள் ஆனந்த புன்னகையை விசிறியவாறு எழுதப்படத் தொடங்குகின்றது.



மனித மனங்களை நந்தவனங்களாக்குவதும், மயானங்களாக்குவதும் இந்தக் காதல்தான். காதல் என்பது இதயவேலிகளில் நாட்டப்படும் முள்வேலி என்பதால் பிறரின் காதல் தூதுக்களை  உள்ளே நுழைய விடாமல் தடுக்கின்றது. கற்பனைகளின் அரங்கேற்றம் காதல் மனங்களிலேயே பெரும்பாலும் ஒத்திகை பார்க்கப்படும் போது காதல் வயப்பட்ட இருவரும் ஒருவரையொருவர் தமக்குள் ஆபரணங்களாய் அணிந்து தம் காதல் உறவுக்குள் வலிமை சேர்க்கின்றனர். அவர்கள் எந்நேரம் உச்சரிக்கும் மந்திரம் "ஐ லவ் யூ " தான்.



கண்கள் வழியாக இறங்கும் காதல் கருத்துக்களில் படிந்து இதயத்தில் சங்கமித்து உணர்வாகி உயிராகும் போது திருமணம் எனும் சடங்கால் அந்தஸ்து பெற முனைகின்றது. மனங்களால் ஒன்றித்தவர்கள் தங்கள் கனவுகளை உயிர்ப்பிக்கும் வரை நிஜம் தொலையும் கற்பனை உலகில் கலந்து கிடக்கின்றனர். அவர்கள் இதயம் இடமாறிக் கொள்ள, விழிகளும் அவர்களைச் சுற்றியே படர்கின்றது. அவர்கள் இதயம் சங்கமிக்கும் உலகில் அவர்களது காதல் நினைவுகள் மட்டுமே அங்கீகரிக்கப்படுகின்றன. பிறர் பற்றிய பார்வைகளை அலட்சியப்படுத்தி விடுகின்றனர்.


தங்களுக்குள் நிதம் நிதம் நிரம்பும் கனவுகளுக்கு உருவேற்றி, அக் கனவுகளின் சிலிர்ப்புக்குள் தன் அன்பானவர்களையும் அடக்கி விடத் துடிப்பார்கள். உணர்வுகள் ஏந்தும் ஆசைகள், கனவுகளை மையாக்கி, அவர்களின் மென் கரங்களைச் சூடேற்றி மோகத்தில்  தவிக்கும் காதல் கடிதங்களாய் மாற்றி, தன் துணையின்  முகம் தரித்திருக்கும் முகவரிக்குள் கடிதங்களைச் நுழைத்து விட காதல் மனங்கள் துடிக்கின்றன.  அக் கடிதத்தின் அழைப்பு மணி "ஐ லவ' யூ' என கோஷித்துக் கொண்டேயிருக்கும் அடுத்த கடிதம் காணும் வரை!


 எதிர்காலம் அவர்கள் கண்முன் விரிய  அக் கடிதங்களில் பல முறை பார்வையைப் பதித்து  அடிக்கடி தம் நிஜ வாழ்விலிருந்து விலகி, கற்பனை ராஜாங்கத்தின் சிம்மாசனத்தில் இருவருமே ஏறியமர்ந்து  முடி சூடிக் கொள்கின்றனர்.காதலர் கரம் சேரும் கடிதங்களும், அவர்களின் நேச அன்பளிப்புக்கும், உயிர்ப்பான வார்த்தைகளின் ஞாபகங்களுமே இவர்களின் ஆயுட்கால ஆவணங்களாய் உயிருக்குள் ஏறி உட்கார்ந்து கொள்ளும் காலம் முழுதும்!

காதல் ஒரு போதையாகவும், அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாகவும் விளங்குவதால் காதல் வயப்பட்டவர்கள் மகிழ்ச்சியூற்றுக்களில்  நிதம் தம்மை நனைத்து துன்பமிகு யதார்த்தங்களிலிருந்தும் விலகி விடுகின்றனர்.  சிறகடிக்கும் அழகிய வண்ணத்துப்பூச்சிகளாய் இருவரும் தம்முலகில் பறக்க முயற்சிப்பதால் புறவுலகை அவர்கள் மறந்து பிறரின் பார்வையில் வெறும் கண்காட்சிப் பொருட்களாய் மாறி விமர்சனத்துக்குள்ளும் வீழ்ந்து விடுகின்றனர் சிறு பிள்ளைத்தனமாய்!


புகையைப் போல காதலையும் மறைக்க முடியாதென்பார். இருவர் மனப்பூர்வமாக ஒருவருக்குள் ஒருவர் நுழைந்து வாழ முயற்சிக்கையில் அவர்களையுமறியாமற் காதல் மோகத் தீயை அடுத்தவர் கண்களுக்குள் விசிறி விடுகின்றனர்.அவனும் நோக்க அவளும் நோக்க அவர்களிருவரையும் ஊரார் நோக்க உள்ளத்தில் மோகித்து சுடர் விட்டெரியும் காதலொளி பிறர் பார்வையில் தீப்பந்தமாய் வெளியே எட்டிப் பார்க்கின்றது. ஊர் பார்வைக்குள் உருளும் காதல்களில் சில  திருமண முழக்கத்தில் மனம் மகிழலாம். சில பெரியவர்கள்  எதிர்ப்பில் முறிந்தும் போகலாம்.


அழகு ஒரு கவர்ச்சியான ஊக்கியாகவிருந்தாலும் கூட  பல காதல் முக வழகு தேடாது அகத்தின் இருப்பில் படிந்திருக்கும் மெய் யன்பின் எதிர்பார்ப்பிலேயே குறி வைத்திறங்குகின்றன. நண்பர்கள் துணை நிற்க தம் எதிர்பார்ப்புக்களை வாழ்க்கையாக்க பல மனங்கள் போராட்டத்தில் களம் குதித்தாலும், சில மனங்களோ எதிர்ப்பின்றி இல்லற பந்தத்தில் பெரியோர் ஆசியுடன் நுழைந்து வாழ்வைத் தொடங்கி விடுகின்றனர்.



வாழ்த்துவோம் நாமும் காதலர்களை!

அவர்களின்  அன்பு தாலியாய் பெண் கழுத்தில் மங்கள நாண் பூட்ட, அவர்கள் தடங்கள் பயணிக்கும் வாழ்க்கை யோரங்களில் வீழ்ந்து கிடக்கும் முட்களெல்லாம் மென்மலர்களாய் உருமாறி அவர்களை ஏந்திக் கொள்ளட்டும் கால முழுவதும் !


இனி அவர்கள் மௌன வுலகில் நமக்குள் அனுமதியில்லை.  அவர்கள் உலகில் அவர்களே தனித்திருக்கட்டும் தம் கனவுகளைப் பரிமாறிக் கொள்ள !


-Jancy Caffoor-


உன்னுயிர் பற்றி


இருள் கிழித்து ...........
மௌனமாய் உருகும் நிலவெளியில்
மானசீகமாய் மயங்கிக் கிடக்கின்றன
நம் நினைவுகள்!

உன்னருகாமையில் - நான்
படர்ந்திருக்கும் - அந்த
நிசப்த தணலில் ............
பற்றியெரியும் தீயாய்
மோகித்துக் கிடக்கின்றது
நம்மன்பு!

விரல்களின் மோதல்களைத்
தவிர்த்திட மனமின்றி ...........
நம் மேனியோ
உஷ்ணத்தின் வெளிநடப்பால்
வெட்கம் தொலைத்து நிற்கின்றன
ஏக்கங்களை ரசித்தபடி!

எங்கோ.................
சிறகறுத்து வரும் தென்றல்
கொஞ்சம் முறைத்துச் செல்கின்றன
இடைவெளி மறந்த
நம் .............
இதழோரங்களைக் கண்டு!

நம்.......
உயிர் தள  மூச்சோரங்கள்
எகிறிக் குதிக்கின்றது
நேசத்துடன் வாசிக்கப்படும்
உணர்வுப் பரிமாற்றத்தின்
வீரியம் கண்டு!

சத்தமின்றி நம் சந்திப்புக்காய்
கை காட்டும் நாட்காட்டி
வெட்கத்தோடு ஒதுங்கிக் கிடக்கிறது........
இடையிடையே
தடையின்றி மோதும் நம்
முத்தச் சிலிர்ப்பில்!

கொந்தளிக்கும் அலை நடுவே
தத்தளிக்கும் சிறு மீனாய் ........உன்
அணைப்பினிறுக்கத்தில்
சிவந்து கிடக்கின்றேன்
விடுதலை தேடா கைதியாய்
மாறி!

உன் உயிர் பற்றி
உருளுமென்னுலகில் ......
கடிகார அலைவுகள்
நிதானித்தே செல்கின்றன
உன்னை.......
என்னுள்ளிடமாற்றும் வரை!




ஜன்ஸி கபூர் 



கனவொன்று


இப்பொழுதெல்லாம்
அடிக்கடி............
கனவொன்று கிள்ளுது  என்னுள்!
நம்..........
காதல் சரித்திரங்களை
நூறாண்டு வாசித்தபடி!

பனித்துளிகளின் சில்மிஷங்களுக்குள்
சிலிர்த்துக்கிடக்கும் ரோஜாக்களாய் ..........
நாம்
நடப்படுகின்றோம் தினம் - நம்
காதல்வெளியில்!

நிதம் நீயென்
இரவுச் சொப்பனத்திலே - என்
உறக்கமறுத்து
உணர்வு பிழியும்
இரகஸிய  கணவனாய்
இம்சிக்கின்றாய் இதமாய்!

விளக்கெரிக்கும் நேரத்தில்
விட்டிலாய் என்னைச் சுற்றிச் சுற்றி
வில்லத்தனம் பண்ணும் - உன்
முரட்டுக் கரங்களில் - தினம்
முடிச்சவிழத் திணறுகின்றன
என் நாணம்!

உன் சீண்டலும்
என் சிணுங்கலும்
அன்பின் பரிமாற்றங்களாயானதில்.......
சில் வாண்டுகள் பல- நம்
வண்ணச்சோலையின் அங்கத்தவராய்
புது முகம் காட்டினருன் சாயலில்!

நாட்களின் நடைப்பயணத்தில்
நம்.........
வாலிபம் கரைந்தோடுகையில்
திரையாய் நரை  பல.............!

தளர்ந்த சுருக்கங்களும்
தள்ளாடும் நடையும்
துள்ளியோடும் பேரர்களை
அள்ளியணைத்து ரசிக்கையில்
குழந்தையாய் நாமும்
நமக்குள் புதைந்து போகின்றோம்!

நம்
மனக் கருவறைக்குள்
உயிர் கொண்ட காதல்...............
கல்லறைக்குள் வீழ்கின்ற போது
நம்
ஆத்மாக்கள்  இணைந்தே செல்கின்றன
நமக்கிடையிலான
பிரிவை மறுத்தபடி!

உறக்கம் சிரிக்கின்றன
கனவுகள் அறுகின்றன!
மெதுவாய் கண்ணவிழ்த்து
உனைத் தேடுகின்றேன் அருகாமையில்!

நீயோ தொலைவில் நின்று
கண்சிமிட்டியவாறே.........
கன்னம் கிள்ளுகின்றாய்
காத்திரு
நாளை வருவேனென்று!

ஜன்ஸி கபூர்