About Me

2012/08/09

காதலென்பது


என் தோழி சுஜா......................!

அனாதைப் பெணணவள். திருமணம் எனும் வாழ்வியலின் மறுபக்கம் அவள் வறுமை நிலையால் எட்டாக் கனியாயிற்று. அழகில் மயங்கிக் கிடக்கும் பல ஆண்களுக்கு அவளின் வறுமை, அழகின்மை கண்களை உறுத்த, அவளைத் திருமணம் செய்யத் தயங்கினர். அவள் கறுப்பென்றாலும் அம்சமாகவே இருந்தாள். புற அழகின்மையால் அவள் மன அன்பின் இனிமை கூட செல்லாக் காசாகிப் போனது.

வயது 30 ஜத் தொட்டும் கூட வறுமையால் வாழ்க்கை பற்றிய கனவுகள் நிஜம் தொடாமலே எட்டாத் தொலைவில்  அவளைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது 

அவள் குடும்பம் வறுமைப்பட்டிருந்தாலும் கூட அவளது கல்விப் பயணத்திற்கு ஒருபோதும் தடை விதிக்கவில்லை. படித்தாள். அரச வேலையொன்றைப் பெற்றுக் கொள்ளுமளவிற்கு அவள் கற்றல் வாய்ப்பளிக்கவில்லை.

சுஜா பெற்றோருக்கு ஒரே மகள்.   பெற்றவர்களிருவருவருமே   ஊமைகளானதால்    பேச்சுத்துணைக்கு கூட ஆள் யாருமேயில்லாத நிலையில்  தனிமைப்பட்டுத்தான் போனாள். காலவோட்டத்தில் பெற்றவர்கள் வயதாகிப் போனதால் அதுவரை காலமும் கூலி வேலை மூலம் கிடைத்த சம்பாத்தியமும்  நின்று போனது. ஒருவேளை உணவுக்கே போராடும் நிலையில் அவள் புற வாழ்வின் ஆடம்பரத்திலிருந்து அகன்று அந்நியப்பட்டுப் போனாள்.

என் உறவினரொருவரின் தொலைத்தொடர்பகத்தில் அவளுக்கேற்ற வேலை யொன்றைப் பெற்றுக் கொடுத்தேன். அவள் உயர்தரம் வரை கற்ற கல்வி அந்தத் தொழிலுக்குக் கைகொடுத்தது. அவள் அவ்வுழைப்பில் தன்னை யீடுபடுத்திய  பின்னர் வாழ்க்கைச் சுமையும் லேசாய் தணிந்தது. அத் தொலைத் தொடர்பகத்தில் கணனித் தட்டச்சுக்கள் , இணைய செயற்பாடுகளை இவளே நேர்த்தியாய் செய்து கொடுப்பாள். கிராபிக்டிசைன் வடிவமைப்பு, ஆட்டோசொப் போன்றவற்றிலும் முன்னர் பெற்றுக் கொண்ட பயிற்சி அவள் தொழிலுக்கு துணையானது. அவள் திறமை கூட ஓய்வுநேரங்களில் அவளுக்கு வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் துறையாக மாற, கடன் அடிப்படையில் கணனி ஒன்றையும் வாங்கியவளாய் இணையத் தொடர்பையும் பெற்றாள்.

அவள் வாழ்க்கையின் நெருக்கடிகள் ஓரளவு தணிய ஆரம்பிக்கவே முகநூல் பக்கமொன்றும் ஆரம்பித்து, அதில் பல டிசைன்களைக் காட்சிப்படுத்தத் தொடங்கினாள். அது அவளது பொழுதுபோக்காக அமைந்ததுடன் வருமானம் பெற்றுத் தரும் வழியாகவும் மாறியது.

அவள் முகநூல் நண்பர்களில் ஜெய்சங்கரும் ஒருவன். அதுவரை ஆண்களுடன் பழகியிராத அவளுக்கு ஜெய்யின் அன்புத் தாக்குதல் புதியதோர் அனுபவமாக மாற மனசு நெகிழ்ந்தாள். அவனது வார்த்தை நெருடல்களில் அவளுக்குள் கருகியிருந்த கற்பனைகள் மீண்டும் தளிரிடத் தொடங்கின .அவளும் உணர்ச்சியுள்ள சாதாரண பெண்தானே ..அவன் காதல் அவ​ளைப் பரவசப்படுத்தி வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்புக்குள் தள்ளியது.

அவன் அயல் நாட்டைச் சேர்ந்தவன். அவனால் கூறப்பட்ட வார்த்தைகளே அவளுக்கு நிஜமாக்கப்பட்டது. அவன் தன் காதல் ஞாபகங்களாகத் தினம் தவறாமல் அனுப்பும் செய்திகளும், தொலைபேசி அழைப்புக்களும் அவனது உலகத்தில் அவளையும் ஈர்த்துக் கொள்ளவே காதலின் நினைவுகளாக அவர்களுக்கிடையில் புகைப்படங்களும்,  முத்தங்களும், முகிழ்க்கும் கனவுகளும் , எதிர்கால எதிர்பார்ப்புக்களும் பரிமாறப்பட்டன.

நாட்கள் வேகமாக நகர்ந்தன.  அவர்கள் முகங்கள் சந்திக்காத காதல் பாதி கற்பனை வாழ்க்கையில் நகர்ந்து இரகஸியமாக குடும்பமும் நடத்தினர். அவர்கள் காதல் முகநூல் நண்பர்களுக்கிடையிலும் கசியத் தொடங்கியது்.

இச்சுகந்தமான நெருடலில் மாதமொன்று நாணியவாறே ஓட்டமெடுத்த பின்னரே. ஜெயசங்கரின் மறுபக்கம் பற்றி அவளுக்குள்ளும் லேசாகத் தெரிய ஆரம்பித்தது. அவன் பெண்களுடன் சகஜயமாக பழகுபவன். ஆரம்பத்தில் அவள் சாதாரணமாக அதை எடுத்துக்கொண்டாலும் கூட நாளடைவில் ஏதோ உறுத்தலுக்குள்ளானாள். ஜெய்யை ரகஸியமாகப் பின்தொடர்ந்தாள். அவன் தன்னைப் போலவே இன்னும் சில காதல் தொடர்புகளுடன் உல்லாசமாக இருக்கும் நாயகன் என்பது அவளுக்கு உறுதியான போது உலகமே இடிந்து அவளிதயத்தை நொறுக்கிய பிரமை. அழுகை மட்டுமே அவள் சொந்தமாக விரக்தி தணலில் விழும் புழுவாய் துடித்தாள்.

முன்பின் தெரியாத ஒருவனை, அவன் வார்த்தைகளை நேசித்த பயங்கரம் அவளுக்குள் உறுத்தியது. தன் மடமை, தவறு உணர்ந்தவளாக ஓர் மாலைப் பொழுதொன்றில் அவன் காதலை முற்றாகத் துண்டித்து அவனையும் தன் நண்பன் பட்டியலில் இருந்து நீக்கி விட்டாள். இவ்வாறான மன விகாரம் படைத்தவர்கள் காதலித்தவர்களை மட்டும் காயப்படுத்த வில்லை. புனிதமான காதலையும் கொச்சைப்படுத்துகின்றார்கள்.

அவள் அவனை நேசித்தது உண்மையான உணர்வே. அவ் வலி பல காலம் நீடித்திருந்தாலும் கூட, அவனிடம் ஏமாறாமல் அவளது வாழ்க்கை காப்பாற்றப்பட்ட திருப்தியில் மனசு லேசானது.

சில ஆண்களே.............!

காதலை நீங்கள்  கற்றறிந்த பின்னர் தூது விடுங்கள். முகநூல் தொலை பக்கம் என்பதால் பலர் பெண்களின் அன்பு செய்யும் மனதை பலகீனமாகக் கருதி, பொழுதுபோக்கிற்காக தினம் விளையாடும் தமது மைதானமாக அவர்களது வாழ்வை மாற்றி விட முயற்சிக்கின்றார்கள். தங்களுக்குத் தேவைப்படுகின்ற பொழுது அவர்களை நெருங்கவும், தேவையற்ற போது புறக்கணிக்கவும் ,தமது காமத்தின் வேட்டைக்கு அவர்களை இரையாக்குவதும் அநாகரிகமான செயல் என்பதை அவர்கள் ஏனோ மறுக்கின்றார்கள்.

"ஊசி இடம் கொடுத்தாலே நூல் உள்ளே செல்லும்."

பெண்கள் எப்பொழுதும் தமது துன்பத்துக்கு தாமேதான்  காரணமாகின்றார்கள். இவ்விடயத்தில் பெண்கள் அவதானமாக இருத்தல் வேண்டும். தம் வாழ்வில் சந்திக்கின்ற ஆண் நண்பர்களுடன் நட்புடன் பழகுவதில் தவறில்லை. ஆனால் அந்த நட்பெல்லையை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.காலவோட்டத்தில் நாம் ஒவ்வொருவரும் அனுபவங்களைப் பெற்று விடுவோம். ஆனால் அந்த அனுபவங்கள் கிடைப்பதற்குள் பல துன்பங்களும் நமக்குள் சொந்தமாகி விடும். இதுவே இன்றைய கால யதார்த்தம்!



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!