About Me

2012/08/09

நினைவெல்லாம் நீ


என் நினைவோரங்களில்
நிழலாடுமுன்னை ...........
களவாய் இறுக்கிப் பிடித்தே
கன்னம் தேய்த்தேனின்று........
கதறினாய் காதலில் நசிந்து
இறுக்காதே இன்னும்
நானுன்னில் தானிருக்கின்றேனென!

நறுக்கென்றோர் குட்டு
எனக்கிட்டாய்!
இருட்டிலுமுன் குறும்பு விழியோரம்
விசமம் பூட்ட
ஏதுமறியாதவளாய் நானும் .........
மௌனித்துக் கிடந்தேனுன்னருகில்!
மெல்லவென்னுயிரில் அலைந்தே
கன்னமிட்டாய் வாஞ்சையுடன்!

குட்டியது யாரோ............!- என
எட்டி நின்ற என்னையும் நீயிழுக்க
வட்ட நிலாச்சாறும் கசிந்தே
சட்டென்றே என்னுள் பரவ....
இட்டத்துடன் பற்றிநின்றாய்- என்
இடைவெளிகள் மறுத்தே தான்!

இடை  நெரித்து  நீயும்  ........
தடையேதுமின்றியென்
குரல்வளைக் காற்றிலுன் மூச்சை நசித்து
வருத்துக்கின்றாய் காதல் அனலால் -உன்
பருவச் செழிப்பையென்னுள் பாய்ச்சி
இருவரும் ஒருவராய் மாற!

போடா...........!
பொறுக்கியென்றேன்!!
தினமுன் னன்பை என்னுள் நீ
பொறுக்கியெடுப்பதால்!

சிலிர்த்து நின்றாய் சிங்கமாய் !
வலித்திடாமல்  கன்னம் கிள்ளி
சிறுக்கி மகளே..............உனை
இறுக்கியே என்புடைப்பேன்
மிரட்டிச் சொன்னாய் மிருதுவாய்
என் பெயருரைத்து!

பருவத்து பூவெடுத்து- உன்
புருவத்தில் சூடியவளே!
இன்னுமா நானுன்னைப்
பிரிவேனென்றாய்.............

பிரியேனொருபோதுமுனை  - அகிலச்
சூரியக்குழம்பு குளிர்ந்திட்டாலும்
மறவேனுன்னையென
வார்த்தைகளில் நேசம் நிரப்பி
கோர்த்திட்டாய் என்னுசிரினிலே!

ஏனடா நமக்குள்ளிந்த மயக்கம்
என்னடா செய்திட்டாயென்னை!
ஏக்கத்தின் பெருமுச்சில் நெஞ்சம் புடைக்க
பாராடா எனையென்றேன்- என்
பாரின் சுழற்சியவன்
கரங்களைப் பற்றிக் கொண்டே!

உன்னோடு பகிர்ந்தது
உன்னோடு இறந்ததென-என்
உசிருக்குள் முத்தச் சூடேற்றி
வசிகரித்துச் சென்றிட்டான் காதலாய்!

மறைந்திட்டாய் திடீரென!
நாளை வருவேனென  - என்
கருத்தினிலுன்னை  நிறைத்தபடி!
நொடிகள் யுகங்களாய் நகர
நாடியில் விரல் பதித்து
தேடி நிற்கின்றேனுன் திசையோரம்!

ஜன்ஸி கபூர் 




பகை வேண்டும் புகையில்!


அழகான வாழ்க்கையின் ஆனந்தம் ஆளுக்காள் வேறுபடுகின்றது. நம் வாழ்வின் ஆரோக்கியம் நம்மால் சீரழிக்கப்படும் போது துயரும், நிம்மதியின்மையும் நமது சொத்தாகின்றது. அற்பமான சந்தோசத்தில் தம் ஆயுளை இழக்கும் பலர் புகையிலையுடன் நட்பைப் பேணி வருவது ஆரோக்கியமற்ற செயலே!

"நிச்சயமாக அல்லாஹ் , ஒருவர் தன்னைத் தானே மாற்றிக் கொள்ளாத வரை அவர்களை மாற்ற மாட்டான்" ( திருக்குர்ஆன் 13:11)

எனவே அழிவுப் பாதையில் நாம் பயணிக்கும் போது , அதனை உணர்ந்து வாழ்வை திசை திருப்பி நம்மை நாமே  பாதுகாத்துக் கொள்ள  வேண்டும். மனிதனை அழிக்கும் சக்தி வாய்ந்த பொருட்களுள் புகையிலையும் ஒன்றாகும்.

ஆரம்ப காலத்தில் அமெரிக்கர்கள் புகையிலையை காயங்களைச் சுத்தப்படுத்தவும், தொற்று நீக்கவும் பயன்படுத்தினர். 1847 ல் "பிலிப் மொரிஸ்" என்பவரே புகையிலையைப் பயன்படுத்தி சிகரெட் தயாரித்தார்.


1953 ல் டாக்டர் எமல் என்பவர் சிகரெட் பாவனையால் புற்றுநோய் ஏற்படுவதை கண்டறிந்தார். இதனைத் தொடர்ந்து 1964 களில் அமெரிக்க அரசு புகைபிடிப்பதால் சுகாதாரத்திற்கு கேடு எனும் நோக்கில் சிகரெட் விற்பனைக்கெதிராக சட்டம் இயற்றியது. 

1988 ம் ஆண்டு பின்லாந்தும்,1994 ல் பிரான்சும் புகையிலை விளம்பரத்துக்குத் தடை விதித்தது.

மனிதனுக்கு மரணத்தை ஏற்படுத்தும் முக்கிய இரண்டாவது காரணிகளுள் ஒன்றாக புகையிலை விளங்குகின்றது.

வெற்றிலையுடனும், மூக்குப் பொடியுடனும் சேர்த்து பாவிக்கப்படும் புகையிலையை பீடி, சுருட்டு, சிகரெட் போன்ற வடிவங்களிலும் பயன்படுத்துகின்றனர்.

புகையிலை என்றதும் நம் நினைவுக்கு வரும் சிகரெட்டில் நிக்கோடின் எனும் நச்சுப்பொருள் உண்டு. இப் பொருளுடன் மேலதிகமாக பியூட்டேன், காட்மியம், ஸ்டியரிக் ஆசிக் , அமோனியா , நாப்தலமைன், போலோனியம் போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களும் உடலோடு சேர்கின்றன. இந்நச்சுப் பொருட்களுள் பல வெடிகுண்டு செய்யப் பயன்படுபவை. எனவே உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் சிகரெட்டும் ஓர் வெடிகுண்டே! இதிலுள்ள 4000 இரசாயனப் பொருட்களுள் 43 இரசாயனப் பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை. புற்றுநோயானது சுவாசப் பாதை வழியே கடும் தொற்றுதலை ஏற்படுத்துகின்றது.

புகையிலையிலுள்ள 4000 ற்கு மேற்பட்ட நச்சுப்புகையை சுவாசிக்கும் பலர் ஒரு நிமிடத்துக்கு 6 பேர் எனும் வீதத்தில் இறந்து போகின்றார்கள். ஆண்டுக்கு 60 லட்சத்துக்கும் மேல் பலியாகும் இப் புகையிலைப் பாவனைக்கு அதிகம் பலியாகுவது வளர்முக நாட்டவர்களே!

வேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தம், நண்பர்களின் இணைவு,ஸ்டைல், காதல் தோல்வி, தனிமை, மகிழ்ச்சி வாழ்க்கைப்பிரச்சினைகளை சமாளிக்க முடியாமை, பொழுதுபோக்கு எனத் தொடரும் சாதாரண புகைபிடிக்கும் பழக்கம் காலப்போக்கில் அவர்களை நிரந்தரக்குடிப்பழக்கத்திற்கும்  அடிமையாக்குகின்றது. 

புகை பிடிப்பதற்கான காரணங்களை ஆய்வு செய்ததில் பின்வரும்  விகிதப் பெறுபேறுகள் கிடைத்துள்ளன

மகிழ்ச்சிக்காக                           - 22 %
பொழுது போக்குக்காக          - 8.2 %
விடுபட முடியாத காரணம்  - 17 %
பரீட்சித்துப் பார்க்க                 -  8.7 %
தனிமையைப் போக்க            - 10.5 %
மன அழுத்தம்                            -  10 %
பிரச்சினை                                   - 15 %



புகைப்பழக்கத்தின் மூலம் அனைத்து உறுப்புக்களும் பாதிக்கப்படுகின்றன. மாரடைப்பு, நுரையீரல்ப்புற்று, இரத்தக் கொதிப்பு, ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும், வீரியக்குறைவும் போன்ற பல விளைவுகள் ஏற்படுகின்றன. அத்துடன் புகை பிடிப்பவர்களின் குழந்தைகளுக்கு சளி, இருமல், மூச்சுத் திணறல் என்பவையும் ஏற்படலாம். ஒருவரின் புகைபிடிக்கும் பழக்கத்தினால் அவர் மட்டுமல்ல, அவரது குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். "புகை பிடிப்பது உடல நலத்திற்கு கேடு" என எச்சரிக்கை விடப்பட்டும் கூட அதனைப் பாவிப்போர் தொகை குறைந்தபாடில்லை.

நிறுத்தும் வழிகள்
--------------------------
உடனடியாக இதனை கட்டுப்படுத்துவது கடினம் தான். ஏனென்றால் தொடர்ந்து ஒரு செயல் செய்யப்படும் போது அது பழக்கமாக மாற்றமடைகின்றது. இப் பழக்கத்தை உடனடியாக முற்றாக நிறுத்த மனவுறுதியுடன் கூடிய கட்டுப்பாட்டு பயிற்சி அவசியம். இருந்தாலும் கூட "முயன்றால் ஆகாதது ஒன்றுமில்லை." என்பதற்கேற்ப  புகை பிடித்தலின் தீங்கின் பால் மனதை நிலைப்படுத்தி அதன் விளைவுகளை ஆராய்ந்து உணர்ந்து, மனவுறுதியுடன் அந்த ஆர்வத்தைத் தடுக்க வேண்டும். புகைக்கும் ஆர்வம் ஏற்படும் போதெல்லாம் வாயில் மெல்லும் சுவிங்கம், சாக்லேட், நீர், எலக்ட்ரானிக் சிகரெட், வாயில் ஒட்டிக் கொள்ளும் நிகோட்டின் கலந்த கம், பேஸ்ட் என்பவற்றைப் பயன்படுத்தலாம். படிப்படியாகக் கட்டுப்படுத்துவது தவறு ஓரேயடியாக அதனை நிறுத்த முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு புகை பிடிப்பதனை நிறுத்தினால்
----------------------------------------------------------
20 நிமிடங்களில் புகை பிடிப்பவரது இரத்தஅழுத்தம், இரத்தவோட்டம் போன்றவை  சீராகும்.  8 மணி நேரத்தில் இரத்தத்திலுள்ள ஒட்சிசன், காபனீரொட்சைட்டு போன்ற சுவாசத்துடன் தொடர்பான வாயுக்களினளவு சீரடையும். 72 மணித்தியாலயத்தில் இச்செயற்பாடு காரணமாக நுரையீரல் உள்ளிட்ட சுவாசப் பாதையிலுள்ள பகுதிகள் அனைத்தும் சுத்திகரிக்கப்பட ஆரம்பிக்கப்படும் .சுவாசிக்கும் திறனும் அதிகரிக்கப்படும். 9 மாதங்களில் இருமல், சளி என்பவற்றின் தாக்கமும் குறைகின்றது.ஓராண்டின் பின்னர்  மாரடைப்பு படிப்படியாக குறைய ஆரம்பிக்கின்றது, 10 வருடங்களின் பின்னர் சுவாசப் புற்று நோய் அறவேயில்லாமற் போகின்றது.

இலங்கை , இந்தியா போன்ற நம் நாடுகளில் புகைபிடிக்கும் பழக்கம் பெரும்பாலும் ஆண்களிடையேதான்  காணப்படுகின்றது.அரிதாகவே பெண்களிற் காணப்படுகின்றது. பலசிந்தனைச் சிற்பிகள் கூட இப் பழக்கத்தால் இன்று சீரழிந்து காணப்படுகின்றனர். தினந்தோறும் உழைக்கும் பணத்தில் ஓர் பகுதியை இதற்கென செலவளித்து உபாதைகளையும், துன்பத்தையும் விலை கொடுத்து வாங்கும் பழக்கம் இன்றைய நம் இளைஞர்களிடத்தில் அதிகமாக காணப்படுகின்றது. இன்று புகைப்பிடிக்காத இளைஞர்களின் எண்ணிக்கை மிக அரிதாகவே காணப்படுகின்றது. விருந்துகளில் ஒன்று சேரும் இளைஞர்கள் புகைபிடித்தலையும், குடிப்பழக்கத்தையும் தம் அம்சமாக பெரும்பாலும் சேர்த்திருப்பார் என்பது மறுப்பதற்கில்லை.

புகையிலை நிறுவனங்களின் வர்த்தக தந்திரோபாயங்களும், புகைத்தலின் கேடு தொடர்பாக அக்கறைப்படுத்தப்படாத மனநிலையும் இன்றைய நவீன உலகில் புகை பிடிக்கும் பாவனையை அதிகரிக்கச் செய்துள்ளன. மறுபுறம் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையில் 170 நாடுகள் புகையிலைக் கட்டுப்பாட்டினை நடைமுறைப்படுத்தும் வகையில் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.அரசானது விநியோகம், விளம்பரம் தொடர்பாக உரிய நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்களையும் மேற்கொண்டுள்ளன.

ஆனால் புகைத்தலைத் தடை செய்தல் எனும் மிகப்பெரிய கனவினை நிறைவேற்றும் கடமையினை ஒவ்வொரு நாடும் உணர்ந்தாலும் கூட, இதன் மூலம் கிடைக்கும் பொருளாதாரத்தை இழப்பதாக இல்லை. சிகரெட் போன்ற பொருட்களுக்கு அதிக வரி அறிவித்தும் கூட, அதிக விலை கொடுத்து வாங்கி தம்மை சீரழிக்க பலர் தயாராகவே உள்ளனர். எனினும் பாவனையைக் கட்டுப்படுத்தும் வெற்றி பொதுமக்களின் அர்ப்பணிப்பு மிகு உணர்ந்து கொள்ளலிலேயே தங்கியுள்ளது.

இவ்வாறாக புகை பிடிப்பதனால் ஏற்படும் தீங்குகளை மக்கள் முன் எடுத்துக் காட்டி அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் மே மாதம் 31 ம் திகதி " சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக" அறிவித்துள்ளது புகையிலையினால் ஏற்படும் ஆபத்துக்களையும், அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே இத்தினத்தின் நோக்கமாகும். 

.புகையிலையால் கிடைக்கும் வருமானத்தை விட புகையிலை பாதிப்பினால் ஏற்படும் நோய்களைத் தீர்ப்பதற்கே அதிகளவு பணம் அரசுக்குச் செலவாகின்றது. தனி மனிதன் சமூகமாக,  சமூகத்தினரோ ஒன்றிணைந்து நாட்டின் அங்கத்தவராகின்றனர் . எனவே தனி மனித ஆகேகியமின்மையால் நாட்டின் நலமும் பாதிக்கப்படுகின்றது. 

நம்மவர்கள் சிந்திப்பார்களா.......புகையின் மீது பகை கொண்டு அதனை நிந்திப்பார்களா! காலம் பதில் சொல்லும் !


காதலென்பது


என் தோழி சுஜா......................!

அனாதைப் பெணணவள். திருமணம் எனும் வாழ்வியலின் மறுபக்கம் அவள் வறுமை நிலையால் எட்டாக் கனியாயிற்று. அழகில் மயங்கிக் கிடக்கும் பல ஆண்களுக்கு அவளின் வறுமை, அழகின்மை கண்களை உறுத்த, அவளைத் திருமணம் செய்யத் தயங்கினர். அவள் கறுப்பென்றாலும் அம்சமாகவே இருந்தாள். புற அழகின்மையால் அவள் மன அன்பின் இனிமை கூட செல்லாக் காசாகிப் போனது.

வயது 30 ஜத் தொட்டும் கூட வறுமையால் வாழ்க்கை பற்றிய கனவுகள் நிஜம் தொடாமலே எட்டாத் தொலைவில்  அவளைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது 

அவள் குடும்பம் வறுமைப்பட்டிருந்தாலும் கூட அவளது கல்விப் பயணத்திற்கு ஒருபோதும் தடை விதிக்கவில்லை. படித்தாள். அரச வேலையொன்றைப் பெற்றுக் கொள்ளுமளவிற்கு அவள் கற்றல் வாய்ப்பளிக்கவில்லை.

சுஜா பெற்றோருக்கு ஒரே மகள்.   பெற்றவர்களிருவருவருமே   ஊமைகளானதால்    பேச்சுத்துணைக்கு கூட ஆள் யாருமேயில்லாத நிலையில்  தனிமைப்பட்டுத்தான் போனாள். காலவோட்டத்தில் பெற்றவர்கள் வயதாகிப் போனதால் அதுவரை காலமும் கூலி வேலை மூலம் கிடைத்த சம்பாத்தியமும்  நின்று போனது. ஒருவேளை உணவுக்கே போராடும் நிலையில் அவள் புற வாழ்வின் ஆடம்பரத்திலிருந்து அகன்று அந்நியப்பட்டுப் போனாள்.

என் உறவினரொருவரின் தொலைத்தொடர்பகத்தில் அவளுக்கேற்ற வேலை யொன்றைப் பெற்றுக் கொடுத்தேன். அவள் உயர்தரம் வரை கற்ற கல்வி அந்தத் தொழிலுக்குக் கைகொடுத்தது. அவள் அவ்வுழைப்பில் தன்னை யீடுபடுத்திய  பின்னர் வாழ்க்கைச் சுமையும் லேசாய் தணிந்தது. அத் தொலைத் தொடர்பகத்தில் கணனித் தட்டச்சுக்கள் , இணைய செயற்பாடுகளை இவளே நேர்த்தியாய் செய்து கொடுப்பாள். கிராபிக்டிசைன் வடிவமைப்பு, ஆட்டோசொப் போன்றவற்றிலும் முன்னர் பெற்றுக் கொண்ட பயிற்சி அவள் தொழிலுக்கு துணையானது. அவள் திறமை கூட ஓய்வுநேரங்களில் அவளுக்கு வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் துறையாக மாற, கடன் அடிப்படையில் கணனி ஒன்றையும் வாங்கியவளாய் இணையத் தொடர்பையும் பெற்றாள்.

அவள் வாழ்க்கையின் நெருக்கடிகள் ஓரளவு தணிய ஆரம்பிக்கவே முகநூல் பக்கமொன்றும் ஆரம்பித்து, அதில் பல டிசைன்களைக் காட்சிப்படுத்தத் தொடங்கினாள். அது அவளது பொழுதுபோக்காக அமைந்ததுடன் வருமானம் பெற்றுத் தரும் வழியாகவும் மாறியது.

அவள் முகநூல் நண்பர்களில் ஜெய்சங்கரும் ஒருவன். அதுவரை ஆண்களுடன் பழகியிராத அவளுக்கு ஜெய்யின் அன்புத் தாக்குதல் புதியதோர் அனுபவமாக மாற மனசு நெகிழ்ந்தாள். அவனது வார்த்தை நெருடல்களில் அவளுக்குள் கருகியிருந்த கற்பனைகள் மீண்டும் தளிரிடத் தொடங்கின .அவளும் உணர்ச்சியுள்ள சாதாரண பெண்தானே ..அவன் காதல் அவ​ளைப் பரவசப்படுத்தி வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்புக்குள் தள்ளியது.

அவன் அயல் நாட்டைச் சேர்ந்தவன். அவனால் கூறப்பட்ட வார்த்தைகளே அவளுக்கு நிஜமாக்கப்பட்டது. அவன் தன் காதல் ஞாபகங்களாகத் தினம் தவறாமல் அனுப்பும் செய்திகளும், தொலைபேசி அழைப்புக்களும் அவனது உலகத்தில் அவளையும் ஈர்த்துக் கொள்ளவே காதலின் நினைவுகளாக அவர்களுக்கிடையில் புகைப்படங்களும்,  முத்தங்களும், முகிழ்க்கும் கனவுகளும் , எதிர்கால எதிர்பார்ப்புக்களும் பரிமாறப்பட்டன.

நாட்கள் வேகமாக நகர்ந்தன.  அவர்கள் முகங்கள் சந்திக்காத காதல் பாதி கற்பனை வாழ்க்கையில் நகர்ந்து இரகஸியமாக குடும்பமும் நடத்தினர். அவர்கள் காதல் முகநூல் நண்பர்களுக்கிடையிலும் கசியத் தொடங்கியது்.

இச்சுகந்தமான நெருடலில் மாதமொன்று நாணியவாறே ஓட்டமெடுத்த பின்னரே. ஜெயசங்கரின் மறுபக்கம் பற்றி அவளுக்குள்ளும் லேசாகத் தெரிய ஆரம்பித்தது. அவன் பெண்களுடன் சகஜயமாக பழகுபவன். ஆரம்பத்தில் அவள் சாதாரணமாக அதை எடுத்துக்கொண்டாலும் கூட நாளடைவில் ஏதோ உறுத்தலுக்குள்ளானாள். ஜெய்யை ரகஸியமாகப் பின்தொடர்ந்தாள். அவன் தன்னைப் போலவே இன்னும் சில காதல் தொடர்புகளுடன் உல்லாசமாக இருக்கும் நாயகன் என்பது அவளுக்கு உறுதியான போது உலகமே இடிந்து அவளிதயத்தை நொறுக்கிய பிரமை. அழுகை மட்டுமே அவள் சொந்தமாக விரக்தி தணலில் விழும் புழுவாய் துடித்தாள்.

முன்பின் தெரியாத ஒருவனை, அவன் வார்த்தைகளை நேசித்த பயங்கரம் அவளுக்குள் உறுத்தியது. தன் மடமை, தவறு உணர்ந்தவளாக ஓர் மாலைப் பொழுதொன்றில் அவன் காதலை முற்றாகத் துண்டித்து அவனையும் தன் நண்பன் பட்டியலில் இருந்து நீக்கி விட்டாள். இவ்வாறான மன விகாரம் படைத்தவர்கள் காதலித்தவர்களை மட்டும் காயப்படுத்த வில்லை. புனிதமான காதலையும் கொச்சைப்படுத்துகின்றார்கள்.

அவள் அவனை நேசித்தது உண்மையான உணர்வே. அவ் வலி பல காலம் நீடித்திருந்தாலும் கூட, அவனிடம் ஏமாறாமல் அவளது வாழ்க்கை காப்பாற்றப்பட்ட திருப்தியில் மனசு லேசானது.

சில ஆண்களே.............!

காதலை நீங்கள்  கற்றறிந்த பின்னர் தூது விடுங்கள். முகநூல் தொலை பக்கம் என்பதால் பலர் பெண்களின் அன்பு செய்யும் மனதை பலகீனமாகக் கருதி, பொழுதுபோக்கிற்காக தினம் விளையாடும் தமது மைதானமாக அவர்களது வாழ்வை மாற்றி விட முயற்சிக்கின்றார்கள். தங்களுக்குத் தேவைப்படுகின்ற பொழுது அவர்களை நெருங்கவும், தேவையற்ற போது புறக்கணிக்கவும் ,தமது காமத்தின் வேட்டைக்கு அவர்களை இரையாக்குவதும் அநாகரிகமான செயல் என்பதை அவர்கள் ஏனோ மறுக்கின்றார்கள்.

"ஊசி இடம் கொடுத்தாலே நூல் உள்ளே செல்லும்."

பெண்கள் எப்பொழுதும் தமது துன்பத்துக்கு தாமேதான்  காரணமாகின்றார்கள். இவ்விடயத்தில் பெண்கள் அவதானமாக இருத்தல் வேண்டும். தம் வாழ்வில் சந்திக்கின்ற ஆண் நண்பர்களுடன் நட்புடன் பழகுவதில் தவறில்லை. ஆனால் அந்த நட்பெல்லையை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.காலவோட்டத்தில் நாம் ஒவ்வொருவரும் அனுபவங்களைப் பெற்று விடுவோம். ஆனால் அந்த அனுபவங்கள் கிடைப்பதற்குள் பல துன்பங்களும் நமக்குள் சொந்தமாகி விடும். இதுவே இன்றைய கால யதார்த்தம்!



2012/08/08

ஐ லவ் யூ சொன்னால்....


இப்பொழுதெல்லாம் .  வீதியோரங்களில் அநாவசியமாக   வீசியெறிப்படுகின்ற உணர்வே காதலாகி விட்டது. காதலாகி கசிந்து மனமுருகி உணர்வுகளை வார்க்க வேண்டிய இந்தக் காதல், இன்று நாகரீகவுலகில் அதன் அர்த்தம் தெரியாமல் அலைமோதுகின்றது.

பல போலிக்காதல்கள் சிறு சலன தூறல்களில் காளான்களாகி கண்காணும் இடங்களிலெல்லாம் பூத்திருக்க, உண்மைக் காதல்களும் உயிர் தளிர்த்து  கண்களை குளிர்ச்சிப்படுத்துகின்றன.

இத்தகைய இயல்புமிகு இக் காதலை என் பார்வையின்று "ஐ லவ் யூ" எனக் குதூகலிக்கும்  அசையும் படங்களினூடாக ரசிக்கின்றது. இப்பதிவைக் கண்டதும் சிலர் ரசிக்கலாம். சிலர் முகம் சுளிக்கலாம். 

வார்த்தை "தீ"யென்று உச்சரிக்கும் போது நா சுடுவதில்லை. காதலைப் பற்றி சொல்பவர்கள் எல்லாம் காதல் அனுபவம் கொண்டவர்கள் அல்ல.

இந்த முன்னுரையோடு உங்களுக்கும் "ஐ லவ் யூ " சில விசயங்களை ரகஸியமாகச் சொல்லப் போகின்றது.


வாலிபப் பருவமென்பது வசந்தங்களைத் தேடியழைக்கும் பருவம். சுடுகின்ற யதார்த்தங்களை விட சுகமான கனவுகளை நாடிக் கிடக்கும் பருவம். உள்ளம் ரகஸியமாய்த் தேடும் சுகந்தமான உணர்வின் அறைகூவலில் எதிர்பாலினர் தொடர்பான இரசாயனமாற்றங்கள் அதிகளவில் கசிந்து பொசிந்து கலவையாகும் போது தூதுக்கள் மன்மத அம்புகளாகி குறித்த இதயத்தின் காலடி தேடி ஓடும்.

ஏற்றுக் கொள்ளப்படும் காதல்கள் முத்தத்தை மொத்தமாய் கொள்வனவு செய்ய, நிராகரிக்கப்படும் காதல் தூது தன் வாழ்வை சோகத்துள் நனைத்து நிற்கும்.குறித்த இருவரிடத்தில் பற்றுதல் கூடுதலாகி ஈர் இதயங்களும் கிறக்கத்தில் ஓரிதயமாய் வீழ்ந்து தமக்கிடையே தம் உயிர்சாசனத்தில் காதல் ஒப்பந்தத்தை எழுதிவிடுகின்றனர். மன்மதன்களின் கூடலிலே பல ரதிக்கள் மயங்கிக் கிடக்க காதல் வரலாறு அவர்களுக்குள் ஆனந்த புன்னகையை விசிறியவாறு எழுதப்படத் தொடங்குகின்றது.



மனித மனங்களை நந்தவனங்களாக்குவதும், மயானங்களாக்குவதும் இந்தக் காதல்தான். காதல் என்பது இதயவேலிகளில் நாட்டப்படும் முள்வேலி என்பதால் பிறரின் காதல் தூதுக்களை  உள்ளே நுழைய விடாமல் தடுக்கின்றது. கற்பனைகளின் அரங்கேற்றம் காதல் மனங்களிலேயே பெரும்பாலும் ஒத்திகை பார்க்கப்படும் போது காதல் வயப்பட்ட இருவரும் ஒருவரையொருவர் தமக்குள் ஆபரணங்களாய் அணிந்து தம் காதல் உறவுக்குள் வலிமை சேர்க்கின்றனர். அவர்கள் எந்நேரம் உச்சரிக்கும் மந்திரம் "ஐ லவ் யூ " தான்.



கண்கள் வழியாக இறங்கும் காதல் கருத்துக்களில் படிந்து இதயத்தில் சங்கமித்து உணர்வாகி உயிராகும் போது திருமணம் எனும் சடங்கால் அந்தஸ்து பெற முனைகின்றது. மனங்களால் ஒன்றித்தவர்கள் தங்கள் கனவுகளை உயிர்ப்பிக்கும் வரை நிஜம் தொலையும் கற்பனை உலகில் கலந்து கிடக்கின்றனர். அவர்கள் இதயம் இடமாறிக் கொள்ள, விழிகளும் அவர்களைச் சுற்றியே படர்கின்றது. அவர்கள் இதயம் சங்கமிக்கும் உலகில் அவர்களது காதல் நினைவுகள் மட்டுமே அங்கீகரிக்கப்படுகின்றன. பிறர் பற்றிய பார்வைகளை அலட்சியப்படுத்தி விடுகின்றனர்.


தங்களுக்குள் நிதம் நிதம் நிரம்பும் கனவுகளுக்கு உருவேற்றி, அக் கனவுகளின் சிலிர்ப்புக்குள் தன் அன்பானவர்களையும் அடக்கி விடத் துடிப்பார்கள். உணர்வுகள் ஏந்தும் ஆசைகள், கனவுகளை மையாக்கி, அவர்களின் மென் கரங்களைச் சூடேற்றி மோகத்தில்  தவிக்கும் காதல் கடிதங்களாய் மாற்றி, தன் துணையின்  முகம் தரித்திருக்கும் முகவரிக்குள் கடிதங்களைச் நுழைத்து விட காதல் மனங்கள் துடிக்கின்றன.  அக் கடிதத்தின் அழைப்பு மணி "ஐ லவ' யூ' என கோஷித்துக் கொண்டேயிருக்கும் அடுத்த கடிதம் காணும் வரை!


 எதிர்காலம் அவர்கள் கண்முன் விரிய  அக் கடிதங்களில் பல முறை பார்வையைப் பதித்து  அடிக்கடி தம் நிஜ வாழ்விலிருந்து விலகி, கற்பனை ராஜாங்கத்தின் சிம்மாசனத்தில் இருவருமே ஏறியமர்ந்து  முடி சூடிக் கொள்கின்றனர்.காதலர் கரம் சேரும் கடிதங்களும், அவர்களின் நேச அன்பளிப்புக்கும், உயிர்ப்பான வார்த்தைகளின் ஞாபகங்களுமே இவர்களின் ஆயுட்கால ஆவணங்களாய் உயிருக்குள் ஏறி உட்கார்ந்து கொள்ளும் காலம் முழுதும்!

காதல் ஒரு போதையாகவும், அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாகவும் விளங்குவதால் காதல் வயப்பட்டவர்கள் மகிழ்ச்சியூற்றுக்களில்  நிதம் தம்மை நனைத்து துன்பமிகு யதார்த்தங்களிலிருந்தும் விலகி விடுகின்றனர்.  சிறகடிக்கும் அழகிய வண்ணத்துப்பூச்சிகளாய் இருவரும் தம்முலகில் பறக்க முயற்சிப்பதால் புறவுலகை அவர்கள் மறந்து பிறரின் பார்வையில் வெறும் கண்காட்சிப் பொருட்களாய் மாறி விமர்சனத்துக்குள்ளும் வீழ்ந்து விடுகின்றனர் சிறு பிள்ளைத்தனமாய்!


புகையைப் போல காதலையும் மறைக்க முடியாதென்பார். இருவர் மனப்பூர்வமாக ஒருவருக்குள் ஒருவர் நுழைந்து வாழ முயற்சிக்கையில் அவர்களையுமறியாமற் காதல் மோகத் தீயை அடுத்தவர் கண்களுக்குள் விசிறி விடுகின்றனர்.அவனும் நோக்க அவளும் நோக்க அவர்களிருவரையும் ஊரார் நோக்க உள்ளத்தில் மோகித்து சுடர் விட்டெரியும் காதலொளி பிறர் பார்வையில் தீப்பந்தமாய் வெளியே எட்டிப் பார்க்கின்றது. ஊர் பார்வைக்குள் உருளும் காதல்களில் சில  திருமண முழக்கத்தில் மனம் மகிழலாம். சில பெரியவர்கள்  எதிர்ப்பில் முறிந்தும் போகலாம்.


அழகு ஒரு கவர்ச்சியான ஊக்கியாகவிருந்தாலும் கூட  பல காதல் முக வழகு தேடாது அகத்தின் இருப்பில் படிந்திருக்கும் மெய் யன்பின் எதிர்பார்ப்பிலேயே குறி வைத்திறங்குகின்றன. நண்பர்கள் துணை நிற்க தம் எதிர்பார்ப்புக்களை வாழ்க்கையாக்க பல மனங்கள் போராட்டத்தில் களம் குதித்தாலும், சில மனங்களோ எதிர்ப்பின்றி இல்லற பந்தத்தில் பெரியோர் ஆசியுடன் நுழைந்து வாழ்வைத் தொடங்கி விடுகின்றனர்.



வாழ்த்துவோம் நாமும் காதலர்களை!

அவர்களின்  அன்பு தாலியாய் பெண் கழுத்தில் மங்கள நாண் பூட்ட, அவர்கள் தடங்கள் பயணிக்கும் வாழ்க்கை யோரங்களில் வீழ்ந்து கிடக்கும் முட்களெல்லாம் மென்மலர்களாய் உருமாறி அவர்களை ஏந்திக் கொள்ளட்டும் கால முழுவதும் !


இனி அவர்கள் மௌன வுலகில் நமக்குள் அனுமதியில்லை.  அவர்கள் உலகில் அவர்களே தனித்திருக்கட்டும் தம் கனவுகளைப் பரிமாறிக் கொள்ள !


-Jancy Caffoor-