About Me

2020/09/17

கல்லறையின் ஈரலிப்பில்

 கவிதாஞ்சலி வடிக்கையில் வழிகின்றதே கண்ணீரும்

கலங்கிய விழிகளின் ஈரலிப்பில் கல்லறையும்

உயிர்த்திடுமோ அன்பின் நினைவுகளையும் சுமந்தே

உணர்வும் துடிக்கின்றதே ஆத்மா சாந்திக்காக


ஜன்ஸி கபூர் - 17.09.20




இரட்டைக்கிளவி

மாணவன் மடமடவென பாடங்களை எழுதிட/

ஆசிரியர் கடகடவென பாடங் கற்பித்தார்/


இடைக்கிடையே விறுவிறுப்பான கதைகளும் சொல்லுகையில்/

வெடவெடவென நடுங்கியதே  தேகமும் எனக்குள்/


தரதரவென கதிரையை இழுத்தேன் நானும்/

நறுக்நறுக்கென பற்களைக் கடித்தாரே ஆசிரியரும்/


மன்றத்தில் தோழியின் கலகலப்பான பேச்சும்/

தைதை ஆட்டமும் கவர்ந்ததால் ரசித்தேனே/


இடைவேளை வந்ததும் மொறுமொறு முறுக்கினை/

மொச்சுமொச்சுவென சாப்பிட்டேனே பசியையும் தணிய/


கசகசவென தேகம் ஊறிய வியர்வையும்/

சிலுசிலுவென வீசிய காற்றில் கரைந்ததே/


ஜன்ஸி கபூர்





ஏழையின் குடிசையில் ஒளி விளக்கு

ஞானத்தை வழங்கிடும் நற் கல்வியை

ஞாலத்திலும் தடுத்திடுமோ வறுமை இருளும்

அறியாமை அகற்றியே அறிவினை ஏற்றிடவே

அனைவரும் கற்பது உரிமையே அகிலத்தில்


ஏழ்மைத் தணலும் வீழ்த்திடும் மனங்களும்

ஏக்கத்தினில் நொறுங்கி வருந்துதல் சாபமோ

ஏற்றத்தை வாழ்வில் ஏற்றிடும் ஒளியாக

எல்லோர் எண்ணத்திலும் இசைந்திடுமே கல்வியும்


உதரம் துடித்தாலும் உணர்வும் ஏந்திடும்

உயர்வான திறன்களை உருவாக்குமே கல்வியும்

உன்னத எதிர்காலம் உதயமாகுமே திறமையால்

உயர்வுக்கும் என்றுமே தடையில்லையே வறுமையும்


கற்பதற்கு ஆர்வமும் முயற்சியும் இருக்கையிலே

ஆற்றலும் ஆளுமே நம் வசமே

ஏழைக் குடிசையின் ஒளி விளக்காக

ஏற்றிடும் கல்வியால் எதிர்காலமும் சிறக்குமே


ஜன்ஸி கபூர்  








குவளை கவிழ்ந்து நிலனோக்கும்

 

மெய் யின்பம் உருக்கும் மேனிக்குள்/

சாய்க்கின்ற அற்புதக் காதலினை நுகர்ந்த/

தலைவன் நினைவுக்குள்ளே உயிர்க்கின்றாள் தலைவியும்/

அலைகின்ற உணர்வுக்குள் திகழ்கின்றாள் பேரழியாக/


நேச விழிகளின் இரசிப்பில் உறைந்திட்ட/

நெஞ்சக் காதலனும் காண்கின்றான் குவளையை/

அஞ்சாது விண்ணோக்கி நிமிர்ந்திடும் மலரிது/ 

மிஞ்சிடுமோ என்னவள் விழி அழகினில்/   


பல்லிதழ் விரிந்திருக்கும் நீல அல்லியே/

பார்க்கவில்லையே என்னவள் கூர்விழியை நீயும்தான்/

உனக்கும் பார்க்கும் திறனிருந்தால் உணர்ந்திடுவாய்/

உயிர்க்கும் விழிகளும் ஏந்தியிருக்கும் அழகினை/


நிமிர்ந்த நின் இதழ்களும் நாணியே/

தலைசாய்க்குமே தோல்விக்குள் உனையும் வீழ்த்திடுமே/

அறிவாயோ தலைவியின் விழி எழிலை/ 

அவனியும் வியந்திடவே எடுத்துரைத்தான் தலைவனும்/


ஜன்ஸி கபூர் - 17.09.2020