About Me

2021/04/13

தர்மம் தலை காக்கும்

 

முதுமையும் தாய்மையுமென முகங்காட்டும் யாசகங்கள்/

முகவரியாம் வறுமைக்குள் முக்காடிடும் அவலங்கள்/

இரந்திடும் கரங்களுக்குள் இரக்கமே உணவளிக்கும்/

இதயத்தில் அன்புள்ளோர் இன்னலைத் துடைத்திடுவார்/


ஏழ்மைத் தணலில் ஏக்கங்கள் புகைய/

ஏனிந்த விதியோ ஏற்றமில்லா வாழ்வுக்குள்/

ஏழை எளியோர் ஏந்தும் கரங்களுக்கு/

உதவிகள் செய்வோர் உயர்ந்தவர்களே என்றும்/


நவீனத் தேடலுக்குள் நகர்ந்திடும் உலகில்/

நடுங்கும் தேகங்கள் நடைபாதை ஓரங்களில்/

நாளும் பொழுதுமாக  நாடுவார் தர்மத்திற்காக/  

நல்மனங்களின் கருணையும் நற்செயலாகப் பூத்திடுமே/


ஈகையளிப்போர் என்றுமே  ஈடேற்றமே காண்பார்/

ஈருல மாண்பும்  ஈட்டிடுவார் சிறந்தே/

உயிர்களைப் பேணும்  உன்னதமாம் தர்மம்/

உம்மையும் என்னையும்  உயர்வாய்க் காத்திடுமே/


ஜன்ஸி கபூர் - 8.11.2020

 

தேடலின் துவக்கம்

 

ஒவ்வொரு தேடலின் துவக்கமும் என்னிருப்புக்கான/

அடையாளமாக நீள்கின்றன எதிர்பார்ப்புக்களை ஏந்தியபடி/

துளிர்க்கும் விடியலுக்குள் தடம்பதிக்கின்றேன் ஆர்வமாக/

வீழ்கின்ற அனுபவங்களையும் சேமிக்கின்றேன் முன்னேற/


அன்புக்குள் காதலும் மொழிக்குள் கவிதையும்/

உழைப்புக்குள் செல்வமுமென தேடல் விரிகின்றது/

ஒவ்வொன்றின் முடிவும் பிறிதொன்றின் ஆரம்பமாக/

முடிவுறுத்தப்படாத தேவைகளின் பன்முகங்கள் தொடர்கின்றன/


ஜன்ஸி கபூர் - 8.11.2020

வீழ்வாயோ தமிழே

 


தமிழே தவமெமக்கு தரணிக்கும் பாலமது 

தாயின் மூச்சுக்காற்றால் தத்தானதே நித்திலத்தில் 

செங்கரும்புச்சாறு பிழிந்தே செதுக்கிய எம்தமிழே 

செல்லுமிடமெல்லாம் ஒலிக்கின்றதே செந்தமிழின் நாதம் 


உயிரும் மெய்யுமாகி உணர்வுக்குள் உறைந்தே 

உயிர்க்கின்றாய் அழகாக உன்னத மொழியாகியாகி 

தொடக்கப்புள்ளியாய்க் குவிந்தே தொடர்கின்றாய் வாழ்வினில் 

தொன்மைத் தமிழென மகுடமேந்தி தித்திக்கின்றாய் 


சிங்கமொழியே சிரிக்கின்றாய் அங்கத்தின் மூச்சுக்காற்றாகி 

சிந்தைக்குள் குளிர்ந்தே சித்தமெங்கும் நிறைகின்றாய் 

வீழ்வாயோ தமிழே வீழ்த்திடுமோ நவீனமும் 

விரிகின்ற பொழுதெல்லாம் விரிகதிர் நீதானே 


ஜன்ஸி கபூர் - 05.11.2020


வறுமையும் வாழ்வும்

 

வலிக்குள் வாழ்வினைத் துரத்துகின்ற வறுமைக்குள்/ 
வீழ்ந்தே துடிக்கின்றேன் விடிவும் இல்லையே/ 

 அழுகின்ற கண்களுக்குள் அழுகுகின்றன இன்பங்கள்/ 
விழுகின்ற நீரினுள் புன்னகையும் கரைகின்றதே/ 

 துடிக்கின்ற வயிற்றுக்குள் துயில்கின்ற பசியைத்/ 
துரத்திட வழியும் தெரிந்திடாத மனது/ 
 துக்கத்தில் நனைகின்றது தவிப்பினைச் சுமந்தபடி/ 

கிழிசல் ஆடைக்குள் கிழிந்த கனவுகளும்/ 
அமிழ்கின்றன தினமும் ஆசைகளை மறைத்தபடி/ 

நிழல்களும் வெம்மைக்குள் நொருங்கிடும் வாழ்வினில்/ 
அழகான அன்பை தினமும் சேமிக்கிறேன்/ 

 ஜன்ஸி கபூர் - 27.11.2020