About Me

2021/04/21

ஏன் மறந்தாய்

இணைந்தாய் அன்பில்
........இணைத்தாய் கரமதை/ 
இன்னல்கள் அகற்றியே
........இனித்தாய் மனதுள்/

நிழலாய் தொடர்ந்தாய்
.......நினைவுள் முகிழ்த்தாய்/
நிலையற்ற வாழ்விலே
......நிறைந்தாய் உணர்வுக்குள்/

வலிகள் வருகையில்
....வாசலில் உன்னுருவே/
வறுமையை விரட்டவே
.....வழியும் தந்தாயே/

உறவுகள் ஆயிரம்
......உறவாடிடும் பொழுதிலே/
உணர்கின்றேன் உன்னையே
.......உயர்ந்த நட்பாய்/

அழைக்கின்ற பொழுதெல்லாம்
......அணைத்திடுவாய் சிரிப்போடு/
அவலங்கள் சிதைக்கையில்
.......அழித்திடுவாய் அனைத்தையும்/

அறுசுவைத் தித்திப்பின்
.......அடையாளம் நீயன்றோ/
அடைகின்ற பெருமையெலாம்
.......அகமகிழ்ந்தே ரசித்தாயே/

கருத்தினில் நிறைந்தே
.....கனவுக்குள்ளும் உருவானாய்/
கடைசிவரையிலும் தொடர்வாயென்றே
......களித்தேன் எனக்குள்ளே/
கரைந்தாயோ விதியினில்
.......கண்ணீரில் நானடி/
கல்லறைக்குள் உறங்கிடவோ
.......கண்வளர்ந்தாய் மறந்தென்னை

ஜன்ஸி கபூர்

கழுகுக் கூட்டம்

 

அண்டத்தையே அடைமானம் வைக்கும் பேராசை/
கொண்டவ னெல்லாம் அடிக்கிறான் கொள்ளை/
திண் பண்டங்களில் பெருங் கலப்படம்/
தண்டனைக்கும் பயமில்லாத் தந்திரக் கூட்டம்/

தொற்றுக் காலமும் பற்றே பணத்தில்/
பெற்ற மகள்மீதும் வன்புணர்வுக் காமம்/
பெண்மையும் முதலீடோ பொல்லா மாந்தருக்கே/
மாண்பற்றவர் மாசேற்றும் கலிகாலம் தானேயிது/ 
 
வேட்டையாடும் ஊழல் நாட்டுக்கே கேடு/
நீட்டிடும் இலஞ்சம் வாட்டுதே வறுமைக்குள்/
கேட்டின் வழியாய் வட்டமிடும் கழுகுக்களைத்/
தட்டிக் கேட்டாலோ வடுக்களே தொடுகின்றது/

வஞ்சக மனதில் வடிந்திடும் கபடம்/
கொஞ்சுதே கண்ணீரை கொடுமைகளும் நீளுதே/
அஞ்சுதே மனிதம் ஆளுதே பணமும்/
பஞ்சாய்ப் பறக்குதே நலங்களும் வாழ்விலே/

ஜன்ஸி கபூர்  

வலி தீர்க்கும் வழி

என்றோ கற்ற கலை யின்று/
எனைத் தாங்குகின்ற உழைப்பின் ஆதாரமாக/
எழுகின்ற வலிதனைத் துரத்திடச் சுழற்றுகின்றேன்/
என் பிழைப்புக்கும் எதிர்காலம் இதுவன்றோ/

நீளுகின்ற ஊரடங்கும் முறித்த உழைப்பினை/
நிமிர்த்துகின்றதே தையலும் நிம்மதி குடும்பத்திற்கே/
கிடைக்கின்ற வாய்ப்புக்கள் விடையாகும் துன்பத்திற்கே/
தடையின்றி உழைக்கின்றேன் வாழ்வும் வளமாக/

வருத்துகின்ற நோயின் வதையிலிருந்து நீக்கும்/
வனப்பூட்டுகின்ற முகக்கவசங்களே வணிகத்தின் வெற்றி/
தளரா நெஞ்சுடன் தன்னம்பிக்கைத் துணையுடன்/
தயாரிக்கின்றேன் நானும் பாதுகாப்புக் கவசங்களை/  

ஜன்ஸி கபூர் - 23.10.2020

உன் விழிகளால் மொழி பேசு

மனசு மெல்ல உதிர்கின்றது
உன்றன் காந்தப் பார்வையில்!

நீயென்ற ஒற்றைச் சொல்லுக்குள்
நானடங்கிப் போகின்றேன்!

என் தனிமை 
இப்போதெல்லாம் உன்னால்
நிரம்புகின்றது!

வெறுமைக்குள் அலைகின்ற உயிருக்குள்
பதிக்கின்றாய்
உன்றன் பாதச் சுவட்டினை!

உன் அன்பான வம்பில்
இரகசியமாக நாணமல்லவா தெறித்துச் செல்கின்றது
 சுகமாக!

காதலும் மோதலுமாக நகரும்
நம்
அன்பில் உயிர்பெறுகிறது ஊடல்!

எனை நீயும் 
நினைவுகள் உயிர்ப்பிக்கையில்
காத்திருக்கின்றேன் கனவுகளுடன்!

காற்றின் துளைகளுக்குள் 
நிரம்பியிருக்கின்ற உன்னையே
இப்போது
சுவாசிக்கத் தொடங்கியிருக்கின்றேன்!

அடடா...
வெட்கப்படும் உன் புன்னகையை
ரசிக்கின்றேன் இரகசியமாக!

உன் நினைவுக்குள் தரித்திருக்கும்
என்றன் உணர்வுதனை உயிர்ப்பூட்ட 
தினமும் நீயும்
உன் விழிகளால் மொழி பேசு!

 ஜன்ஸி கபூர்