About Me

2021/05/16

கிராமத்தில் வசித்த ஒரு வயதான மனிதர் (An Old Man Lived in the Village)


இந்த ஆங்கிலக் கதையின் முழுமையான மொழிபெயர்ப்பு   இதுவல்ல. ஆனால் இக்கதையை நான் வாசித்தபோது, எனக்குள் ஏற்பட்ட அருட்டலை கதையின் பண்போடு   வரிகளாக்கியுள்ளேன்.

இயற்கையின் வனப்புக்களை ஆங்காங்கே சிதறவிட்டு அழகாக காட்சியளிக்கின்ற பசுமைக் கிராமம்தான் இது. இக்கிராமத்தில்தான் இந்த முதியவர் வாழ்ந்து வருகின்றார். 

முதுமை என்பது உடலுக்கே அன்றி மனதுக்கல்லவே. வயதின் ஏற்றம் எப்பொழுதும் உடலுக்குத்தானே. மனது எப்பொழுதும் இளமையாக இருக்கவே விரும்புகின்றது. அனுபவங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இம்முதுமை என்பது உறவுகளுக்கு பொக்கிசமே! 

ஆகவே இப்பருவத்தில் எல்லோரும் குழந்தைகள்போல் அன்பை எதிர்பார்த்து உறவுகளுடன் நெருங்கி வாழவே விரும்புகின்றார்கள். தம்மைச் சூழக் காணப்படுகின்ற தனிமையை விரட்டி மற்றவர்களுடன் தம் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளத் துடிக்கின்றார்கள். 

 சில முதியவர்கள் உறவுகளின் அரவணைப்பில் புன்னகையை உதிர்த்துக் கொண்டிருக்க, சில முதியவர்களை யாரும் கண்டு கொள்வதாக இல்லை. விரக்திக்குள் அவர்களை வீழ்த்த, விரட்டிக் கொண்டிருக்கின்றார்கள். 

இக்கதையில் வருகின்ற முதியவர் சற்று வித்தியாசமானவர். 

ஒளி இழந்த கண்களில் ஏதோ ஒன்றுக்கான தேடல். சுருக்கமடைந்த தேகத்தினுள் கொந்தளிப்புக்களின் சேகரிப்பு. மகிழ்ச்சியற்றவராக, எதையோ இழந்தவராகவே எப்பொழுதும் காணப்பட்டார்.

அடுத்தவரை புண்படுத்தும் வார்த்தைகளும், நடத்தைகளும் அவரை ஊர்மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி வைக்கின்றது. 

அவரின் தோற்றத்தினுள் இறுக்கம். கடுமை.

அடுத்தவரின் குறைகளை விமர்சிப்பதால் பலரின் வெறுப்புக்கும் ஆளானார்.

இதனால் ஊரார் அவரை நெருங்குவதில்லை.

தனிமை இவர் தனக்கு தானே விரித்துக் கொண்ட கூடு.

அவரிடம் மகிழ்ச்சியைக் காணவே முடியாது. உம்மென்ற புன்னகையற்ற முகம் அவரின் அடையாளம்.

நாட்கள் வேகமாக ஓடுகின்றன.

அவரின் பிறப்புக்கு எண்பது வருடங்களாகி விட்டன.

அன்றைய பிறந்தநாளின்போது ஊருக்குள் ஆச்சரியமான செய்தியொன்று பரவியது.

'கிழவன் இன்று ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றார்'

ஊர்வாய்கள் சுவாரஸியமாக அவரைப் பற்றி அலசின.

எல்லோரும் காரணமறிய அவரைச் சந்தித்தனர்.

அவரோ நிதானமாகச் சொன்னார்.

இத்தனை நாட்களாக மகிழ்ச்சியை நான் தேடிக் கொண்டிருந்தேன். அது பயனற்றது என்பதை உணர்கின்றேன்.  

'ஆனால் இன்றோ மகிழ்ச்சியைத் தேடாமல், கிடைக்கின்ற வாழ்வை வாழ வேண்டுமென நினைக்கின்றேன். அதனால் என் முகம் மகிழ்ச்சியாக இருக்கின்றது' என்றார்.  

உண்மைதான் இந்தச் சின்னக் கதைக்குள் பொருந்தியிருக்கின்ற பெரிய உண்மை நமக்கான தத்துவமே. தன்னைச் சுற்றிய வாழ்க்கையை உணர்ந்ததால், ஏற்பட்ட திருப்தியே இம்மகிழ்ச்சிக்குக் காரணம் என்பதை அவரது புன்னகை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

மகிழ்ச்சி என்பது நீண்ட நாள் நல்வாழ்க்கைக்கான உணர்வு. அமைதி மற்றும் நமது வாழ்வோடு சேர்ந்த திருப்தி.  

உண்மையில், நம்மைப் பற்றி மட்டுமே அக்கறைப்படுதல் என்பது தனிமையையும், மனஅழுத்தத்தையுமே முன்னெடுக்கும். நாம் நமக்குள் பல எதிர்பார்ப்புக்களை உருவாக்கி அதன் அழுத்தத்தால் கிடைக்கின்ற சின்னச் சின்ன சந்தோசங்களையும் இழக்கின்றோம். 

மகிழ்ச்சியை விராட்டாதீர். வாழ்க்கையை நமக்கேற்றதாக நாம் வாழ்கின்றபோது மகிழ்வும் நம்மை விட்டுப் போகாது

ஜன்ஸி கபூர் -16.5.2021




தனிமைப்படுத்தல்


கொரோனா மூன்றாம் அலையின் கோரப் பிடிக்குள் நாம் சிக்கிக் கொண்டிருக்கின்ற இக்காலத்தில், நாம் நம்மைப் பாதுகாப்பதன் மூலமாகவே சமூகத்தையும் பாதுகாக்க முடியும். வருமுன் காப்பது நமது ஆரோக்கியத்திற்கான பலம். எனவே சுகாதாரத் துறையினர் அறிவுறுத்திய விதிகளைக் கடைப்பிடிப்பது எமது காலத்தின் தேவையாகும்.

இக்கானொளி தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் ஒருவர் பதிவிட்ட கானொளியாகும். இப்படித்தான் இருக்குமென்ற சட்டகத்தினுள் நாம் எம்மை தயார்படுத்தினால் எதிர்பார்ப்புக்கள் மிகையாகாது. நாமும் அதற்கேற்ப நம்மைத் தயார்படுத்தலாம்.

இக்கானொளியை ஒரு விழிப்புணர்வாக பகிர்கின்றேன். நம்மைச் சூழவுள்ள நிகழ்வுகளை அறிந்து அதற்கேற்ப நாம் நம்மை இயைபுபடுத்திக் கொள்வது காலத்தின் தேவையாகின்றது.

ஜன்ஸி கபூர் - 16.05.2021


2021/05/15

கொரோனா அலையும் நிகழ்நிலைக் கற்றலும்

 

கல்வி என்பது குழந்தைகளின் உரிமை. ஆனால் அவற்றை வழங்க இடையூறாகி நிற்கின்றது இன்றைய கொரோனா நிலைமை.

தற்போதய சூழ்நிலையில் நிகழ்நிலைக் கற்றலின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. எதையும் கற்காமல் வெறுமையாக வீட்டில் இருப்பதைவிட, ஏதாவது விடயங்களைக் கற்க, மீட்க இப்பயிற்சி உதவுகின்றது.

ஆனாலும் ஒவ்வொன்றுக்குள்ளும் சாதக, பாத இடர்கள் காணப்படுகின்றன. அவற்றை நோக்கிய சில பார்வையே இது.

சுயமான கற்றல் எம் மாணவரிடம் காணப்படுகின்றதோ, அவர் சிறந்த ஆற்றல் உள்ளவராகக் காணப்படுகின்றார். ஆனால் இன்றைய கற்றல் அவதானிப்பில் சில மாணவர் சுயகற்றலில் ஆர்வமற்றவர்களாகவே காணப்படுகின்றார்கள்.

வகுப்பறையில் எப்படித்தான் கற்பித்தாலும், சில மாணவர்களின் கவனக் குவிப்பு கற்றலை விட்டு விலகி  நிற்பதை ஆசிரியர்கள் மறுக்க முடியாது.

பரீட்சையை மையப்படுத்திய இன்றைய கல்விக் கட்டமைப்பில், சுயகற்றல் திறனை மேம்படுத்துகின்ற பயிற்சிகள், மொடியூல்களை வழங்கினாலும்கூட சில மாணவர்கள் அதை முயற்சிப்பதாக இல்லை. 

அந்த சில மாணவர்களைத் தண்டிப்பதால் பயனில்லை. உணர்வுபூர்வமாக சிந்திக்க வைக்க வேண்டும். இவ்வாறான சிந்தனை மாற்றங்களே பெரிதும் பயனடைகின்றன.

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் இழக்கின்ற கல்வியை தக்க வைக்க நிகழ்நிலைக் கற்றல் பாடசாலைகளால் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் இம்முயற்சி எதிர்பார்க்கின்ற கற்றல் விளைவைத் தருமா எனச் சிந்திக்கையில் சிறிய பாடசாலைகளில் பல இடையூறுகள் காணப்படுகின்றன.

தெரிந்த அளவில் அவற்றைப் பட்டியல்படுத்துகின்றேன்.

வயதான ஓய்வு நிலையை நெருங்கிய சில ஆசிரியர்களும், தகவல் தொழினுட்ப அறிவும், ஆற்றலும் கொண்டிராத சில ஆசிரியர்களும் இன்னும் நிகழ்நிலை கற்பித்தலை இயக்குவது தொடர்பான அறிவைப்  பெற்றுக் கொள்ளக் காட்டுகின்ற ஆர்வம் குறைவு என்றே சொல்ல வேண்டும்.  அவர்களின் வயது, மனநிலை, சூழல் போன்ற காரணங்களால் இத்தொய்வு ஏற்படலாம். 

ஆனாலும் 2023 ஆம் ஆண்டில் ஏற்படக்கூடிய புதிய கல்விச் சீர்திருத்த மாற்றங்கள் நடைமுறைக்கு வருகையில், இத்தகைய தகவல் தொழினுட்ப ஆற்றல் கொண்டிராத ஆசிரியர்களை ஆசிரியர்த் தொழில் நிராகரித்து விடும் என்பது கசப்பான உண்மைதான்.  

அதிகளவிலான வறுமைப்பட்ட மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில், மாணவர்களிடம் மேம்படுத்தப்பட்ட தொலைபேசி வசதிகளோ இணைய வசதிகளோ காணப்படவில்லை. அவர்கள் தமது பெற்றோரை வற்புறுத்தும்போது தமது வயிற்றைக் கட்டியோ, கடன்பெற்றோ எப்படியோ தொலைபேசி வாங்கிக் கொடுக்கின்றார்கள். ஆனால் அவ்வாறு பெற்றுக் கொள்ளப்படுகின்ற தொலைபேசி எதிர்பார்த்த கல்வித் தேவைக்கு மாத்திரமா பயன்படுத்தப்படுகின்றது என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகின்றது.

எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்றில் இத்தகைய தேவைக்காக வாங்கப்பட்ட தொலைபேசியில் அம்மாணவியின் விதவிதமான புகைப்படங்கள் ஆக்கிரமித்திருந்தன.

மேலும் நிகழ்நிலைக் கற்றல் இணையத் தொடர்புக்கு தரவு அவசியம். இதற்கான பணம் வறுமைப்பட்ட பெற்றோரின் கடின உழைப்பிலிருந்தே செலவழிக்கப்படுகின்றது.

அன்றொரு மதியப் பொழுது. கொமினிகேசன் ஒன்றில் சற்று சனக் கூட்டம். ஒரு கூலித் தொழிலாளி. வியர்வை வடிய விரைந்து வருகின்றார். அவரால் மூச்சுக் கூட இயல்பாக விடமுடியவில்லை.

'மகள் ஆன்லைன் கிளாஸில நிற்கிறா. கெதியா இந்த நம்பருக்கு ரீலோட் பண்ணுங்க'

அவரின் துடிப்பு அப்பிள்ளைக்கு விளங்கியிருக்குமா? தனது ஏழ்மை பிள்ளையின் கல்வியைப் பாதிக்கக்கூடாது என தனது தொழிலில் இருந்து பாதியில் ஓடி வந்து கற்றலைப் பெற உதவுகின்ற இத்தந்தையைப் போல் பலர் உள்ளனர்.

இன்னுமொருநாள் ஒரு வீட்டிலுள்ள தரம் 7 கற்கின்ற மாணவியின் அழுகுரல் வீதிப் பரப்பில் தெறிக்கின்றது. தாயின் ஆவேசக் கத்தலும், அடியும் அப்பிள்ளையின் கதறலுக்கு காரணமாக இருக்கலாம். தனியார் கல்வி நிலைய நிகழ்நிலையில் பங்கேற்காமல் தூங்கியதற்கான காரணமாகவே அப்பிள்ளை அத்தண்டணையைப் பெற்றிருக்கின்றார்.

கற்றலில் ஒரு பிள்ளையை மற்றைய பிள்ளையுடன் ஒப்பிடாமல் இருக்கவே மதிப்பீடானது கணிப்பீடாக மாறியது. ஆனாலும் வீட்டில் பெற்றோர் தம் பிள்ளையை அடுத்த பிள்ளைகளுடன் ஒப்பிட்டு பார்க்கின்ற அவலநிலை இன்னும் மாறவேயில்லை.

மேலும் வீடுகளில் இருக்கின்றபோது, இக்கற்றல் நடைபெறுகையில் வீட்டின் நிலவரம் மாணவர்களின் சிந்தனைகளைக் குழப்பி  மனதை கற்கும் விடயத்திலிருந்து திசை திருப்பி விடுகின்றது.

ஒரு ஆசிரியை தனது அனுபவத்தை பின்வருமாறு கூறுகின்றார்.

'நான் பாடம் எடுக்கையில் மாணவர்களின் முகத்தைப் பார்த்துக் கற்பிக்கவும் பாடத்தில் கவனத்தை நிலைப்படுத்தி வைக்கவும் கேமராவை இயக்கச் சொன்னேன். ஒரு மாணவன் இயக்கியபோது அவனுக்கருகில் அவனது குடிகாரத் தந்தை மேல்சட்டை இன்றி நிலத்தில் படுத்திருந்தார். அவரின் அருகில் உணவுகள் சிதறிக் கிடந்தன. அந்த மாணவனின் சங்கடத்தை நான் அறிந்து, கேமராவை நிறுத்தச் சொன்னோன்" என்றார். 

இந்நிலைதான் பல இடங்களில் தொடர்கின்றது. வசதியற்ற குடும்பங்கள். சிறு வீட்டுக் கட்டமைப்பு. நடப்பது எல்லாம் வெளிப்படும் நிலை. அவர்கள் கதைக்கின்ற ஒலிகள் வேறு குழப்பும். மாணவர்களின் கேமரா, மைக் இவற்றை நிறுத்தி கற்பித்தால் அது சுவாரஸியமற்ற உயிர்ப்பற்ற ஒருபக்கக் கலந்துரையாடலாகவே இருக்கும்.

இன்னுமொரு ஆசிரியர் தன் அனுபவங்களை இவ்வாறு பகிர்ந்தார்

"ஒரு வகுப்பில் முப்பத்தைந்து மாணவர்கள். வகுப்புகளில் பங்கேற்கும் குழந்தைகள் சராசரியாக ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் கற்பிக்கப்படுகிறார்கள். இன்று வரும் குழந்தை நாளை இல்லை. சில குழந்தைகள் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே பார்க்கிறார்கள் " என்றார்.

இன்னுமொரு ஆசிரியரோ தன் அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்தார்.

"பாடம் ஆரம்பிக்கப்பட்டு முடிவடையும் தறுவாயில் ஒரு மாணவி இணைந்தார். காரணம் கேட்டபோது புதிய தரவு அட்டை வாங்கச் சென்ற அம்மா இப்போதுதான் வந்தார்" என்றாள். 

சராசரி வாழ்க்கைநிலைக் குடும்பங்களின் நிலை இதுதான்.

இன்னுமொரு அனுபவம் இவ்வாறு பகிரப்படுகின்றது.

கற்பித்துக் கொண்டிருக்கையில் குறுஞ்செய்தியொன்று....

"மிஸ் எனது தரவு இன்னும் சிறிய நேரத்தில் முடியப் போகின்றது. நீங்கள் தொடர்ந்து கற்பிப்பீர்களா?"

என்ற ஆதங்கத்தினுள் இப்பிள்ளையின் கற்கும் ஆர்வம் தொக்கி நின்றது.

இன்னுமொருவரின் அனுபவமிது

"தொடர்ச்சியான பாடத்தில் பங்கேற்காத ஒரு மகனை கடைசி நாள் அழைத்தேன் ..

மகனே, நீங்கள் ஏன் வகுப்புகளுக்கு வரவில்லை?"

"எனக்கு தொலைபேசி  இல்லை மிஸ். அப்பாவுக்கு ஒரு சிறிய தொலைபேசி உள்ளது .அதிலிருந்து பெரிதாக்க முடியாது மிஸ் .."

இவ்வாறாக பல அனுபவங்கள் அன்றாடம் ஆசிரியர் எதிர்நோக்க நேரிடுகின்றது.

மேலும் நிகழ்நிலைக் கற்பித்தல் நடைபெறுகையில், திடீரென மின்சாரம் நிறுத்தப்படுமானால், மாணவர்களின் மனநிலையும் பாதிக்கப்படும். கற்கின்ற விடயங்களின் தொடர்பு குழம்புகின்றபோது அப்பாடத்தின்மீதான விருப்பும் குறைந்து விடுகின்றது.

இவ்வாறான கற்றலில் சிறிது இடைவேளை காணப்படுகின்றபோது, மாணவர்கள் தொலைபேசி இணையங்களில் வேறு தலைப்புக்களைப் பார்க்க விழைகின்றார்கள்.

பாடசாலைகளில் கற்கின்ற மாணவர்களுக்காக பாட ஆசிரியர்கள் வாட்ஸ்அப், வைபர் குழுக்களை உருவாக்கி பாட விடயங்களை தரவேற்றம் செய்கையில், சில மாணவிகள் அதனை தமது பொழுதுபோக்கு விடயங்களைப் பகிரும் தளமாகவும் பயன்படுத்துகின்ற நிலை காணப்படுகின்றது.

தற்கால நவீனத்துவ நிலையில் நிகழ்நிலைக் கற்றலானது மேம்படுத்தப்பட்ட கல்வி அமைப்பினை உருவாக்கப் பயன்படக்கூடியது. எனவே கற்றல் சமூகமும், அதனைச் சூழ்ந்திருப்போரும் அதன் பயனை வினைத்திறனாக்கின்ற செயற்பாட்டிலீடுபட்டு அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் நிச்சயமாக நாம் எதிர்பார்க்கின்ற கற்றல்பேறினை அடையலாம் என்பது வெள்ளிடைமலை.

ஜன்ஸி கபூர் -15.05.2021


To Build a Fire

 Jack London எழுதிய  To Build a Fire  எனும் ஆங்கிலக் கதை நிகழ்வினை எனது  பார்வையில் சுருக்கமாக இவ்வாறாக வடிவமைத்துள்ளேன்.

டு பில்ட் எ ஃபயர்' என்பது அமெரிக்க எழுத்தாளர் ஜாக் லண்டனின் சிறுகதை. இந்த கதையின் இரண்டு பதிப்புகள் உள்ளன. முதல் பதிப்பு 1902 இலும் மற்றொன்று 1908 இலும் வெளியிடப்பட்டன.  இக் கதை 1908 ஆம் ஆண்டுக்குரியது

------------------------------------------------------------------- 

பெயரிடப்படாத ஆண் கதாநாயகன் யூகோன் பிராந்தியத்தின் சப்ஜெரோ போரியல் காட்டில் இறங்குகிறார். அவரை தொடர்ந்து வருகின்ற ஒரு பூர்வீக நாய் நண்பர்களைப் பார்ப்பதற்காக அப் பாதையில் செல்கிறது.   சல்பர் க்ரீக்கிலிருந்து ஒரு வயதான மனிதரின் எச்சரிக்கைகளை புறக்கணித்து  கடுமையான குளிரில் தனியாக நடைபயணம் மேற்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து இக்கதை விளக்குகின்றது ஈற்றில்  கதாநாயகன் மரணத்திற்குள் உறைகிறார்.

தொடர்ந்து வாசியுங்கள் 💓💓💓💓💓💓 

------------------------------------------------------------------ 

 பகல் நேரம், சாம்பல் பூத்து அதிக குளிரால் நிரம்பியிருந்தது.

அந்த பெயரிடப்படாத மனிதர் பிரதான யூகோன் பாதையிலிருந்து விலகி, யூகோன் ஆற்றின் எல்லையில் உள்ள காடுகளின் வழியாக,  வெப்பநிலை −75 ° F (−59 ° C) ஆக உள்ள  நிலைமைகளில் எச்சரிக்கைகளை புறக்கணித்து ஒரு பெரிய உமி  நாயுடன் பயணித்தார். 

 மங்கலான சிறிய பாதையொன்று கிழக்கு நோக்கியதாகக் காணப்பட்டது. உயரமான தரைப் பகுதியில் ஏறினார். அதிகம் மேலே ஏறியதில் மூச்சு வாங்கியது. 

தனது கடிகாரத்தைப் பார்த்தார்.

நேரம் 9 ஐக் காட்டியது.

மேகங்கள் காணப்படாத தெளிவான வானில் சூரியன் காணப்படாமையினால் சற்று இருளாகக் காணப்பட்டது. அந்த நுட்பமான இருள் அவருக்குப் பழக்கப்படாதது.

யூகோன் பாதை பனித்துகள்களால் நிரம்பியிருந்தது. வெள்ளைத் துகள்களின் மத்தியில் கூந்தலைப் போன்று அந்த வீதி தென்பட்டது. அந்தப் பயணப் பாதையின் முடிவில் ஏதோ ஒரு வெளிச்சப் பகுதி இருக்க வேண்டுமென அவரின் உள்ளுணர்வு சொல்லியது. அந்த ஒளிப்பகுதி காணப்படுகின்ற தீவை அடைய இன்னும் சிறு தூரம் ஏற வேண்டியிருந்தது.

சூரியனைக் காணாத இந்தக் குளிர் அவருக்குப் புதிது என்பதால் பூஜ்ஜியத்திற்கு கீழான ஐம்பது பாகை உறைபனி அவருக்கு சங்கடமாக இருந்தது. அது கையுறைகள், காது-மடிப்புகள், சூடான மொக்கசின்கள் மற்றும் அடர்த்தியான சாக்ஸ் ஆகியவற்றால் பாதுகாக்கப்பட வேண்டும்.  அது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. பனிக்குள் துப்பினார். அது காற்றில் வெடித்தது. அதனைப் பார்த்து திடுக்கிட்டார்.

உண்மையில் வெப்பம் அல்லது குளிரின் குறித்த வரையறைக்குள் வாழ வேண்டுமென்ற வறையறை மனிதனின் பலகீனமாகவே காணப்படுகின்றது.  

அவர் கைக்குட்டையில் போர்த்தப்பட்ட மதிய உணவைத் தவிர வேறு எதையும் எடுத்துச் செல்லவில்லை. 

அவர் ஆறு மணிக்கு முகாமுக்கு வருவார்.  அங்கே சிறுவர்கள் இருப்பார்கள், சூடான இரவு, உணவு நெருப்புக் கோளத்தின் மத்தியில் தயாராக இருக்கும்.என நினைத்தார்.  

அவரின் குதிகால்கள் சோர்ந்தன. உறைபனியின் தாக்கத்தினைக் குறைக்க கன்ன எலும்புகளை கைகளால் நன்றாகத் தேய்த்து உஷ்ணமூட்டினார். 

ஒளியைக் காணாத, நீண்ட பயணம்   இனம்புரியாத புதிய அனுபவமாகவே இருந்தது. இருந்தும் பயமும் படர்ந்தது. அந்த இருளின் குளிர்மைக்குள் மனம் நெருப்பை விரும்பியது. 

அவருடன் பயணப்பட்ட நாயும் சோர்வடைந்தது. அச்சுறுத்தலான பயத்தை அனுபவித்தது. நாய்  நெருப்பை விரும்பியது. இல்லையெனில் பனியின் கீழ் புதைத்து அதன் வெப்பத்தை காற்றிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும். அதன் சுவாசத்தின் உறைந்த ஈரப்பதம், அதன் ரோமங்களில் உறைபனி      குடியேறியது. அதன் முகவாய் மற்றும் கண்கள் அதன் சுவாசத்தால் வெண்மையாக்கப்பட்டன.

நாய்க்கு தெர்மோமீட்டர்கள் பற்றி எதுவும் தெரியாது. அதன் மூளையில் மனிதனின் மூளையில் இருப்பது போன்ற மிகக் குளிரான நிலை குறித்த கூர்மையான உணர்வு இல்லை. ஆனால் கடுமையான குளிரின் ஆபத்துகளைப் பற்றி எச்சரிக்கின்ற உள்ளுணர்வு இருந்தது. இத்தகைய பயமுறுத்தும் குளிரில் வெளிநாடு செல்வது நல்லதல்ல என்று   அறிந்திருந்தும்,  தன் நண்பர்களைச் சந்திக்க  தயக்கமின்றி நாய்   பின்தொடர்ந்து சென்றது.

அவரது   செந்நிறத் தாடிக்குள் பனித்துகள்கள் அப்பியிருந்தன. அவரது வாய் புகையிலையை மென்று கொண்டிருந்தது. 

நாய்க்கும் மனிதனுக்கும் இடையே மிகுந்த நெருக்கம் இருந்தது. அவர் நாயுடன் நீரோடை வழியாக நகர்ந்தார்.

இப்போது மணி பத்து.

அவர் செல்லவேண்டிய ஊருக்குப் போக இன்னும் பத்து கிலோ மீற்றரே காணப்பட்டது. அவர் பன்னிரண்டு மணிக்கு முட்கரண்டிக்கு வருவார் என்று கணக்கிட்டார். அவர் தனது மதிய உணவை அங்கே சாப்பிட முடிவு செய்தார்.

 அன்று மாலை ஆறு மணியளவில் தங்கள் முகாமில் வருங்காலக் குழுவை  ('சிறுவர்கள்') அடைவதே அவரது குறிக்கோள். 

ஆறு மணிக்கு அவர் சிறுவர்களுடன் முகாமில் இருப்பார் என்பதைத் தவிர வேறு எதுவும் யோசிக்கவில்லை. பேச யாரும் இல்லை. இருந்திருந்தாலும்  அவரது வாயில் பனி முகவாய் இருப்பதால் பேச்சு சாத்தியமில்லை. அந்த ஆர்க்டிக் குளிர்காலத்தில் எந்த ஒரு சிற்றோடையிலும் தண்ணீர் இருக்க முடியாது. ஆனால் மலைப்பகுதிகளில் இருந்து குமிழ்ந்து, பனியின் அடியில் மற்றும் பனியின் மேல் ஓடும் நீரூற்றுகள் உள்ளன என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

உறைந்த சிற்றோடையின் போக்கை அவர்கள் பின்பற்றும்போது, ​​பனியால் மறைக்கப்பட்ட மெல்லிய பனியின் திட்டுகளைத் தவிர்க்க கவனமாக இருந்தார். 

அப்பனி அவரின் காலின் தோலை வெடிக்கச் செய்தது. காலை நீரோடையில் நனைத்து ஈரப்படுத்த நினைத்தார். ஆனால் அது பயணத்தைத் தாமதிக்கும் என்பதால் தயங்கினார். அவரின் இப்போதைய தேவை நெருப்பின் அருகாமையில் குளிர் காய்வதுதான். 

வழக்கமாக மறைக்கப்பட்ட குளங்களுக்கு மேலே பனி,  ஒரு மூழ்கிய  மிட்டாய் தோற்றத்தைக் கொண்டிருந்தது. அது ஆபத்தை விளம்பரப்படுத்தியது. 

நேரம் இப்போது பன்னிரெண்டு மணி

சூரியன் வெகு தொலைவில் இருந்தது. 

கை, கால் விரல்கள் விறைத்தன. உணர்விழந்த நிலை. மதிய உணவை உண்ண முயற்சித்தார். ஆனால் கையை வாயிற்கு கிட்டே கொண்டு செல்ல முடியவில்லை.

நெருப்பைப் பற்றாமல் மதிய உணவு உட்கொள்ள முயன்ற தனது முட்டாள்தனத்தை நினைத்துக் கொண்டார். 

அரை மணி நேரத்தில், ஒரு மரத்தின் கீழ் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, அதைச் சுற்றியுள்ள தூரிகைக் குவியலிலிருந்து கிளைகளை இழுத்து தீப்பிழம்புகளுக்கு உணவளிதார். 

நெருப்பை மூட்டிய போது, உடலும் உள்ளமும் திருப்தியடைந்தது. தனது கையுறைகளை நீக்கியும் தொப்பியைக் கழற்றி காது மடிப்புக்களை வெளியே இழுத்தும் நன்றாக உஷ்ணமுட்டியபோது மனம் சந்தோசப்பட்டது. நாய் நெருப்பில் திருப்தி அடைந்தது. 

இந்த செயலின்  இறுதியில் கிளைகளில் இருந்து ஒரு பெரிய பனி கீழே விழுந்து தீயை அணைக்க காரணமாகியது. 

பின்னர் மீள புகையிலையை மென்றவாறு பயணத்தைத் தொடர்ந்தார். வழியில் பனி அவரின் பயணத்தை தடைப்படுத்தவில்லை. உரிய நேரத்திற்கு சென்றடையலாம் எண்ணிப் பயணத்தைத் தொடர்ந்தபோது, ஈரமான சுவாசமும், பனித்துகள்களால் மூடப்பட்ட வெண்ணிற மீசையும் அவரைச் சங்கடப்படுத்தியது. திடீரென முழங்கால்கள் பனிக்குள் அமிழத் தொடங்கின. விரைவாக  உணர்வை இழக்கத் தொடங்கி, கடுமையான குளிரால் ஏற்படும் உயிருக்கு ஆபத்து பற்றிய எச்சரிக்கைகளைப் புரிந்து கொண்டார். 

இப்போது பூஜ்ஜியத்துக்கு கீழே வெப்பநிலை எழுபது. ஆத்திரப்பட்டார். தனது அதிஷ்டத்தை எண்ணிக் கவலைப்பட்டார். தன்னைச் சூழ்கின்ற ஆபத்தினையும் உணர்ந்தார். 

விரைவாகவும் அதே நேரம் பொறுமையாகவும் நிதானமாகவும் இயங்கினார்.

ஒரு மணி நேரம் தாமதம் ஏற்படப் போகின்றதே. எப்படியாவது மீண்டும் நெருப்பை மூட்டி குளிர் காய வேண்டும்.

மற்றொரு நெருப்பை எரிக்க,  சுற்றும் முற்றும் நோக்கினார். அருகில் கிடந்த உலர்ந்த மரக்கிளைகள், தடிகளைக் கொண்டு தீமூட்டியபோது அச்சுடர் ஒளிர்ந்தது. 

அவரின் கால்கள் ஈரமாக இருந்தன.  பனிக்குள் கால்கள் ஒட்டிக் கொள்ளுமே. உறைபனிக்குள் விரைவாக ஓடமுடியாது. மனம் பலவற்றை நினைத்துக் கவலைப்பட்டது.

 மீண்டும் தீமூட்ட வேண்டும். மனம் பரபரத்தது. கைகளில் உணர்வின்மை காரணமாக தன்னைத்தானே எரித்துக் கொண்டார்.  

ஆபத்தான இவ்வாறான பயணங்களுக்கு தனியே செல்வது தவறு என்பதை உணர்ந்தார். 

மற்றொரு நெருப்பைத் தொடங்க எந்த வழியும் இல்லாமல், நாயைக் கொன்று அதன் உடல் வெப்பத்தை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்தார்.  

ஆனால் ...........

அவர் கைகள் மிகவும் கடினமானவை. அவரால் விலங்கின் கழுத்தை நெரிக்கவோ அல்லது தொண்டையை வெட்ட கத்தியை எடுக்கவோ முடியாது. இறுதியாக, அவர் முகாமை நோக்கி ஓடுவதன் மூலம் தனது சுழற்சியை மீட்டெடுக்க முயற்சித்தார். 

ஆனால் தடுமாறி பனியில் பல முறை விழுந்தார்.

இந்தப் பனிப் போராட்டத்தினிடையில் தொலைவில் சிறு புள்ளியாகத் தெரிந்தது அவர் செல்ல வேண்டிய பயணப்பாதை. 

ஆனால் குளிர் படிப்படியாக அவரின் மையப்பகுதியை உறைய வைத்தது.   கை, கால்கள் விறைத்தன. தரையின் தொடர்பறுந்த நிலை. உணர்ச்சியற்றுப் போனது உடல். இதயம் தனது துடிப்பினை இழந்து பலம் குன்றிப் போன பிரமை. 

 இறுதியில் தாழ்வெப்பநிலை காரணமாக இறந்துவிடுகிறார் . 

முகாமில் உணவு மற்றும் தங்குமிடம் கண்டுபிடிக்க நாய் இருட்டிற்குப் பிறகு உடலை விட்டு வெளியேறுகிறது.

அவர் தனது உடலைக் காணும்போது 'சிறுவர்களுடன்' நிற்பதை கற்பனை செய்கிறார்.

இவ்வாறாக நீண்டு செல்கின்றது இக்கதை. வித்தியாசமான நகர்வோட்டம். பனிப் பயணப்பாதையில் ஏற்பட்ட சிரமங்கள் இங்கே உயிரோட்டம் பெறுகின்றன.  

To Build a Fire எனும் ஆங்கில கதையினை வாசித்தால் எழுத்தாளரின் முழுமையான உணர்வின் விம்பங்களை நீங்களும் ரசிக்க முடியும்.

ஆங்கிலக் கதைகளில் வித்தியாசமான சுவையொன்று இருப்பதை உணர முடிகின்றது. வாசிப்பின் அனுபவங்கள் அதிகரிக்கின்றபோது நாமும் தரமான ஆக்கங்களைப் படைக்க முடிகின்றது.

ஜன்ஸி கபூர் - 15.5.2021