About Me

2012/08/08

கனவொன்று


இப்பொழுதெல்லாம்
அடிக்கடி............
கனவொன்று கிள்ளுது  என்னுள்!
நம்..........
காதல் சரித்திரங்களை
நூறாண்டு வாசித்தபடி!

பனித்துளிகளின் சில்மிஷங்களுக்குள்
சிலிர்த்துக்கிடக்கும் ரோஜாக்களாய் ..........
நாம்
நடப்படுகின்றோம் தினம் - நம்
காதல்வெளியில்!

நிதம் நீயென்
இரவுச் சொப்பனத்திலே - என்
உறக்கமறுத்து
உணர்வு பிழியும்
இரகஸிய  கணவனாய்
இம்சிக்கின்றாய் இதமாய்!

விளக்கெரிக்கும் நேரத்தில்
விட்டிலாய் என்னைச் சுற்றிச் சுற்றி
வில்லத்தனம் பண்ணும் - உன்
முரட்டுக் கரங்களில் - தினம்
முடிச்சவிழத் திணறுகின்றன
என் நாணம்!

உன் சீண்டலும்
என் சிணுங்கலும்
அன்பின் பரிமாற்றங்களாயானதில்.......
சில் வாண்டுகள் பல- நம்
வண்ணச்சோலையின் அங்கத்தவராய்
புது முகம் காட்டினருன் சாயலில்!

நாட்களின் நடைப்பயணத்தில்
நம்.........
வாலிபம் கரைந்தோடுகையில்
திரையாய் நரை  பல.............!

தளர்ந்த சுருக்கங்களும்
தள்ளாடும் நடையும்
துள்ளியோடும் பேரர்களை
அள்ளியணைத்து ரசிக்கையில்
குழந்தையாய் நாமும்
நமக்குள் புதைந்து போகின்றோம்!

நம்
மனக் கருவறைக்குள்
உயிர் கொண்ட காதல்...............
கல்லறைக்குள் வீழ்கின்ற போது
நம்
ஆத்மாக்கள்  இணைந்தே செல்கின்றன
நமக்கிடையிலான
பிரிவை மறுத்தபடி!

உறக்கம் சிரிக்கின்றன
கனவுகள் அறுகின்றன!
மெதுவாய் கண்ணவிழ்த்து
உனைத் தேடுகின்றேன் அருகாமையில்!

நீயோ தொலைவில் நின்று
கண்சிமிட்டியவாறே.........
கன்னம் கிள்ளுகின்றாய்
காத்திரு
நாளை வருவேனென்று!

ஜன்ஸி கபூர் 

2012/08/07

மனசே மனசே


வீட்டு முற்றத்தில் சிதறிக்கிடந்த  இரையை உற்சாகமாகத் தேடிப் பொறுக்கித் தின்னும் சின்னச்சிட்டுக்களின் சிரிப்பொலியும் அவ்வொலி ஞாபகப்படுத்தும் சலங்கை யொலியும் பலமாய் என் காதுகளுக்குள் விழுந்த போது மேலும் உறங்க முடியவில்லை. தூக்கம் சிதறியோடியது. கண்களை விரித்து உறக்கத்திற்கு விடை கொடுத்தேன்.....நன்றாக விடிந்து விட்டது. கடிகார முட்கள் ஏழைத் தொட்டு நின்றன.

விடிந்து விட்ட இயற்கையின் பரபரப்புக்குள் ஒன்றித்துக் கிடக்க மனசேனோ இடம் தரவில்லை. அமைதிக்குள் அடங்கிப் போனவளாய் வெளி முற்றத்தில் என் கால்களைப் பதித்தேன்.

என் பார்வை என்னையுமறியாமல் மேல் மாடியில்  வீசப்பட்டது.  காயப் போடப்பட்டிருக்கும் வெள்ளை நிற தாதி யூனிபார்ம் கோட்டுக்களால் நிரப்பப்பட்டிருக்கும் கயிற்றுக் கொடிகள் பொலிவிழந்து வெறுமையாகிக் கிடந்தன. மனம் சங்கடப்பட அப் பார்வையை அறுத்தவளாய் மறு புறத்திலுள்ள மோட்டார் சைக்கிள் தரிப்பிடத்தைப் பார்க்கின்றேன். அங்கும் வெறுமை......... மீண்டும் மனசு வெறுமைப் பிரளயத்தில்  கரைந்தோட சில நினைவுகள் எனக்குள் உட்கார்ந்து விழிகளை அரிக்கத் தொடங்கின!

" நிசங்க"

பார்க்குமிடத்திலெல்லாம் அவன் விம்பமாய் பூத்து நின்றான்.

நாங்கள் குடியிருக்கும் வீட்டின் மேல் மாடியிலுள்ள அறையொன்றில்தான் அவனும்  வாடகைக்கு எடுத்துத் தங்கிருந்தான்.அவன் ஒரு பயிலுநர் தாதி. எங்களூர் வைத்தியசாலையிலேயே நியமனம் கிடைத்திருந்தது. ஆரம்பத்தில் அவனுக்கும் எனக்கும் இடையில் வெறும் புன்னகை மட்டுமே பாஷையாக இருந்தாலும் கூட  காலப் போக்கில் எங்கள் சின்னப் பாப்பா மூலம் அவனுடன் பேசும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

"நர்ஸ் மாமா வாறார் "

இரண்டரை வயதுக்குழந்தையின் மழலை மொழி கேட்கும் போதெல்லாம் அவன் பாப்பாவுடன் கதைக்க எங்கள் வீட்டு முற்றத்திற்கே  வந்துவிடுவான். அவன் கதைக்கும் சிங்களப் பாஷை குழந்தைக்கு விளங்காவிட்டாலும் கூட அவன் காட்டும் அன்பும், அவன் சிரித்த முகம் காட்டும் அபிநயமும்  அவளுக்கு ரொம்ப பிடித்துப் போய்விட்டன.

எங்கள் வீதியில் அவன் மோட்டார் சைக்கிள் உறுமிக் கொண்டு வரும் போதெல்லாம் பிள்ளை அவனை வீட்டுக்குள்ளிருந்தே அடையாளம் கண்டவளாய் , "நர்ஸ் மாமா" என கூவிக் கொண்டு வீட்டுக்குள் மறைந்து நின்று அவன் வருகையை எதிர்பார்த்து  காத்து நிற்பாள். அவன் வீட்டுக்குள் நுழைந்ததும் வெளி முற்றத்துக்குள் வந்து அவனது மேல்மாடி அறையை அண்ணார்ந்து பார்ப்பாள்.. அவனுக்கு அவளைப் பற்றித் தெரியும் என்பதால் வீட்டுக்குள் போவதைப் போல் பாசாங்கு செய்து கதவுக்குள் மறைந்து நின்று அவள் வெளியே வந்ததும் ஓடி வந்து தூக்குவான். அவள் சிரித்துக் கொண்டே அவன் பிடியிலிருந்து விலகி வீட்டுக்குள் ஓடி வரத் துடிக்கும் போதெல்லாம், அவர்கள் இருவருக்குமிடையில் நடுவராக நின்று அவன் பிடியிலிருக்கும் அவளைச் சமாதானப்படுத்துவது  நானே என்பதால் தொடர்ந்து வந்த நாட்களில் அவன் புன்னகை என்னைக் கண்டதும் வார்த்தைகளாக மாறின. பிள்ளையின் செயலைப் பற்றி கதைப்போம். அந்த நல்ல நட்பில் அவன் என் மனதுக்குள் மெதுவாக இறங்கினான்.பாப்பாவுக்கும் அவனுக்குமிடையிலான இந்த அன்பு விளையாட்டை நான் அதிகம் ரசித்தேன். சில நேரங்களில் அவர்களின் சிரிப்பில் என் சிரிப்பும் கலந்து கிடக்கும்

நாட்களின் வேகமான பயணத்தில் அந்த நாட்களும் வந்தது. அவன் தாதிப் பயிற்சி நிறைவடைந்து தன் ஊருக்கே மாற்றலாகிப் போகும் அந்த இறுதித் தருணங்களும் வந்தன..சின்னவளோ இந்த உண்மையை அறியாமல் வழமைபோல் அவனுடன்  ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
அவன் எங்கள் ஊரைவிட்டுப் போகும் கடைசி நிமிடங்களையும் சந்தித்து எம்மிடமிருந்து விடைபெற்றும் சென்றுவிட்டான் ....

உர்ரென்று வீதியை உரசிச் செல்லும் மோட்டார் சைக்கிளின் ஓசையொன்றின் அதிர்வைக் கேட்டு  சின்னவள் கைதட்டி உற்சாகமாகச் சிரிக்கின்றாள்

"நர்ஸ் மாமா வாறார்" "நர்ஸ் மாமா வாறார்" "நர்ஸ் மாமா வாறார்"

அவள் குரலதிர்வு எனக்குள் வேதனையைக் கிளற ,மெதுவாக குழந்தையிடம் சொல்கின்றேன்.

" நர்ஸ் மாமா , இனி வரமாட்டார் செல்லம்"

மனசின் வேதனையோடு  நான் கூறும் வார்த்தைகளை அவள் கேட்பதாக இல்லை. புரிந்து கொள்ள முடியாத அந்த வயசு, தன்னிடம் பதிவாகியுள்ள நம்பிக்கையை மட்டுமே சுமந்தவாறு மீண்டும் மீண்டும் உற்சாகமாக குரல் கொடுக்கின்றாள்.........

"நர்ஸ் மாமா வாறார்............நர்ஸ் மாமா வாறார்"

அவள் அன்பு .......வார்த்தைகளாகி காற்றோடு வேகமாக மோதி வீடெங்கும் ஒலிக்கத் தொடங்க,  நானோ   பிள்ளையின் தவிப்பைக் கண்டு கண்கலங்கி நிற்கின்றேன் சோகத்துடன் !............

இந்த அன்பின் அவஸ்தையில் தவித்துக் கிடப்பதென்னவோ மனசுதானே!

67 வது ஹிரோஷிமா நினைவு தினம்


ஆகஸ்ட் - 6 - ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சின் 67 வது நினைவு தினமாகும்.

கொல்லப்பட்ட அம் மக்களுக்கான மௌன அஞ்சலியை எனது வலைப்பூ செலுத்தியவாறு, அப் பின்னணியை இன்று என் நினைவகம் ஏந்தி பகிர்ந்து  கொள்கின்றது.

புவிச்சுற்றுகை, புவிச்சுழற்சியினால் நாட்கள் வேகமாகப் பயணிக்கின்ற போதிலும் நம் ஆழ்  மனதில் ஆணியறையப்பட்ட ஞாபகங்கள் யாவும் உதிர்ந்து விடாமல் பத்திரப்படுத்தப்பட்டு ஏற்ற உரிய காலங்களில் விழிக்கின்றன.  இதுவே நியதி !

 பொதுவாக மானிட வாழ்க்கை போராட்டங்களால் சூழப்பட்டுள்ளன. அப் போராட்டங்களுக்கான தீர்வுகளும் பல்வேறு அணுகுமுறைகளில் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆனால் நாடுகளின் ஆட்சித்தலைமைகள் தமது வல்லமையை உலகில் நிலைநாட்டுவதற்காகவும், மண்ணாசை, பொருளாதாரப்  பேராசை போன்ற தீய குணங்களால் ஆட்பட்டமையினாலும், நாடுகளுக்களுக்கிடையே போர் முரசுகளைக் கொட்டி போராடும் அநாச்சாரம்  வரலாறாகி உலகக் கோளத்தில் கறைப் படிவுகளுடன் படிந்து கிடக்கின்றன.
அரசபீடங்களில் முடிசூட்டிக் கொண்டோர் தம் ஆதிக்கக்கரங்களின் வலுவூட்டலுக்காக  அப்பாவி மக்களைப் பலியாக்கி தம் ஆட்சிக் கிரீடங்களை அழகுபடுத்தி  வந்தமை, வருகின்றமை மறக்கப்பட முடியாத கசப்பான உண்மையாகும்.

 1  செப்ரெம்பர் 1939 ம் ஆண்டு தொடக்கம் 1945 ம் ஆண்டு செப்ரெம்பர் 2 ம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடைபெற்ற பாரிய உலகப்போரே இரண்டாம் உலகப் போராகக் கருதப்படுகின்றது.

இது ஐரோப்பா, பசுபிக், தெற்கு-கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, மத்திய தரைக்கடல், ஆபிரிக்கா போன்ற இடங்களை மையங் கொண்டன.


இதில் அச்சு நாடுகள், நேச நாடுகள் எனும் ஈரணியில் உலக நாடுகள் சில பிரிந்து போரிட்டன. இப்போரில் 10 கோடி இராணுவத்தினர் ஈடுபட்டனர். இப் போரிலீடுபட்ட நாடுகள் தமது சகல பொருளாதாரம், உற்பத்தி, தொழில் என்பவற்றை போர்க்களத்திலீடுபடுத்தியே போரிட்டதால் அதுவரை உலகம் கண்டிராத பாரிய அளவிலான உயிரழிவு இப் போரால் ஏற்படுத்தப்பட்டது.


1939 செப்ரெம்பர் 1 ல் நாசி ஜெர்மனியின் போலந்துப் படையெடுப்புடன் இப்போர் தொடங்கியது. பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள் நேச அணியையும், நாசி ஜெர்மனி, பாசிச இத்தாலி என்பவை இணைந்து அச்சு அணியையும் உருவாக்கின. சீனாவுடன் போர் தொடுத்துக் கொண்டிருந்த ஜப்பானும் அச்சு அணியில் இணைந்து இரண்டாம் உலகப் போரில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டது.

 1939-1941 வரையிலான காலப்பகுதியில் பிரிட்டனைத் தவிர மேற்கு ஐரோப்பிய நாடுகள் அச்சு அணியால் கைப்பற்றப்பட்டன. பின்னர் வடக்கு ஆபிரிக்காவை தம் வசப்படுத்த அச்சு அணி முயன்றன. சோவியத் ஒன்றியத்தின் மீதும் 1941 ஜூனில் அச்சு அணி போர் தொடுத்ததால் சோவியத் ரஷ்யா நேச அணியில் தன்னை இணைத்தவாறு போரிலீடுபட்டது.

ஜப்பான் படைகள் தென்கிழக்காசியாவின் பல பகுதியைக் கைப்பற்றி கிழக்கிந்தியாவின் எல்லை வரை முன்னேறிக் கொண்டிருந்தது. தானும் ஓர் வல்லரசாக மாற வேண்டுமென்ற முனைப்பில் ஜப்பான் 1941 டிசம்பரில்  பசுபிக் சமுத்திரத்தின் "பேர்ள்"  துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க கப்பலை மூழ்கடித்ததன் மூலம் அதுவரை வெறும் பார்வையாளராக இருந்த ஐக்கிய அமெரிக்காவைச் சீண்டி,  இரண்டாம் போருக்குள் அது நுழைய வழியமைத்துக் கொடுத்தது. இரண்டாம் உலகப் போரில் உள் நுழைந்ததால் அமெரிக்காவும் நேச நாட்டுப் படையணியுடன் கூட்டுச் சேர்ந்தது.

1942 ம் ஆண்டு வரை அச்சு நாடுகளுக்கு சாதகமாக இருந்த போர் நிலைமை , அமெரிக்காவின் பிரவேசத்தைத் தொடர்ந்து மாற்றமடையத் தொடங்கியது. அச்சுப்அணியின் மேலதிக நகர்வு சோவியத் படையால் தடுத்து நிறுத்தப்பட்டது. வடக்கு ஆபிரிக்காவிலும் அச்சு படையணி பின்வாங்கியது. பசுபிக் கடலோரத்தில் நேச நாடுகள் இழந்த பகுதிகளை அமெரிக்கா மீண்டும் கைப்பற்றத் தொடங்கியது.

1943 ல் நேச நாட்டுப் படையெடுப்பால் இத்தாலி சரணடைந்தது.1944ல் மேற்கு ஐரோப்பாவை மீட்கும் பணிக்கான போரில் நேச நாடுகள் கடல் மார்க்கமாக ஈடுபட்டன. கிழக்குப்புறமாக சோவியத் படையும், மேற்குப் புறமாக பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா நேச அணிகளும் கூட்டாகச் சேர்ந்து ஜெர்மனியைத் தாக்கத் தொடங்கின. ஈராண்டுகள் தாக்குதலின் பின்னர் நாசி ஜெர்மனும் 1945 ம் ஆண்டு மே மாதம் 8 ந் திகதி சரணடைந்தது. அதே நாளில் "சரண் ஆவணம்" ஜெர்மனால் கையெழுத்திடப்பட்டது.

ஆனால் ஜப்பான் தனது போர் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. இதனால் பசுபிக் பிராந்தியத்தில் தொடர்ந்தும் உக்கிரப் போர் நடைபெற்றது.நேச நாடுகள் ஜப்பான் மீது தொடர்ந்தும் பல தீக்குண்டுகளை வீசியது. 1945 ஜூலை மாதம் 26 ந்திகதி சீனா,ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஒன்றிணைந்து "பாட்சுடம் அறிக்கை " யை வெளியிட்டது. அவ்வறிக்கை மூலம் "ஜப்பான் தனது தோல்வியை ஏற்று உடனடியாக சரணடைய வேண்டுமெனவும், அல்லாவிடில் உடனடி முழு அழிவுக்குள்ளாக வேண்டுமெனவும் எச்சரிக்கை விடுத்தது"

 ஆனால் ஜப்பான் அவற்றின் கோரிக்கையை ஏற்காமல் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் உக்கிரப்பார்வை ஜப்பானை நோக்கி திரும்பியதில் 1945 ஆகஸ்ட்டி6-9 ம் திகதிக்குள் ஜப்பான் நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அணுக்குண்டுகளை அது வீசி அவ் ஜப்பானின் இரு நகரங்களையும் அழித்து தன் வல்லமையை உலக அரங்கில் நிருபித்தது.

இவ்வாறு அழிவுக்குள்ளான "இரேசிமா அல்லது ஹிரோஷிமா" என்பது ஜப்பானிலுள்ள பெரும் நகரமாகும். இது ஹோன்ஷூ தீவிலுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது முதன் முதலில் 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ந்திகதி காலை 8.15 நேரத்திற்கு ஹிரோஷிமா நகரத்தின்  மீது ஐக்கிய அமெரிக்கா தனது சின்னப்பையன் (Little Boy) எனும் அணுகுண்டை  வீசியது. இவ் அணுகுண்டு விமானப்படைத் தளபதியாக இருந்த "போல் டிபெட்ஸ்" எனும் விஞ்ஞனியால் "எனோலா கே" எனும் பி-29 ரக விமானத்திலிருந்து வீசப்பட்ட முதலாவது அணுகுண்டாகும். "எனோலா கே"  என்பது இவ் விமானியின் தாயார் பெயராகும். இதன் நிறை 4000 கிலோ கிராமாகும். நீளம் 3 மீற்றராகவும், விட்டம் 0.7 மீற்றராகவும் காணப்பட்டது.


ஹிரோஷிமா 905.1 கிலோ மீற்றர் பரப்பைத் தன்னகத்தே கொண்ட மாகாணமாகும். இப் பிரதேசத்தில் அணுகுண்டு விழுந்ததும் அது பாரிய சப்தத்துடன் வெடித்தது. சுமார் 2000 அடிகளுக்கு மேல் தீச்சுவாலை மேலெழுந்தது.16 கிலோ மீற்றருக்குட்பட்ட சகல கட்டிடங்களும் தரை மட்டங்களாகின. 900,00 மக்கள்  தொடக்கம் 166,000 வரையிலான மக்கள் மடிந்தனர். இந் நகரின் தொடர்புசாதனங்கள் யாவும் உடனடியாக செயலிழக்கப்பட்டமையால்  இந் நகர அழிவின் கொடுமை பற்றி ஜப்பான் இராணுவத் தலைமையகம் உடனடியாக அறிந்து கொள்ளவில்லை. அதன் பின்னரே அறிந்து கொண்டது. அணுகுண்டு வீசி 16 மணித்தியாலத்தின் பின்னர்  அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அவ் அப்பாவிகளின் உயிரோடு தான் விளையாடி சாதனை படைத்ததை வெளி உலகிற்கு அதிகாரபூர்வமாகப்  பறைசாட்டியது.


 அன்று வீசப்பட்ட  அவ் அணுகுண்டின் தாக்கத்தால் பல இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன், குழந்தைகளும் சதைப்பிண்டங்களாகவும், அங்கவீனர்களாகவும் தமது பிறப்பை வெளிப்படுத்தினர். இற்றைவரை கதிர்வீச்சின் தாக்கக் கொடுமையை அம் மக்கள் அனுபவித்து வருவது வேதனைக்குரியது..அவ் அணுக்குண்டின் கதிர்வீச்சின் சிதறல்களால் சூழலும் பாதிப்புற்று உயிரின வாழ்விற்கு அச்சுறுத்தலாகவுள்ளது.

(இது வீசப்பட்ட 3ம் நாள் ஆகஸ்ட் 9 ந் திகதி கொழுத்த மனிதன் (Fat Man) எனும் பெயரில் 2வது அணுகுண்டு ஜப்பானின் இன்னுமொரு நகராகிய நாகசாகியில் வீசப்பட்டது.)

அமெரிக்காவின் புதிய அணுகுண்டு பரிசோதனைக் கூடங்களாக ஜப்பானின் நகரங்கள் பயன்படுத்தப்பட்டமையினால் 120,0000 ற்கு மேற்பட்ட உயிரிழப்புக்களும் இன்றுவரை முடிவு காணப்படாத கதிர்வீச்சுத்தாக்கங்களும் ஏற்பட்டுள்ளன.ஜப்பானும் தனது நகரங்களின்  மீது வீசப்பட்ட அணுகுண்டுத் தாக்குதலையடுத்து 15 ஆகஸ்ட் 1945 ம் ஆண்டு சரணடைந்தது. அதே ஆண்டு "சரண் ஆவணத்தில்" அது கையெழுத்திட்டதன் மூலம் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இப்போரின் விளைவாக உலக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பிய காலனிய அரசுகள் தம் வல்லமையை இழந்தன. ஆபிரிக்கா, ஆசியா கண்டங்களில் காலனிமயமழித்தல் தொடங்கியது. ஐரோப்பியா பனிப்போர் கசியத் தொடங்கியது. அமெரிக்க ,ரஷ்யா புதிய வல்லரசாகியது, உலக அமைதிக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்டது. இருந்தும் இங்கு இழக்கப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்களின் இழப்புக்கு முன்னால் அவை வெறும் பூச்சியங்களே!

இவ் அணுகுண்டு வீச்சானது அறநெறிக்கப்பாற் பட்டதே. தன் நாட்டுக்கேற்பட்ட இழப்புக்களுடன் கூடிய அந்த பயங்கர வலியினால் ஜப்பான் 1967 ல் "அணு ஆயுத விலக்கு பற்றிய 3 தத்துவங்களை" வெளியிட்டது.

இதனடிப்படையில் தான் ஒருபோதும் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதில்லையென்றும், அணு ஆயுதங்களை தன் கைவசம் கொண்டிருப்பதில்லையென்றும், அணு ஆயுதங்களை நாட்டுக்குள் வர அனுமதிப்பதில்லையென்றும்  தத்துவங்களை இயற்றி செயற்படுத்தியது.

ஹிரோசிமா நகரத்தின் மீது அமெரிக்கா அணுக்குண்டினை வீசி பாரிய உயிரிழப்புக்களுடன் கூடிய அவலங்களை ஏற்படுத்தியதை நினைவு கூறும் வகையில் 1996ல் ஹிரோசிமா நகரில் "ஹிரோசிமா சமாதான நிலையம்" நிறுவப்பட்டுள்ளது. இதன் பெயர் ஜப்பானிய மொழியில் "கென்பாக்கு டோம்" (அணுகுண்டு குவிமாடம்) ஆகும்.  ஆக் கட்டிடத்தின் வடிவமைப்பின் ஆரம்ப கர்த்தா ஜான் லெட்செல் ஆவார்.


இவ்வாறு ஏதோ சில சுயநலங்களுக்காக முன்னெடுக்கப்படுகின்ற யுத்தங்களும் அவற்றின் இழப்புக்களும் நிம்மதியுடன் வாழ முனைகின்ற ஆரோக்கிய மனித சமூகத்திற்கிடப்படுகின்ற  சாபங்களே! இவ்வாறான அவலங்கள் இனி இப் புவிக் கோளத்தின் நிலப்பரப்புக்களை ஒருபோதும் மாசுபடுத்தக்கூடாதென்பதே நம் அவாவும் பிரார்த்தனையுமாகும்!

- Ms.Jancy Caffoor -


2012/08/06

பர்மிய முஸ்லிம்கள்



அழகான இயற்கைக்குள் கூடு கட்டி வாழும் மனிதன் தன் மென்மையான மனதினுள் இனவாத சகதியைத் தேக்கி நாற்றமெடுக்கின்ற வரலாற்றை விருப்போடு எழுதிக்கொண்டிருக்கின்றான். பெரும்பான்மையினர் தமது காலடிக்குள் வாழும் சிறுபான்மையினரை நசுக்கி, அவர்களின் குருதியில் தாம் நனைந்து புன்னகைக்கும் அராஜகம் உலகெங்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

அந்த வகையில் இன்று சர்வதேச ரீதியில் மனிதாபிமான மனித மனங்களில் , துயரத்தைப் பிழிந்து கொண்டிருப்பவர்களே பர்மாவைச்  சேர்ந்த ரோஹீங்கியா முஸ்லிம்கள்.


முகநூலில் கூட அவர்களின் கொலை செய்யப்பட்ட படங்கள் தினமும் பதிவாகி வரும் போதெல்லாம் அவற்றை காணும் சக்தியற்றவளாய்  நான் பல தடவைகள் கண்களை இறுக மூடியிருக்கின்றேன். அப்பொழுதெல்லாம் கண்ணுக்குள் நிரம்பும் கண்ணீர் மூடிய விழிகளினூடாக வெளிப்படுத்தப்படாமல்  கண்ணுக்குள்ளேயே நிறைந்து  விடும்.

அந்த அராஜகத்தின் தீக்குள் நனைந்து கருகிக் கொண்டிருக்கும் பர்மிய சிறுபான்மை முஸ்லிம்களின் உணர்வுகளிலும், அவலங்களிலும், கதறல்களில்களிலும், கண்ணீரிலும் கரையும் நான், என் துன்பத்தை இன்று இப்பதிவு வழியாக வலைப்பூவினில் கசிய வைக்கின்றேன்! அம் மக்களின் வாழ்க்கைப்பின்னணியை என் நினைவகம் சோகத்துடன் ஏந்திக் கொள்கின்றது.


9ம் நூற்றாண்டில் அராபிய மன்னன் அரகனால் நாடு கடத்தப்பட்ட அரபு முஸ்லிம் வர்த்தகர்கள் பயணித்த வணிகக் கப்பல்  நடுக்கடலில் விபத்துக்குள்ளானதால் அவர்கள் பர்மாவின் பக்கம் கரையொதுங்கினர். பர்மாவினுள் உட் சென்ற அவர்கள் பர்மியப் பெண்களை மணந்து கீழைத்தேய வர்த்தக முகவர்களாக பின்னாட்களில் செயற்பட்டனர்.  இவர்கள் மொகாலாயர்களுடன் வர்த்தகத் தொடர்புகளைப் பேணுமளவிற்கு அதிகாரமிக்கவர்களாகவும், பணபலம் மிக்கவர்களாகவும் விளங்கினர். இவர்களின் வருகையே பர்மியர்களின் இன்றைய பொறாமை கலந்த இனத்துவேசத்தின் மூலவேர்களாக விளங்குகின்றது. இவர்கள் பர்மாவுக்கும், அரேபியாவுக்குமிடையில் இணைப்புப் பாலங்களாகவிருந்து தமது பர்மியச் செல்வங்களை அரேபியா சுரண்ட இடமளிக்கின்றனர் என்றும், தமது பர்மியப் பெண்களை பலாத்காரமாக மணக்கின்றனர் என்றும் பெரும்பான்மை பர்மியர் முஸ்லிம்களுக்கெதிராக இனக் குரோதம் கொண்டனர்.

அக்கால பர்மிய நாணயத்தில் கூட ஏக இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. முகமது நபி இறைவனின் தூதராக உள்ளார்கள்" எனும் அராபிய எழுத்துரு வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இது அக்கால அராபியாவுக்கும், பர்மாவுக்குமிடையிலான தொடர்பை முதன்மைப்படுத்துகின்றது.



பர்மா

பெரும்பாலும் பௌத்தர்களையும், அதற்கடுத்ததாக இந்துக்களையும் கொண்ட நாடு.  இங்கு சுமார் 10 இலட்சம் ரோஹீங்கியா முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். இங்கு வாழும் சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு குடிமக்கள் அந்தஸ்து மறுக்கப்பட்டு வருவதால், அரசின் இனவாதப் பசிக்கு அவ் அப்பாவி மக்கள் அடிக்கடி இரையாகிக் கொண்டு வருகின்றார்கள்.


ரோஹீங்கியா பிரதேசம். 1950 களில்  தனி பிரதேசமாகவே இனங் காணப்பட்டது. இதில் இந்திய, வங்காள இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் காலனியாக இருந்த பர்மா ஜப்பானிய படைகளால் வெற்றி கொள்ளப்பட்டதிலிருந்தே முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் இங்கு ஆரம்பிக்கப்பட்டன.

பர்மாவை ஆட்சி செய்த பாஷிச இராணுவ ஆட்சியாளர்கள் தங்கள் அராஜக இராணுவ இருப்பைத் தக்க வைப்பதற்காக இந்த ரோஹீங்கியா சிறுபான்மை முஸ்லிம்களை வேட்டையாடுவதை தமது அரசியல் செல்நெறியாக வகுத்து செயற்பட்டார்கள். செயற்படுகின்றார்கள். மியன்மார் ராணுவமும், புத்த மதத் தீவிரவாதிகளும் இவ் இன அறுப்பை கச்சிதமாக ஈவிரக்கமின்றி செய்து வருகின்றனர். இவர்கள் தமது கொலை வெறியை ரோஹீங்கியா முஸ்லிம்களின் மீது மட்டுமே திணிக்கின்றனர்.

பெளத்த பிக்குகள் கைகாட்டும் திசை யெல்லாம் இராணுவத்தினரும் பொலிஸாரும் தமது ஆயுதங்களால் அப்பாவி இம் முஸ்லிம் மக்களின் உயிர்களைக் கொன்று குவிக்கின்றனர். நிலத்தில் சிந்தப்படும் குருதித்துளிகளும், கிழிக்கப்படும் உடற் சதைகளும், அவற்றிலிருந்து வடியும் ஊன் நாற்றமும் இவ் இனவாதிகளின் நாடி நரம்புகளில் பரவசத்தை வழங்க, இம் மனித மிருகங்கள் புத்தரின் அஹிம்சைத் தத்துவங்களையெல்லாம் தம் சுயநலத்தால் துவம்சம் செய்கின்றனர்.பன்சலயில் மணியை பிக்குகள் அடிக்கும் போதெல்லாம் பர்மிய மக்கள் திரண்டு வந்து இம் முஸ்லிம்களை கொலை செய்யும் அநாகரிகம் பர்மா தேசத்திலேயே வரலாறாகப் பதியப்படுகின்றது. இந்த இன வன்முறைக் கலாசாரத்தின் விளைவாக 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்களாதேஷூக்கும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மலேசியாவுக்கும் அகதியாய் தப்பியோடியுள்ளனர்.


பல ரோஹீங்க்யான் முஸ்லிம்  மக்கள் கொத்தடிமைகளாக்கப்பட்டு மியான்மார் இராணுவத்தில் கூலி வேலைகளுக்காகத் தினமும் திணிக்கப்படுகின்றார்கள். கல்வியுரிமை இச்சிறார்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுவர் உரிமை சாசன வரைபுகள் கூட இங்கு செல்லாக்காசாகி விட்டன.

இம் ரோஹீங்க்யான் முஸ்லிம்கள் பெரிய வியாபாரங்களில் ஈடுபடவோ, கடலில் மீன் பிடிக்கவோ தடுக்கப்பட்டுள்ளனர். கற்பழிக்கப்படும் பெண்கள் சட்டத்தின் துணையை நாட முடியாதவராகவுள்ளனர். இஸ்லாமிய மத வழிபாடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. குடியுரிமை அந்தஸ்து இல்லாத காரணத்தால் திருமணம் செய்வதற்குக் கூட அரசின் அனுமதியைப் பெறவேண்டும். இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெறமுடியாது. இப் பெண்கள் கட்டாய குடும்பக் கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக வேண்டும். இளைஞர்கள் சுதந்திரமாக நடமாட முடியாது போன்ற கீழ்த்தரமான சட்டங்களால் இம் மக்கள் தினமும் இம்சிக்கப்படுகின்றனர். நிச்சயம் இதுவோர் நவீன அடிமைத்தனத்திற்கான சட்ட வரைவுகளே! இந் நூற்றாண்டில் கூட இவ்வாறான கேவலமான மனிதர்களின் கூடங்களாக இவ்வுலகம் தன்னையிருத்திக் கொண்டுள்ளது என்பது வேதனை தரக்கூடியதே!

பிக்குகளின் தலைமையில் குண்டர் கோஷ்டிகள் மஸ்ஜிதுகளில் புகுந்து அவற்றைத் தீ வைப்பதும், திருக்குர்ஆன்களைத் தீயிடுவதும், வீடுகளை இடிப்பதும், வர்த்தக நிலையங்களை கொள்ளையடிப்பதும், இளம் பெண்களை மானபங்கப்படுத்துவதும் , இம் முஸ்லிம்களைத் தீயிட்டுக் கொளுத்துவதும் இக் காட்டுமிராண்டி மியன்மியரின் அரச சரித்திரங்களில் பதிக்கப்படும் பொன்னெழுத்துக்களாகும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சித்திரவதையை இப் புத்த வாதிகள் பரீட்சிப்பது ரோஹீங்கிய முஸ்லிம்களின் உடலிலும், உயிரிலும், வாழ்க்கையிலும் தான் !


சிட்வே, டாவுன்கு ,தபூ போன்ற பிரதேசங்களிலும் இவர்கள் வன்முறை காலத்துக்காலம்  நிகழ்த்தப்பட்டுள்ளது. ரோஹீங்கிய முஸ்லிம்கள் இந்நாட்டின் நிரந்தரப் பிரசைகளல்ல எனக் கோஷிக்கப்பட்டு அவர்கள் கொன்றொழிக்கப்படுகின்றார்கள்.

இம் மனிதாபிமானமற்ற கொலைவெறியை கண்டிக்காது சீனா, ரஷ்யா போன்ற பொதுவுடமை நாடுகளும்,  ஐரோப்பா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் அமெரிக்கா  மற்றும் ஆசிய, ஆபிரிக்க நாடுகளும் மௌனம் சாதிப்பதன் மர்மம் தானென்ன. அம் மர்மத்தின் பிண்ணனியில் நமக்குத் தெரிவது பர்மாவில் அவர்கள் மலிவாகப் பெற்றுக் கொள்ளவிரும்பும்  இயற்கை வளங்களும், மனித வளங்களும் தான்!

இவர்களுடன் இணைந்தவர்களாக அமெரிக்காவின் காலடியில் வீழ்ந்து கிடக்கத் துடிக்கும் அரபு நாடுகளும் தமது, ஆற்றல் ,மார்க்கம் கற்றுத் தந்த ஒழுக்க விழுமிய கலாசாரங்கள்  என்பவற்றை  மறந்து, தம் இஸ்லாமிய மார்க்க நெறியுடன் ஒன்றித்து வாழும் தம் சகோதரர்களுக்காக ஐனநாயகக் கோஷங்களை வெளிப்படுத்துவதைத் தவிர்த்து வருகின்றனர். இது  வருந்தத்தக்க கண்டிக்கத்தக்க செயலாகும்.

கண்டதுண்டமாக இம் முஸ்லிம் மக்களின் உடலை வெட்டிப் போட்டும், கண்டவுடன் சுட்டுக் கொண்டும் இப் பௌத்தவாதிகள் செய்யும்  இந்தக் கொலைகளைக் கண்டிக்க ஐ.நா வோ, பொதுசன சர்வதேச ஊடகங்களோ  பெரிதும் அக்கறைப்படாத  இன்றைய நிலையில், இம் மக்களின் மனிதாபிமானமற்ற இறப்புக்காக குழி தோண்டும் இவ் அக்கிரமக்காரர்களின் இதயங்களை அறுத்திட வல்ல இறைவன் ஒருவனால்தான் முடியும்.

இந்த இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் கொல்லப்படும் மனிதாபிமானமற்ற செயல்களுக்காக ஆங்காங்கோ வாழும் முஸ்லிம் மக்கள் கண்டனத்தையும், ஆர்பாட்டத்தையும் மேற்கொண்டு வந்தாலும் கூட அவற்றின் வலுவும், வலிமையும் குறைந்தவை. அவை செவிடன் காதில் ஊதிய சங்கொலியாய்  கண்ணீர் காற்றில் கலந்து விடக்கூடியன.

இது ரமழான் மாதம். புனித மாதம். நோன்பாளிகளின் துஆக்கள் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்படும் மாதம். இச்சகோதரர்களுக்கு நீதி கிடைப்பதற்காகவும் நிம்மதியான வாழ்விற்காகவும் நாமும் இறைவனிடம் இறைஞ்சி துஆ செய்வோமாக!



- Ms. Jancy Caffoor -






பத்ர் போர்



பத்ர் யுத்தம் நடைபெற்ற இடம்

நபி (ஸல்) அவர்கள் நுபுவ்வத்தின் பின் பதின்மூன்று வருடங்கள் பல்வேறு கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு மக்காவில் வசித்திருந்தார்கள். இறுதியில் அவர்கள் தமது தாயகத்தை விட்டு மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றார்கள். எனினும் நபியவர்களைத் துன்புறுத்துவதை காபிர்கள் விட்டுவிடவில்லை. அவர்கள்  தனிமைப்படுத்தப்பட்ட முஸ்லிம்களைக் கொடுமைப்படுத்துவதோடு, அவர்களை மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செல்ல விடாது தடுத்தும் வைத்திருந்தனர்.

மேலும்  அவர்கள்,  நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது தோழர்கள் மீதும் கடினமான பொருளாதாரத் தடையைத் திணிப்பதில் உறுதியாக இருந்தனர். மதீனாவுக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் பிரயாணக் கூட்டங்களைத் தடுத்தும் வைத்தனர். இந்தத் தடையானது நீண்ட காலம் நீடித்து, மதீனாவாசிகளின் மீது பெரும் சுமையையும், கஷ்டத்தையும் ஏற்படுத்தியதோடு, அத்தியாவசியமான உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக செங்கடல் ஓரங்களுக்கு பயணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்த்திலும் அவர்களைத் தள்ளியிருந்தது.

அபூஜஹ்ல், கடினமான வார்த்தைப் பிரயோகம் கொண்ட ஒரு கடிதத்தை நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பியிருந்தான். அதில் நபியவர்கள் மீதான தாக்குதலுக்கும், யுத்தத்திற்குமான ஏற்பாடு பற்றி குறிப்பிட்டிருந்தான்.

இவ்விடயத்தில் இரண்டு புனித அல்குர்ஆன் வசனங்கள் இறங்கின,

'அநியாயத்துக்குள்ளானவர்களுக்கு, யுத்தம் செய்ய அனுமதியளிக்கப்பட்டு விட்டது. நிச்சயமாக அல்லாஹ், இவர்களுக்கு உதவி செய்யப் ஆற்றலுடையோனாக இருக்கின்றான். இவர்கள், நியாயமின்றித் தங்கள் வீடுகளிலிருந்து துரத்தப்பட்டார்கள். எங்களுடைய இறைவன் அல்லாஹ் ஒருவன்தான் என்று கூறியதுதான் இவர்கள் செய்த குற்றம். மனிதர்களில் அக்கிரமம் செய்யம்சிலரை சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருந்தால், கிறிஸ்தவர்களின் ஆலயங்களும், அவர்களுடைய மடங்களும், யூதர்களுடைய ஆலயங்களும், அல்லாஹ்வுடைய திருநாமம் அதிகமாக ஸ்தோத்திரம் செய்யப்படும் மஸ்ஜித்களும் அழிக்கப்பட்டே போயிருக்கும். அல்லாஹ்வுக்கு எவர் உதவி செய்கின்றாரோ அவருக்கு, நிச்சயமாக அல்லாஹ்வும் உதவி செய்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க பலவானும் யாரையும் மிகைத்தோனுமாக இருக்கின்றான்' (அல்ஹஜ்- 39,40)


அந்த யுத்தத்திற்கான நாளும் வந்தது.


அது ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு ரமழான் பிறை 17 ஆகும்.

மக்கத்து இறை நிராகரிப்பாளர்களான குறைஷியர்கள், உலகிலிருந்து இஸ்லாத்தை அழிக்கும் நோக்குடன் பெரும் படை திரட்டி "பத்ர்" எனும் இடத்தில் போரிடத் தயாரானார்கள்.

பத்ர் இடம் பற்றி அல்குர்ஆனில் பின்வரும் வசனங்கள் காணப்படுகின்றன.

"புனித மக்காவிலிருந்து 310 கி.மீ தூரத்திலும், மதீனாவிலிருந்து 155 கி.மீ தொலைவிலும் இரு நகரங்களுக்கு மத்தியில் அமைந்த  பகுதி "பத்ர்" !
நபி(ஸல்) அவர்களின் தலைமையில் அணிவகுத்த நபித்தோழர்கள் . வானவர்களுடன் இணைந்து போரிட்டு இஸ்லாத்தின் தடைக்கற்களைத் தகர்த்தெறிந்த புனித யுத்த பூமி அது! "  (அல்குர்ஆன் 3:123)


" பத்ர்" பள்ளத்தாக்கு பின்வரும் அடையாளங்களைக் கொண்டிருந்தது.
--------------------------------------------------------------------------------------------
* முதல் அடையாளம் (வலமிருந்து) - முஸ்லிம்கள் மதீனாவிலிருந்து வந்து முகாமிட்டிருந்த அருகில் உள்ள பள்ளத்தாக்கு "அல் உத்வத்துல் துன்யா"!

* இரண்டாவது அடையாளம் - வியாபாரக் கூட்டத்தினர் கடந்து செல்லும் கணவாய்ப் பகுதி

* மூன்றாவது அடையாளம் - ஜபலுல் மலாயிக்கா (அல்குர்ஆன் 8:42)

அவர்களது இந்த எதிர்பாராத போரழைப்புக்கு நபி (ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் தயாராகினார்கள்.

 பத்ர் பிரதேசம் குறைஷிக் காபிர்களுக்கு சாதகமாகவே இருந்தது. அவர்களது யுத்தப்படையில் ஆயிரம் பேர் இணைந்திருந்தார்கள்.
ஆனால் நபி(ஸல்) அவர்களின் தலைமையினாலான படை போருக்காக தயாராகிக் கொண்டிருந்த பகுதி வெறும் மணற்பாங்கான பகுதியென்பதால் முஸ்லீம் அணியினர் பெரும் அசௌகரியத்தினையே எதிர்கொண்டனர். இருந்தும் அவர்கள் அல்லாஹ் தஆலா மீது கொண்டிருந்த நம்பிக்கையை கைவிடவில்லை.

அவர்களது படைப்பிரிவில் சுமார் 313 பேரே இருந்தனர். குறைஷியர்களை விட  அவர்கள் ஆட்பலத்தாலும், ஆயுதப் பலத்தாலும் பலவீனமான நிலையிலேயே இருந்தார்கள். ஆனால் அவர்களிடம் ஈமானிய பலம், அல்லாஹ்வின் அருள் , ஒற்றுமையுடனும் தியாகத்துடனும் போரிடக்கூடிய மனோபலமும் அதிகமாகவே இருந்தது. இவர்களிடமிருந்த ஆத்மீகப்பண்புகள் காரணமாக ஒழுக்கவிழுமியங்களும் அதிகமாகவே இருந்தது.

இதுவோர் பாரிய யுத்தமாகும். நபியவர்களுடன் இருந்த முஸ்லிம் போராளிகளுள் முஹாஜியர் சங்கடநிலைக்கானார்கள். அவர்களுள் சிலர் தமது பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள், பிள்ளைகளுக்கெதிராகவும் போரிட வேண்டிய நிலையிலிருந்தார்கள். ஆனால் அவர்கள் தங்கள் பாச உணர்ச்சிக்கு அடிபணியாமல், அல்லாஹ்வையை ஈமான் கொண்டு தம் ஆத்மீக பலத்துடன் போரிட்டனர்.

நபி(ஸல்) அவர்கள் பத்ர் யுத்தத்தில் போர்ப்படைத் தளபதியாக நின்ற இடம் "ஜாமிஉல் அரீஷ்" எனப்படுகின்றது.


                                              "ஜாமிஉல் அரீஷ்"

நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். நபி(ஸல்) அவர்களின் துஆ வை ஏற்று, முஸ்லிம்களுக்கு உதவியாக ஆயிரக்கணக்கான வானவர்களை அல்லாஹ் இறக்கி வைத்தான். சஹாபாக்களுடன் இணைந்து போரிடுவதற்காக மலக்குகள் வந்திறங்கிய மலையே "ஜபலுல் மலாயிக்கா" (மலக்குகளின் மலை) எனப்படுகின்றது.


நபி (ஸல்) அவர்களின் தலைமையினாலான 313 பேரை மாத்திரம் கொண்ட சிறிய முஸ்லிம் படை அல்லாஹ்வின் உதவியைப் பெற்று, 1000 பேரைக் கொண்ட எதிரிகளின் தாக்குதலை நேருக்கு நேர் சந்தித்து வெற்றிகரமாக முறியடித்து பாரிய வெற்றியைப் பெற்றார்கள்..

இப் பத்ர் வெற்றித் தினமானது 'யௌமுல் புர்கான்" என அல் குர்ஆனில் அழைக்கப்படுகின்றது. இதன் பொருளானது சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும் தினமாகும். இப் போர் வெற்றியானது இஸ்லாமிய எழுச்சிக்கு பெரும் உறுதுணையாகவிருந்தது.

முஸ்லிம்களுடைய வாழ்வியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், முஷ்ரிகீன்களுக்கு சாதகமான ஒரு சந்தர்ப்பத்தை முறியடிப்பதற்காகவும் நடைபெற்ற இப்போர் நமக்கொரு படிப்பினையாகும்.

"பத்ர்" யுத்தத்தில் 14 ஸஹாபாக்கள் ஷஹீதாக்கப்பட்டார்கள்.
நபி(ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் நல்லடக்கம் செய்யப்பட்ட பத்ர் ஸஹாபாக்களின் கப்ருக்கள் இவைதான்



"அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரை "மரணித்தவர்' என்று கூறாதீர்கள்! அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள். ஆனால் நீங்கள் அதனை உணரமாட்டீர்கள்"
(அல்குர்ஆன் 2:154)

பத்ர் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் தொகை பின்வருமாறு-
--------------------------------------------------------------------------------------------------------------
தாரீக் கமீஸ்      -84
இப்னு ஹிசாம்    -84
தாரீக் யாகூபி     -86 
தபகாத்            -84
பிஹார்           -84
தாரீக் தபரீ       -84   (ஆதாரம் - தாரீகுல் ஹமீஸ்)

இறந்தவர்களின் சடலங்களை வீசியெறிந்த கிணறு "அல்கலிப்" எனப்படுகின்றது.



எத்தகைய கொடுமைகள் நிகழ்ந்த போதிலும் நபியவர்கள் பிரச்சினைகளின் தீர்வாக யுத்தத்தை நாடியதில்லை. நபி(ஸல்) அவர்களின் யுத்தங்கள், நிலவிஸ்தரிப்பு, பழிவாங்கல் போன்ற நோக்கங்களைக் கொண்டவையல்ல.

நபி(ஸல்) அவர்கள் யுத்தத்தை விரும்பாத போதும் கூட , இஸ்லாமிய அழைப்புக்களுக்கான தடுப்புச்சுவர்களாக எதிரிகள் செயற்படும் போதும், உடன்படிக்கைகளை முறிக்கும் போதும், அநீதியான ஆட்சியும், அதிகார துஷ்பிரயோகமும் இடம்பெறும் போதும், முஸ்லிம்களின் தனித்துவத்தைப் பாதுகாத்து அவர்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவும், சத்திய வார்த்தையை உயர்த்துவதற்காகவும் தேவைப்பட்ட இறுதித்தீர்வாக யுத்தத்தைக் கைக்கொண்டார்கள். 

இவ்வாறான போர்களின் வெற்றி மூலம் இஸ்லாம் சர்வதேச ரீதியில் பலப்படுத்தப்பட்டதுடன், அடிமைப்படுத்தப்பட்டிருந்த முஸ்லிம்களின் ஏற்றத்தாழ்வுகளும் நீக்கப்பட்டன. நடுநிலையான ,நேர்மையான, நீதியான ஆட்சிகள் நிலைப்படுத்தப்பட்டன. இஸ்லாமிய எழுச்சிக்கு இவ்வாறான யுத்தங்களும் பங்களிப்புச் செய்துள்ளன என்பதும் மறுக்கப்படாத உண்மையாகும். 

அநீதிக்கெதிராக  ஜிஹாத் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும் என்பதை இத்தகைய யுத்தங்கள் நமக்குணர்த்தி நிற்கின்றன.