About Me

2020/12/02

மனம் விரும்புதே

 


ஏழ்மையும் சிதைக்காத எழில்ப் பூவழகி/

வீழ்கின்றேனடி தினமும் விழிகளின் ஒளிர்வினில்/

கன்னத்தில் கரைந்திடும் வசீகரப் புன்னகையில்/

இன்பத்தைச் சுவைக்கின்றேன் இதயமும் சிறகடிக்க/

அன்பைக் குலைத்தே அமுதாய் ஊட்டுகையில்/

உன்னோடு வாழ்ந்திடவே மனம் விரும்புதே/


ஜன்ஸி கபூர் - 2.12.2020



2020/12/01

விழிகளின் மொழி

விழிகளின் மொழி 

-------------------------------

விழி அன்பிற்கு மொழியும் உண்டோ/

பழகும் பண்பில் பேதங்கள் கலையும்/

அழகான சிரிப்பினில் தந்தையும் இங்கே/

கலங்குகின்றதே மனமும் அவர் பிரிவினிலே /

ஜன்ஸி கபூர் -1.12.2020


-------------------------------------------------------------------------------------


மின்னலாய் ஒரு பின்னல்
++++++++++++
சிரம் கரம் தரம் வரம்
++++++++++++
வரம் பெற்றோம் பகுத்தறிவு மாந்தராக/
கரம் உழைப்பிற்கான உரமே/
தரம் கண்டோம் வாழ்விலே/
சிரம் தாழ்த்துவோம் படைத்த இறைவனையே/

ஜன்ஸி கபூர் - 3.12..2020
--------------------------------------------------------------- 


மூழ்கிய பயிர்களால் முடங்கியதே வாழ்வும்
+++++++++++++++++++++++++++++++++++++++++
புயலும் அழைத்த கனமழை கண்டு/
வயலும் அழுததே வாழ்வையும் இழந்து/
பயிர்கள் அழித்துப் பாய்ந்த வெள்ளம்/
துயரும் சேர்க்க துடிக்கின்றதே மனமே/

ஜன்ஸி கபூர் - 5.12.2020
---------------------------------------------------------------- 


கனவலைகளில் கவர்ந்தாயே
++++++++++++++++++++++++++
மனதில் நுழைந்து நினைவுகளாக உயிர்த்தவனே/
கனவலைகளில் படர்ந்தே விளக்காகின்றாய் விழிகளுக்கு/
தினமும் அழகாகிறேன் உன்னாலே/

ஜன்ஸி கபூர் - 5.12.2020
------------------------------------------------------------------- 
கிராமத்து வீடு
**********************
மரங்கள் பேசுகின்ற காற்றின் மொழி/
உரசும் காதினுள் மனதையும் வருடி/
இருப்பிடத் திண்ணையில் மனிதக் கலகலப்புடன்/
இயற்கையின் அழகை இதயமும் ரசித்திடும்/
வேடம் தரிக்காத மானுட நேயங்கள்/
அன்பைப் பரிமாறுகின்ற அழகான இல்லம்/

ஜன்ஸி கபூர் - 6.12.2020
-------------------------------------------------------------- 



மின்னலாய் ஒரு பின்னல்
_____________________________
முற்று கற்று சுற்று பற்று
++++++++++++++++++++++++++
 முற்று இல்லாக் கருணைப் பிறவியாய்/
மானிடம் நீயும்  கற்று/
பார் எங்கும்  சுற்று/
நேயத்தை உள்ளத்தில்  பற்று வை/

ஜன்ஸி கபூர் - 17.12.2020
 



அன்பினால் அரவணைப்போம்

 


அவலம் சூடும் அனாதைகளைத் தினமும்/  

அன்பினால் அரவணைத்தே வாழ்ந்திட வழிகாட்டுவோம்/


இருப்பிடம் தொலைக்கும் இயற்கைச் சீற்றத்தின்/

இடரினைத் துடைக்க இரக்கமும் விதைப்போம்/


வழியின்றித் தவிக்கின்ற வறுமை நெஞ்சின்/

விழி நீரினைத் துடைப்போம் கருணையுடன்/


ஜன்ஸி கபூர் - 1.12.2020


 



விவசாயம்



விவசாயத்தின் வரலாறானது பல்வேறு காலகட்டங்களைத் தாண்டி வந்துள்ளது. காட்டிலிருந்து பெறப்பட்ட விதைகளைத் திட்டமிட்டு விதைக்கச் செய்தும், ஆறு, ஏரி, கடல் போன்ற நீர் நிலைகளிலிருந்து மீன்களைப், பிடித்தும், உணவுத்தேவையினை நிறைவு செய்த மக்கள், இன்று தமது சிந்தனையின் விளைவாக விவசாயம் எனும் பழமைக்குள் தற்கால அறிவியலைப் புகுத்தி நீர்ப்பாசனம், உரங்கள், பயிர்ச்செய்கை முறைகள், பூச்சிகொல்லிகள் போன்ற பல்துறைகளிலும் பல்வேறான தொழினுட்ப உபாயங்கள் பயன்படுத்தி, தற்கால மனித தேவைகளுக்குப் பொருந்தக்கூடிய விளைவுகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.

பயிர்ச்செய்கை, விலங்கு வேளாண்மை போன்ற பகுதிகளைக் கொண்டுள்ள விவசாயத்தில் நிலங்கள் பண்படுத்தப்படுவதனால் மண்வாழ் உயிரிகளுக்கான வாழ்விடம் கிடைப்பதுடன், மண்வளமும் காக்கப்படுகின்றது. செழிக்கின்ற பசுமைக்குள் இயற்கையும் உயிர்க்கின்றது. அத்துடன் சூழல்வாழ் உயிரிகளுக்கிடையிலான அங்கிச் சமநிலையும் பேணப்படுகின்றது. எனவே விவசாயமானது வருமானத்தை ஈட்டித் தந்து நாட்டினதும், வீட்டினதும் தன்னிறைவுப் பொருளாதாரத்தை உயர்த்துவதுடன், சூழலையும் காக்கின்றது.

இவ்வுலக வாழ்வில் இணைந்த மனிதன் இயற்கையாகக் கிடைக்கின்ற இயற்கை வளங்கள் உயிரினங்கள் என்பனவற்றுடன் தொடர்புபட்டு மணணையும், விண்ணையும் ஓர் புள்ளியில் குவித்து, அதன் மூலமாக ஏற்படுகின்ற பிணைப்பினால் விவசாயத்தை உயிர்க்கச் செய்து, சமூக பொருளாதார மாற்றத்திற்கு பங்காற்றிக் கொண்டிருக்கின்றான். விவசாயத்தை ஆளுகின்ற விவசாயியின் மூலமாகவே இவ்வாறான உன்னதமான உழைப்பினை தான் வாழும் நாட்டிற்கும் சமூகத்திற்கும் வழங்க முடிகின்றது.

விவசாயத்தின் அடிப்படைத் தத்துவம் உழவாகும். தமிழரின் உழவு சார்ந்த வாழ்வியல் நெறிப் பண்பாட்டினை திருவள்ளுவரும் தமது குறளடிகளில் எடுத்துக்காட்டியுள்ளார்.  

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்

வேண்டாது சாலப் படும். – (குறள் 1037)


ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்

நீரினும் நன்றதன் காப்பு. – (குறள் 1038)


மேற்கூறப்பட்ட குறளடிகளில் உழவுத் தொழிலின் தொழினுட்பத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

பசுமைப் புரட்சியின் மூலமாக விவசாய விளைவுகள் அதிகரிக்கப்படக்கூடியதாக இருந்தாலும் கூட, நாகரிக வாழ்வு, வணிகமயமாதலின் தாக்கம், காலநிலை, சனத்தொகைப் பெருக்கத்தினால் ஏற்பட்ட இடநெருக்கீடு, மண்வளம், நீர்வளம், நிலத்தோற்றம் போன்ற பல புறக்காரணிகளின் தாக்கங்களுடன், விவசாயிகளின் வாழ்க்கைப் போராட்டங்களும் விவசாயத்தின் செழிப்பைக் குறைக்க முனைகின்றன. இவ்வாறான சூழ்நிலைகள் எதிர்கொள்ளப்பட்டாலும்கூட, இயற்கையுடன் இசைந்து வாழ்ந்து இயற்கையைப் பாதுகாக்கும்விதமாக நாம் வேளாண்மையில் நாட்டம் கொண்டு உழைப்போமாக.!


 ஜன்ஸி கபூர் - 1.12.2020