About Me

2020/12/04

மழை


 

கருத்துப் போன முகில்களின் நீரோட்டம்

கடல் அலைகளை வேகமாகத் துரத்துகின்றது

அச்சப்பட்ட அலைகள் அடைக்கலம் தேடி

ஊருக்குள் நுழைகின்றது வெள்ளமெனும் பெயரில்

கனமழையின் நிழலுக்குள் ஒளிகின்ற உயிர்களைத்

தேடி ஒலிக்கின்ற உறவுகளின் கதறல்களும்

கலக்கின்றது காற்றோடு போராடுகின்ற ஈரத்தில்


மழைக்குள்ளும் ஈரமான மனசு இருக்கின்றது

அதனாற்றான் வறட்சியின் துன்பம் கண்டு

அடிக்கடி கண்ணீர் சிந்தி அழுகின்றது

ஓவெனும் ஒப்பாரிச் சத்தம் கேட்டு

எட்டிப் பார்க்கின்றன குளம் குட்டைகள்

தம் நெஞ்சத்தில் அணைத்தே ஆறுதல்படுத்துகின்றன

வழிந்தோடும் விழிநீரால் நனைக்கின்றன இருப்பிடங்களையும்


குடைக்குள் ஒளிந்து கொள்கின்ற கொடை

பற்றியதான புரிதல்கள் இங்கு யாருக்குமில்லை

எப்போது அணைக்கும் அழிக்குமென்ற மணக்கணக்கும்

தப்பாகிப் போய்விடுகின்றமையால் தவிக்கின்றேன் வாழ்வில்


விழுகின்ற நீர்த்துளிகள் பரிகசிக்கின்றன முன்னறிவிப்புக்களை

எதிர்வுகூறல்களை எட்டி உதைக்கையில் தடுமாறுகின்றன

முன்னாயத்தம் இல்லாத் தாவரங்களும் இயற்கையும்

சினத்தில் வானமும் முகம் கறுக்க

முகில்களும் கல்லெறிகின்றன தகரக் கூரைகளில்

அதன் பேரிரைச்சல் சப்தம் கேட்டு

தலைதெறித்து ஓடுகின்ற அமைதியான ஆறுகளை

நானும் அனுதாபத்துடன் பார்த்துக் கலங்குகின்றேன்


எவருக்கும் தெரியாது மழையின் குறும்பும்

பிறரை வருத்தும் துன்பத்தின் தீவிரமும்

வாட்டம் தீர்க்கின்ற இதமான அன்பும்

மழையின் இரகசியம் நானும் அறிந்திருந்தால்

ஒவ்வொரு துளிகளையும் அனுபவித்தே மகிழ்ந்திருக்கலாம்


கிடைக்கின்றபோது சலிப்பதும் காணாதபோது ஏங்குவதும்

நிலையற்ற மனதின் எதிரொலியாகவே காண்கின்றேன்

நினைக்கின்ற போதெல்லாம் மழையும் கிடைத்துவிட்டால்

துன்பங்கள் நம் அனுபவங்களைத் தொட்டிருக்காது


வெளியே மழையின் ஓசை கேட்கின்றது

மண்வாசம் சுவாசத்தினைத் தொட்டுச் செல்கின்றது

குளிரைப் போத்தியபடி இரசிக்கின்றேன் மழையை

அது விரும்பும்வரை என்னையும் நனைக்கட்டும்


ஜன்ஸி கபூர் - 4.12.2020


Kesavadhas

ஜன்ஸி கபூர் 

இயற்கை நிகழ்வுகளை மழையின் ஒவ்வொரு நகர்வையும் மனித உணர்வுகளௌடு ஒப்பிட்டு படிமங்களாய் பதிய வைத்திருக்கிறார் கவிஞர்!

கவிதையைப் புரிந்துணர்வு செய்யும் முயற்சியில் புதிய சொல்லாக்கங்களும் அரங்கேறுகிறது அழகு!

முகில் நீரோட்டம் கடல் அலைகளை துரத்த அவை அடைக்கலம் தேடி ஊருக்குள் நுழைகிறதாம்!

கனமழையின் நிழலுக்குள் ஒளிகின்றனவாம் உயிர்கள்

அந்த உயிர்களைத் தேடும் உறவுகளின் கதறல்கள் காற்றோடு போராடுகின்றனவாம்!

மழைக்கும் ஈரமான மன்சு இருக்கிறதாம்!

அதனால்தான் வறட்சி கண்டு அடிக்கடி கண்ணீர் சிந்துகிறதாம்!

ஓவெனும் ஒப்பாரி கேட்டு எட்டிப் பார்க்கின்றனவாம் குளங்குட்டைகள்!

தம் நெஞ்சில் அணைத்து ஆறுதல் படுத்துகின்றனவாம்!

பெய்யும் மழையின் ஓலமும் பாயும் நீரும் நிரம்பும் குளங்குட்டைகளும் படிமக் கடலில் புணைகள் ஆகின்றன!

அணைப்பதும் அழிப்பதும் கொடுப்பதும் கெடுப்பதும் மழைக்கு கைவந்தகலை!

நம் கணக்குதான் தப்பாகிப் போகிறது!

என்ன அழகான புரிதல்!

விழுகிற நீர்த்துளிகள் பரிகசிக்கின்றன முன்னறிவிப்புகளை எதிர்வுகூறல்களை..

முன்னாயத்தம் இல்லா தாவரங்களுடான இயற்கை சினத்தில் வானமும் முகமும் கறுக்க முகில்கள் கல்லெறிகின்றனவாம்! கற்பனை விரைந்து பாய்கிறதே விரியனின் விஷமாய்!

அடுத்த நாலைந்து வரிகள் மழையின் தாண்டவம் காட்டும்!

குறும்பு காயப்படுத்தல் அன்பு

என பலமுகம் காட்டுகிறது மழை!

மழை மர்மம் புரியாமையால் ரசிக்க முடியவில்லை!

புரிந்து ஆயத்தமாய் பாதுகாப்பாய் இருந்திட எல்லாவற்றையும் ரசிக்கலாம் மழையின் துளிகள் அதட்டல் மிரட்டல் எல்லாவற்றையும்!

கிடைத்தால் சலிப்பாகும்!

கிடைக்காதபோது ஏக்கம் தரும்!

மனதைப் போலவே மழையும்!

நினைக்கும் போதே எல்லாம் சாத்தியமானால் வாழ்வு சுவாரசியம் இழந்து போகாதோ!

மழையின் ஓசை வெளியில்

மழைதொட்ட மண்ணின்

மணம் நாசியில்

குளிரைப் போர்த்தி என்னை நினைக்கின்றது மழை!

குளிரால் போர்த்தமுடியுமா?

போர்த்தினாலும் நனையுமா!

எதிர்களின் அடுக்கினால் கோட்டையே கட்டிவிடுகிறார் கவிஞர்!

வாழ்த்துகள்!

மழையானுபவம் பேரின்பமே!

*****+

 





 

 



------------------------------------------------------------------------------------------




 புலப்பேன்கொல் புல்லுவன் கொல்லோ
*************************************** 
உணர்வினைத் தழுவிய உத்தம அன்பன்/
உழைத்திடும் விருப்பினில் ஊரில் நீங்கியதால்/
பிரிவின் வலிதனில் பிணியுற்றதே மேனியும்/
பரிவுத் துடிப்பினில் அலைந்ததே கலியினில்/

மெல்லிடை மெலிந்ததே இன்னுயிர் வருந்திட/
அல்லல் மையினால் அணிந்திட்ட கருவளையம்/
துல்லியமாகச் சொல்லிடும் தூய காதலினை/
தென்றல்த் தழுவலால் வடுக்கள் மோதிட்ட/

மென் மேனியின்று சிறகடிக்கின்றதே பரவசத்தில்/
தொட்டவன் நிழலினில் தொடுகின்ற சுகத்தினில்/
பட்டுடலும் காமமுற மயங்குகின்றதே பெண்மையும்/
ஒளியிழந்த விழிக்குள் வீழ்கின்றதே சுடரும்/

வலித்திட்ட உதடும் விரிந்திடும் சிவந்தே/
ஊடலும் கூடலுமாக புணர்வின் துடிப்பினில்/
உயிர்த்தன புன்னகையும் அவனிழல் கண்டவுடன்/
உணர்வினில் இரசித்திட்டாள் கொண்டவன் அன்பினை/

ஜன்ஸி கபூர் - 18.12.2020
 








 



2020/12/03

உதிரும் பூவே

 


விடிகாலைப் பொழுதினில் விருப்பாகும் இதழ்கள்/

மடிகின்ற போதெல்லாம் இழக்கின்றதே இரசிப்பினை/


உதிரும் பூவே உணர்கின்றேன் உண்மையை/


அழகும் இளமையும் அழியும் வாழ்வினில்/

பழகும் அன்பே பண்பினிற் சிறந்ததென/


ஜன்ஸி கபூர் -3.12.2020

 







 

மழைக்கால மேகம்

 



இருண்ட வானின் இறக்கைகளோ மழைமேகம்/

வருணன் வடிவெடுத்து வனப்பாக்குது மண்ணையும்/


துள்ளுகின்ற நீர்த்துளிகள் துயரினைப் போக்கிட/

உள்ளச் செழிப்பினால் உழைப்பும் உயருது/


உழவும் களித்திடும் பெருமழையால்/

கழனிப் பெருவெளியும் களிக்குதே பசுமைக்குள்/


ஜன்ஸி கபூர் - 3.12.2020

 







உறவுகள் நமக்கு உறுதுணையே

வாழ்க்கை என்பது தனிப் புள்ளியல்ல. உணர்வுகளால் சூழப்பட்ட கோலம். இந்த உணர்வுகளை ஆள்வோர் நமது உறவுகளே. நாம் நமது இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளக் கூடிய இதயங்களாக இவர்கள் இருக்கின்றார்கள். நம்மை குறித்த பாதையில் நகர்த்தக் கூடியவர்களாக இவர்கள் இருக்கின்றார்கள். நம்மை எப்பொழுதும் அவதானித்துக் கட்டுப்படுத்தும் சக்தியாக இவ்வுறவுகள் இருப்பதனால் நாம் நமது எல்லைகளை விட்டு வெளியேறாது நம்மை நாமே கட்டுப்படுத்தி வாழக்கூடியவர்களாக இருக்கின்றோம் என்பதே உண்மை. 

உறவுகளை நம்முடன் இணைப்பது அன்பு பாசம் சார்ந்த பிணைப்பே. உண்மை அன்பானது உபத்திரமாக மாறாது. நம்மைச் சூள்கின்ற ஆபத்துக்களைக் கூடத் தடுக்கின்ற சக்தி உண்மை உறவுகளுக்கு உண்டு

சூழ்நிலை மாற்றமில்லாத பொழுதுகள் சலிப்படைந்து விடுகின்றன. இந்நிலையில் வீடு எனும் கூட்டுக்குள் எப்போதும் அடைந்து கிடப்பதும் சலிப்பினையே ஏற்படுத்துகின்றது. இச்சலிப்பே மன அழுத்தத்தினைத் தோற்றுவிக்கின்றது. இந்நிலையில் உறவினர் வீடுகளுக்குச் சென்று உரையாடி அன்பினைப் பகிரும் தொடர்பாடல் மூலமாக ஆரோக்கியமான மனம் உருவாகச் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

வாழ்க்கையில் எதிர்பாராதவிதமாக இழப்புக்கள் ஏற்படுகின்றபோது அவற்றைத் தாங்கிக் கொள்ளமுடியாமற் துவண்டு விடுகின்றோம். இந்நிலையில் நம்மை ஆறுதல்படுத்துகின்ற அன்பான உள்ளங்களாக உறவுகள் மாறுகின்றன. வடிகின்ற கண்ணீரைத் துடைக்கின்ற அக்கரங்கள் நமக்கு உறுதுணைதானே? 

பிறருடனான முரண்பாடுகள் நமக்கு ஏற்படும்போது அப்பிறர் நம்மை விமர்சிப்பவர்களாக மாறி விடுகின்றார்கள். இந்நிலையில் நம்மை விட்டுக்கொடுக்காமல் நமக்காக வாதிடுபவர்களாகவும் பல உறவுகள் மாறி விடுவதை யாரும் மறுக்க முடியாது.

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் அடங்கியிருக்கின்ற ஆற்றல்களே சாதனைகளாக மாற்றமடைகின்றன. நாம் சாதிக்கின்ற பொழுதெல்லாம் நம்மைப் பாராட்டிப் பெருமைப்படுவதுடன் ஊக்கப்படுத்துகின்ற சக்தியாகவும் உறவுகள் மாறி விடுகின்றனர்.

கூட்டுக் குடும்பம் உடைந்து தனிக் குடும்பமாக மாற்றமுறும்போது உறவுகளின் நெருக்கத்தில் தொய்வு காணப்படுகின்றன. இருந்தும் அதே அன்பு காப்பு கரிசனை போன்ற பன்முக உணர்வுகளின் தன்மையில் மாற்றமில்லை என்றே சொல்ல வேண்டும்.

பணக் கஷ்டம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பணம் தந்து உதவ முடியாவிட்டாலும்கூட அப்பணத்தினைப் புரட்டுவதற்கான ஆயிரம் வழிகளை நம்முடன் இணைந்து ஆலோசிப்பவர்களாகவும் இவ் உறவுகள் காணப்படுகின்றனர். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நம்முடன் அவர்கள் இணைந்திருக்கின்றார்கள் எனும் உணர்வே பாரிய சிக்கல்களிலிருந்து நாம் மீண்டெழுவதற்கான திருப்தியைத் தருகின்றது.

நம்மையுமறியாமல் நாம் தவறுகள் செய்கின்றபோது உரிமையுடன் தட்டிக் கேட்பவர்களாகவும் நமது பிழைகளைத் தைரியமாகச் சுட்டிக் காட்டுபவர்களாகவும் இவ்வுறவுகள் இணைந்திருப்பதனால் நமது ஒழுக்கம் மீறப்படாமல் பேணப்படுகின்றது.

எனது தந்தை மரணித்தபோது இடிந்துபோய் செயலற்றுக் கிடந்தோம். சகல காரியங்களையும் உறவுகளே செய்து முடித்தார்கள். இன்பமோ துன்பமோ ஒரு நிகழ்வினைக் குறையின்றி நிகழ்த்துவதற்கு கட்டாயம் உறவுகளின் அனுசரிப்பும் பக்கபலமும் தேவைப்படுகின்றது .  

இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போது வீடு வாசல்களை இழந்து வெளியேறும்போது நம்மை தாங்கிக் கொள்ளும் மனைகள் உறவுகளுடையதே. எமது ஊரில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக சொத்து எல்லாவற்றையும் இழந்து அயலூருக்கு அகதிகளாகச் சென்றோம். எம்மை அனுசரித்து ஆதரவாக இருந்தவர்கள் தாயின் உடன்பிறப்புக்களே. நீண்டகாலமாக நாம் அவர்களின் தயவில் வாழ முடியாவிட்டாலும்கூட எல்லாவற்றையும் இழக்கும்போது ஏற்படுகின்ற அந்த அதிர்ச்சிக் கணங்களிலிருந்து நம்மை மீட்டெடுத்து படிப்படியாக இயல்பு நிலைகளுக்கு நம்மை மீட்டெடுப்பவர்களாகவும் அவர்கள் விளங்குகின்றார்கள்.

3.12.2020