2021/04/22
உதிரிப்பூக்கள்
இடைவிடா அடைமழை
படர்கின்ற வெயிற் பூக்களை யறுத்திடவே/
இடர் மழையோ யிங்கு வெள்ளமாக/
வீழ்கின்ற துளிகளில் உதிர்ந்தோடும் மலர்களும்/
அவிழ்கின்ற மண் முடிச்சுக்களின் துளைகளும்/
வலியுடன் போராடி கரைந்தோடுகின்றன வலிமையுடன்/
சதைகளைத் துளைக்கும் ஈர வீரியமும்/
விதைக்கின்றதே குளிரினை உணர்வும் சிலிர்க்கின்றதே/
சாலையோரம் நனைந்தே வீசுகின்ற காற்றும்/
சொல்லிடுமோ கலைந்தோடும் கார்மேக இரகசியத்தினை/
மனசுக்குள் சாரலடிக்கும் மேகவூற்றும் பேரின்பமே/
ஜன்ஸி கபூர்
சித்திரவதைப் பார்வை
பெண்மைக்குள் தீயூற்றும் கலிகாலம் அணைப்பினிலே/
தாய்மையும் சூடுகின்றதே முட்கிரீடம் உயிரினிலே/
பருவங்கள் கடந்திடாத போதும் கரையேற்றும்/
பாதகங்கள் பாரினிலே அரங்கேற்றும் அவலத்தினை/
படிப்பேற்றாது அடுப்பூதும் அநுபவமதைக் கற்றிடவே/
பாதையினை வகுத்திடுவார் ஏழ்மைக்கும் கருணையில்லை/
இருமனமும் கலக்கின்ற திருமண பந்தத்திலே/
விரும்பிடுவார் சீதனத்தை சிதைந்திடுமே இல்லறமும்/
கொந்தளிக்கின்ற காமத்தினால் வல்லுறுக்கள் வட்டமிட்டே/
கொன்றொழிக்கும் உணர்வினையே வன்புணர்வும் சித்திரவதைக்குள்/
மங்கையராகப் பிறந்தோர் மாதவம் செய்தோரென/
முழங்கிடுவோரும் அறுக்கின்றார் அணங்கின் அடையாளங்களை/
வலிமைக்குள் வலி திணிக்குமிந்த வாழ்க்கை/
வேண்டாமே பாவைக்குள்ளோ சித்திரவதைப் பார்வை/
சிதறுகின்ற கனவுகளைப் பொறுக்குகின்ற விதியது/
அழியட்டும் அன்புக்குள் அவளுலகம் ஆளட்டும்/
ஜன்ஸி கபூர்