About Me

2021/04/22

சித்திரவதைப் பார்வை



பெண்மைக்குள் தீயூற்றும் கலிகாலம் அணைப்பினிலே/

தாய்மையும் சூடுகின்றதே முட்கிரீடம் உயிரினிலே/

பருவங்கள் கடந்திடாத போதும் கரையேற்றும்/

பாதகங்கள் பாரினிலே அரங்கேற்றும் அவலத்தினை/


படிப்பேற்றாது அடுப்பூதும் அநுபவமதைக் கற்றிடவே/

பாதையினை வகுத்திடுவார் ஏழ்மைக்கும் கருணையில்லை/

இருமனமும் கலக்கின்ற திருமண பந்தத்திலே/

விரும்பிடுவார் சீதனத்தை சிதைந்திடுமே இல்லறமும்/


கொந்தளிக்கின்ற காமத்தினால் வல்லுறுக்கள் வட்டமிட்டே/

கொன்றொழிக்கும் உணர்வினையே வன்புணர்வும் சித்திரவதைக்குள்/

மங்கையராகப் பிறந்தோர் மாதவம் செய்தோரென/

முழங்கிடுவோரும் அறுக்கின்றார் அணங்கின் அடையாளங்களை/


வலிமைக்குள் வலி திணிக்குமிந்த வாழ்க்கை/

வேண்டாமே பாவைக்குள்ளோ சித்திரவதைப் பார்வை/

சிதறுகின்ற கனவுகளைப் பொறுக்குகின்ற விதியது/

அழியட்டும் அன்புக்குள் அவளுலகம் ஆளட்டும்/


ஜன்ஸி கபூர்  

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!