About Me

2012/08/17

மழை நின்ற ஓர் பொழுதில்


காலை பெய்த சிறு மழையில்
சாலையோரம் வியர்த்திருக்கும்.!

வானவில்லுச்சாறும் கொஞ்சம்
வீதியோரம் சிதறிச் சிரிக்கும் !

வண்ணம் தொலைக்கா வண்ணப்பூச்சி
சிறகடித்து தம் மீரம் விரட்டும் !

முன்றல் நிரப்பும் மண்வாசனை
மூச்சுக்காற்றின் பேச்சாய் நிரம்பும் !

வீட்டோரம் நாட்டமிட்ட சின்னச்சிட்டு
வெட்ட வெளியில்   பறந்திடத் துடிக்கும் !

மெல்லக் குடை விரிக்கும் குள்ளக்காளான்
அந்தரித்து காற்றில் சுற்றிப் பார்க்கும்!

தண்ணீர்ச்சிறையில்  வீழும் பூவோ..
வண்ணமிழந்து சகதியாய் முகங்காட்டும்!

எங்கிருந்தோ சங்கூதும் கருந்தவளை
இங்கிதமின்றி நிசப்தத்தை விரட்டும்!

இத்தனைக்கும் நானோ........!!

வாசிக்கத் தொடங்குவேன்.........
ஈரம் சொட்டும்  இயற்கையழகை வாஞ்சையாய் !


-Jancy Caffoor -

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!