About Me

Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

2012/08/11

முகநூலும் தவறுகளும்


உலகமானது நவீன தொழினுட்பத் தொடர்பாடல் மூலமாக கைக்குள் சுருங்கிக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் முகநூலின் வளர்ச்சியும் நம்முள் ஏறுமுகம் காட்டி நிற்கின்றது. நம்முன்னால் ஒருவரின் முகநூலின் பயணத்தடங்களாக அடையாளப்படுத்தி நிற்பவை அவர்கள் வெளிப்படுத்தும் பதிவுகளும், பின்னூட்டங்களுமே!

ஒருவர் மனதை அறியவேண்டுமானால் அவர்கள் அடிக்கடி பிரயோகிக்கும் வார்த்தைகளை அவதானிக்க வேண்டும். ஏனெனில் வார்த்தைகள் என்பது ஒருவரின் மனவோட்டத்தின் பிரதிபலிப்பே!

முகநூலானது ஓர் திறந்த புத்தகம். யார் வேண்டுமானாலும் கட்டுப்பாடின்றி உட் செல்லலாம். நண்பர்கள் வடிவில் தீங்கு பயக்கும் உளவாளிகளும் நம்முலகில் புகுந்து தீங்கினை நமக்குள் எத்திவைக்கலாம். ஆனால் மறுபுறம் தேச எல்லைகள் கடந்து பல திசைகளிலும், பல நாடுகளிலும் வாழும் பல மனிதர்களின் கரங்களை பேதமைகள் களைந்து நட்புடன் இணைக்கும் பாலமாகவும் முகநூல் எனும் இணையத்தளம் விளங்குகின்றது. தொலைவில் வாழும் முகம் நோக்காத பலர் அக எண்ணங்களின் ஒருமைப்பாட்டுடன் ஆரோக்கியமாக இங்கே ஒன்றிணைகின்றனர். இந்நட்புக்களில் வெகுசிலவே வாழ்வின் கடைசிக் காலங்கள் வரை தொடர்ந்துவருகின்றன.

எந்நட்பாயினும் அதன் செழுமைக்கு புரிந்துணர்வு மிகவும் அவசியம். நட்பும், அன்பும் அதிகரித்த நிலையில் புரிந்துணர்வின்றி பிரயோகிக்கப்படும் சிறுவார்த்தைகளாயினும் மன மகிழ்வைக் காயப்படுத்தி, நட்பை அழவைக்கக் கூடியவை.

 "கிட்டவிருந்தால் முட்டப் பகை"

இது நம் வாழ்வின் அனுபவங்களால் பிரயோகிக்கப்பட்ட முதுபழமொழி ....

பழமொழிகள் யாவும் மறுக்கப்படாத உண்மைகள்..முகநூலில் நாம் நட்பின் ஈர்ப்பால் அடிக்கடி  தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் செய்திப் பரிமாற்றம் காரணமாக சாதாரணமான இருவர்  நட்பின் உலகிற்குள் வசீகரத்துடன் தள்ளப்படலாம். நண்பர்கள் காதலர்களாக மாற்றப்படலாம். அவ்வாறே அதிக சுதந்திரமான புரிந்துணர்வில்லாத கருத்தாடல்களின் மூலமாக நல்ல நண்பர்களுக்கிடையே மௌனமாகத் தோன்றும் மனக்கசப்பு, பகைமை மூலம் இடைவெளியையும் ஏற்படுத்தப்படலாம்.

அன்பான நட்பினர் பிரிவையும் வென்று நிற்பர் என்பது பொதுமொழி. ஆனால் இவை வெறும் சொல்லாடல்களுக்குப் பொருந்தினாலும். நிஜ நட்பில் அதிக அன்பே எதிர்பார்ப்பாக அமைந்து மனவேதனைக்கு வழிகோலும்.

முகநூல் நட்பை உறுதிப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டுமாயின் அடிக்கடி குறித்தவொருவருடனான  அநாவசிய செய்திப்பரிமாற்றம் செய்வதைத் தவிர்த்தல் வேண்டும், உண்மையில் முகநூல் "இன்பாக்ஸ்" என்பது விரோதத்தை வளர்க்கக் கூடிய அழுக்குக் கூடை முகநூலில் அவ்வவ்போது இடப்படும் பதிவுகளுக்கான விருப்புக்களையும், வெளிப்படையான நல்ல ஏற்புடைய பின்னூட்டங்களையும் இடுவது கூட நல்ல நட்புக்கான வழிமொழிதல்களே!  தனிப்பட்ட  செய்தியாடல்களைத் தவிர்த்து நட்பைக் காக்கலாம்.

சில நிகழ்வுகள் தரும் படிப்பினைகள் நமக்கு துன்பம் தருபவையாக ஆரம்பத்தில் இருந்தாலும் கூட அவை நம் நிம்மதியை வார்க்கும் நிகழ்வுகளே என்பது காலம் நமக்குள் காட்டி நிற்கும் உண்மைகளாகின்றன. சில மாற்றங்கள் ஏமாற்றமாக மாற்றப்படுவதை தவிர்க்க "இன்பாக்ஸ்" செயலிழக்கப்படுவது அவசியம்.

மேலும் முகநூல் பலர் சங்கமிக்கின்ற பொதுச்சந்தை. இவற்றில் பல நல்ல விடயங்கள் பரிமாறப்படும் அதே நேரம் தீமைகளும் பரிமாறப்படுகின்றன. "போலி" முகங்கள் பல இங்கு உலாவுவதற்குக் காரணம் ஒருவர் எத்தனை முகநூல் பக்கங்களையும்  உருவாக்கலாம் எனும் தாராளமயக் கொள்கை யாக்கமாகும். ஈமெயில் முகவரி மட்டுமேயிருந்தால் போதும் முகநூல் உருவாக்கத்திற்கு தடையேதுமில்லை. ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட முகநூல்களை உருவாக்குவதை கட்டுப்படுத்தினால் தான் போலிகள் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்படலாம்.

மேலும் முகநூலில் அவதானிக்கப்படும் சில தவறுகளாக பின்வருவன இனங்காணப்பட்டுள்ளன. அவற்றைத் தவிர்க்குமாறு வலைப்பின்னல் துறைவல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


தவறு 1 -சுலபமான ஓர் கடவுச்சீட்டைப் பயன்படுத்தல் (Using a Weak Password)
----------------------------------------------------------------------------
பெயர்கள், சுலபமான வார்த்தைகள், பிறந்த திகதி, இலக்கங்கள் என்பவற்றைக் கடவுச்சொற்களாகப் பயன்படுத்தும் போது அவற்றை விஷமிகள் இலகுவில் திருடி, நம் பெயரில் அநாவசியமான முறைகேடான பக்கங்களை உருவாக்கி உலாவ விடுவார்கள். இவர்கள் இறைவனுக்கே அஞ்சாத மிருகங்கள். மனிதர்களை மதிக்கவோ, மனிதாபிமானத்தை வெளிப்படுத்தவோ மாட்டார்கள். இவர்கள் நமது அழகிய முகநூல் பக்கங்களுக்குள் உலாவுவதை தடுக்க முறையான பாதுகாப்பு வேலியை திருடப்படாத கடவுச்சீட்டுக்கள் மூலம் உருவாக்குதல் வேண்டும். நமது கடவுச்சீட்டுக்களில் பெரிய மற்றும் சிறிய எழுத்துக்கள், எண்கள் என்பவற்றையும் ஒருமித்த நிலையில் கலவையாக்கியிடல் வேண்டும்.

தவறு 2 - நமது பிறந்த திகதியை முழுமையாக வெளிவிடுதல்
-------------------------------------------------------------------------------
(Leaving Our Full Birth Date in Our Profile)
ஏனெனில் இத் தகவல்களைக் கொண்டு வங்கிக் கணக்குகளைக் கூடத் திருடத் தயாராகவே இருப்பார்கள் இம் முகநூல்த் திருடர்கள்........

தவறு 3 - சுய பாதுகாப்பு வாய்ப்புக்களை அலட்சியப்படுத்துதல்
(Overlooking Useful Privacy Controls)
-------------------------------------------------------------------------------
நமது தொடர்புகளை எப்போதும் நண்பர்கள் மட்டும் எனும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். இதில் சொந்த, குடும்ப, தொழில் விபரங்கள், தொலைபேசி இலக்கம், முகவரி என்பன காட்சிப்படுத்துவது தவிர்க்கப்படல் வேண்டும்.

தவறு 4 :-நமது உறவினர், குழந்தைகளின் பெயரை அடிக்கடி பயன்படுத்துதல்
--------------------------------------------------------------------------------
தவறு 5 :-நமது நிகழ்கால செயல்களைப் பற்றிக் குறிப்பிடுதல்.
--------------------------------------------------------------------------------
உதாரணமாக நான் வெளியூருக்குச் செல்கின்றேன். இந்த திகதியில் வீட்டுக்கு திரும்புகின்றேன் போன்ற தகவல்கள் இடப்படுவதைத் தவிர்த்தல்.

தவறு 6 : கூகுள் போன்ற தேடு இயந்திரங்களின் பார்வையில் நம் பெயர்கள் சேரச் செய்தல்..
---------------------------------------------------------------------------------
இதனால் அறிமுகமில்லாதவர்களுக்கும் நமது பெயர் விபரங்கள் சென்றடையக் கூடிய வாய்ப்புண்டாகும். எனவே பேஸ்புக்கின் சுய பாதுகாப்பு பகுதிக்குள் இருக்கும் தேடுதல் பகுதியில் (Search section of Facebook's Privacy controls)
நண்பர்கள் மட்டும் என்பதை மட்டும் தேர்ந்தெடுத்தல்.

தவறு 7 : _ மேற்பார்வையில்லாமல் சிறுபிள்ளைகள் முகநூல் பயன்படுத்த அனுமதித்தல்.
----------------------------------------------------------------------------------
மேலே கூறப்பட்ட விடயங்கள்  தவறுகளாகக் அனுபவசாலிகளால் குறிப்பிடப்பட்டாலும் கூட அவை பாதிப்பன பெண்களைத் தான். ஏனெனில் ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி உல்லாசமாய், உற்சாகமாய் உலாவும் கலைக்கூடம், இலக்கிய இல்லம், விளையாட்டுத்தளம், அரட்டை அரங்கம் என எல்லாப்  பரிமாணங்களும் இந்த முகநூலில்தான் சங்கமிக்கின்றன. ஆண்கள் எதிரிகளின் விமர்சனங்களால் பாதிக்கப்படும் போது அவர்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றார்கள். ஆனால் பெண்கள் பாதிக்கப்படும் போது அவர்கள் குடும்பம், சமூகம் அனைத்துமே சகதிக்குள் அமிழ்கின்றன.

முகநூல் எனும் தொலைநூலில் நல்ல விடயங்களை மட்டுமே நாம் வாசிக்க முயற்சிக்கும் போது நம்மைச் சூழவெழும் இந்த இடர்பாடுகளைத் தவிர்ப்பது நமது கட்டாயக் கடமையாகும். நாம் இங்கு சஞ்சரிக்கப்போகும் சொற்ப நேரத்திற்குள் நமக்கிடையே மன அழுத்தங்களையும், துன்பங்களையும் இம் முகநூல் தருமாயின், நாம் இதனை விட்டு நகர்ந்து விடுவது நலம் பயக்கும். எனினும் இயன்றவரை நம்மைச் சூழ வீசப்படும் மனஅழுத்தக் காரணிகளைத் கண்டறிந்து, அவற்றைக் களைபிடுங்க பழக்கப்படுவோமாயின் நம் இயல்பான நடமாட்டம் நமக்குமிங்கே வசந்தத்துடன் கைகுலுக்கும்.

தவறுகளைத் திருத்துவோம்.......அது நம் நிம்மதிக்கான அறைகூவல் !



2012/08/09

பகை வேண்டும் புகையில்!


அழகான வாழ்க்கையின் ஆனந்தம் ஆளுக்காள் வேறுபடுகின்றது. நம் வாழ்வின் ஆரோக்கியம் நம்மால் சீரழிக்கப்படும் போது துயரும், நிம்மதியின்மையும் நமது சொத்தாகின்றது. அற்பமான சந்தோசத்தில் தம் ஆயுளை இழக்கும் பலர் புகையிலையுடன் நட்பைப் பேணி வருவது ஆரோக்கியமற்ற செயலே!

"நிச்சயமாக அல்லாஹ் , ஒருவர் தன்னைத் தானே மாற்றிக் கொள்ளாத வரை அவர்களை மாற்ற மாட்டான்" ( திருக்குர்ஆன் 13:11)

எனவே அழிவுப் பாதையில் நாம் பயணிக்கும் போது , அதனை உணர்ந்து வாழ்வை திசை திருப்பி நம்மை நாமே  பாதுகாத்துக் கொள்ள  வேண்டும். மனிதனை அழிக்கும் சக்தி வாய்ந்த பொருட்களுள் புகையிலையும் ஒன்றாகும்.

ஆரம்ப காலத்தில் அமெரிக்கர்கள் புகையிலையை காயங்களைச் சுத்தப்படுத்தவும், தொற்று நீக்கவும் பயன்படுத்தினர். 1847 ல் "பிலிப் மொரிஸ்" என்பவரே புகையிலையைப் பயன்படுத்தி சிகரெட் தயாரித்தார்.


1953 ல் டாக்டர் எமல் என்பவர் சிகரெட் பாவனையால் புற்றுநோய் ஏற்படுவதை கண்டறிந்தார். இதனைத் தொடர்ந்து 1964 களில் அமெரிக்க அரசு புகைபிடிப்பதால் சுகாதாரத்திற்கு கேடு எனும் நோக்கில் சிகரெட் விற்பனைக்கெதிராக சட்டம் இயற்றியது. 

1988 ம் ஆண்டு பின்லாந்தும்,1994 ல் பிரான்சும் புகையிலை விளம்பரத்துக்குத் தடை விதித்தது.

மனிதனுக்கு மரணத்தை ஏற்படுத்தும் முக்கிய இரண்டாவது காரணிகளுள் ஒன்றாக புகையிலை விளங்குகின்றது.

வெற்றிலையுடனும், மூக்குப் பொடியுடனும் சேர்த்து பாவிக்கப்படும் புகையிலையை பீடி, சுருட்டு, சிகரெட் போன்ற வடிவங்களிலும் பயன்படுத்துகின்றனர்.

புகையிலை என்றதும் நம் நினைவுக்கு வரும் சிகரெட்டில் நிக்கோடின் எனும் நச்சுப்பொருள் உண்டு. இப் பொருளுடன் மேலதிகமாக பியூட்டேன், காட்மியம், ஸ்டியரிக் ஆசிக் , அமோனியா , நாப்தலமைன், போலோனியம் போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களும் உடலோடு சேர்கின்றன. இந்நச்சுப் பொருட்களுள் பல வெடிகுண்டு செய்யப் பயன்படுபவை. எனவே உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் சிகரெட்டும் ஓர் வெடிகுண்டே! இதிலுள்ள 4000 இரசாயனப் பொருட்களுள் 43 இரசாயனப் பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை. புற்றுநோயானது சுவாசப் பாதை வழியே கடும் தொற்றுதலை ஏற்படுத்துகின்றது.

புகையிலையிலுள்ள 4000 ற்கு மேற்பட்ட நச்சுப்புகையை சுவாசிக்கும் பலர் ஒரு நிமிடத்துக்கு 6 பேர் எனும் வீதத்தில் இறந்து போகின்றார்கள். ஆண்டுக்கு 60 லட்சத்துக்கும் மேல் பலியாகும் இப் புகையிலைப் பாவனைக்கு அதிகம் பலியாகுவது வளர்முக நாட்டவர்களே!

வேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தம், நண்பர்களின் இணைவு,ஸ்டைல், காதல் தோல்வி, தனிமை, மகிழ்ச்சி வாழ்க்கைப்பிரச்சினைகளை சமாளிக்க முடியாமை, பொழுதுபோக்கு எனத் தொடரும் சாதாரண புகைபிடிக்கும் பழக்கம் காலப்போக்கில் அவர்களை நிரந்தரக்குடிப்பழக்கத்திற்கும்  அடிமையாக்குகின்றது. 

புகை பிடிப்பதற்கான காரணங்களை ஆய்வு செய்ததில் பின்வரும்  விகிதப் பெறுபேறுகள் கிடைத்துள்ளன

மகிழ்ச்சிக்காக                           - 22 %
பொழுது போக்குக்காக          - 8.2 %
விடுபட முடியாத காரணம்  - 17 %
பரீட்சித்துப் பார்க்க                 -  8.7 %
தனிமையைப் போக்க            - 10.5 %
மன அழுத்தம்                            -  10 %
பிரச்சினை                                   - 15 %



புகைப்பழக்கத்தின் மூலம் அனைத்து உறுப்புக்களும் பாதிக்கப்படுகின்றன. மாரடைப்பு, நுரையீரல்ப்புற்று, இரத்தக் கொதிப்பு, ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும், வீரியக்குறைவும் போன்ற பல விளைவுகள் ஏற்படுகின்றன. அத்துடன் புகை பிடிப்பவர்களின் குழந்தைகளுக்கு சளி, இருமல், மூச்சுத் திணறல் என்பவையும் ஏற்படலாம். ஒருவரின் புகைபிடிக்கும் பழக்கத்தினால் அவர் மட்டுமல்ல, அவரது குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். "புகை பிடிப்பது உடல நலத்திற்கு கேடு" என எச்சரிக்கை விடப்பட்டும் கூட அதனைப் பாவிப்போர் தொகை குறைந்தபாடில்லை.

நிறுத்தும் வழிகள்
--------------------------
உடனடியாக இதனை கட்டுப்படுத்துவது கடினம் தான். ஏனென்றால் தொடர்ந்து ஒரு செயல் செய்யப்படும் போது அது பழக்கமாக மாற்றமடைகின்றது. இப் பழக்கத்தை உடனடியாக முற்றாக நிறுத்த மனவுறுதியுடன் கூடிய கட்டுப்பாட்டு பயிற்சி அவசியம். இருந்தாலும் கூட "முயன்றால் ஆகாதது ஒன்றுமில்லை." என்பதற்கேற்ப  புகை பிடித்தலின் தீங்கின் பால் மனதை நிலைப்படுத்தி அதன் விளைவுகளை ஆராய்ந்து உணர்ந்து, மனவுறுதியுடன் அந்த ஆர்வத்தைத் தடுக்க வேண்டும். புகைக்கும் ஆர்வம் ஏற்படும் போதெல்லாம் வாயில் மெல்லும் சுவிங்கம், சாக்லேட், நீர், எலக்ட்ரானிக் சிகரெட், வாயில் ஒட்டிக் கொள்ளும் நிகோட்டின் கலந்த கம், பேஸ்ட் என்பவற்றைப் பயன்படுத்தலாம். படிப்படியாகக் கட்டுப்படுத்துவது தவறு ஓரேயடியாக அதனை நிறுத்த முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு புகை பிடிப்பதனை நிறுத்தினால்
----------------------------------------------------------
20 நிமிடங்களில் புகை பிடிப்பவரது இரத்தஅழுத்தம், இரத்தவோட்டம் போன்றவை  சீராகும்.  8 மணி நேரத்தில் இரத்தத்திலுள்ள ஒட்சிசன், காபனீரொட்சைட்டு போன்ற சுவாசத்துடன் தொடர்பான வாயுக்களினளவு சீரடையும். 72 மணித்தியாலயத்தில் இச்செயற்பாடு காரணமாக நுரையீரல் உள்ளிட்ட சுவாசப் பாதையிலுள்ள பகுதிகள் அனைத்தும் சுத்திகரிக்கப்பட ஆரம்பிக்கப்படும் .சுவாசிக்கும் திறனும் அதிகரிக்கப்படும். 9 மாதங்களில் இருமல், சளி என்பவற்றின் தாக்கமும் குறைகின்றது.ஓராண்டின் பின்னர்  மாரடைப்பு படிப்படியாக குறைய ஆரம்பிக்கின்றது, 10 வருடங்களின் பின்னர் சுவாசப் புற்று நோய் அறவேயில்லாமற் போகின்றது.

இலங்கை , இந்தியா போன்ற நம் நாடுகளில் புகைபிடிக்கும் பழக்கம் பெரும்பாலும் ஆண்களிடையேதான்  காணப்படுகின்றது.அரிதாகவே பெண்களிற் காணப்படுகின்றது. பலசிந்தனைச் சிற்பிகள் கூட இப் பழக்கத்தால் இன்று சீரழிந்து காணப்படுகின்றனர். தினந்தோறும் உழைக்கும் பணத்தில் ஓர் பகுதியை இதற்கென செலவளித்து உபாதைகளையும், துன்பத்தையும் விலை கொடுத்து வாங்கும் பழக்கம் இன்றைய நம் இளைஞர்களிடத்தில் அதிகமாக காணப்படுகின்றது. இன்று புகைப்பிடிக்காத இளைஞர்களின் எண்ணிக்கை மிக அரிதாகவே காணப்படுகின்றது. விருந்துகளில் ஒன்று சேரும் இளைஞர்கள் புகைபிடித்தலையும், குடிப்பழக்கத்தையும் தம் அம்சமாக பெரும்பாலும் சேர்த்திருப்பார் என்பது மறுப்பதற்கில்லை.

புகையிலை நிறுவனங்களின் வர்த்தக தந்திரோபாயங்களும், புகைத்தலின் கேடு தொடர்பாக அக்கறைப்படுத்தப்படாத மனநிலையும் இன்றைய நவீன உலகில் புகை பிடிக்கும் பாவனையை அதிகரிக்கச் செய்துள்ளன. மறுபுறம் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையில் 170 நாடுகள் புகையிலைக் கட்டுப்பாட்டினை நடைமுறைப்படுத்தும் வகையில் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.அரசானது விநியோகம், விளம்பரம் தொடர்பாக உரிய நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்களையும் மேற்கொண்டுள்ளன.

ஆனால் புகைத்தலைத் தடை செய்தல் எனும் மிகப்பெரிய கனவினை நிறைவேற்றும் கடமையினை ஒவ்வொரு நாடும் உணர்ந்தாலும் கூட, இதன் மூலம் கிடைக்கும் பொருளாதாரத்தை இழப்பதாக இல்லை. சிகரெட் போன்ற பொருட்களுக்கு அதிக வரி அறிவித்தும் கூட, அதிக விலை கொடுத்து வாங்கி தம்மை சீரழிக்க பலர் தயாராகவே உள்ளனர். எனினும் பாவனையைக் கட்டுப்படுத்தும் வெற்றி பொதுமக்களின் அர்ப்பணிப்பு மிகு உணர்ந்து கொள்ளலிலேயே தங்கியுள்ளது.

இவ்வாறாக புகை பிடிப்பதனால் ஏற்படும் தீங்குகளை மக்கள் முன் எடுத்துக் காட்டி அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் மே மாதம் 31 ம் திகதி " சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக" அறிவித்துள்ளது புகையிலையினால் ஏற்படும் ஆபத்துக்களையும், அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே இத்தினத்தின் நோக்கமாகும். 

.புகையிலையால் கிடைக்கும் வருமானத்தை விட புகையிலை பாதிப்பினால் ஏற்படும் நோய்களைத் தீர்ப்பதற்கே அதிகளவு பணம் அரசுக்குச் செலவாகின்றது. தனி மனிதன் சமூகமாக,  சமூகத்தினரோ ஒன்றிணைந்து நாட்டின் அங்கத்தவராகின்றனர் . எனவே தனி மனித ஆகேகியமின்மையால் நாட்டின் நலமும் பாதிக்கப்படுகின்றது. 

நம்மவர்கள் சிந்திப்பார்களா.......புகையின் மீது பகை கொண்டு அதனை நிந்திப்பார்களா! காலம் பதில் சொல்லும் !


2012/08/07

67 வது ஹிரோஷிமா நினைவு தினம்


ஆகஸ்ட் - 6 - ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சின் 67 வது நினைவு தினமாகும்.

கொல்லப்பட்ட அம் மக்களுக்கான மௌன அஞ்சலியை எனது வலைப்பூ செலுத்தியவாறு, அப் பின்னணியை இன்று என் நினைவகம் ஏந்தி பகிர்ந்து  கொள்கின்றது.

புவிச்சுற்றுகை, புவிச்சுழற்சியினால் நாட்கள் வேகமாகப் பயணிக்கின்ற போதிலும் நம் ஆழ்  மனதில் ஆணியறையப்பட்ட ஞாபகங்கள் யாவும் உதிர்ந்து விடாமல் பத்திரப்படுத்தப்பட்டு ஏற்ற உரிய காலங்களில் விழிக்கின்றன.  இதுவே நியதி !

 பொதுவாக மானிட வாழ்க்கை போராட்டங்களால் சூழப்பட்டுள்ளன. அப் போராட்டங்களுக்கான தீர்வுகளும் பல்வேறு அணுகுமுறைகளில் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆனால் நாடுகளின் ஆட்சித்தலைமைகள் தமது வல்லமையை உலகில் நிலைநாட்டுவதற்காகவும், மண்ணாசை, பொருளாதாரப்  பேராசை போன்ற தீய குணங்களால் ஆட்பட்டமையினாலும், நாடுகளுக்களுக்கிடையே போர் முரசுகளைக் கொட்டி போராடும் அநாச்சாரம்  வரலாறாகி உலகக் கோளத்தில் கறைப் படிவுகளுடன் படிந்து கிடக்கின்றன.
அரசபீடங்களில் முடிசூட்டிக் கொண்டோர் தம் ஆதிக்கக்கரங்களின் வலுவூட்டலுக்காக  அப்பாவி மக்களைப் பலியாக்கி தம் ஆட்சிக் கிரீடங்களை அழகுபடுத்தி  வந்தமை, வருகின்றமை மறக்கப்பட முடியாத கசப்பான உண்மையாகும்.

 1  செப்ரெம்பர் 1939 ம் ஆண்டு தொடக்கம் 1945 ம் ஆண்டு செப்ரெம்பர் 2 ம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடைபெற்ற பாரிய உலகப்போரே இரண்டாம் உலகப் போராகக் கருதப்படுகின்றது.

இது ஐரோப்பா, பசுபிக், தெற்கு-கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, மத்திய தரைக்கடல், ஆபிரிக்கா போன்ற இடங்களை மையங் கொண்டன.


இதில் அச்சு நாடுகள், நேச நாடுகள் எனும் ஈரணியில் உலக நாடுகள் சில பிரிந்து போரிட்டன. இப்போரில் 10 கோடி இராணுவத்தினர் ஈடுபட்டனர். இப் போரிலீடுபட்ட நாடுகள் தமது சகல பொருளாதாரம், உற்பத்தி, தொழில் என்பவற்றை போர்க்களத்திலீடுபடுத்தியே போரிட்டதால் அதுவரை உலகம் கண்டிராத பாரிய அளவிலான உயிரழிவு இப் போரால் ஏற்படுத்தப்பட்டது.


1939 செப்ரெம்பர் 1 ல் நாசி ஜெர்மனியின் போலந்துப் படையெடுப்புடன் இப்போர் தொடங்கியது. பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள் நேச அணியையும், நாசி ஜெர்மனி, பாசிச இத்தாலி என்பவை இணைந்து அச்சு அணியையும் உருவாக்கின. சீனாவுடன் போர் தொடுத்துக் கொண்டிருந்த ஜப்பானும் அச்சு அணியில் இணைந்து இரண்டாம் உலகப் போரில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டது.

 1939-1941 வரையிலான காலப்பகுதியில் பிரிட்டனைத் தவிர மேற்கு ஐரோப்பிய நாடுகள் அச்சு அணியால் கைப்பற்றப்பட்டன. பின்னர் வடக்கு ஆபிரிக்காவை தம் வசப்படுத்த அச்சு அணி முயன்றன. சோவியத் ஒன்றியத்தின் மீதும் 1941 ஜூனில் அச்சு அணி போர் தொடுத்ததால் சோவியத் ரஷ்யா நேச அணியில் தன்னை இணைத்தவாறு போரிலீடுபட்டது.

ஜப்பான் படைகள் தென்கிழக்காசியாவின் பல பகுதியைக் கைப்பற்றி கிழக்கிந்தியாவின் எல்லை வரை முன்னேறிக் கொண்டிருந்தது. தானும் ஓர் வல்லரசாக மாற வேண்டுமென்ற முனைப்பில் ஜப்பான் 1941 டிசம்பரில்  பசுபிக் சமுத்திரத்தின் "பேர்ள்"  துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க கப்பலை மூழ்கடித்ததன் மூலம் அதுவரை வெறும் பார்வையாளராக இருந்த ஐக்கிய அமெரிக்காவைச் சீண்டி,  இரண்டாம் போருக்குள் அது நுழைய வழியமைத்துக் கொடுத்தது. இரண்டாம் உலகப் போரில் உள் நுழைந்ததால் அமெரிக்காவும் நேச நாட்டுப் படையணியுடன் கூட்டுச் சேர்ந்தது.

1942 ம் ஆண்டு வரை அச்சு நாடுகளுக்கு சாதகமாக இருந்த போர் நிலைமை , அமெரிக்காவின் பிரவேசத்தைத் தொடர்ந்து மாற்றமடையத் தொடங்கியது. அச்சுப்அணியின் மேலதிக நகர்வு சோவியத் படையால் தடுத்து நிறுத்தப்பட்டது. வடக்கு ஆபிரிக்காவிலும் அச்சு படையணி பின்வாங்கியது. பசுபிக் கடலோரத்தில் நேச நாடுகள் இழந்த பகுதிகளை அமெரிக்கா மீண்டும் கைப்பற்றத் தொடங்கியது.

1943 ல் நேச நாட்டுப் படையெடுப்பால் இத்தாலி சரணடைந்தது.1944ல் மேற்கு ஐரோப்பாவை மீட்கும் பணிக்கான போரில் நேச நாடுகள் கடல் மார்க்கமாக ஈடுபட்டன. கிழக்குப்புறமாக சோவியத் படையும், மேற்குப் புறமாக பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா நேச அணிகளும் கூட்டாகச் சேர்ந்து ஜெர்மனியைத் தாக்கத் தொடங்கின. ஈராண்டுகள் தாக்குதலின் பின்னர் நாசி ஜெர்மனும் 1945 ம் ஆண்டு மே மாதம் 8 ந் திகதி சரணடைந்தது. அதே நாளில் "சரண் ஆவணம்" ஜெர்மனால் கையெழுத்திடப்பட்டது.

ஆனால் ஜப்பான் தனது போர் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. இதனால் பசுபிக் பிராந்தியத்தில் தொடர்ந்தும் உக்கிரப் போர் நடைபெற்றது.நேச நாடுகள் ஜப்பான் மீது தொடர்ந்தும் பல தீக்குண்டுகளை வீசியது. 1945 ஜூலை மாதம் 26 ந்திகதி சீனா,ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஒன்றிணைந்து "பாட்சுடம் அறிக்கை " யை வெளியிட்டது. அவ்வறிக்கை மூலம் "ஜப்பான் தனது தோல்வியை ஏற்று உடனடியாக சரணடைய வேண்டுமெனவும், அல்லாவிடில் உடனடி முழு அழிவுக்குள்ளாக வேண்டுமெனவும் எச்சரிக்கை விடுத்தது"

 ஆனால் ஜப்பான் அவற்றின் கோரிக்கையை ஏற்காமல் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் உக்கிரப்பார்வை ஜப்பானை நோக்கி திரும்பியதில் 1945 ஆகஸ்ட்டி6-9 ம் திகதிக்குள் ஜப்பான் நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அணுக்குண்டுகளை அது வீசி அவ் ஜப்பானின் இரு நகரங்களையும் அழித்து தன் வல்லமையை உலக அரங்கில் நிருபித்தது.

இவ்வாறு அழிவுக்குள்ளான "இரேசிமா அல்லது ஹிரோஷிமா" என்பது ஜப்பானிலுள்ள பெரும் நகரமாகும். இது ஹோன்ஷூ தீவிலுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது முதன் முதலில் 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ந்திகதி காலை 8.15 நேரத்திற்கு ஹிரோஷிமா நகரத்தின்  மீது ஐக்கிய அமெரிக்கா தனது சின்னப்பையன் (Little Boy) எனும் அணுகுண்டை  வீசியது. இவ் அணுகுண்டு விமானப்படைத் தளபதியாக இருந்த "போல் டிபெட்ஸ்" எனும் விஞ்ஞனியால் "எனோலா கே" எனும் பி-29 ரக விமானத்திலிருந்து வீசப்பட்ட முதலாவது அணுகுண்டாகும். "எனோலா கே"  என்பது இவ் விமானியின் தாயார் பெயராகும். இதன் நிறை 4000 கிலோ கிராமாகும். நீளம் 3 மீற்றராகவும், விட்டம் 0.7 மீற்றராகவும் காணப்பட்டது.


ஹிரோஷிமா 905.1 கிலோ மீற்றர் பரப்பைத் தன்னகத்தே கொண்ட மாகாணமாகும். இப் பிரதேசத்தில் அணுகுண்டு விழுந்ததும் அது பாரிய சப்தத்துடன் வெடித்தது. சுமார் 2000 அடிகளுக்கு மேல் தீச்சுவாலை மேலெழுந்தது.16 கிலோ மீற்றருக்குட்பட்ட சகல கட்டிடங்களும் தரை மட்டங்களாகின. 900,00 மக்கள்  தொடக்கம் 166,000 வரையிலான மக்கள் மடிந்தனர். இந் நகரின் தொடர்புசாதனங்கள் யாவும் உடனடியாக செயலிழக்கப்பட்டமையால்  இந் நகர அழிவின் கொடுமை பற்றி ஜப்பான் இராணுவத் தலைமையகம் உடனடியாக அறிந்து கொள்ளவில்லை. அதன் பின்னரே அறிந்து கொண்டது. அணுகுண்டு வீசி 16 மணித்தியாலத்தின் பின்னர்  அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அவ் அப்பாவிகளின் உயிரோடு தான் விளையாடி சாதனை படைத்ததை வெளி உலகிற்கு அதிகாரபூர்வமாகப்  பறைசாட்டியது.


 அன்று வீசப்பட்ட  அவ் அணுகுண்டின் தாக்கத்தால் பல இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன், குழந்தைகளும் சதைப்பிண்டங்களாகவும், அங்கவீனர்களாகவும் தமது பிறப்பை வெளிப்படுத்தினர். இற்றைவரை கதிர்வீச்சின் தாக்கக் கொடுமையை அம் மக்கள் அனுபவித்து வருவது வேதனைக்குரியது..அவ் அணுக்குண்டின் கதிர்வீச்சின் சிதறல்களால் சூழலும் பாதிப்புற்று உயிரின வாழ்விற்கு அச்சுறுத்தலாகவுள்ளது.

(இது வீசப்பட்ட 3ம் நாள் ஆகஸ்ட் 9 ந் திகதி கொழுத்த மனிதன் (Fat Man) எனும் பெயரில் 2வது அணுகுண்டு ஜப்பானின் இன்னுமொரு நகராகிய நாகசாகியில் வீசப்பட்டது.)

அமெரிக்காவின் புதிய அணுகுண்டு பரிசோதனைக் கூடங்களாக ஜப்பானின் நகரங்கள் பயன்படுத்தப்பட்டமையினால் 120,0000 ற்கு மேற்பட்ட உயிரிழப்புக்களும் இன்றுவரை முடிவு காணப்படாத கதிர்வீச்சுத்தாக்கங்களும் ஏற்பட்டுள்ளன.ஜப்பானும் தனது நகரங்களின்  மீது வீசப்பட்ட அணுகுண்டுத் தாக்குதலையடுத்து 15 ஆகஸ்ட் 1945 ம் ஆண்டு சரணடைந்தது. அதே ஆண்டு "சரண் ஆவணத்தில்" அது கையெழுத்திட்டதன் மூலம் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இப்போரின் விளைவாக உலக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பிய காலனிய அரசுகள் தம் வல்லமையை இழந்தன. ஆபிரிக்கா, ஆசியா கண்டங்களில் காலனிமயமழித்தல் தொடங்கியது. ஐரோப்பியா பனிப்போர் கசியத் தொடங்கியது. அமெரிக்க ,ரஷ்யா புதிய வல்லரசாகியது, உலக அமைதிக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்டது. இருந்தும் இங்கு இழக்கப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்களின் இழப்புக்கு முன்னால் அவை வெறும் பூச்சியங்களே!

இவ் அணுகுண்டு வீச்சானது அறநெறிக்கப்பாற் பட்டதே. தன் நாட்டுக்கேற்பட்ட இழப்புக்களுடன் கூடிய அந்த பயங்கர வலியினால் ஜப்பான் 1967 ல் "அணு ஆயுத விலக்கு பற்றிய 3 தத்துவங்களை" வெளியிட்டது.

இதனடிப்படையில் தான் ஒருபோதும் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதில்லையென்றும், அணு ஆயுதங்களை தன் கைவசம் கொண்டிருப்பதில்லையென்றும், அணு ஆயுதங்களை நாட்டுக்குள் வர அனுமதிப்பதில்லையென்றும்  தத்துவங்களை இயற்றி செயற்படுத்தியது.

ஹிரோசிமா நகரத்தின் மீது அமெரிக்கா அணுக்குண்டினை வீசி பாரிய உயிரிழப்புக்களுடன் கூடிய அவலங்களை ஏற்படுத்தியதை நினைவு கூறும் வகையில் 1996ல் ஹிரோசிமா நகரில் "ஹிரோசிமா சமாதான நிலையம்" நிறுவப்பட்டுள்ளது. இதன் பெயர் ஜப்பானிய மொழியில் "கென்பாக்கு டோம்" (அணுகுண்டு குவிமாடம்) ஆகும்.  ஆக் கட்டிடத்தின் வடிவமைப்பின் ஆரம்ப கர்த்தா ஜான் லெட்செல் ஆவார்.


இவ்வாறு ஏதோ சில சுயநலங்களுக்காக முன்னெடுக்கப்படுகின்ற யுத்தங்களும் அவற்றின் இழப்புக்களும் நிம்மதியுடன் வாழ முனைகின்ற ஆரோக்கிய மனித சமூகத்திற்கிடப்படுகின்ற  சாபங்களே! இவ்வாறான அவலங்கள் இனி இப் புவிக் கோளத்தின் நிலப்பரப்புக்களை ஒருபோதும் மாசுபடுத்தக்கூடாதென்பதே நம் அவாவும் பிரார்த்தனையுமாகும்!

- Ms.Jancy Caffoor -


2012/08/05

இதயம் நுழைந்து



ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு.......இன்று  (05.08.2012) !

உலக அரங்கினிலே தன் அன்பான கரங்களை அசைத்து வருகின்றது உலக நட்பு தினம்.

1935 ம் ஆண்டுப் பொழுதொன்றில், கொல்லப்பட்ட தன் நண்பனுக்காக மறுநாள் தற்கொலை செய்து கொண்ட நண்பர்களின் உயிர்த்தியாகமே இன்று உலக நட்பு தினமாக அமெரிக்க அரசின் அங்கீகாரம் பெற்று நம்மையும் அணைத்து நிற்கின்றது.

இங்கு நான் பேசப் போகின்ற நட்பு உண்மையான நட்பைப் பற்றியே!

ஏனெனில் சுயநலம் அதிகரித்த நிலையில் தம் தேவைகளை நிறைவேற்றும் குறுகிய நோக்கோடு நட்பு வேடமிடும் வேடதாரிகள் இன்று சமூகத்தில் தாராளமாக உலவுகின்றார்கள். அவ்வாறான  நட்பை மாசுபடுத்தும் கொடுங்கோலர்களை   புறந்தள்ளியவளாகவும், பஞ்சமா பாதகங்களுடன் கூடிய , காமம், இனவாதம், வன்முறை, போதைப் பொருள் பாவனை போன்ற தீமைகளின் ஒன்றுகூடலுக்காக தீய நட்பைக் கூடி சமூகத்தையும், தனி மனிதரையும் சீரழிக்கும் தீய நட்பினரின் வேரை அடியோடு கத்தரித்து விடத் தயங்கக் கூடாது எனும் சிந்தனையோடும் என் கரங்கள் இணைய வலைப்பூவை உயிர்ப்பிக்கின்றன இப்போது !.

மனித உணர்வுகளிலேயே உன்னதமான உணர்வே நட்பு. இங்கு இதயங்கள் தம் வேறுபாடுகளைக் களைந்தெறிந்தே பேசுகின்றன..இன்பத்தில் சிரித்தும், துன்பத்தில் கண்ணீர் விட்டும் அழக்கூடிய உன்னதமான  உயிரின் நெருடலே நட்பாகும்!

நம் வாழ்வுப் பயணத்தில் நம்மோடு பயணிக்கக்கூடிய ஒத்த மனவெண்ணமுள்ளவரே நமக்குள் நண்பராக முகங் காட்டுகின்றார்கள். நமது சிந்தனைகளை வழிப்படுத்தக் கூடிய ஆற்றல் இந்த நட்புமுகங்களுக்கே உள்ளது. ஏனெனில் இரத்த உறவுகளுக்கிடையே ஊடுருவும் பாச அதிர்வுகளையும் விட, எவ்வித எதிர்பார்ப்புமில்லாத இந்த நட்பினரின் நேச அதிர்வுகளின் வலிமை அதிகமானதுதான். நம்மை நாமே உணர்ந்து கொள்ள முகங் காட்டும் கண்ணாடியே இந்த நட்பினர்.....நம் வாழ்க்கைப் போக்கைத் தீர்மானிக்கும் விதிக் கரங்களாக இந் நட்பினர் திகழ்கின்றனர்...

நட்பினருக்கிடையே பேதமைகள் பெரிதாக முளைவிடாது, முளைவிடவும் கூடாது. சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் எட்டிப்பார்த்தாலும் கூட  அவை உடனடியாக அகற்றப்பட்டு தம் அன்பை மென்மேலும் விசாலப்படுத்துவதாகவே அமையும். ஒழுக்கம், விழுமியம், கலாசாரம் என்பவற்றினை உயர்ந்த மட்டத்தில் வழங்குபவராக இந் நண்பர் விளங்கும் போது அது நம்மில் நிரந்தரப் பதிவாகி நம் ஆளுமையிலும் செல்வாக்குச் செலுத்துகின்றது..

ஆண்- ஆண், பெண்- பெண் எனும் ஒருபால் நட்பானது கலாசாரத்தின் சிறந்த பேணலாக எப்பொழுதும் விளங்கினாலும் கூட, இன்று உலகமானது நவீனத்தின் பால் நகர்ந்து கொண்டிருப்பதாலும், உலகத்தின் செயற்பாடுகள் தகவல் தொழினுட்பத்தினூடு  விரைவுபடுத்தப்பட்டிருப்பதாலும் ,ஆண்- பெண்  நட்பானது சாதாரண விடயமாகவே  இவ்வுலகத்தில் உலா வருகின்றது.ஆண்- பெண் நட்பானது கண்ணாடியில் பயணிக்கும் பயணத்திற்கு ஒப்பானது. ஏனெனில் நட்பில் காட்டப்படும் அதிக நெருக்கமானது காதலாக மாறக்கூடிய அதிக சந்தர்ப்பங்களுண்டு. ஆனால் இப்பொழுதெல்லாம் பெரும்பாலான காதலின் இதயங்கள் இளைப்பாறத் துடிப்பது காமத்தின் மடிதனிலேயே! இக் காமத்தின் முதல் தொடுகையாக இருப்பதென்னவோ முத்தப்பரிமாற்றமே!இந்த நெருக்கம் சற்று இடறினால் சேதமடைவது பெண்கள் வாழ்க்கையே......!
இருந்தும் இன்று ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் பழகக் கூடிய தூய்மையான பல ஆண்- பெண் நட்புக்கள் தம பெயரை ஆரோக்கியமாக காலத்தின் சுவற்றில் பதித்து வருவது மனநிம்மதி தரக்கூடியதே!

நம் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் பல நண்பர்கள் முகங் காட்டியிருப்பார்கள்.
பால்ய பருவத்தில் ஆண் பெண் பேதமில்லாத, விளையாட்டிலும் கல்வியிலும் அக்கறை செலுத்தும் சிறு வயது நண்பர்  கூட்டங்கள்...

கல்லூரியில் கற்கின்ற காலத்தில், வாழ்க்கையைப்  ஓரளவு புரிந்து அதற்கேற்ப நாம் இலட்சியங்கள் வகுத்து நடைபயில முயற்சிக்கையில் அதற்கு  ஊக்குவிப்பும், ஒத்துழைப்பும், நேசமும் ,அறிவுத் தேடலில் பங்களிப்பும் தருவதுடன், நமக்குள் முகிழ்க்கும் கனவுகளை அரங்கேற்ற அழகான மடி தரும் வாலிப வயதைச் சார்ந்த நட்பினர்...

கல்வி கற்று முடிந்து தொழில் தேடும் தருணத்தில் வாழ்வில் நாம் பல பொழுதுபோக்கு அம்சங்களில் இணைந்து கொள்வதுடன் , நாம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு ஆறுதலும், தீர்வும் தரக் கூடிய நம் தேவைகளை இனங்கண்டு உதவக்கூடிய வாலிப வயது நட்பினர்............

தொழில் வாழ்வில் இணையும் போது அத் தொழில் உலகோடும், புற வாழ்வின் இயல்பான போக்கோடும் ஒத்துப் போகக்கூடிய, ஆலோசனை தரக்கூடிய, அனுபவங்களோடு நட்பையும் திரட்டக்கூடிய இள வயது நட்பினர்...

முதுமை வாழ்விலோ தம் கடந்த காலத்தில் உதிர்க்கப்பட்ட  இளமையான ஞாபகங்களையும், தம் குடும்ப உறவுகளின் செழிப்புக்களையும் , வாழ்க்கை கண்டெடுத்த வெற்றி , தோல்விகளை மீட்டும் மனநிலையை பகிரக்கூடிய, வாழ்வின் இறுதிநாட்களை நகர்த்துகின்ற முதுமைப் பருவ நட்புக் கூட்டத்தினர்.........

இவ்வாறு வாழ்வின் ஒவ்வொரு படிநிலையிலும் நாம் மறக்க முடியாத ஒவ்வொரு முகங்கள்...நம்மைப் பிண்ணிப்பிணைந்து கொண்டுதான் வருகின்றன.

நம் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாத போது, அங்கு எட்டிப்பார்ப்பவை ஏமாற்றங்கள் மட்டுமல்ல பிரச்சினைகளும் தான். பிரச்சினைகள் நம் வாழ்வைத் தொட்டுப்பார்க்கும் போதெல்லாம் தேவைகள் நம்மால் நிறைவேற்றப்பட முடியாமற் போகின்றன. எனவே பிரச்சினையெனும் இந்தச் சிக்கலை அவிழ்க்கும் ஆலோசகர்களாக நம் முன்னே வருபவர்களும், நாம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தெரிவு செய்திருப்பவர்களும் நமது நண்பர்களே! ஏனெனில் வாழ்க்கையானது பிரச்சினைக்குள் அமிழ்ந்து விடும் போது நாம் மனஅழுத்தங்களோடு போராடுபவர்களாகவே இருக்கின்றோம். அத் துயரத்தைத் தூசாக்கும் கரங்களாக நம்மை அரவணைப்பவை இந் நட்பினர் கரங்களும், அவர்களது ஆறுதலான வார்த்தைகளும் தான்!

"உன் நண்பனைக் காட்டு, உன்னைப் பற்றிக் கூறுகின்றேன்"

இது ஓர் அனுபவ மொழி....!

உண்மையில் நம் நண்பர்களின் நடை, உடை, பாவனை நம்மில் செல்வாக்குச் செலுத்தக்கூடியது..அதுமட்டுமல்ல நாம் அறிவைத் தேடக் கூடிய, கண்டெடுத்த விடயங்களைப் பரிமாறக்கூடிய நம் அந்தரங்கங்களைக் கூட நம்பிக்கையோடு பகிரக்கூடிய இடம்தான் நண்பர்களின் மனம்!

உண்மை நட்பின் நேச ஆழம் சமுத்திரங்களை விட ஆழமானவை..இந்தப் பிரபஞ்சத்தை விட பரந்தது..அதனை அளவிடமுடியாது. உணர்வுகளால் மட்டுமே பசுமைப்படுத்தவே முடியும்.இவ்வுலக வாழ்வின் போக்கு செல்வத்தால் தீர்மானிக்கப்படக்கூடியதாக இருந்தாலும் கூட, அவற்றையெல்லாம் ஓரந் தள்ளிவிட்டு இந் நட்புச் செல்வம் நம் மனங்களை மங்களகரமாக முடிசூட்டிக் கொள்ளும் என்பது மறுக்கமுடியாத உண்மை!

மதம், மொழி, நாடு, இனம், வயது , அந்தஸ்து போன்ற அனைத்து வேறுபாடுகளும் களையப்பட்டு, மனங்களால் ஒன்றிணைந்து மகிழ்வோடு நாம் நடமாடும் உலகமே இந்த நட்புலகம். நம் பரஸ்பர நட்பின் இதமான பரிமாற்றம் உயிர், உணர்வுகளை ஊடுருவக்கூடியதென்பதால்தான்  நம் பழைய சிந்தனைகள் களையப்பட்டு ஒவ்வொரு கணங்களும் நட்பால் மீளப் புதுப்பிக்கப்படுகின்றோம்.

தத்தமது விருப்பு வெறுப்புக்களை மறந்து, மறுத்து பொதுப்படையான ஒருமித்த எண்ணத்துடன் பயணிக்கும் இந்த  நட்பின் ஆரோக்கியம், ஆயுள் அழகான கவிதையாய் வார்க்கப்படுகின்றது. நட்பின் மகத்துவத்தை வெறும் வார்த்தைகளால் நாம் வடிக்க முடியாது. ஒவ்வொரு நெஞ்சுக்குள்ளும் பிடித்தமான நட்பின் ஞாபகங்கள் அவர்கள் மனதை சிறைப்பிடித்து ரசித்துக் கொண்டுதானிருக்கின்றது..உண்மை நட்பால் அன்பைத் தவிர வேறெந்த பலனையும் எதிர்பார்க்கமுடியாது.

"உயிர் காப்பான் தோழன்"

எனும் இந்த வாக்கியமே அதன் ஆழச்சிறப்புக்குப் பொருத்தமான முகப்பாகும். இரு மனங்கள் வரைந்திடும் இந்த நேசச் சாதனம் நாள்தோறும் பொலிவிழக்காது வளர்பிறையாய் வளரக்கூடியது. வாழ்க்கையில் முகம் காட்டிச் செல்லும் நட்பினரின் பாசமும், முகங் காட்டாத முகநூல் நட்பினரின் நேசமும் நம்முள் தந்து நிற்கும் அழகிய நினைவுகளை ஆழ் மனதிலிருந்து மீட்டும் தருணமிது.

நாம் நேசிப்பவர்களை கைகுலுக்கி, வாழ்த்துக்களைப் பரிமாறும் ஆனந்த நாளின்று! நாம் இன்றைய நாளில் நம் எண்ணங்களில் நறுமணம் பூசி நம் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை வார்த்தைகளாகவோ அன்றி செய்திகளாகவோ பரிமாறும் போது அந்த நட்பின் பெருமை இன்னும் பல படிகள் மேலே உயர்த்தப்படுகின்றது..அன்பின் அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்படுமிந்த நட்பை மதங்களும் , நூல்களும் , காவியங்களும் போற்றத் தவறவில்லை.

பொய்யா மொழிப்புலவராம் வள்ளுவர் தன் திருக்குறளில் நட்பின் சிறப்பை மேன்மைப்படுத்தியுள்ளார். "நட்பு" , "நட்பாராய்தல்". "பழைமை", "தீ நட்பு", "கூடா நட்பு" எனும் ஐந்து அதிகாரங்களில் நட்பின் பண்பு சொல்லப்பட்டுள்ளது. வெறும் முக பாவத்திலல்ல உள்ளத்தின் மேற்பரப்பிலிருந்து இந் நட்பு எழ வேண்டுமென்பதே வள்ளுவரின் ஆதங்கம் என்பதனை இக் குறள் துல்லியமாக நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.

"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு" (குறள் 786)

எம் பெருமானார் நபி (ஸல்) அவர்களின் தோழர்களும், மகாபாரத்தில் செஞ்சோற்றுக் கடன் செலுத்தும் கன்னனும், இராமாயணத்தில் ராமன் உயிர் காக்கும் சடாயுவும், அனுமானும் இன்னும் பலரும் நட்பின் இதிகாசங்களாய் நம் ஞாபகப் பரப்பில் வந்து போகின்றனர்.

"அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே வந்ததே நண்பனே" என உயர்ந்தவர்களில் நடிகர் திலகமும், மேஜர் சுந்தரராஜனும் நம்மை நெகிழ்வித்தனர். நட்பின் பிணைப்பைப் பற்றி பல சினிமாப் பாடல்கள் அன்றாடம் வந்து கொண்டுதானிருக்கின்றன.

உன்னதமான  இந் நட்பைப் பகிர்ந்து கொண்ட நாம், இன்றைய தினம் மட்டுமல்ல என்றும் அந் நட்பைக் கௌரவப்படுத்தி அதனை நம்முடன் அணைத்துக் கொள்வோமாக

என் நட்பினர் அனைவருக்கும் நண்பர் தின வாழ்த்துக்கள்..

ப்ரியத்துடன்-

       -----ஜன்ஸி கபூர் -------











2012/07/29

சர்வதேச மலேரியா ஒழிப்புத் தினம்


ஏப்ரல் 25
--------------
ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி ஏப்ரல் 25 சர்வதேச மலேரியா தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

மலேரியா நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழக்கும் 10 லட்சம் பேரில் அதிகமானோர் 5 வயதிற்குட்பட்டவராவார். இலங்கையில் வருடாந்தம் 450 மலேரியா நோயால் ஏற்படும் மரணங்கள் சம்பவிப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மலேரியா, சிக்கன்குன்யா,டெங்கு,ஜப்பானிய மூளைக்காய்ச்சல், மஞ்சள் காமாலை, யானைக்கால நோய் போன்ற நுளம்புகளால் பரப்பப்படும் நோய்களால் வருடாந்தம் 21 கோடி மக்கள் பாதிக்கப்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

பூமத்திய ரேகையைச்சுற்றியுள்ள மித வெப்பமுள்ள நாடுகளிலேயே நுளம்புகள் அதிகம் பரவுகின்றன. ஓர் நுளம்பின் சராசரி ஆயுட்காலம் 12 நாட்களாகும். அதிக பட்சம் 34 நாட்கள் உயிர் வாழும். பெண் நுளம்புகளை விட ஆண் நுளம்புகள் உயிர் வாழும் நாட்களினளவு குறைவாகும். சுமார் 11 கிலோ மீற்றர் சுற்றளவுக்கு நுளம்புகளால் பறக்க முடியும்.

பெண் நுளம்பு முட்டையிடும் நேரத்தில்தான் உயிரினங்களில் இரத்தம் குடிக்கும். 0.025 மில்லிகிராம் எடையுள்ள நுளம்பு தனது வாழ்நாளில் 3,000 முட்டைகளை இடும்..ஆண் நுளம்பு தாவரச்சாற்றைப் பருகும்.

பொதுவாக எல்லா வகை நுளம்புகளும் மாலை, இரவு நேரத்தில் தான் கடிக்கின்றன. டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் "ஏடிஸ்" மற்றும் சிக்கன் குன்யா நுளம்புகள் மட்டும் பகலில் கடிக்கும்.

அனோபிலிஸ் நுளம்புகள் சுத்தமான நீரிலும்
க்யூலக்ஸ் நுளம்புகள் அசுத்தமான நீரிலும் முட்டையிடும்
ஏடிஸ் நுளம்புகள் தாவர இலை , தழைகளிலும் முட்டையிடும்..

மலேரியா நோய்க்குரிய "பிளாஸ்மோடியம்" எனும் ஒட்டுண்ணியை மனிதரிடத்தில் பரப்பும் காவியே மலேரியா நுளம்பு ஆகும். இது பகலில் மறைந்து வாழ்ந்து இரவில் உலா வருகின்றது. ..நோய் ஒட்டுண்ணியைக் கொண்டுள்ள நுளம்பு மனிதர்களைக் கடிக்கும் போது அவை நுளம்பின் உமிழ்நீர் வழியாக மனித உடலையடைந்து அங்கிருந்து குருதியினூடாக கல்லீரலை அடைகின்றது..3 நாட்கள் முதல் 1 வாரம் வரை கல்லீரலில் பல்கிப் பெருகும்.. பின்னர் "முத்திரை மோதிர நிலையினாலான வித்திச்சிற்றுயிராக மாறி" குருதியை அடைந்து அதிலுள்ள செங்குருதிச்சிறுதுணிக்கைகளை அழிக்கத் தொடங்கும். அப்போதுதான் காய்ச்சல் ஏற்படும்.

மலேரியா காய்ச்சலின் 3 கட்டங்களாவன -
-----------------------------------------------------------
1, நோயாளிக்கு லேசான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி, சோர்வு இருக்கும். இதனைத் தொடர்ந்து குளிர் காய்ச்சலும் உடல் நடுக்கமும் ஏற்படும். இந்நிலை அரை மணித்தியாலயம் நீடிக்கும்.

2, இரண்டாவது கட்டத்தில் காய்ச்சல் கடுமையாகும். உடல் அனலாகக் கொதிக்கும். இது சுமார் 6 மணி நேரம் நீடிக்கும்

3.இப்போது நோயாளி சாதாரணமாகக் காணப்படுவார்.

இதே காய்ச்சல் மறுநாளோ,  2 அல்லது  3,4 நாட்களுக்கு ஒரு தடவையோ ஏற்படும்.

இப்பொதுவான அறிகுறிகள் தென்பட்டவுடன் இரத்தப்பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்

கடும் காய்ச்சல், கண்சிவத்தல், உடல் வலி என்பன கடுமையான நோய்த்தாக்கத்தின் விளைவாகும். உடனே சிகிச்சை பெறவேண்டும். இல்லாவிடில் மரணமும் ஏற்படலாம்.

எனவே பின்வரும் வழிகளில் நுளம்புகள்  பெருகாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு நமக்குண்டு
----------------------------------------------------------------------------------------------

1.வீட்டைச் சுற்றியும், சுற்றுப்புறச்சூழலைச்சுற்றியும் "டி.டி.டி" "டெல்டாமெத்திரின்" போன்ற மருந்துகளைத் தெளிக்கலாம்.
2.நுளம்புப் பெருக்கமுள்ள 1000 கன அடி இடத்துக்கு 4 அவுன்ஸ் "கிரிசாலை" ப் புகைய விட்டால் நுளம்புகள் இறக்கும்.
3. சுத்தமான நீர் நிலைகளை (தண்ணீர்த்தொட்டிகள்) மூடி விட வேண்டும். வாரம் ஒருமுறை தண்ணீர்த் தொட்டிகளை கழுவிச் சுத்தம் செய்து, 2 மணித்தியாலம் வரை காய வைக்க  வேண்டும். இவ்வாறே வீடுகளிலுள்ள வாளி நீரையும் பராமரித்தல் வேண்டும்.
4. நீர் தேங்கக்கூடிய பகுதிகளை மூடி விடல் வேண்டும் (சிரட்டை, டயர், குரும்பை, யோகட் கோப்பை ,டப்பாக்கள் போனறவை)
5. மீன்தொட்டிகளில் "கப்பிஸ்" போன்ற மீன்களை வளர்த்தல்..
6. சூழலை அசுத்தப்படுத்துவோர்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல்.
7. பாடசாலைகளில் இது தொடர்பான செயற்றிட்டங்கள், சிரமதானம், போட்டிகள், கண்காட்சி நடத்தல்

மலேரியா நோய் எற்படுவதன் மூலமாக ஏற்படக்கூடிய மனப்பாதிப்புக்களை இழிவாக்கி, மக்கள் மனதில் விழிப்புணர்வை ஏற்படுத்த இத் தினம் பயன்படுகிறது.

"சுத்தம் பேணி மலேரியாத் தாக்கத்திலிருந்து எம்மைப் பாதுகாப்போமாக!"

அன்னையர் தினம்


மே 13
----------

தாயே ......

இவ்வுலக சகல ஜீவராசிகளின் உயிர்நாடிகளாகும். கருவறைச் சிறைப்படுத்தலில் குருதிப்பிண்டமாய் திரண்டிருக்கும் எம் உயிர்ப்படுத்தலைப் பேணி, உருவம் எமக்குள் நிலையூன்றும் வரை பேணி பாதுகாக்கும் ஒப்பற்ற உறவே தாய் !

அலையடித்து கடல் விலகாது என்பது போல, தாயின் சின்னச் சின்னக் கண்டிப்புக்களும், தண்டனைகளும் கூட எம்மீதான வழிப்படுத்தலுக்கே!

எம்மின்பத்தை தன் மகிழ்வாய் தனக்குள் நிரப்பி ,நாம் சிந்தும் கண்ணீரைத் தன் விழிகளுள் ஏந்தி , நம் மனச்சோகங்களை உணர்ந்து துடைக்கும் ஒப்பற்ற கரங்கள் அன்னைக்குரியது. 

எத்தனை நாட்கள்......
எத்தனை நொடிகள்........

தன் விழித்தூக்கத்தைக் கழற்றியெறிந்து விட்டு எம்மசைவுகளைக் காத்திடும் உன்னத உறவே அன்னை !

இத்தகைய உயரிய பண்புகளைக் கொண்ட அன்னைக்கு சர்வதேச ரீதியில் வைரக்கிரீடம் சூட்டும் நாளின்றாகும்..

"அன்னா ஜார்விஸ்" .........

அவர்தான் அன்னையர் தின உயிர்ப்புக்காகப் போராடிய கன்னித் தாய். .திருமணமாகாத அன்னையாய் சேவை செய்தவர். அன்னையரின் நலமேம்பாட்டுக்காய் தன்னையே வார்த்த அன்பு நெஞ்சமவர். அவரை மையப்படுத்தியே இவ் அன்னையர் தினம் கொண்டாடப்படுகின்றது.

"அன்னா ஜார்விஸ்" தாயின் ஒப்பற்ற பணியை, பாசத்தை, தியாகத்தை ஓர் நாளாவது கண்ணியப்படுத்த வெண்டுமென விரும்பி, அதனைச் செயற்படுத்த முனையும் போது  பல போராட்டங்களைச் சந்தித்தார்.  அந்தச் சவால்களை முறியடிக்க அன்னாவுக்கு ஆதரவாளர்கள் உறுதுணையாகவிருந்தனர். தமது எண்ணங்களை சமூகத்தினரிடையே உட்புகுத்தி அவர்களுக்கிடையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி அதனூடாக அன்னையர் தொடர்பான ஆதரவினைத்திரட்டி 1911 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பல மாகாணங்களிலும்  குறித்த நாளில் அன்னையர் தினம் கொண்டாடப்படக் காரணமாகவிருந்தார்.

1912 ஆம் ஆண்டில் "அன்னா ஜர்விஸ்" "மே மாதத்தில் 2 வது ஞாயிற்றுக்கிழமை", மற்றும் "அன்னையர் தினம்"  ஆகிய வாக்கியங்களைப்பதிவு செய்து அன்னையர் தின சர்வதேச அமைப்பை உருவாக்கினார். அதுமாத்திரமின்றி தன் தாயைப் பெருமைப்படுத்தி அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண்மணியாகவும் இவர் திகழ்கின்றார்.

அதனைத் தொடர்ந்து 1914 அம் ஆண்டு மே 8 ஆம் திகதி அமெரிக்க அதிபர் "உட்ரோவ் வில்சன்"  கூட்டறிக்கையொன்றில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

இன்றைய அன்னையர் தினத்தில் வெறும் வாழ்த்துக்களும், அன்பளிப்புக்களும் குவிக்கப்படுவதை விட பாசத்துடன் தாயவளின் அன்புப்பிள்ளையாக வாழ்வதை உறுதிப்படுத்துங்கள். இதுவே அன்னைக்கு நாம் வழங்கும் அற்புதப் பரிசாகும். தாயின் காலடியில் கிடக்கும் அந்த சொர்க்கம் எமக்கும் உறுதிப்படுத்தப்படும்.

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்



ஏப்ரல் 23
-------------
புத்தக வாசிப்பினை ஊக்குவித்தல், புதிய புத்தகங்கள் வெளியிடுதல், புத்தக பதிப்புரிமையை அதிகரித்தல் போன்ற கருப்பொருட்களுடன் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 23ந் திகதி இத் தினம் கொண்டாடப்படுகின்றது. ஐரோப்பியாவில் வாழ்ந்த சிறந்த இலக்கியவாதியும், நாடக மேதையுமான வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும், இறந்ததும் இந்த நாளிலேயே என்பதால் இத் தெரிவு இடம்பெற்றது . 1995 ம் ஆண்டு முதல் யுனெஸ்கோ அறிவித்தலின் பிரகாரம்  இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு இத்தினத்தில் இலக்கியவாதிகள் கௌரவிக்கப்படுகின்றனர். இத்தினத்தில் பரவலகாக புத்தகக் கண்காட்சி, புதிய நூல்வெளியீடு, இவை தொடர்பான கூட்டங்கள் நடத்தப்படல், நூலாசிரியர் கௌரவிப்பு போன்ற பலவும் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.

அனைவருக்கும் வாசிக்கும் உரிமை, மக்கள் வாழ்விடங்களில் நூலக உரிமை, உலகில் நாம் பெறக்கூடிய அனைத்து அறிவுச்செல்வங்களையும் தத்தம் தாய்மொழியில் பெறுதல், தத்தமது தாய்மொழியில் இலக்கியச் செல்வங்களைப் பாதுகாப்பதன் பொருட்டு ஆவணப்படுத்தல், புத்தகம்,வாசகர்,எழுத்தாளர்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தல் உள்ளிட்ட 10 கட்டளைகளை நிறைவேற்றுவதன் மூலம் உலகளாவிய ரீதியில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கில் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

"வாசிப்பானது மனிதனைப் பூரணப்படுத்துகின்றது" என்பதை நாமறிந்தும் கூட, இந்த இயந்திரமயமான வாழ்க்கைமுறையில் அந்த எண்ணம் நம்மிலிருந்து காணாமல் போய்விடுகின்றது. இளைய தலைமுறையினர் இ-புக், இ-ரீடர் தொலைக்காட்சி போன்ற நவீனத்தின்பால் தமது கவனத்தைச் செலுத்தி வருவதால் புத்தகங்களின் வாசிப்புப்பழக்கமும் அருகி வருகின்றது.

தேடலானது புதிய கருத்துக்களை நமக்குள் உட்செலுத்தும் மார்க்கமாகும். தேடலுக்கான பயிற்சி வாசிப்பு மூலம் கிடைக்கின்றது. மனிதர்களின் விழுமியம், பண்பாடு, கலாசாரம், வாழ்க்கைநெறிமுறைகள், பழக்கவழக்கங்கள் என்பவற்றை புத்தகங்கள் வாயிலாக  நாமறிந்து கொள்ளலாம்.

வாசிப்பின் முக்கியத்துவத்தை பாடசாலை மாணவர்களுக்குணர்த்தும் வகையில் பாடசாலைக் கலைத்திட்டத்திலும் ,நூலகப் பாடவேளைக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாடசாலை நூலகங்களும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.

தற்போது எமக்குக் கிடைக்கும் ஒய்வுநேரம் குறைவாகவே உள்ளது. இந்நேரத்தை நாம் பயன்படுத்த வேண்டும். நம் சிந்தனையை ஆரோக்கியப்படுத்தும் நல்ல நூல்களைத் தேடி வாசிக்க வேண்டும். நிறைய வாசிக்கும் போது சொற்பிழைகள் ஏற்படாது, அத்துடன் மொழிவளம் ,ஆளுமை, சிறந்த தொடர்பாடலும் நமக்குள் ஏற்படும்.

இலங்கையில் எழுத்தறிவு வீதம் 95% ஆக இருப்பதனால் இங்கு வாசிக்கும் திறனும் அதிகமாகவே காணப்படுகின்றது. புத்தகங்களை வாசிக்கும் போது பிறர் வாழ்வில் நுழையும் வீண் நுழைச்சலுக்கும் நேரம் கிடைப்பதில்லை. அதுமாத்திரமின்றி நம் மன அழுத்தமும் குறைக்கப்படுகின்றது. வாழ்க்கையிலெழும் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளும் மனப்பக்குவமும் ஏற்படுகின்றது.

நாம் தினமும் வீணாக்கும் பணத்தின் சிறுபகுதியிலாவது புத்தகங்களை வாங்குவதன் மூலம் நாமும் வாசித்து, பிறரையும் வாசிக்கத்தூண்டலாம். பாடசாலைகளிலும் வாசிப்புத் தொடர்பான பல்வேறு போட்டிகளை நடத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தலாம்.

தாய்மொழியிலான தரமான பதிப்புக்களும், அவற்றை உடனடியாக சந்தைப்படுத்தலும் இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகும். எமது அறிவை வளர்த்தும், பிறருடன் பகிர்ந்தும் பூரணத்துவம் பெறுவோமாக!

"நிறைய வாசிப்போம்- நம்
வாழ்வின் குறை போக்குவோம்!




சர்வதேச தொலைத்தொடர்பு தினம்


மே 17
---------
விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி காரணமாக வியக்கத்தக்க முறையில் தொலைத் தொடர்பு சாதனத்துறையின்று வளர்ச்சியடைந்துள்ளது. உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் தொலைத்தொடர்புத் துறையும் ஒன்றாகும்.

ஆரம்ப காலத்தில் சைகை, பின்னர் புறா விடு தூது, முரசறைதல் போன்ற பல்வேறு முறைகளால் வெளிப்படுத்தப்பட்ட இத்தொடர்பாடல் கடிதம், தந்தி, மின்னஞ்சல் மூலமாகவும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

நவீன தொடர்பாடல் முறையானது 1450 களில் ஜோகன்ஸ் கட்டன்பர்க் என்பவர் அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்த நிகழ்வுடன் ஆரம்பித்தது. பத்திரிகை வாயிலாக ஆரம்பிக்கப்பட்ட தொடர்பாடலை "கிரஹம்பெல்" தொலைபேசி அலைவரிசைக்குள் நகர்த்தினார். தந்தி முறையை மேம்படுத்த கிரஹம்பெல் மேற்கொண்ட முயற்சி தொலைபேசி  பயன்பாட்டுக்கு வித்திட்டது . தோமஸ் வாட்சன் தொலைபேசியை வடிவமைக்க ,கிரகம்பெல் மின்சாரம் மூலம் ஒலியைக் கடத்துவது தொடர்பான யோசனையை முன்வைத்தார். 1875 ஆம் ஆண்டு ஒரே சமயத்தில் 2 சமிக்ஞ தந்தி வயர் மூலம் தகவல் பரிமாற்றத்திற்கு அரசின் அனுமதி கிடைத்ததுடன் 1876 மார்ச் 6 ஆம் திகதி கிரகம்பெல் ஒலியை தந்தி வயர் மூலம் பரிமாறச் செய்து காட்டினார்.

கம்பியில்லாத் தந்தியறிமுகத்தைத் தொடர்ந்து வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி கையடக்க தொலைபேசி, 3G கைபேசி), டெலக்ஸ், மின்நகல், மின்னஞ்சல், இணையம் , செய்மதித் தொடர்புகள் என்பன நவீன தொலைத் தொடர்பு சேவைக்குள் உள்வாங்கப்பட்டன.

தொழினுட்ப வளர்ச்சிக்குள் இலத்திரனியல் நுட்பங்களைப் புகுத்தி தொலைபேசியை இலத்திரனியலுக்குள் வசப்படுத்தியவர்கள் ஜப்பானியராவார். இன்று மக்களிடையே செல்லிடத் தொலைபேசிப் பாவனை ஏறுமுகம் காட்டி நிற்கின்றது.

அதுமாத்திரமின்றி தொழினுட்பத் தொலைத்தொடர்பு வளர்ச்சியினால் ஏற்பட்ட அதி நவீன சாதனையாக இணையம் கருதப்படுகின்றது. நாமுட்புகுத்தும் தரவுகளை எமக்குத் தகவலாகச் சேமித்து மீளத் தரக்கூடிய கணனிப்பாவனை இணையச் சேவையில் தொடர்புபட்டுள்ளதால் வலைப்பின்னல்கள் மூலம் பல நாட்டு மக்கள் தமக்கிடையே தகவல் பரிமாற்றங்களை இலகுவாகவும், வினைத்திறனுடனும் , நட்புடனும் பேணி வருகின்றனர்.

ஆரம்பகாலத்தில் இந்த இணையச்சேவை ஆங்கில மொழியிலான வல்லரசின் இராணுவத் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது.  எனினும் பின்னர் உலகமயமாக்கலின் பன்முகப்படுத்தலின் கீழ் தொலைத் தொடர்பு சாதனமாக மாற்றம் கண்டது. இன்று மின்னியல் தபால், மின்னியல் சஞ்சிகை, மின்னியல் வெளீயீடு, ரெல்நெட், தொடர் கலந்துரையாடல், உலகின் பரந்த வலை என்பன மூலம் நவீன தொடர்பாடல் துறை எமக்குச் சேவையளித்து வருகின்றது.

தொடர்பாடல், தகவல் பரிமாறல் எனும் இருவகையினாலான இணைய தகவற்றுறையின்  சேவை மக்களின் அன்றாட வாழ்விற்கு முதுகெலும்பாய்த் திகழ்கின்றது.

அதேபோல் நவீன தொலைத் தொடர்பில் செய்மதிகளும் நேரடிப்பங்களிப்பைச் செய்கின்றன. மேற்குல நாடுகளே இதனை வினைத்திறனுடன் அதிகளவில் பயன்படுத்துகின்றன. இந்நாடுகளில் வாகனங்களில் "நெவிகேடர்" பொருத்தப்பட்டுள்ளன. இவை பாதை வழிகாட்டியாகும். நாம் செல்ல வேண்டிய இடத்தின் முகவரியை நிரப்பினால் செய்மதியின் துணையுடன் குரல் சமிக்ஞயாக எமக்கது பாதையை வழிகாட்டிச் செல்லும்.

எமது அன்றாட வாழ்வோடு பிணைந்துள்ள இத் தொடர்பாடல்கள் மூலம் மக்களின் கலை, வர்த்தகம், பொழுதுபோக்கு மேம்படுத்தப்படுகின்றது. அதுமாத்திரமுன்றி அனர்த்தவேளைகளில் எமதுயிர்களைப் பாதுகாக்கவும் இது உதவுகின்றது.

தொலைத்தொடர்பானது  தொழினுட்பத்தின் வளர்ச்சியோடு போஷிக்கப்பட்டு  வருவதால் ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு தோள் கொடுக்கும் ஒப்பற்ற சாதனமாகவும் விளங்குகின்றது.

1865 ல் உருவான சர்வதேச தொலைத் தொடர்பு சங்கத்தின் குரலாக (International Telecommunication Union)  உலக தொலைத் தொடர்பு தினம் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 17ம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதன் வளர்ச்சியினால் மறுபக்கம் நாடுகளை வேவு பார்த்தல், கலாச்சார சீரழிவு, முரண்பாடுகளும் பகைமைகளும் தோன்றுதல் போன்ற பிரதிகூலங்களும் காணப்படுகின்றன.

எவ்வாறாயினும் இன்றைய நவீன வாழ்வில் இத் தொலைத்தொடர்புச் சேவையின் பங்களிப்பு இன்றியமையாததொன்றாகும்.

உலக ஊடக சுதந்திர தினம்



மே - 3
--------  ஒருவர் தன்  மன எண்ணங்கள், செயல்களை அவ்வாறே வெளிப்படுத்தும் தன்மையை "சுதந்திரம் " என்கின்றோம்..இச்சுதந்திரப் போக்கு தடைசெய்யப்படும் சந்தர்ப்பங்களில் போராட்டங்கள் வெடிக்கின்றன. அவை குடும்பம், மதம், சமூகம், நாடு, இனம், மொழி என விரிவுபடுத்தப்படுகின்றது.

இச்சுதந்திர தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகமாக "மனித உரிமைகள் சாசனம்" விளங்குகிறது. மனித உரிமை சாசனம் 19 ல் பேச்சுரிமை வலியுறுத்தப்படுகின்றது. 

இந்த வகையில் சுதந்திரமான ஒருவர்        தடையின்றி தனது கருத்தை தெரிவிக்கும் உரிமையுள்ளவர் என்பதை உலகெங்கும் பறைசாற்றும் விதமாக "உலக ஊடக தினம்" அனுஷ்டிக்கப்படுகின்றது.

மனித மேம்பாட்டிற்கு மிகவும் அவசியமானதே தொடர்பாடல். ஆரம்ப காலத்தில் "தீமூட்டல்" மூலம் தமது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட மனிதர், பின்னர் சீனர்கள் காகிதங்களைக் கண்டுபிடித்ததன் விளைவாக கடிதம், தந்தி, பத்திரிகை மூலம் எண்ணங்களை வெளிப்படுத்தத் தொடங்கினர்.
இன்றைய நவீன காலமோ இணையம், மின்னஞ்சலாக மாற்றப்பட்டுள்ளது.

பல்வேறு கோணங்களிலிருந்தும் தகவல்களைத் திரட்டி அவற்றுக்கு உருவம் கொடுப்பவர்களே பத்திரிகையாளர்கள். ஆனாலின்று பத்திரிகைச் சுதந்திரமும் கட்டுப்படுத்தப்பட்டு, சிறைப்படுத்தப்பட்ட நிலையிலேயே உலக ஊடக தினம் முன்வைக்கப்படுகின்றது..

எத்தகைய நெருக்கடியிலும் மக்களுக்கு நடுநிலையான செய்திகளை பத்திரிகைகளினூடாக வழங்க வேண்டியது பத்திரிகையாளர்களின் கருத்தாகும். ஒரு நாட்டின் தலைவிதியை மாற்றியமைக்கக்கூடிய வல்லமை இப் பத்திரிகைக்குண்டு.

நவீன தொடர்பாடலின் வளர்ச்சியும், பன்முகப்படுத்தலும் , ஆக்கிரமிப்பும் இன்றைய கால பத்திரிகைத்துறைக்குச் சவாலாக அமைந்தாலும் கூட, அதற்கீடுகொடுத்து செயற்படும் பத்திரிகைத்தறை சார்பானவர்களின் முன்னெடுப்புக்களால் பத்திரிகைத்துறை காலாவதியாகிவிடவில்லை. ஆரோக்கியமான செய்தி தாங்கலுடன் எம் கரங்களைத் தழுவியே நிற்கின்றது.




உலக தாதியர் தினம்



2012.05.12
---------------
கல்வி மற்றும் வைத்திய துறைகளுடன் சம்பந்தப்பட்டோர் வெறும் ஊதியத்திற்காக மட்டும் செயற்படுவதில்லை. இவர்கள் உண்மையில் சேவை மனப்பான்மையுடன் செயலாற்றும் போதே அத்துறைசார் குறிக்கோள் வெற்றி நிலையடைகின்றது. அந்த வகையிலின்று உலக தாதியர் தினம் அல்லது செவிலியர் தினம் கொண்டாடப்படுகின்றது.

1953 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் அரச சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் என்பவர் இந்த நாளை செவிலியர் நாளாகப் பிரகடனம் செய்யும்படி விடுத்த வேண்டுகோள் உரிய காலத்தில் நிறைவேற்றப்பட்டது. 1965ம் ஆண்டிலிருந்து தாதியர் சேவையை கௌரவிக்கும் விதமாக புளோரன்ஸ் பிறந்தநாளான மே 12 ம் திகதி இந் நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் செல்வச்சிறப்புமிக்க உயர் குடியைச் சேர்ந்தவர் நைட்டிங்கேள். இத்தாலி புளோரன்ஸ் எனும் இவரது பிறப்பிடத்தின் ஞாபகமாக பெற்றோர் இவருக்குப் பெயர் சூட்டினார்கள்.

தாதித் தொழிலின் மகிமையில் ஈர்க்கப்பட்ட நைட்டிங்கேள் போரில் காயம்பட்ட வீரர்களை ஓய்வின்றி மருந்திட்டு சேவை செய்தார். தாதியர்களுக்கான  பயிற்சிப்பள்ளியையும் இவரே முதன் முதலில் ஆரம்பித்தார். புளோரன்ஸ் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அக்கறை கொண்டிருந்தார். 1844 ஆம் ஆண்டில் ஆதரவற்றோர் விடுதிகளிலும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென்ற போராட்டத்திலும் ஈடுபட்டார்.

1846 ஆம் ஜேர்மனி சென்ற இவருக்கு, அங்குள்ள கெய்சர்ஸ்வர்த் மருத்துவனைச் செயற்பாடுகள் மனங் கவர்பவையாக இருந்தது. இதனால் 1851 ல் தொடர்ச்சியாக 4 மாதங்கள் அக் குறித்த மருத்துவமனையில் தீவிரப் பயிற்சியைப் பெற்றார். அக்காலத்தில் தாதியர் சேவைக்குரிய கௌரவம் அளிக்கப்படவில்லையென்பதால் தன் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறியே அவர் தன் முழு வாழ்வையும் தாதியர் தொழிலுக்காக அர்ப்பணித்தார்.

இங்கிலாந்தில் ஆண்டுதோறும் மே 12 ஆம் நாளில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் சம்பிரதாயபூர்வமாக இந்நாள் கொண்டாடப்படிகின்றது. இங்குள்ள செவிலியர் மூலமாக விளக்கு ஏற்றப்படும். இங்கு வருகை தரும் செவிலியர் மூலமாக ஏற்றப்பட்ட விளக்கு கைமாறப்பட்டு இறுதியில் அங்குள்ள உயர்பீடத்தில் வைக்கப்படும். இவ்வாறு செய்வதன மூலம் தாதியர் தமது அறிவைப் பரிமாறுவதாகக் கருதப்படுகிறது.

'விளக்கேந்திய சீமாட்டி', 'கைவிளக்கேந்திய காரிகை' என அனைவராலும் போற்றப்பட்ட புளோரன்ஸ் ஒரு எழுத்தாளரும், புள்ளிவிபரவியலாளருமாவார்.

2012/07/27

கவிதை எழுதலாமே

இது கவிதை எழுத ஆர்வப்படுவோர் மட்டுமே வாசிக்க வேண்டிய பதிவு.கவிஞர் அல்ல. ஏனெனில் என்னை விட கவிஞர்களுக்கு இன்னும் நன்றாகத் தெரியும். கவித்துறையில் நான் சிறு கிள்ளையே. என் அனுபவங்களை வைத்து பிண்ணப்பட்ட பதிவிது.

கவிதை என்பது உணர்வுகளின் வெளிப்பாட்டு வடிவம். அது அனுபவங்களை நாம் நேரடியாக உள்வாங்குவதாலோ அல்லது பிறரின் அனுபவத் தெறிப்புக்களால் நமக்குள் உள்வாங்கப்பட்ட படிப்பினையாகவோ இருக்கலாம்.

இன்று முகநூலில் உலா வரும் புதுவிதமான கவிதைகளின் சிறப்பு பிரமிக்கத்தக்கதாக உள்ளது. அவை சொந்தக் கவிதையாகட்டும் அல்லது பிறரின் கவிதைகளை கொப்பி பேஸ்ட் பண்ணியதாக இருக்கட்டும். அவை யாவும் மனித உணர்வுகளின் பிரதிபலிப்புக்களே!

கவிதை எழுதுவதென்பது சிறப்பானதோர் ஆற்றல். ஆவலால் தூண்டப்படக்கூடிய ஆற்றல். இந்த ஆற்றல், ஆவல் எல்லோருக்கும் இயல்பாகவே உள்ளது. ஆனால் அவர்கள் அதற்கு முயற்சிப்பதோ பயிற்சியெடுப்பதோ இல்லை. ஒருவரின் ஆக்கங்களை தன் ஆக்கம் போல் வெளியிடும் இலக்கிய திருட்டைச்  செய்வதை விட, தனது உணர்வுகளை தானே கிறுக்கி கிறுக்கல்களாக வெளியிடுவது எவ்வளவோ மேல்.
-----------------------------------------------------------------------------------------
கவிதையெழுதும் போது பின்வரும் விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தல் வேண்டும்
-----------------------------------------------------------------------------------------
1. நிறைய இலக்கியப் புத்தகங்களை வாசிக்க வேண்டும். அப்பொழுது நம்மால் பலவிதமான நிறைய சொற்களை அறிய முடியும். மொழிச் செம்மைக்கு இது உதவும். ஏனெனில் கவிதையின் உயிர்ப்போட்டத்திற்கு மொழி அவசியமாகின்றது.

2. எழுதும் மனதை வேறு சிந்தனைகள் குழப்பாமல் அமைதிப்படுத்த வேண்டும்

3.எழுதப் போகும் கருப்பொருள் எது என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அல்லது ஒரு படம் ஒன்றைத் தெரிவு செய்து அதற்கேற்ப எண்ணங்களை ஓட விட்டு எழுத முயற்சிக்கலாம்.

4.அந்தக் கருப்பொருளை மனதிலிறுத்தி அதற்கு வரக்கூடிய கவிதைகளை சந்தத்துடன் கவிதைப்பாணியில் நமக்குள் நாமே சொல்லிப் பார்க்க வேண்டும்.

5.வார்த்தைகள் வெளிப்பட வெளிப்பட அவ் வார்த்தைகளை ஒரு தாளில் குறித்துக் கொள்ள வேண்டும்.

6. மீண்டும் எழுதியவற்றை வாசித்துப் பார்க்கும் போது அதனைத் திருத்தம் செய்யத் தோன்றும். அவ்வாறு நினைப்பவற்றை திருத்தம் செய்யலாம். இவ்வாறு பல திருத்தங்களின் பின்னர் முழுமையான கவிதையொன்று பிறக்கின்றது.

6. கவிதை எழுதும் போது சில வார்த்தைகளை பிரித்தும், சிலவற்றை சேர்த்தும் எழுதும் போதுதான் கவிதை சிறப்பானதாக மாறுகின்றது

5. கவிதை எழுதும் போது எதுகை, மோனையையும் கவனித்தல் வேண்டும்.

6. கவிதைகளில் எளிய வார்த்தைகளைப் பயன்படுத்துவதிலும் பார்க்க வெகு சிலருக்கு மட்டுமே புரியக்கூடிய  வார்த்தைகளைப் பயன்படுத்தும் போதே அக் கவிதை எழுதுவோர் பிறரின் கவனிப்புக்குள்ளாகின்றார். கவிதையும் சிறப்படைகின்றது. (உதாரணம் - மௌவல் - மல்லிகை)

7.கவிதை பிறக்க நேரகாலம் சொல்லமுடியாது. எப்பொழுது எழுத வேண்டுமென மனம் நினைக்குதோ, அப்பொழுதே அக் கவிவரிகளை குறித்தல் வேண்டும்.

8. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவற்றை சம்பந்தப்படுத்தி , வார்த்தைகளை கவியில் புகுத்தும் போதுதான் அக் கவிதை பிறரின் பாராட்டைப் பெறுகின்றது

9.பிறரின் கவிதைகளை வாசித்து அனுபவியுங்கள்.  நமக்குள்ளும் அவ்வாறு எழுதவேண்டுமென்ற தாக்கம் ஏற்படும்

10.தொடர்ந்த முயற்சி, பயிற்சி, பாராட்டு, ஊக்கம் காரணமாக நமது கற்பனை ஆழம், சொல் வார்ப்பு என்பவற்றில் முன்னேற்றமும், அழகும் ஏற்பட்டு கவிதை உயிரோட்டமுள்ளதாக மாறும்.

11.தொடர்ந்து ஒரே கருப்பொருளில் எழுதாமல் வித்தியாசமான அன்றாட வாழ்வோடு தொடர்புபடக்கூடிய விடயங்களுடன் பொருந்தக்கூடிய எண்ணங்களை சற்று கற்பனையும் கலந்து பதிவிட வேண்டும்.

12.நாம் கற்பனையில் கிறுக்கிய கிறுக்கல்கள் பிற மனங்களில் நிஜமெனும் மனத் தாக்கத்தை, நெருடலை ஏற்படுத்துமேயானால் நிச்சயம் அக்கவிதை உயிர்ப்புத்தன்மை வாய்ந்ததாகும்.

12.நல்ல கவிதையொன்றை எழுதி பிறர் அதனைப் பாராட்டும் போது கிடைக்கும் மனதிருப்தியை வார்த்தைகளால் அளவிடமுடியாது.

ஒவ்வொருவர் பாணியும் வித்தியாசமானது. ஒருவரைப் போல் மற்றவர் எழுத முடியாது. கண்ணதாசனும், வைரமுத்துவும், வாலியும், அப்துர் ரஹ்மானும் எழுதும் பாணி வேறுபடக்கூடியது. நாம் நிச்சயமாக அவர்களைப் போல் வரமுடியாது. 

இருந்தும்..........

நம் ஆற்றலை நாம் ரசிக்கலாம்!
வளர்க்கலாம்!
நமக்கென ஒரு பாணியைக் கடைப்பிடிக்கலாம்!
கர்வமில்லாத நல்ல ரசிகனால் நல்ல கவிஞனாக மாறலாம்!

கவிஞராக மாற வாழ்த்துக்கள்.

2012/07/26

யப்பானின் 5 S முறை

5 எஸ் என்பது பணித்தள அல்லது பணியிட அமைப்பு முறையைக் குறிப்பதாகும்.இது யப்பானியர்களால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வழிமுறையாகும். ஜப்பானியப் பொருள்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும் .

1வது எஸ் -   செய்றி               - வகைப்படுத்து    (Sort)
2 வது எஸ் -  செய்டன்           -  நிலைப்படுத்து  (Stabilize)
3 வது எஸ் -  செய்ச்சோ        - ஒளிர்                      (Shine)
4 வது எஸ் -  செய்கொட்சு    - தரப்படுத்து           (Standardize)
5 வது எஸ் -  ஷிட்சுகே          - நீடிக்கச் செய்       (Sustain)

இவை ஐந்தும் பணித்தளத்தில் பொருட்களைத் திரட்டும், ஒழுங்குபடுத்தும் வழிமுறையினைக் குறிப்பதாகும்.

செய்றி
-----------
இது பொருட்களைப் பிரித்தெடுத்து அவற்றுள் தேவையானவற்றைத் திரட்டி தேவையற்றதை அப்புறப்படுத்தும் செயலைக் குறிக்கும்.


செய்டன் -
-------------
இது பொருட்களுக்குரிய இடத்தையும் ,இடத்துக்குரிய பொருட்களையும் தேர்ந்தெடுத்து பெயர்க்குறியீட்டுடன் பராமரிக்கும் செயலாகும். இச்செயல் ஒவ்வொரு பணியையும் எளிமைப்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

செய்சோ
------------
இது பொருட்களையும் பணித்தளத்தையும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்துக்கொள்வதை குறிக்கும் சொல். பணித்தொடக்கத்திலும், பணிமுடிவிலும் பொருட்களையும், பணித்தளத்தையும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்துக் கொள்வதை வழக்கப்படுத்தி கொள்வதை வற்புறுத்தும் சொல்லாகவும் இது அமைகின்றது. அசுத்தமான பொருட்களை சுத்தம் செய்யும் போது பொருட்களின் தரக்குறைபாடுகள் இருக்குமானால் அவற்றை வெளிப்படுத்தவும் நீக்கவும் இம்முறையால் முடிகின்றது. இதனால் வாடிக்கையாளருக்கு தரமான பொருட்கள் மட்டுமே சென்றடைகின்றது.

செய்கொட்சு
-------------------
இது முன் சொல்லப்பட்ட 3 செயல்களை வரையறுக்கப்பட்ட வழிமுறையில் செய்வதைக் குறிக்கும் சொல்லாகும். இந்த வரையறைகள் பொறுப்புக்கள், பொறுப்பாளர்கள், செய்முறைகள், செய்கருவிகள் இவை யனைத்தையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
ஷிட்சுகே
-------------
இது முன் சொல்லப்பட்ட 4 செயல்களையும் தொடர்ச்சியாகவும் தொய்வில்லாமலும் தன்னொழுக்கத்துடனும் செய்வதைக் குறிப்பதாகும்.

ஒவ்வொருவரும் தத்தமது வாழ்வை அழகாகவும் நேர்த்தியாகவும்  வாழ ஆசைப்படுவதும் முயற்சிப்பதும் இயற்கை. அதன் பொருட்டு நல்ல விடயங்களின்பால் தேடல்களும், அவை தொடர்பான பின்பற்றுகைகளும் நமக்குள் இருக்க வேண்டும். இதற்கு யப்பானின் 5 எஸ் முறையும் நமக்கு பயிற்சியளிக்கின்றது.

- Ms. Jancy Caffoor -






2012/07/25

ஒலிம்பிக் போட்டி


2012 ம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் எதிர்வரும் 27 ம் திகதி (2012.07.27 ---12.08.2012) ஐக்கிய ராஜ்ஜியத்தின் லண்டன் மாநகரத்தில் நடைபெற இருப்பது யாவரும் அறிந்ததே! ஒலிம்பிக் பூங்காவானது  கிழக்கு இலண்டனில் ஸ்ட்ராஃபோர்டில்  200 எக்டேர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குதான் லண்டன் ஒலிம்பிக் நடைபெறவுள்ளது. 



அந்நிகழ்வையொட்டி என் விசைப்பலகையும் சில ஞாபகங்களை வலைப்பூவில் பதிக்கின்றது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டியே ஒலிம்பிக் ஆகும். பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது.


ஒலிம்பிக் போட்டியானது கி.மு 776 ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் ஆரம்பமானது. தடையேதுமின்றி 4 வருடங்களுக்கொரு முறை கிரமமாக நடைபெற்ற இப் போட்டியானது கி.பி.393 வரை தொடர்ந்து நடைபெற்றது


கிரேக்க கவிஞர் பானாஹியோடியஸ் ஸௌட்ஸாஸ் என்பவர் கி.பி.1833இல் எழுதிய "இறந்தவர்களின் உரையாடல்" என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது.

பின்னர் கி.பி 393 ல் அப்போதைய கிரேக்க அரசர் தியோடிசியல் இப் போட்டிக்கு தடை விதித்தமையால் போட்டி நிறுத்தப்பட்டது.

1890 ல் மீண்டும் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன.





கிரேக்கர்கள் தமது கடவுள்களில் ஒருவரான "ஜியஸ்" எனும் கடவுளைப் போற்றும் வகையில் திருவிழா கொண்டாடுவார்கள். அதன் ஒரு பகுதிதான் இந்த ஒலிம்பிக் போட்டியாகும். அப்பொழுது கிரேக்க சாம்ராஜ்ய எல்லைகள் ஸ்பெயின் துருக்கி வரை வியாபித்திருந்த நிலையில் கிரேக்கர்கள் மட்டும் இப் போட்டியில் பங்குபற்றினார்கள்.

போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு "ஆலிவ் இலைகளால்" ஆன கிரீடம் சூட்டப்பட்டது.

அப்போதைய கிரிஸ் அரசர் முதலாம் ஜார்ச் முன்னிலையில் பல நாடுகள் பங்குபற்றும் ஒலிம்பிக் போட்டி 19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 1896.04.06ல் எதென்ஸ் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. பேரன் பியரி டி குபர்டின் எனும் பிரான்ஸ் நாட்டவரின் முயற்சியால் மீண்டும் இப் போட்டி புதுப்பிக்கப்பட்டது.

முதல் ஒலிம்பிக் போட்டியில் 14 நாடுகள் கலந்து கொண்டன..தடகள போட்டிகள் , குத்துச் சண்டை, மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், சைக்கிள் ரேஸ், நீச்சல், ஜிம்னாஸ்டிக், பளுதூக்குதல் ஆகிய போட்டிகள் இதில் இடம் பெற்றன..

ஒலிம்பிக்கின்  11 வது நாள் மரதன் ஆரம்பிக்கப்பட்டது















1914 ம் ஆண்டு பேரான் டி குபர்ட் ஒலிம்பிக் கமிட்டியின் 20 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக வெள்ளை நிறமான ஒலிம்பிக் கொடியை நிர்வாகிகளிடம் கையளித்தார். இக் கொடி 1913 ல் வடிவமைக்கப்பட்டு 1914 ல் அங்கீகரிக்கப்பட்டு 1920 ல் நடைபெற்ற ஆன்ட்லெப் நகர ஒலிம்பிக்கில் பயன்படுத்தப்பட்டது. 1984 வரை இக் கொடியே பயன்படுத்தப்பட்டது.

1988 சியோல் ஒலிம்பிக்கில் பழைய கொடி மாற்றப்பட்டு புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.

1900ம் ஆண்டு பாரிஸில் நடந்த 2 வது ஒலிம்பிக் போட்டியில் முதன் முதல் பெண்கள் 3 விளையாட்டுக்களில் அனுமதிக்கப்பட்டனர். கோல்ப், வில்வித்தை,டென்னிஸ் என்பனவே அவ் விளையாட்டுக்களாகும்.

1928 ல் பெண்கள் தடகள போட்டியில் பங்குபற்ற அனுமதி கிடைத்தது.

இருந்தும் ஒருசில நாடுகள் பெண்கள் அனுமதியை மறுத்து விட்டன.        இன்றும் சில நாடுகளில் பங்குபற்றும் பெண்கள் விமர்சனத்திற்குள்ளாகி நிற்கின்றனர்.

தொடக்கத்தில் கோடை கால மற்றும் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன. 1994 முதல் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன.

1908, 1948, ஆகிய ஆண்டுகளில் இப் போட்டி லண்டனிலேயே நடத்தப்பட்டது. மூன்றாவது முறையாக லண்டனில் நடத்தும் பெருமையை லண்டன் பெற்றுள்ளது. முதலிடத்தில் 4 முறை நடத்திய அமெரிக்கா உள்ளது.

ஒலிம்பிக்கில் தம் சாதனைகளை நிலைநாட்டி பதக்கம் சூடுவது போட்டியில் பங்குபற்றும் ஒவ்வொரு வீரர்- வீராங்கனைகளின் கனவாகவே உள்ளது















இம்முறை நடைபெறவுள்ள போட்டித் தலைப்புக்களாவன:

1. தட கள விளையாட்டுக்கள்
2. நீர் விளையாட்டுக்கள்                                                    
3. சீருடற் பயிற்சிகள்
4. தற்காப்புக் கலைகள்
5.ஊர்தி ஓட்டங்கள்
6. குழு விளையாட்டுக்கள்
7. கருவி விளையாட்டுக்கள்








                                         




நடத்தும்- நகரம்இலண்டன்இங்கிலாந்து
பங்குபற்றும்- நாடுகள்148 (தகுதி)
204 (எதிர்பார்க்கப்படுவது)
பங்குபற்றும்- வீரர்கள்10,500 (எதிர்பார்ப்பு)
நிகழ்ச்சிகள்302 - 26 விளையாட்டுக்கள்
ஆரம்ப- நிகழ்வுஜூலை 27
இறுதி- நிகழ்வுஆகஸ்ட் 12

அரங்கம்ஒலிம்பிக் விளையாட்டரங்கம்
இம்முறை ஒலிம்பிக் நிகழ்வில் "வணக்கம்" ஒலித்தது. இது தமிழுக்கு கிடைத்த பெருமை எனலாம்.

உலகப் போர் நடைபெற்ற காலங்களைத் தவிர்த்து 1896 ம் ஆண்டு முதல் 4 வருடங்களுக்கொரு முறை நடத்தப்பட்டு வருகின்றது.


ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற நாடுகள் பின்வருமாறு :


வருடம்இடம்வருடம்இடம்
1896ஏதென்ஸ், கிரீஸ்1900பாரீஸ், பிரான்ஸ்
1904செயிண்ட் லூயிஸ், ஐக்கிய அமெரிக்கா USA1908லண்டன், இங்கிலாந்து
1912ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்1920ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்
1924பாரீஸ், பிரான்ஸ்1928ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து
1932லாஸ் ஏஞ்சலீஸ், ஐக்கிய அமெரிக்கா USA1936பெர்லின், ஜெர்மனி
1948லண்டன், இங்கிலாந்து1952ஹெல்சின்கி, பின்லாந்து
1956மெல்போர்ன், ஆஸ்திரேலியா1960ரோம், இத்தாலி
1964டோக்கியோ, ஜப்பான்1968மெக்ஸிகோ சிட்டி, மெக்ஸிகோ
1972ம்யூனிச், ஜெர்மனி1976மாண்ட்ரீல், கனடா
1980மாஸ்கோ, சோவியத் யூனியன்1984லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா USA
1988சியோல், தென் கொரியா1992பார்சிலோனா, ஸ்பெயின்
1996அட்லாண்டா, ஐக்கிய அமெரிக்கா USA2000சிட்னி, ஆஸ்திரேலியா
2004ஏதென்ஸ், கிரீஸ்2008பெய்ஜிங், மக்கள் சீனக் குடியரசு
2012இலண்டன், ஐக்கிய இராச்சியம்2016ரியோ டி ஜனேரோ, பிரேசில்


லண்டன்: முற்றிலும் பெண்களைக் கொண்ட பாப் குழுவான ஸ்பைஸ் கேர்ள்ஸ் குழுவினர், லண்டன் ஒலிம்பிக் நிறைவு விழாவில் ஒரு கச்சேரி செய்யவுள்ளனர்.