About Me

2012/08/07

67 வது ஹிரோஷிமா நினைவு தினம்


ஆகஸ்ட் - 6 - ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சின் 67 வது நினைவு தினமாகும்.

கொல்லப்பட்ட அம் மக்களுக்கான மௌன அஞ்சலியை எனது வலைப்பூ செலுத்தியவாறு, அப் பின்னணியை இன்று என் நினைவகம் ஏந்தி பகிர்ந்து  கொள்கின்றது.

புவிச்சுற்றுகை, புவிச்சுழற்சியினால் நாட்கள் வேகமாகப் பயணிக்கின்ற போதிலும் நம் ஆழ்  மனதில் ஆணியறையப்பட்ட ஞாபகங்கள் யாவும் உதிர்ந்து விடாமல் பத்திரப்படுத்தப்பட்டு ஏற்ற உரிய காலங்களில் விழிக்கின்றன.  இதுவே நியதி !

 பொதுவாக மானிட வாழ்க்கை போராட்டங்களால் சூழப்பட்டுள்ளன. அப் போராட்டங்களுக்கான தீர்வுகளும் பல்வேறு அணுகுமுறைகளில் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆனால் நாடுகளின் ஆட்சித்தலைமைகள் தமது வல்லமையை உலகில் நிலைநாட்டுவதற்காகவும், மண்ணாசை, பொருளாதாரப்  பேராசை போன்ற தீய குணங்களால் ஆட்பட்டமையினாலும், நாடுகளுக்களுக்கிடையே போர் முரசுகளைக் கொட்டி போராடும் அநாச்சாரம்  வரலாறாகி உலகக் கோளத்தில் கறைப் படிவுகளுடன் படிந்து கிடக்கின்றன.
அரசபீடங்களில் முடிசூட்டிக் கொண்டோர் தம் ஆதிக்கக்கரங்களின் வலுவூட்டலுக்காக  அப்பாவி மக்களைப் பலியாக்கி தம் ஆட்சிக் கிரீடங்களை அழகுபடுத்தி  வந்தமை, வருகின்றமை மறக்கப்பட முடியாத கசப்பான உண்மையாகும்.

 1  செப்ரெம்பர் 1939 ம் ஆண்டு தொடக்கம் 1945 ம் ஆண்டு செப்ரெம்பர் 2 ம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடைபெற்ற பாரிய உலகப்போரே இரண்டாம் உலகப் போராகக் கருதப்படுகின்றது.

இது ஐரோப்பா, பசுபிக், தெற்கு-கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, மத்திய தரைக்கடல், ஆபிரிக்கா போன்ற இடங்களை மையங் கொண்டன.


இதில் அச்சு நாடுகள், நேச நாடுகள் எனும் ஈரணியில் உலக நாடுகள் சில பிரிந்து போரிட்டன. இப்போரில் 10 கோடி இராணுவத்தினர் ஈடுபட்டனர். இப் போரிலீடுபட்ட நாடுகள் தமது சகல பொருளாதாரம், உற்பத்தி, தொழில் என்பவற்றை போர்க்களத்திலீடுபடுத்தியே போரிட்டதால் அதுவரை உலகம் கண்டிராத பாரிய அளவிலான உயிரழிவு இப் போரால் ஏற்படுத்தப்பட்டது.


1939 செப்ரெம்பர் 1 ல் நாசி ஜெர்மனியின் போலந்துப் படையெடுப்புடன் இப்போர் தொடங்கியது. பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள் நேச அணியையும், நாசி ஜெர்மனி, பாசிச இத்தாலி என்பவை இணைந்து அச்சு அணியையும் உருவாக்கின. சீனாவுடன் போர் தொடுத்துக் கொண்டிருந்த ஜப்பானும் அச்சு அணியில் இணைந்து இரண்டாம் உலகப் போரில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டது.

 1939-1941 வரையிலான காலப்பகுதியில் பிரிட்டனைத் தவிர மேற்கு ஐரோப்பிய நாடுகள் அச்சு அணியால் கைப்பற்றப்பட்டன. பின்னர் வடக்கு ஆபிரிக்காவை தம் வசப்படுத்த அச்சு அணி முயன்றன. சோவியத் ஒன்றியத்தின் மீதும் 1941 ஜூனில் அச்சு அணி போர் தொடுத்ததால் சோவியத் ரஷ்யா நேச அணியில் தன்னை இணைத்தவாறு போரிலீடுபட்டது.

ஜப்பான் படைகள் தென்கிழக்காசியாவின் பல பகுதியைக் கைப்பற்றி கிழக்கிந்தியாவின் எல்லை வரை முன்னேறிக் கொண்டிருந்தது. தானும் ஓர் வல்லரசாக மாற வேண்டுமென்ற முனைப்பில் ஜப்பான் 1941 டிசம்பரில்  பசுபிக் சமுத்திரத்தின் "பேர்ள்"  துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க கப்பலை மூழ்கடித்ததன் மூலம் அதுவரை வெறும் பார்வையாளராக இருந்த ஐக்கிய அமெரிக்காவைச் சீண்டி,  இரண்டாம் போருக்குள் அது நுழைய வழியமைத்துக் கொடுத்தது. இரண்டாம் உலகப் போரில் உள் நுழைந்ததால் அமெரிக்காவும் நேச நாட்டுப் படையணியுடன் கூட்டுச் சேர்ந்தது.

1942 ம் ஆண்டு வரை அச்சு நாடுகளுக்கு சாதகமாக இருந்த போர் நிலைமை , அமெரிக்காவின் பிரவேசத்தைத் தொடர்ந்து மாற்றமடையத் தொடங்கியது. அச்சுப்அணியின் மேலதிக நகர்வு சோவியத் படையால் தடுத்து நிறுத்தப்பட்டது. வடக்கு ஆபிரிக்காவிலும் அச்சு படையணி பின்வாங்கியது. பசுபிக் கடலோரத்தில் நேச நாடுகள் இழந்த பகுதிகளை அமெரிக்கா மீண்டும் கைப்பற்றத் தொடங்கியது.

1943 ல் நேச நாட்டுப் படையெடுப்பால் இத்தாலி சரணடைந்தது.1944ல் மேற்கு ஐரோப்பாவை மீட்கும் பணிக்கான போரில் நேச நாடுகள் கடல் மார்க்கமாக ஈடுபட்டன. கிழக்குப்புறமாக சோவியத் படையும், மேற்குப் புறமாக பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா நேச அணிகளும் கூட்டாகச் சேர்ந்து ஜெர்மனியைத் தாக்கத் தொடங்கின. ஈராண்டுகள் தாக்குதலின் பின்னர் நாசி ஜெர்மனும் 1945 ம் ஆண்டு மே மாதம் 8 ந் திகதி சரணடைந்தது. அதே நாளில் "சரண் ஆவணம்" ஜெர்மனால் கையெழுத்திடப்பட்டது.

ஆனால் ஜப்பான் தனது போர் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. இதனால் பசுபிக் பிராந்தியத்தில் தொடர்ந்தும் உக்கிரப் போர் நடைபெற்றது.நேச நாடுகள் ஜப்பான் மீது தொடர்ந்தும் பல தீக்குண்டுகளை வீசியது. 1945 ஜூலை மாதம் 26 ந்திகதி சீனா,ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஒன்றிணைந்து "பாட்சுடம் அறிக்கை " யை வெளியிட்டது. அவ்வறிக்கை மூலம் "ஜப்பான் தனது தோல்வியை ஏற்று உடனடியாக சரணடைய வேண்டுமெனவும், அல்லாவிடில் உடனடி முழு அழிவுக்குள்ளாக வேண்டுமெனவும் எச்சரிக்கை விடுத்தது"

 ஆனால் ஜப்பான் அவற்றின் கோரிக்கையை ஏற்காமல் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் உக்கிரப்பார்வை ஜப்பானை நோக்கி திரும்பியதில் 1945 ஆகஸ்ட்டி6-9 ம் திகதிக்குள் ஜப்பான் நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்கள் மீது அணுக்குண்டுகளை அது வீசி அவ் ஜப்பானின் இரு நகரங்களையும் அழித்து தன் வல்லமையை உலக அரங்கில் நிருபித்தது.

இவ்வாறு அழிவுக்குள்ளான "இரேசிமா அல்லது ஹிரோஷிமா" என்பது ஜப்பானிலுள்ள பெரும் நகரமாகும். இது ஹோன்ஷூ தீவிலுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது முதன் முதலில் 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ந்திகதி காலை 8.15 நேரத்திற்கு ஹிரோஷிமா நகரத்தின்  மீது ஐக்கிய அமெரிக்கா தனது சின்னப்பையன் (Little Boy) எனும் அணுகுண்டை  வீசியது. இவ் அணுகுண்டு விமானப்படைத் தளபதியாக இருந்த "போல் டிபெட்ஸ்" எனும் விஞ்ஞனியால் "எனோலா கே" எனும் பி-29 ரக விமானத்திலிருந்து வீசப்பட்ட முதலாவது அணுகுண்டாகும். "எனோலா கே"  என்பது இவ் விமானியின் தாயார் பெயராகும். இதன் நிறை 4000 கிலோ கிராமாகும். நீளம் 3 மீற்றராகவும், விட்டம் 0.7 மீற்றராகவும் காணப்பட்டது.


ஹிரோஷிமா 905.1 கிலோ மீற்றர் பரப்பைத் தன்னகத்தே கொண்ட மாகாணமாகும். இப் பிரதேசத்தில் அணுகுண்டு விழுந்ததும் அது பாரிய சப்தத்துடன் வெடித்தது. சுமார் 2000 அடிகளுக்கு மேல் தீச்சுவாலை மேலெழுந்தது.16 கிலோ மீற்றருக்குட்பட்ட சகல கட்டிடங்களும் தரை மட்டங்களாகின. 900,00 மக்கள்  தொடக்கம் 166,000 வரையிலான மக்கள் மடிந்தனர். இந் நகரின் தொடர்புசாதனங்கள் யாவும் உடனடியாக செயலிழக்கப்பட்டமையால்  இந் நகர அழிவின் கொடுமை பற்றி ஜப்பான் இராணுவத் தலைமையகம் உடனடியாக அறிந்து கொள்ளவில்லை. அதன் பின்னரே அறிந்து கொண்டது. அணுகுண்டு வீசி 16 மணித்தியாலத்தின் பின்னர்  அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அவ் அப்பாவிகளின் உயிரோடு தான் விளையாடி சாதனை படைத்ததை வெளி உலகிற்கு அதிகாரபூர்வமாகப்  பறைசாட்டியது.


 அன்று வீசப்பட்ட  அவ் அணுகுண்டின் தாக்கத்தால் பல இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன், குழந்தைகளும் சதைப்பிண்டங்களாகவும், அங்கவீனர்களாகவும் தமது பிறப்பை வெளிப்படுத்தினர். இற்றைவரை கதிர்வீச்சின் தாக்கக் கொடுமையை அம் மக்கள் அனுபவித்து வருவது வேதனைக்குரியது..அவ் அணுக்குண்டின் கதிர்வீச்சின் சிதறல்களால் சூழலும் பாதிப்புற்று உயிரின வாழ்விற்கு அச்சுறுத்தலாகவுள்ளது.

(இது வீசப்பட்ட 3ம் நாள் ஆகஸ்ட் 9 ந் திகதி கொழுத்த மனிதன் (Fat Man) எனும் பெயரில் 2வது அணுகுண்டு ஜப்பானின் இன்னுமொரு நகராகிய நாகசாகியில் வீசப்பட்டது.)

அமெரிக்காவின் புதிய அணுகுண்டு பரிசோதனைக் கூடங்களாக ஜப்பானின் நகரங்கள் பயன்படுத்தப்பட்டமையினால் 120,0000 ற்கு மேற்பட்ட உயிரிழப்புக்களும் இன்றுவரை முடிவு காணப்படாத கதிர்வீச்சுத்தாக்கங்களும் ஏற்பட்டுள்ளன.ஜப்பானும் தனது நகரங்களின்  மீது வீசப்பட்ட அணுகுண்டுத் தாக்குதலையடுத்து 15 ஆகஸ்ட் 1945 ம் ஆண்டு சரணடைந்தது. அதே ஆண்டு "சரண் ஆவணத்தில்" அது கையெழுத்திட்டதன் மூலம் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இப்போரின் விளைவாக உலக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பிய காலனிய அரசுகள் தம் வல்லமையை இழந்தன. ஆபிரிக்கா, ஆசியா கண்டங்களில் காலனிமயமழித்தல் தொடங்கியது. ஐரோப்பியா பனிப்போர் கசியத் தொடங்கியது. அமெரிக்க ,ரஷ்யா புதிய வல்லரசாகியது, உலக அமைதிக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்டது. இருந்தும் இங்கு இழக்கப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்களின் இழப்புக்கு முன்னால் அவை வெறும் பூச்சியங்களே!

இவ் அணுகுண்டு வீச்சானது அறநெறிக்கப்பாற் பட்டதே. தன் நாட்டுக்கேற்பட்ட இழப்புக்களுடன் கூடிய அந்த பயங்கர வலியினால் ஜப்பான் 1967 ல் "அணு ஆயுத விலக்கு பற்றிய 3 தத்துவங்களை" வெளியிட்டது.

இதனடிப்படையில் தான் ஒருபோதும் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதில்லையென்றும், அணு ஆயுதங்களை தன் கைவசம் கொண்டிருப்பதில்லையென்றும், அணு ஆயுதங்களை நாட்டுக்குள் வர அனுமதிப்பதில்லையென்றும்  தத்துவங்களை இயற்றி செயற்படுத்தியது.

ஹிரோசிமா நகரத்தின் மீது அமெரிக்கா அணுக்குண்டினை வீசி பாரிய உயிரிழப்புக்களுடன் கூடிய அவலங்களை ஏற்படுத்தியதை நினைவு கூறும் வகையில் 1996ல் ஹிரோசிமா நகரில் "ஹிரோசிமா சமாதான நிலையம்" நிறுவப்பட்டுள்ளது. இதன் பெயர் ஜப்பானிய மொழியில் "கென்பாக்கு டோம்" (அணுகுண்டு குவிமாடம்) ஆகும்.  ஆக் கட்டிடத்தின் வடிவமைப்பின் ஆரம்ப கர்த்தா ஜான் லெட்செல் ஆவார்.


இவ்வாறு ஏதோ சில சுயநலங்களுக்காக முன்னெடுக்கப்படுகின்ற யுத்தங்களும் அவற்றின் இழப்புக்களும் நிம்மதியுடன் வாழ முனைகின்ற ஆரோக்கிய மனித சமூகத்திற்கிடப்படுகின்ற  சாபங்களே! இவ்வாறான அவலங்கள் இனி இப் புவிக் கோளத்தின் நிலப்பரப்புக்களை ஒருபோதும் மாசுபடுத்தக்கூடாதென்பதே நம் அவாவும் பிரார்த்தனையுமாகும்!

- Ms.Jancy Caffoor -


2012/08/06

பர்மிய முஸ்லிம்கள்



அழகான இயற்கைக்குள் கூடு கட்டி வாழும் மனிதன் தன் மென்மையான மனதினுள் இனவாத சகதியைத் தேக்கி நாற்றமெடுக்கின்ற வரலாற்றை விருப்போடு எழுதிக்கொண்டிருக்கின்றான். பெரும்பான்மையினர் தமது காலடிக்குள் வாழும் சிறுபான்மையினரை நசுக்கி, அவர்களின் குருதியில் தாம் நனைந்து புன்னகைக்கும் அராஜகம் உலகெங்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

அந்த வகையில் இன்று சர்வதேச ரீதியில் மனிதாபிமான மனித மனங்களில் , துயரத்தைப் பிழிந்து கொண்டிருப்பவர்களே பர்மாவைச்  சேர்ந்த ரோஹீங்கியா முஸ்லிம்கள்.


முகநூலில் கூட அவர்களின் கொலை செய்யப்பட்ட படங்கள் தினமும் பதிவாகி வரும் போதெல்லாம் அவற்றை காணும் சக்தியற்றவளாய்  நான் பல தடவைகள் கண்களை இறுக மூடியிருக்கின்றேன். அப்பொழுதெல்லாம் கண்ணுக்குள் நிரம்பும் கண்ணீர் மூடிய விழிகளினூடாக வெளிப்படுத்தப்படாமல்  கண்ணுக்குள்ளேயே நிறைந்து  விடும்.

அந்த அராஜகத்தின் தீக்குள் நனைந்து கருகிக் கொண்டிருக்கும் பர்மிய சிறுபான்மை முஸ்லிம்களின் உணர்வுகளிலும், அவலங்களிலும், கதறல்களில்களிலும், கண்ணீரிலும் கரையும் நான், என் துன்பத்தை இன்று இப்பதிவு வழியாக வலைப்பூவினில் கசிய வைக்கின்றேன்! அம் மக்களின் வாழ்க்கைப்பின்னணியை என் நினைவகம் சோகத்துடன் ஏந்திக் கொள்கின்றது.


9ம் நூற்றாண்டில் அராபிய மன்னன் அரகனால் நாடு கடத்தப்பட்ட அரபு முஸ்லிம் வர்த்தகர்கள் பயணித்த வணிகக் கப்பல்  நடுக்கடலில் விபத்துக்குள்ளானதால் அவர்கள் பர்மாவின் பக்கம் கரையொதுங்கினர். பர்மாவினுள் உட் சென்ற அவர்கள் பர்மியப் பெண்களை மணந்து கீழைத்தேய வர்த்தக முகவர்களாக பின்னாட்களில் செயற்பட்டனர்.  இவர்கள் மொகாலாயர்களுடன் வர்த்தகத் தொடர்புகளைப் பேணுமளவிற்கு அதிகாரமிக்கவர்களாகவும், பணபலம் மிக்கவர்களாகவும் விளங்கினர். இவர்களின் வருகையே பர்மியர்களின் இன்றைய பொறாமை கலந்த இனத்துவேசத்தின் மூலவேர்களாக விளங்குகின்றது. இவர்கள் பர்மாவுக்கும், அரேபியாவுக்குமிடையில் இணைப்புப் பாலங்களாகவிருந்து தமது பர்மியச் செல்வங்களை அரேபியா சுரண்ட இடமளிக்கின்றனர் என்றும், தமது பர்மியப் பெண்களை பலாத்காரமாக மணக்கின்றனர் என்றும் பெரும்பான்மை பர்மியர் முஸ்லிம்களுக்கெதிராக இனக் குரோதம் கொண்டனர்.

அக்கால பர்மிய நாணயத்தில் கூட ஏக இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. முகமது நபி இறைவனின் தூதராக உள்ளார்கள்" எனும் அராபிய எழுத்துரு வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இது அக்கால அராபியாவுக்கும், பர்மாவுக்குமிடையிலான தொடர்பை முதன்மைப்படுத்துகின்றது.



பர்மா

பெரும்பாலும் பௌத்தர்களையும், அதற்கடுத்ததாக இந்துக்களையும் கொண்ட நாடு.  இங்கு சுமார் 10 இலட்சம் ரோஹீங்கியா முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். இங்கு வாழும் சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு குடிமக்கள் அந்தஸ்து மறுக்கப்பட்டு வருவதால், அரசின் இனவாதப் பசிக்கு அவ் அப்பாவி மக்கள் அடிக்கடி இரையாகிக் கொண்டு வருகின்றார்கள்.


ரோஹீங்கியா பிரதேசம். 1950 களில்  தனி பிரதேசமாகவே இனங் காணப்பட்டது. இதில் இந்திய, வங்காள இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் காலனியாக இருந்த பர்மா ஜப்பானிய படைகளால் வெற்றி கொள்ளப்பட்டதிலிருந்தே முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் இங்கு ஆரம்பிக்கப்பட்டன.

பர்மாவை ஆட்சி செய்த பாஷிச இராணுவ ஆட்சியாளர்கள் தங்கள் அராஜக இராணுவ இருப்பைத் தக்க வைப்பதற்காக இந்த ரோஹீங்கியா சிறுபான்மை முஸ்லிம்களை வேட்டையாடுவதை தமது அரசியல் செல்நெறியாக வகுத்து செயற்பட்டார்கள். செயற்படுகின்றார்கள். மியன்மார் ராணுவமும், புத்த மதத் தீவிரவாதிகளும் இவ் இன அறுப்பை கச்சிதமாக ஈவிரக்கமின்றி செய்து வருகின்றனர். இவர்கள் தமது கொலை வெறியை ரோஹீங்கியா முஸ்லிம்களின் மீது மட்டுமே திணிக்கின்றனர்.

பெளத்த பிக்குகள் கைகாட்டும் திசை யெல்லாம் இராணுவத்தினரும் பொலிஸாரும் தமது ஆயுதங்களால் அப்பாவி இம் முஸ்லிம் மக்களின் உயிர்களைக் கொன்று குவிக்கின்றனர். நிலத்தில் சிந்தப்படும் குருதித்துளிகளும், கிழிக்கப்படும் உடற் சதைகளும், அவற்றிலிருந்து வடியும் ஊன் நாற்றமும் இவ் இனவாதிகளின் நாடி நரம்புகளில் பரவசத்தை வழங்க, இம் மனித மிருகங்கள் புத்தரின் அஹிம்சைத் தத்துவங்களையெல்லாம் தம் சுயநலத்தால் துவம்சம் செய்கின்றனர்.பன்சலயில் மணியை பிக்குகள் அடிக்கும் போதெல்லாம் பர்மிய மக்கள் திரண்டு வந்து இம் முஸ்லிம்களை கொலை செய்யும் அநாகரிகம் பர்மா தேசத்திலேயே வரலாறாகப் பதியப்படுகின்றது. இந்த இன வன்முறைக் கலாசாரத்தின் விளைவாக 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்களாதேஷூக்கும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மலேசியாவுக்கும் அகதியாய் தப்பியோடியுள்ளனர்.


பல ரோஹீங்க்யான் முஸ்லிம்  மக்கள் கொத்தடிமைகளாக்கப்பட்டு மியான்மார் இராணுவத்தில் கூலி வேலைகளுக்காகத் தினமும் திணிக்கப்படுகின்றார்கள். கல்வியுரிமை இச்சிறார்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுவர் உரிமை சாசன வரைபுகள் கூட இங்கு செல்லாக்காசாகி விட்டன.

இம் ரோஹீங்க்யான் முஸ்லிம்கள் பெரிய வியாபாரங்களில் ஈடுபடவோ, கடலில் மீன் பிடிக்கவோ தடுக்கப்பட்டுள்ளனர். கற்பழிக்கப்படும் பெண்கள் சட்டத்தின் துணையை நாட முடியாதவராகவுள்ளனர். இஸ்லாமிய மத வழிபாடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. குடியுரிமை அந்தஸ்து இல்லாத காரணத்தால் திருமணம் செய்வதற்குக் கூட அரசின் அனுமதியைப் பெறவேண்டும். இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெறமுடியாது. இப் பெண்கள் கட்டாய குடும்பக் கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக வேண்டும். இளைஞர்கள் சுதந்திரமாக நடமாட முடியாது போன்ற கீழ்த்தரமான சட்டங்களால் இம் மக்கள் தினமும் இம்சிக்கப்படுகின்றனர். நிச்சயம் இதுவோர் நவீன அடிமைத்தனத்திற்கான சட்ட வரைவுகளே! இந் நூற்றாண்டில் கூட இவ்வாறான கேவலமான மனிதர்களின் கூடங்களாக இவ்வுலகம் தன்னையிருத்திக் கொண்டுள்ளது என்பது வேதனை தரக்கூடியதே!

பிக்குகளின் தலைமையில் குண்டர் கோஷ்டிகள் மஸ்ஜிதுகளில் புகுந்து அவற்றைத் தீ வைப்பதும், திருக்குர்ஆன்களைத் தீயிடுவதும், வீடுகளை இடிப்பதும், வர்த்தக நிலையங்களை கொள்ளையடிப்பதும், இளம் பெண்களை மானபங்கப்படுத்துவதும் , இம் முஸ்லிம்களைத் தீயிட்டுக் கொளுத்துவதும் இக் காட்டுமிராண்டி மியன்மியரின் அரச சரித்திரங்களில் பதிக்கப்படும் பொன்னெழுத்துக்களாகும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சித்திரவதையை இப் புத்த வாதிகள் பரீட்சிப்பது ரோஹீங்கிய முஸ்லிம்களின் உடலிலும், உயிரிலும், வாழ்க்கையிலும் தான் !


சிட்வே, டாவுன்கு ,தபூ போன்ற பிரதேசங்களிலும் இவர்கள் வன்முறை காலத்துக்காலம்  நிகழ்த்தப்பட்டுள்ளது. ரோஹீங்கிய முஸ்லிம்கள் இந்நாட்டின் நிரந்தரப் பிரசைகளல்ல எனக் கோஷிக்கப்பட்டு அவர்கள் கொன்றொழிக்கப்படுகின்றார்கள்.

இம் மனிதாபிமானமற்ற கொலைவெறியை கண்டிக்காது சீனா, ரஷ்யா போன்ற பொதுவுடமை நாடுகளும்,  ஐரோப்பா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் அமெரிக்கா  மற்றும் ஆசிய, ஆபிரிக்க நாடுகளும் மௌனம் சாதிப்பதன் மர்மம் தானென்ன. அம் மர்மத்தின் பிண்ணனியில் நமக்குத் தெரிவது பர்மாவில் அவர்கள் மலிவாகப் பெற்றுக் கொள்ளவிரும்பும்  இயற்கை வளங்களும், மனித வளங்களும் தான்!

இவர்களுடன் இணைந்தவர்களாக அமெரிக்காவின் காலடியில் வீழ்ந்து கிடக்கத் துடிக்கும் அரபு நாடுகளும் தமது, ஆற்றல் ,மார்க்கம் கற்றுத் தந்த ஒழுக்க விழுமிய கலாசாரங்கள்  என்பவற்றை  மறந்து, தம் இஸ்லாமிய மார்க்க நெறியுடன் ஒன்றித்து வாழும் தம் சகோதரர்களுக்காக ஐனநாயகக் கோஷங்களை வெளிப்படுத்துவதைத் தவிர்த்து வருகின்றனர். இது  வருந்தத்தக்க கண்டிக்கத்தக்க செயலாகும்.

கண்டதுண்டமாக இம் முஸ்லிம் மக்களின் உடலை வெட்டிப் போட்டும், கண்டவுடன் சுட்டுக் கொண்டும் இப் பௌத்தவாதிகள் செய்யும்  இந்தக் கொலைகளைக் கண்டிக்க ஐ.நா வோ, பொதுசன சர்வதேச ஊடகங்களோ  பெரிதும் அக்கறைப்படாத  இன்றைய நிலையில், இம் மக்களின் மனிதாபிமானமற்ற இறப்புக்காக குழி தோண்டும் இவ் அக்கிரமக்காரர்களின் இதயங்களை அறுத்திட வல்ல இறைவன் ஒருவனால்தான் முடியும்.

இந்த இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் கொல்லப்படும் மனிதாபிமானமற்ற செயல்களுக்காக ஆங்காங்கோ வாழும் முஸ்லிம் மக்கள் கண்டனத்தையும், ஆர்பாட்டத்தையும் மேற்கொண்டு வந்தாலும் கூட அவற்றின் வலுவும், வலிமையும் குறைந்தவை. அவை செவிடன் காதில் ஊதிய சங்கொலியாய்  கண்ணீர் காற்றில் கலந்து விடக்கூடியன.

இது ரமழான் மாதம். புனித மாதம். நோன்பாளிகளின் துஆக்கள் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்படும் மாதம். இச்சகோதரர்களுக்கு நீதி கிடைப்பதற்காகவும் நிம்மதியான வாழ்விற்காகவும் நாமும் இறைவனிடம் இறைஞ்சி துஆ செய்வோமாக!



- Ms. Jancy Caffoor -






பத்ர் போர்



பத்ர் யுத்தம் நடைபெற்ற இடம்

நபி (ஸல்) அவர்கள் நுபுவ்வத்தின் பின் பதின்மூன்று வருடங்கள் பல்வேறு கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு மக்காவில் வசித்திருந்தார்கள். இறுதியில் அவர்கள் தமது தாயகத்தை விட்டு மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றார்கள். எனினும் நபியவர்களைத் துன்புறுத்துவதை காபிர்கள் விட்டுவிடவில்லை. அவர்கள்  தனிமைப்படுத்தப்பட்ட முஸ்லிம்களைக் கொடுமைப்படுத்துவதோடு, அவர்களை மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செல்ல விடாது தடுத்தும் வைத்திருந்தனர்.

மேலும்  அவர்கள்,  நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது தோழர்கள் மீதும் கடினமான பொருளாதாரத் தடையைத் திணிப்பதில் உறுதியாக இருந்தனர். மதீனாவுக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் பிரயாணக் கூட்டங்களைத் தடுத்தும் வைத்தனர். இந்தத் தடையானது நீண்ட காலம் நீடித்து, மதீனாவாசிகளின் மீது பெரும் சுமையையும், கஷ்டத்தையும் ஏற்படுத்தியதோடு, அத்தியாவசியமான உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக செங்கடல் ஓரங்களுக்கு பயணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்த்திலும் அவர்களைத் தள்ளியிருந்தது.

அபூஜஹ்ல், கடினமான வார்த்தைப் பிரயோகம் கொண்ட ஒரு கடிதத்தை நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பியிருந்தான். அதில் நபியவர்கள் மீதான தாக்குதலுக்கும், யுத்தத்திற்குமான ஏற்பாடு பற்றி குறிப்பிட்டிருந்தான்.

இவ்விடயத்தில் இரண்டு புனித அல்குர்ஆன் வசனங்கள் இறங்கின,

'அநியாயத்துக்குள்ளானவர்களுக்கு, யுத்தம் செய்ய அனுமதியளிக்கப்பட்டு விட்டது. நிச்சயமாக அல்லாஹ், இவர்களுக்கு உதவி செய்யப் ஆற்றலுடையோனாக இருக்கின்றான். இவர்கள், நியாயமின்றித் தங்கள் வீடுகளிலிருந்து துரத்தப்பட்டார்கள். எங்களுடைய இறைவன் அல்லாஹ் ஒருவன்தான் என்று கூறியதுதான் இவர்கள் செய்த குற்றம். மனிதர்களில் அக்கிரமம் செய்யம்சிலரை சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருந்தால், கிறிஸ்தவர்களின் ஆலயங்களும், அவர்களுடைய மடங்களும், யூதர்களுடைய ஆலயங்களும், அல்லாஹ்வுடைய திருநாமம் அதிகமாக ஸ்தோத்திரம் செய்யப்படும் மஸ்ஜித்களும் அழிக்கப்பட்டே போயிருக்கும். அல்லாஹ்வுக்கு எவர் உதவி செய்கின்றாரோ அவருக்கு, நிச்சயமாக அல்லாஹ்வும் உதவி செய்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க பலவானும் யாரையும் மிகைத்தோனுமாக இருக்கின்றான்' (அல்ஹஜ்- 39,40)


அந்த யுத்தத்திற்கான நாளும் வந்தது.


அது ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு ரமழான் பிறை 17 ஆகும்.

மக்கத்து இறை நிராகரிப்பாளர்களான குறைஷியர்கள், உலகிலிருந்து இஸ்லாத்தை அழிக்கும் நோக்குடன் பெரும் படை திரட்டி "பத்ர்" எனும் இடத்தில் போரிடத் தயாரானார்கள்.

பத்ர் இடம் பற்றி அல்குர்ஆனில் பின்வரும் வசனங்கள் காணப்படுகின்றன.

"புனித மக்காவிலிருந்து 310 கி.மீ தூரத்திலும், மதீனாவிலிருந்து 155 கி.மீ தொலைவிலும் இரு நகரங்களுக்கு மத்தியில் அமைந்த  பகுதி "பத்ர்" !
நபி(ஸல்) அவர்களின் தலைமையில் அணிவகுத்த நபித்தோழர்கள் . வானவர்களுடன் இணைந்து போரிட்டு இஸ்லாத்தின் தடைக்கற்களைத் தகர்த்தெறிந்த புனித யுத்த பூமி அது! "  (அல்குர்ஆன் 3:123)


" பத்ர்" பள்ளத்தாக்கு பின்வரும் அடையாளங்களைக் கொண்டிருந்தது.
--------------------------------------------------------------------------------------------
* முதல் அடையாளம் (வலமிருந்து) - முஸ்லிம்கள் மதீனாவிலிருந்து வந்து முகாமிட்டிருந்த அருகில் உள்ள பள்ளத்தாக்கு "அல் உத்வத்துல் துன்யா"!

* இரண்டாவது அடையாளம் - வியாபாரக் கூட்டத்தினர் கடந்து செல்லும் கணவாய்ப் பகுதி

* மூன்றாவது அடையாளம் - ஜபலுல் மலாயிக்கா (அல்குர்ஆன் 8:42)

அவர்களது இந்த எதிர்பாராத போரழைப்புக்கு நபி (ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் தயாராகினார்கள்.

 பத்ர் பிரதேசம் குறைஷிக் காபிர்களுக்கு சாதகமாகவே இருந்தது. அவர்களது யுத்தப்படையில் ஆயிரம் பேர் இணைந்திருந்தார்கள்.
ஆனால் நபி(ஸல்) அவர்களின் தலைமையினாலான படை போருக்காக தயாராகிக் கொண்டிருந்த பகுதி வெறும் மணற்பாங்கான பகுதியென்பதால் முஸ்லீம் அணியினர் பெரும் அசௌகரியத்தினையே எதிர்கொண்டனர். இருந்தும் அவர்கள் அல்லாஹ் தஆலா மீது கொண்டிருந்த நம்பிக்கையை கைவிடவில்லை.

அவர்களது படைப்பிரிவில் சுமார் 313 பேரே இருந்தனர். குறைஷியர்களை விட  அவர்கள் ஆட்பலத்தாலும், ஆயுதப் பலத்தாலும் பலவீனமான நிலையிலேயே இருந்தார்கள். ஆனால் அவர்களிடம் ஈமானிய பலம், அல்லாஹ்வின் அருள் , ஒற்றுமையுடனும் தியாகத்துடனும் போரிடக்கூடிய மனோபலமும் அதிகமாகவே இருந்தது. இவர்களிடமிருந்த ஆத்மீகப்பண்புகள் காரணமாக ஒழுக்கவிழுமியங்களும் அதிகமாகவே இருந்தது.

இதுவோர் பாரிய யுத்தமாகும். நபியவர்களுடன் இருந்த முஸ்லிம் போராளிகளுள் முஹாஜியர் சங்கடநிலைக்கானார்கள். அவர்களுள் சிலர் தமது பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள், பிள்ளைகளுக்கெதிராகவும் போரிட வேண்டிய நிலையிலிருந்தார்கள். ஆனால் அவர்கள் தங்கள் பாச உணர்ச்சிக்கு அடிபணியாமல், அல்லாஹ்வையை ஈமான் கொண்டு தம் ஆத்மீக பலத்துடன் போரிட்டனர்.

நபி(ஸல்) அவர்கள் பத்ர் யுத்தத்தில் போர்ப்படைத் தளபதியாக நின்ற இடம் "ஜாமிஉல் அரீஷ்" எனப்படுகின்றது.


                                              "ஜாமிஉல் அரீஷ்"

நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். நபி(ஸல்) அவர்களின் துஆ வை ஏற்று, முஸ்லிம்களுக்கு உதவியாக ஆயிரக்கணக்கான வானவர்களை அல்லாஹ் இறக்கி வைத்தான். சஹாபாக்களுடன் இணைந்து போரிடுவதற்காக மலக்குகள் வந்திறங்கிய மலையே "ஜபலுல் மலாயிக்கா" (மலக்குகளின் மலை) எனப்படுகின்றது.


நபி (ஸல்) அவர்களின் தலைமையினாலான 313 பேரை மாத்திரம் கொண்ட சிறிய முஸ்லிம் படை அல்லாஹ்வின் உதவியைப் பெற்று, 1000 பேரைக் கொண்ட எதிரிகளின் தாக்குதலை நேருக்கு நேர் சந்தித்து வெற்றிகரமாக முறியடித்து பாரிய வெற்றியைப் பெற்றார்கள்..

இப் பத்ர் வெற்றித் தினமானது 'யௌமுல் புர்கான்" என அல் குர்ஆனில் அழைக்கப்படுகின்றது. இதன் பொருளானது சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும் தினமாகும். இப் போர் வெற்றியானது இஸ்லாமிய எழுச்சிக்கு பெரும் உறுதுணையாகவிருந்தது.

முஸ்லிம்களுடைய வாழ்வியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், முஷ்ரிகீன்களுக்கு சாதகமான ஒரு சந்தர்ப்பத்தை முறியடிப்பதற்காகவும் நடைபெற்ற இப்போர் நமக்கொரு படிப்பினையாகும்.

"பத்ர்" யுத்தத்தில் 14 ஸஹாபாக்கள் ஷஹீதாக்கப்பட்டார்கள்.
நபி(ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் நல்லடக்கம் செய்யப்பட்ட பத்ர் ஸஹாபாக்களின் கப்ருக்கள் இவைதான்



"அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரை "மரணித்தவர்' என்று கூறாதீர்கள்! அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள். ஆனால் நீங்கள் அதனை உணரமாட்டீர்கள்"
(அல்குர்ஆன் 2:154)

பத்ர் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் தொகை பின்வருமாறு-
--------------------------------------------------------------------------------------------------------------
தாரீக் கமீஸ்      -84
இப்னு ஹிசாம்    -84
தாரீக் யாகூபி     -86 
தபகாத்            -84
பிஹார்           -84
தாரீக் தபரீ       -84   (ஆதாரம் - தாரீகுல் ஹமீஸ்)

இறந்தவர்களின் சடலங்களை வீசியெறிந்த கிணறு "அல்கலிப்" எனப்படுகின்றது.



எத்தகைய கொடுமைகள் நிகழ்ந்த போதிலும் நபியவர்கள் பிரச்சினைகளின் தீர்வாக யுத்தத்தை நாடியதில்லை. நபி(ஸல்) அவர்களின் யுத்தங்கள், நிலவிஸ்தரிப்பு, பழிவாங்கல் போன்ற நோக்கங்களைக் கொண்டவையல்ல.

நபி(ஸல்) அவர்கள் யுத்தத்தை விரும்பாத போதும் கூட , இஸ்லாமிய அழைப்புக்களுக்கான தடுப்புச்சுவர்களாக எதிரிகள் செயற்படும் போதும், உடன்படிக்கைகளை முறிக்கும் போதும், அநீதியான ஆட்சியும், அதிகார துஷ்பிரயோகமும் இடம்பெறும் போதும், முஸ்லிம்களின் தனித்துவத்தைப் பாதுகாத்து அவர்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவும், சத்திய வார்த்தையை உயர்த்துவதற்காகவும் தேவைப்பட்ட இறுதித்தீர்வாக யுத்தத்தைக் கைக்கொண்டார்கள். 

இவ்வாறான போர்களின் வெற்றி மூலம் இஸ்லாம் சர்வதேச ரீதியில் பலப்படுத்தப்பட்டதுடன், அடிமைப்படுத்தப்பட்டிருந்த முஸ்லிம்களின் ஏற்றத்தாழ்வுகளும் நீக்கப்பட்டன. நடுநிலையான ,நேர்மையான, நீதியான ஆட்சிகள் நிலைப்படுத்தப்பட்டன. இஸ்லாமிய எழுச்சிக்கு இவ்வாறான யுத்தங்களும் பங்களிப்புச் செய்துள்ளன என்பதும் மறுக்கப்படாத உண்மையாகும். 

அநீதிக்கெதிராக  ஜிஹாத் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும் என்பதை இத்தகைய யுத்தங்கள் நமக்குணர்த்தி நிற்கின்றன.


2012/08/05

பிர் அவ்ன் அழிப்பு


திருக்குர்ஆன் - அத்தியாயம் 28
----------------------------------------------
 திருமறையின் இறை வசன ஆதாரங்களிலிருந்து திரட்டிக் கொண்ட  பிர்அவ்ன் அழிவு தொடர்பான சம்பவங்கள்
-------------------------------------------------------------------------------------
மென்மையான மனிதமானது பொறாமை, ஆணவம், கபடம் போன்ற துர்க்குணங்களால் சூழும் தருணத்திலிருந்தே அழிவுக்காக அத்திவாரமிடப்படுகின்றது.

அத் தீயகுணத்தின் சரித்திரமாக இன்றும் நம் நினைவுக்குள் விழுந்து கிடப்பவன் பிர்அவ்ன்.....தானே இறைவன் எனும் மமதையில் இருந்தவனை இறைவன் அழித்தமை பற்றி திருக்குர்ஆனில் அல் கஸஸ் (சரித்திரம்) எனும் அத்தியாயத்தில் இறைவன் தெளிவாக விளக்குகின்றான்.

மூஸா அலை அவர்கள் எகிப்தில் பிறந்த இஸ்ரேல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் . அப்பொழுது எகிப்தில் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த (பார்வோன்) பிர் அவ்ன் குறி சொல்பவர்களை நம்பும் பழக்கத்தைக் கொண்டிருந்தான். எகிப்தில் பிறக்கும் ஒரு ஆண் பிள்ளையின் கையால் பிர் அவ்ன் கொல்லப்படுவானென குறிகாரன் சொல்ல, குறிப்பிட்ட காலம் வரை பிறக்கப்போகும் அனைத்துக் குழந்தைகளையும் கொல்லும்படி அவன் கட்டளையிட்டான்.

எகிப்திய பூமியில் தன் ஆட்சியைப் பலப்படுத்திய பிர்அவ்ன் மனிதர்களை பல பிரிவாக்கி அவர்களை பலஹீனப்படுத்தி தானே இறைவன் என மார் தட்டிய ஒருவனாவான்..

அவ்வாறான ஓர் சூழலிலேயே மூஸா நபி (அலை) அவர்களும் பிறந்தார்கள். பிர் அவ்னால் அக்குழந்தைக்கு ஏதும் நடந்துவிடுமோவென அவர்களின் தாயார்  அஞ்சிய போது அவர்களுக்கு இறைவனிடமிருந்து வஹீ வந்தது.

மூஸா நபி (அலை) அவர்களுக்கு பாலூட்டும்படியும், அவரது பாதுகாப்பு பற்றி பயமேற்பட்டால் பேழையில் வைத்து ஆற்றில் போடும்படியும், அவர்கள் மீள திருப்பி தாயிடம் சேர்க்கப்படுவார்களெனவும், தூதர்களில் ஒருவராக மாற்றப்படுவார்களெனவும் வஹீயில் அறிவிக்கப்பட்டது.

மூஸா நபி (அலை) அவர்களின் தாயாரும் அவ்வாறே செய்தார்கள். வைக்கோலினால் படகு போன்று செய்து  நைல் நதியில் மூஸா  (அலை) அவர்கள் விடப்பட்டார்கள், பேழையில் மிதந்து வந்த மூஸா நபி (அலை) அவர்களை பிர் அவ்னுடைய மனைவி நைல் நதிக்கு குளிக்கச் சென்ற போது கண்டெடுத்தார். பிர் அவ்னனிடம் மனைவி தன் கணவனிடம் , அக் குழந்தையைக் கொல்ல வேண்டாமெனவும், சுவீகார புத்திரராக வளர்க்கலாமென்றும் கூறினாள்.

மூஸா (அலை) அவர்களின் தாயாரோ தன்னிதயம் வெறுமையடைந்து மிக்க கவலையுற்றார்கள். அந்த இரகஸியத்தை வெளிப்படுத்தாமல் இறைவன் அவர்களின் மனதைக் கட்டுப்படுத்தினான். எனினும் அக் குழந்தை தூரத்திலிருந்து அக் குழந்தையின் சகோதரியால் கண்காணிக்கப்பட்டது.

மூஸா (அலை ) அவர்கள் பிர் அவ்ன் வீட்டிலேயே வளர்ந்தார்கள். அக்காலத்தில் எகிப்தியரிடம் அடிமைகளாக இஸ்ரேலியர்கள் இருந்ததால், மூஸா (அலை)யை வளர்க்கும் பொறுப்பு அவரின் சொந்தத் தாயிடமே ஒப்படைக்கப்பட்டது.. தன்னினத்தின் அடிமைத்தனம் கண்டு அவர்கள் மனம் வருந்தினார்கள்.

மூஸா (அலை )அவர்கள் வாலிபத்தையடைந்த போது இறைவனால் அவர்களுக்கு ஞானமும், கல்வியும் வழங்கப்பட்டது. மீண்டும் அவர் , அவர் குடும்பத்தவரிடம் சேர்க்கப்பட்டார்கள்.


"அவர் வாலிபத்தையடைந்து, (வாழ்க்கையில்) அவர் நிறைவு நிலை பெற்றபோது அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் நாம் வழங்கினோம், இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் ( நற்) கூலி வழங்குவோம்" (28:14)


ஒருசமயம் அந்நகரத்தில் இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஒருவன்  இஸ்ரேலிய இனத்தையும், மற்றவன்எகிப்தியனாகவும் காணப்பட்டான். இஸ்ரேலிய இனத்தை சார்ந்தவன் மூஸா (அலை ) அவர்களிடம் விடுத்த கோரிக்கைக்கேற்ப அவ் எகிப்தியனைக் அவர் குத்திக் கொன்றார்கள்.. எனினும் பின்னர் அச் செயல் அவர்களுக்கு வருத்தமளிக்கவே மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்புக்கேட்டார்கள். இறைவனும்  மன்னிப்பை வழங்கினான்.


" என் இராட்சனே! என் மீது நீ அருள் புரிந்ததன் காரணமாக (இனி) குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக நான் ஒரு போதும் இருக்க மாட்டேன்" என்று அவர் கூறினார் (28:17)


தன் எகிப்தியனைக் கொன்றதற்காக பிர் அவ்னால் மூஸா அவர்கள் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. இதனைக் கேள்வியுற்ற   பட்டணத்திலிருந்த ஒருவன் ஓடி வந்து அச்  செய்தியை  மூஸா (அலை) அவர்களிடம் கூறினான்.


" மேலும் , பட்டணத்தின் கோடியிலிருந்து ஒரு மனிதர் விரைவாக (ஓடி) வந்து, "மூஸாவே ! நிச்சயமாக உம்மைக் கொலை செய்து விட , (இந்நகரப்) பிரதானிகள் ஆலோசனை செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆதலால் நீர் (இங்கிருந்து) வெளியேறிவிடும். நிச்சயமாக நான் (உம்முடைய நன்மையைக் கருதி) உபதேசம் செய்பவர்களிலுள்ளவனாவேன் " என்று கூறினார். (28:20)


இதனைத் தொடர்ந்து மூஸா அலை அவர்களும் தனது குடும்பத்தினருடன் இரவோடு இரவாக வெளியேறி பாலைவனத்தையடைந்தார்கள். நீண்ட பயணத்தின் பின்னர் மதியன் எனும் இடத்தையடைந்தார்கள். இஸ்ரேலிய மக்களுக்கு இறை தூதராக அனுப்பப்பட்ட சுஹைப் (ரலி) அவர்கள் மூஸா (அலை) யை அடையாளம் கண்டு தன்னுடன் தங்க வைத்ததுமல்லாமல் தன் மகளையும் திருமணம் செய்து வைத்தார்கள்.

அவர்களுடன் சிறிது காலம் வாழ்ந்த பின்னர் எகிப்திற்கு திரும்ப வேண்டுமென்ற எண்ணத்தை இறைவன் மூஸா (அலை) அவர்களிடம் ஏற்படுத்தினான். திரும்பிச் செல்லும் போது , பாதை எதுவும் தெரியாத நிலையில் தடுமாறினார்கள். அப்பொழுது தூரத்தில் நெருப்பைக் கண்டார்கள். அந் நெருப்பிலிருந்து ஏதும் தகவலறிந்து வருவதாக மூஸா அலை அவர்கள் தன் குடும்பத்தினரிடம் கூறி விட்டு அந் நெருப்பை நோக்கிப் புறப்பட்டார்கள்

நெருப்பை அண்மித்ததும்


"மூஸாவே"


என அழைக்கப்பட்டார்கள். அது "சினாய்" மலை. இறைவனுடன் பேசும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது

"நிச்சயமாக நான்தான் உன் இறைவன். உன் காலணிகள் இரண்டையும் கழற்றி விடும். நிச்சயமாக நீ துவா எனும் புனித பள்ளத்தாக்கில் உள்ளீர்"

"இன்னும் நான் உம்மை என் தூதராகத் தேர்வு செய்தேன். ஆதலால் வஹியின் வாயிலாக உமக்கு அறிவிக்கப்படுவதற்கு நீர் செவி ஏற்ப்பீராக"


"நிச்சயமாக நான்தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயகன் இல்லை. ஆகவே என்னையே நீ வணங்கும். என்னைத் தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலை நிறுத்துவீராக "


என இறைவன் பேசினான்.


"மூஸாவே ! உம்முடைய வலது கையில் இருப்பது என்ன" என்று இறைவன் கேட்க,



(அதற்கவர்)"இது என்னுடைய கைத்தடி இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன். இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன். இன்னும் இதில் எனக்கு வேறி தேவைகளும் நிறைவேறுகின்றன. " எனக் கூறினார்.


அவர் கையிலிருந்த தடியை கீழே போடும்படி பணிக்கப்பட்டார்கள்.

அப்பொழுது அத் தடி பெரிய மலைப் பாம்பைப் போன்று நெளிந்தது. அதனைக் கண்டு அச்சமுற்றவராக திரும்பிப் பார்க்காமல் புறமுதுகிட்டு ஓட முற்பட்டார்கள்.. அப்பொழுது இறைவன் அவரைப் பயப்பட வேண்டாமெனவும், அவர் பயமற்றவர்களில் ஒருவராவார்கள் எனவும் கூறினான்.


" உம்முடைய சட்டைப்பைக்குள் உம்முடைய கையை நுழைப்பீராக. அது எவ்விதத் தீங்குமின்றி (பிரகாசமுள்ள) வெண்மையாக வெளிப்படும். பயத்திலிருந்து (விடுபட) உம்முடைய புஜங்களை உம் (விலாவின்) பால் சேர்த்துக் கொள்வீராக. இவ்விரண்டும் பிர் அவ்னுக்கும், அவனுடைய பிரதானிகளுக்கும் ( நீர் எடுத்துச் செல்வதற்கு) உரிய உமதிரட்சகனிடமிருந்துள்ள இரு அத்தாட்சிகளாகும். நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் கூட்டத்தினராகவே இருக்கிறார்கள்" (என்றும் அவருக்குக் கூறப்பட்டது) (28:32)



"இவ்வாறு என்னுடைய பெரிய அத்தாட்சிகளிலிருந்து சிலவற்றை உமக்கு காண்பிக்கின்றேன்  பிர் அவ்னிடம் நீர் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்."


அதனைக் கேட்டதும் , மூஸா அலை அவர்கள் அச்சப்பட்டார்கள்.
பிர் அவ்ன் கூட்டத்தில் உள்ள ஒருவனை ஏற்கனவே தான் கொலை செய்தமையால் அவர்கள் தன்னைக் கொலை செய்யக்கூடுமென அஞ்சி, தன் சகோதரனான ஹாரூன் அவர்களையும் தன்னுடன் அனுப்பி வைக்கும்படி இறைவனிடம் வேண்ட, இறைவனும் அவர் வேண்டுதலை நிறைவேற்றினான்.

" (அதற்கு அல்லாஹ்) " உம் சகோதரரைக் கொண்டு உம் புஜத்தை நாம் வலுப்படுத்துவோம். நாம் உங்களிருவருக்குமே வெற்றியைத் தருவோம். ஆகவே அவர்கள் உங்களிருவர் பால் நெருங்கமாட்டார்கள். நீங்கள் நம்முடைய அத்தாட்சிகளுடன் (செல்லுங்கள்) நீங்களிருவரும், உங்கள் இருவரைப் பின்பற்றுவோரும்தான் வெற்றி பெறக் கூடியவர்கள் " என்று கூறினான்.  (28:35)

14:6. "மூஸா தம் சமூகத்தாரிடம்: ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து (அல்லாஹ்) உங்களைக் காப்பாற்றிய போது, அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருள் கொடையை நினைத்துப் பாருங்கள்; அவர்களோ, உங்களைக் கொடிய வேதனையால் துன்புறுத்தியதுடன், உங்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)தும் உங்கள் பெண்மக்களை (மட்டும்) உயிருடன் விட்டுக் கொண்டும் இருந்தார்கள் - இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மகத்தான சோதனை (ஏற்பட்டு) இருந்தது” என்று கூறினார்

10:83." ஃபிர்அவ்னும், அவனுடைய பிரமுகர்களும் தங்களைத் துன்புறுத்துவார்களே என்ற பயத்தின் காரணமாக, மூஸாவின் மீது அவருடைய சமூகத்தாரின் சந்ததியினர் சிலரைத் தவிர (வேறு) ஈமான் கொள்ளவில்லை, ஏனெனில், நிச்சயமாக ஃபிர்அவ்ன் அந்த பூமியில் வலிமை மிக்கவனாக இருந்தான்; வரம்பு மீறிக் (கொடுமை செய்பவனாகவும்) இருந்தான்"

அவ்வாறே இறைவன் கட்டளைப்படி மூஸா அலை அவர்கள் இறைவன் பற்றிய தெளிவான அத்தாட்சிகளை எடுத்துக் காட்டியபோது பிர் அவ்ன் கூட்டத்தினர் அது இட்டுக்கட்டப்பட்ட சூனியம் என நிராகரித்தனர்.

0:77. "அதற்கு மூஸா: “உங்களிடம் சத்தியமே வந்த போது, அதைப்பற்றியா நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? இதுவா சூனியம்? சூனியக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்” என்று கூறினார்"

10:80. "அதன்படி, சூனியக்காரர்கள் வந்ததும், “நீங்கள் (சூனியம் செய்ய) எறிய விரும்புவதை எறியுங்கள்” என்று மூஸா அவர்களிடம் கூறினார்"


10:81அவர்கள் (எறியக் கூடிய கைத்தடிகளை) எறிந்தபோது, மூஸா: “நீங்கள் கொண்டு வந்தவை (அனைத்தும்) சூனியமே; நிச்சயமாக அல்லாஹ் விரைவிலேயே இவற்றை அழித்துவிடுவான் - அல்லாஹ் விஷமிகளின் செயலை நிச்சயமாக சீர்படச் செய்யமாட்டான்” என்று கூறினார்


26:43. "மூஸா அவர்களை நோக்கி, நீங்கள் எறியக் கூடியதை எறியுங்கள்” என்று கூறினார்"


26:44. "ஆகவே, அவர்கள் தங்கள் கயிறுகளையும், தடிகளையும் எறிந்து, ஃபிர்அவ்னுடைய சிறப்பின் மீது ஆணையாக, நாமே வெற்றியடைவோம்” என்று கூறினார்கள்"


26:45. "பிறகு மூஸா தம் கைத் தடியைக் கீழே எறிந்தார்; உடன் அது (பெரும் பாம்பாகி) அவர்களுடைய பொய்(ப் பாம்பு)களை விழுங்கி விட்டது"


26:46." (இதைப்பார்த்தவுடன்) சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர்"


26:47. "அகிலங்களெல்லாவற்றின் இறைவன் மீது நாங்கள் ஈமான் கொண்டோம் என்றனர்"


 ஆனாலும் பிர் அவுன் தானே இறைவன் எனக் கூறினான்

 “மூஸாவே! உங்களிருவருடைய இறைவன் யார்?” என்று கேட்டான். 



(7:115) "பிர் அவ்னே ! நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்" என்று மூஸா கூறினார் "



20:57“மூஸாவே! நீர் உம் சூனியத்தைக் கொண்டு, எங்களை எங்கள் நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காகவா நம்மிடம் வந்தீர்?” என்று கூறினான்."

20:61. "(அப்பொழுது) மூஸா சூனியக் காரர்களிடம் “உங்களுக்குக் கேடுதான்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள், (அவ்வாறு செய்தால்) அவன் வேதனையினால் உங்களை அழித்து விடுவான்; எவன் பொய்யை இட்டுக் கட்டுகிறானோ, திடனாக அவன் (நற்பேறு கெட்டு) அழிந்து விட்டான்” என்று கூறினார்"


எனினும் பிர் அவுன் தன் கருத்திலிருந்து மாறாமல் தன்னையே இறைவனாகக் கூறினான்-


" (அதற்கு) பிர் அவ்ன், "பிரதானிகளே ! என்னைத் தவிர வேறொருவரு (வணக்கத்துக்குரிய) நாயகன் உங்களுக்கு இருப்பதாக நான் அறியவில்லை. ஆகவே ஹாமானே! களிமண்ணின் மீது ( செங்கல் சூளைக்கு) எனக்காக நெருப்பை மூட்டி (அவற்றைக் கொண்டு மிக உயரமான ) மாளிகையை எனக்காக நீ கட்டுவாயாக, (அதில் ஊறி) மூஸாவுடைய இராட்சனை நான் எட்டிப் பார்க்க வேண்டும்.(அவர் தனக்கு வேறு இராட்சன் இருப்பதாக கூறுகிறாரே, இவ் விஷயத்தில் நிச்சயமாக அவரைப் பொய்யர்களில் உள்ளவராகவே நான் எண்ணுகிறேன் " என்றும் கூறினான் (28:38)

இவ்வாறு பெருமையடித்துக் கொண்டு திரிந்தான்  பிர் அவ்ன் .

7:127. "அதற்கு, ஃபிர்அவ்னின் சமூகத் தலைவர்கள் (அவனை நோக்கி) “மூஸாவும் அவருடைய சமூகத்தாரும் பூமியில் குழப்பம் உண்டாக்கி, உம்மையும் உம் தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீர் அவர்களை விட்டு வைப்பீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “(அவ்வாறன்று!) நாம் அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிக் கொன்றுவிட்டு, (அவர்களைச் சிறுமைப் படுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை மட்டும் உயிருடன் வாழவிடுவோம் - நிச்சயமாக நாம் அவர்கள் மீது பூரண ஆதிக்கம் பெற்றுள்ளோம்” என்று கூறினான்"

பிர் அவ்ன் மூஸா ( அலை) அவர்களுக்கு துன்பம் விளைவிக்க தொடங்கிய தருணத்தில் இறைவனின் வஹீ மூஸா (அலை) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது

26:52. "மேலும், “நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு, இரவோடு இரவாகச் சென்று விடும்; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்” என்று நாம் மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம் "

மூஸா (அலை) வஹீயின் பிரகாரம் செயற்பட்டார்கள்.


20:77. "இன்னும்: “நீர் என் அடியார்களுடன் இரவோடிரவாகப் பயணம் செய்து, அவர்களுக்காக கடலில் உலர்ந்த பாதையை உண்டாக்கிக் கொள்வீராக! (ஃபிர்அவ்ன் உம்மைப்) பிடித்துவிடுவான் என்று பயப்படாமலும், (கடலில் மூழ்கி விடுவோம் என்று) அஞ்சாமலும் இருப்பீராக!” என்று மூஸாவுக்கு நாம் திட்டமாக வஹீ அறிவித்தோம்,"

26:61. "இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது: “நிச்சயமாக நாம் பிடிபட்டோம்” என்று மூஸாவின் தோழர்கள் கூறினர்"


26:63. "உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது"


26:64. "
(பின் தொடர்ந்து வந்த) மற்றவர்களையும் நாம் நெருங்கச் செய்தோம்"

26:65"மேலும், நாம் மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பற்றினோம்."

ஆனால் பின்தொடர்ந்த பிர் அவ்ன் அவனது படையினருடன் பிடிக்கப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டான்.

இது தொடர்பாக இறைவன் திருமறையில் கூறும்போது பின்வருமாறு கூறுகின்றான்:-

" ஆதலால் நாம் அவனையும், அவனுடைய படையினரையும் பிடித்தோம். பின்னர் அவர்களைக் கடலில் எறிந்து விட்டோம். ஆகவே ( நபியே) அநியாயக் காரர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை நீர் கவனிப்பீராக!" (28:40)


(7:103) " அவர்களுக்குப் பிறகு மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் பிர் அவ்னிடத்திலும் அவனுடைய தலைவர்களிடத்திலும் நாம் அனுப்பி வைத்தோம், அப்போது அவர்கன் அவற்றை (நிராகரித்து) அநியாயம் செய்து விட்டார்கள், இத்தகைய குழப்பக்காரர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதை கவனிப்பீராக " என்று இறைவன் கூறினான்.


இவ்வாறாக இறைவனை நிராகரித்துத் திரிந்த முந்திய பரம்பரை அழிக்கப்பட்ட பின்னர் மூஸா அலை அவர்களுக்கு" தவ்றாத் "எனும் வேதம் வழங்கப்பட்டதன் மூலமாக மனித குலம் நேர் வழியையும் , அருளையும், படிப்பினையையும் பெற்றதாக அல்லாஹ் தஆலா "அல் கஸஸ் " எனும் அத்தியாயத்தின் மூலமாக எம் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கின்றான். (அல்ஹம்துலில்லாஹ்)

மூஸா (அலை அவர்கள் "கலீம் அல்லாஹ்" (இறைவனுடன் பேசியவர்) என அழைக்கப்பட்டவர். திருக்குர் ஆனில் அதிக தடவை பெயர் இடம் பெற்ற நபியாவார்கள். இவர்கள் 120 வயது வரை வாழ்ந்தார்கள்.

இறை நிராகரிப்பவர்களுக்கு ஒரு படிப்பினையாக இருப்பதற்காக இன்றும் பிர் அவ்ன் உடல் சிதைவடையாமல் உள்ளது.