About Me

2020/08/05

கவிபாடும் காந்தப்பூக்கள்

காற்றும் துளைத்திட துள்ளிடும் அலைகளெல்லாம்/
ஒற்றிடுமே மணலைத்தான் ஈரத்தையும் பிழிந்தே/
கற்றையாய் புன்னகைக் கொத்துக்கள் வதனமேற/
ஊற்றாறாய் நீந்துகின்ற நீரோடைகளாய் சிறார்களிங்கே/

வெண் மணலைக் கோர்த்தெடுக்கும் மொட்டுக்களால்/
நண்டூறும் குழிகளும் நிரம்பிடுமே குறும்புகளால்/
கண்களுக்குள் வாசப்பூக்கள் நளினத்துடன் விரிந்திடவே/
எண்ணச் சிறகின் தொடுகையில் உயிர்த்திடுமே ஆகாயம்தான்/

உருள்கின்ற சோகிகள் உதிர்க்கின்ற குறுநகையில்/
வருமே யின்பமும் நுரைக்கும் கடற்பூக்கள் பிசைந்தே/
விரும்பியே ரசித்திடலாம் மொட்டுக்களின் தாளவோட்டம்/
கரும்புச்சாற்றிலும் நனையுமிந்த அலைத் தோப்பு/

உணர்வுடன் கலக்கும் நட்பின் பேரானந்தம்/
திணறுமே ஒய்யாரக் கனவின் தித்திப்பிலே/
உணரும் உள்ளங்களும் இளமையின் சுகந்தங்களை/
கணந்தோறும் அனுபவித்திடும் வசந்தப் பேருவைகையில்/

தரை தட்டுமிந்த மனிதப் படகினில்/
கரையும்தானேது.../
கறையில்லா அன்பின் களிப்புடனே இடர்/
திரை நீக்கி மலருமிந்த
கவிபாடும் காந்தப்பூக்கள்/

ஜன்ஸி கபூர் 

  

நல்லாட்சி

வாக்குரிமை உரிமை காக்கும் மக்களாட்சியில்/
ஆக்கிடும் அபிவிருத்தியை வாழ்வின் நலன்களுடன்/
போக்கிடும் ஊழலையும் பொல்லாத ஆட்சியையும்/
வாக்கிடுகையில் சிந்தித்தால் நல்லாட்சியும் நமதாகுமே/

ஜன்ஸி கபூர்  
 


உத்தமமே காதலின் உன்னதமே

விழிகளின் ஈர்ப்பினில் விழுமியக் காதலும்/
விழுந்ததே இதயத்தினில் இன்பமும் இசைந்திட/
அழகிய உணர்வும் உயிருடன் பிசையவே/
ஆனந்த வரமாய் என்னுள் உவந்தாயே/

காதலின் சுகம்தான் காற்றினில் நனைகையில்/
மோதியதே உன் குரலும் இசையாக/
கனவுக்குள்ளும் உதிரு முந்தன் புன்னகைக்குள்ளே/
கரைகிறதே எந்தன் வாலிப வயசும்தான்/

பெண்ணழகியே நொறுங்கினேனே உந்தன் கூர்விழியில்/
எண்ணத்திலும் பூசி நின்றேன் உன்னைத்தானே/
வண்ணமலரே மலர்கிறாயே நெஞ்சுக்குள்ளே இதமாக/
கண்டெடுத்தேன் நிலவுக்குள் பிரிந்திடாத வரமுன்னை/

அமுதச் சிற்பமே பிழிகின்றாய் மெல்லிசையே/
அழைக்கின்றாய் எந்தன் பெயரும் கற்கண்டாக/
பழகிய நொடியெல்லாம் பாசமாய் உறைந்திட/
பவளக்கொடியே பாருமே போற்றுமே உனையே/

விழிகள் நான்கும் வீழ்ந்திட்ட காதலில்தான்/
எழுந்திடுமே ஓருயிராய் அன்பும் சிறகடித்தே/
விழுதாய் பற்றிடும் உந்தன் கரங்களும்/
தழுவுதடி என்னை உத்தமக் காதலினால்/

உயிரோடு இசைந்திட்ட உன்னத காதலே/
உணர்வுக்குள் பிசைவேனே உத்தமி உனையே/
உன்னைத் தொடரும் எந்தன் நிழலுக்குள்ளும்/
உத்தமமுண்டு அது உனக்குத்தானே சொந்தமென்று/

ஜன்ஸி கபூர் - 05.08.2020
யாழ்ப்பாணம்




வான வீதியில் பறக்க வா


தனிமைச் சிறை நீள்கின்றதே தவிப்புடன்/
தாவும் நொடியெல்லாம் பூக்கின்றதே அக்கினியாய்/
இனிமைத் துடிப்பெல்லாம் சிதைகின்ற இதயத்தில்/
இன்னலும் உருகிடுதே விழிநீர் வெம்மைக்குள்/

கன்னச் சிவப்பும் குறுநகை விழியசைவும்/
என்னைத் துளைக்குதடி காதலும் சுகமாக/
இன்பத்தின் வாசலாய் வானம்தான் நமக்கிருக்கே/
அன்றிலே உந்தன் சிறகாய் நானே/

ஜன்ஸி கபூர் - 05.08.2020