About Me

2020/08/09

அந்தந்த நேர வேடங்கள்

கருவறை சீராட்டும் உயிருக்கில்லை மாசு

உரு மாறும்போதே இழிகுணங்களும் வீசும்

உள்ளம் குமுறும் வெஞ்சினம் மறைத்தே

உதடுகள் குலாவும் நறுஞ்சுவைத் தேனில்


பச்சோந்தி மனமது பந்தலிடும் இழிகுணங்களும்

மெச்சிடும் உருவேற்று உலாவிடும் தீதுக்காக


இணையும் கரமதும் சுமக்கும் துரோகத்தை

இனித்திடும் வார்த்தைக்குள்ளும் ஊறிடும் நஞ்சும் 

இருப்பிடச் சூழ்நிலையின் உணர்வோடு வாழ்ந்திடும்

இவ்வுலக மாந்தரெல்லாம் மேடை நடிகரே மனமதில்


ஜன்ஸி கபூர்  

 

  


உறங்காத உண்மைகள்

 

முழுமதி முற்றத்திலே பறந்திடும் கவிகள்/
வழுக் காணா அற்புதப் படைப்புக்களே/
தழுவி யணைக்கையில் மணக்கும் செந்தமிழே/
முழுமையும் பெற்றாய் சிறந்த குழுமமாய்/

ஜன்ஸி கபூர்  


2020/08/07

பிரியாத நிலாக்கள்

பிரிய நிலாக்களின் பிஞ்சு விழிகளில்./

பிறைக்கீற்றாய் வீழ்கின்றதே சோகங்களும் விழிநீரில்/

வெடித்தெழும் துடிப்பினிலே தாயவளும் நினைவிலெழ/

வடிகின்ற ஈரத்தால் அணைக்கின்றான் தங்கையினை/


வறுமை யிடர் பெருகிடும் வாழ்வினில்/

சிறு தொழிலும் செய்திடவே தாயவளும்/

தொலைபோக அழுகின்றாள் சேயிங்கு வருந்தித்தான்/

விலைதானேது பாசத்திற்கே உணர்வும் வயதறியாதே/


அழகான மழலை தெய்வத்தின் அருளே/

அகிலத்தின் பரிவுக்குள்ளும் நிழலும் விரிந்திட/

அழுகின்ற உறவினை அணைத்தே தழுவி /

அன்பைக் குலைத்தூட்டும் பிரியநிலா இவனே/

ஜன்ஸி கபூர்



நிழல் - நவீன கவிதை

நிழல் உண்மையை உணர்த்துகின்றது/

ஒளியின் சத்தியத்தில் உயிர்க்கிறது/

இருளெனும் பொய்மையை மறைக்கிறது/


மனசாட்சிக்கும் மதிப்பளிப்பதனால்/

அது மனிதனுடனேயே எப்போதும் தொடர்கிறது/


வண்ண பேதங்கள் இல்லையதற்கு/

எப்போதும் கருமைதான்/

சமத்துவத்தைக் கற்றுத் தருகின்றது/


சூழ்நிலைக்கேற்ப மாறுகின்றன அதன் அளவுகள்/

மாறுகின்ற மனிதர்களின் மனங்களைப் போல/


உச்சி வெயிலில் பாதணிகளாகவும்/

சுருங்கிக் கொள்கின்றன எமக்குள்/

சந்தர்ப்பங்களைக் கற்றுத்தருவதைப் போல/


பல உருக்கள் அமைத்து/

வித்தைகள் செய்கின்ற விரல்களும்/

முதலீட்டு வணிகப் பொருள்தான்/


இருளையும் ஒளியையும்/

தொடர்புபடுத்தும் நிழல்/

இன்பமும் துன்பமும் ஒன்றித்து வருகின்ற/

வாழ்க்கையை நினைவூட்டுகிறது/


பௌர்ணமி,அமாவாசைகள் கூட/

நிழலின் உணர்ச்சி நிலைகள்தான்/

மனிதனுக்கும் தத்துவமாகின்றன/


வறுமை நிலையில் பயமுறுத்தும்/

உயர்ந்து செல்லும் விலைவாசிபோல்/

சிறு பொருட்களையும் உருப் பெருத்துக்காட்டுகின்றது

நிழல்/


பொய்கள் மெய்யாகலாம்/

மெய்யென்ற மாய நிலைக்குள்

பொய்யும் கலக்கலாம்/


நிழலும் நம்மை நேசிப்பதனாலேயே

கூட வருகின்றது உயிர்போல/


ஜன்ஸி கபூர்-06.08.2020

யாழ்ப்பாணம்


Kesavadhas

ஜன்ஸி கபூர் கவிதை முதற் கவிதை எனக் குறிப்பிடினும் தேர்ச்சி தெரிகிறது!

முதலவரி உண்மையை உணர்த்துகின்றது

என மாற்றி

அடுத்த வரியில் தன்னையே வேண்டாம்!

அதன் பின்னர் கவிதை பேசுகிறது!

வண்ணப் பேதங்கள் இல்லா சமத்துவம்

மனிதர்கள் மனங்கள் போல சூழலுக்கு ஏற்ப மாறுகிறது!

உச்சி வெயில் பாதணிகள்

இன்ப துன்ப வாழ்க்கையை தொடர்ந்து கூடவந்து நினைவூட்டுகிறது!

பௌர்ணமி அமாவாசை உவமங்கள் அருமை!

விலைவாசியோடு ஒப்புமை அழகு!

முடிவும் நன்றே.

வாழ்த்துகள் கவிஞரே!****