About Me

2021/04/14

வாசிக்க வழிதேடு

 

வறுமைச் சுழியில்  வாழ்கின்ற மானிடர்க்கும்/
விழிக்கனாக்களின் ஏக்கமாக  வீழ்கின்றதே பெருஞ்செல்வம்/
துரத்தும் துன்பங்கள் நம்மை வருத்திடும்போது/
தரிக்கின்ற  பெருநிழலாய் நமக்கிங்கே கல்விக்கரை/
                                                                        
வாழ்வியலின் பண்பாடு வாசிப்பின் மேம்பாடு/
வாழ்கின்ற வாழ்வினில் வழிகாட்டுமே நூலறிவு/
வாட்டிடும் அறியாமையை விரட்டிடும் உலகறிவும்/
வனப்பாகும் நம்மாற்றல் வாசிப்போம் பூரணமடைய/

யாசித்து வாழ்ந்தாலும் போற்றுகின்ற வாசிப்பால்/
நேசிக்குமே நல்லுலகும் நெருங்கிடும் வல்லமையும்/

உதரப் பசி உறுத்தும் போதிலும்/
உணர்வின் தாகமும் தீர்க்குமே நற்புத்தகங்கள்/
குப்பிவிளக்கின் ஒளிர்வுக்குள் குடியிருந்த மேதைகள்/
குவலயத்தின் வரலாறும் மறந்திடாச் செல்வங்கள்/

அறிவுத் தாகமெடுத்தால் அடங்கிடுமோ தேடற்பசியும்/
அண்டத்தைப் பிளக்கும் விஞ்ஞானமும் விருப்பாகும்/
எண்ணத்தின் வார்ப்பினை எழுதிடும் விரல்களும்/
ஏற்றிடும் கற்பனைகள் எழிலாகும் காவியங்களாய்/
                                                                              
பெற்றிடும் அறிவு போக்கிடும் துயரை/
போற்றிடும் அகிலம் ஏற்றிடுவோம் நலன்களை/
தற்றுணிவும் தன்னம்பிக்கையும் தன்னையாள வலுவாகும்/
தன்னிகரில்லாச் செல்வமும் தடமாகும் தரிசனத்தில்/

எதிர்காலம் சிறந்திட எமக்கான அடையாளம்/
எக்காலமும் நம்மைத் தொடர்கின்ற கல்வியே/

ஜன்ஸி கபூர் - 02.11.2020

உயிரின் ஒலியா


 

நுதலும் இதழும் அழகாகப் பிணைந்தே

நுகர்கின்றதே விழிகளும் காதலைச் சுகமாக

இதய மகிழ்வில் இசையும் அன்பும்

இறக்கை விரிக்கும் உயிரினை வருடி


அணைப்பில் தழுவும்ஆனந்தச் சிலிர்ப்பு

அடங்குமோ காற்றும் விலக்கா நெருக்கமிது

உயிரின் ஒலியினில் உணர்வின் துடிப்புக்கள்

உவகை மனங்களின் உல்லாசத் தூறல்கள்


சங்கமிக்கும் ஆசைகள்வரைந்திடும் கோலங்கள்

சந்திக்கத் துடிக்கின்றனவோ மங்கல மேடைதனில்


ஜன்ஸி கபூர் - 01.11.2020


காதலெனும் நதியினிலே

 

காதலெனும் நதியினிலே 
காத்திருந்தேன் தவிப்புடனே/
காலமெல்லாம் களித்திருக்க 
கனிந்திருக்கே அன்புதானே/

பருவத்தின் துடிப்பினிலே 
படருதே ஆசைகளே/
இருவரும் படகுகளாய் 
இனிமைக்குள் உலாவவே/

வெண்பனியாய் மூடுகின்ற
உன்றன் தழுவலுக்குள்/
வெட்கம் விரித்தே 
சாய்கிறேன் மெதுவாக/

கனவுக்குள்ளும் மிதக்கிறே 
நினைவாகிப்  பூக்கிறே/
நனவுக்குள்ளும் சிரிக்கிறே 
நிழல்கூட நடக்கிறே/

இல்லறக் கரையினில் 
இன்பமாக ஒதுங்குகையில்/
இழுக்கிறே வம்புக்குள்ளே 
இதயமதைக் கொஞ்சித்தானே/

உணர்வுகள் ஊஞ்சலாட 
உயிரும் வருட /
உள்ளத்தின் அசைவுக்குள்ளே 
உறவாகி வாழுறே/

ஜன்ஸி கபூர் - 15.11.2020   

முதியோர் இல்லம்


 
அற்புதமான மனித வாழ்வானது ஒவ்வொரு பருவங்களையும் கடந்தே செல்கின்றது. மனிதனது வாழ்க்கைப் பயணத்தில் அதிக அனுபவங்களைக் கொண்டதாக முதியோர் பருவமானது காணப்படுகின்றது. உடலும் மனமும் குழந்தைபோல் மென்மையாகி விடுகின்றது.

விரைவான காலவோட்டமானது இளமையைக் கரைக்கின்றது. சுருங்கிய தளர்ந்த தேகம் இயக்கம் குன்றிய ஐம்புலன்கள் என நகருகின்ற ஒவ்வொரு நொடிகளும் மரணத்தை எதிர்பார்த்து தன்னை முதுமை இல்லத்தினுள் ஒதுக்கி விடுகின்றது.

பாசத்தால் உணர்வூட்டி வளர்த்த பிள்ளைகள் தாம் வளர்ந்ததும் தம்மை வளர்த்த பெற்றோரை அநாதரவாகக் கைவிடும் அவலத்தினால் ஆங்காங்கே முதியோர் இல்லங்கள் முளைக்கின்றன. உறவுகளால் சூழ்ந்து களித்திருக்க வேண்டிய மனம் தனிமைக்குள் வருந்துகின்றது. தன்னைப் பராமரிக்க தன் உதிர உறவு அருகில்லையே எனும் ஏக்கத்தில் வேதனை தினம் கொப்பளிக்கின்றது.

உடன் வாழ்ந்த துணை பிரிந்த பின்னர் ஆதரவுடன் அணைக்க வேண்டிய பிள்ளைகள் தம் வாழ்வைப் பேணியபடி பெற்றோரை யாரோ ஒருவராக எண்ணி இம்சிக்கும்போது அவர்களைத் தாங்குவதற்காக அன்போடு வாசலைத் திறக்கின்றது முதுமை இல்லம்.

பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களை பரிவோடு அணைத்து அன்புடன் அவர்களைக் கவனிக்கின்ற பல சேவையாளர்களைக் கொண்டதாக இம்முதியோர் முகாம் காணப்பட்டாலும் கூட வாழ்ந்த உறவுகளின் வெற்றிடங்களை அச்சேவையாளர்கள் நிரப்புவார்களாக.

முதுமை இல்லமெனும்; கட்டிடச் சுவர்களுக்குள் வாழ்கின்ற ஒவ்வொரு உள்ளங்களும் அன்பைத் தேடுகின்றன. இறந்தகால நிழல்களை மீட்டிப் பார்த்தே எஞ்சிய காலங்களை வாழ்ந்திடத் துடிக்கின்றன.

கைவிட்டுப் போன உறவுகளால் வழிகின்ற கண்ணீர்த்துளிகளால் அம்முதியோர் இல்லம் நனைந்து கொண்டேயிருக்கின்றது. பிடித்த வாழ்வைத் தொலைத்துவிட்டு பிடிக்காத உலகத்தில் வாழ்கின்ற அப்பெரியோர்களின் உணர்வுப் போராட்டங்களின் அடையாளமாகவே இம்முதியோர் இல்லம் காணப்படுகின்றது.

ஜன்ஸி கபூர்