About Me

2021/04/14

பச்சைப் பசுங்கிளி வாராய் வாராய்

 

 

தாவரச் சாற்றினில் வார்த்தெடுத்த எழில்/
சோளக்கதிர் மேனியும் அதில் பொருத்திய/
கருமுத்துக் கண்களும் நெட்டிலை வாலும்/
கண்களைக் கவருதே களிப்பினில் உளமாட/

காற்றை உதைத்தே சிறகை உயர்த்துகையில்/
மோதுகின்ற ஓளியும் தீண்டுவதில்லையோ மேனிதனை/
செம்மிளகாய்ப் பழத்தைக் கொத்துகையில் சிதைந்ததுவோ/
சிவப்பும் உன்றன் அலகை நிரப்பி/

நீள்வானில் கரைகின்ற வண்ணங்கள் ஏழும்/
வளையமாகி வீழ்கின்றதோ வட்டக் கழுத்தினில்/
கொலுசும் கொழுவியதோ உன் குரலுக்குள்/
வலித்திடாதோ வட்டக்கழுத்தும் வெட்டவெளிக்குள் பறக்கையில்/

ஓவியன் தூரிகையும் பாவலன் எழுதுகோலும்/
உணர்வுக்குள் உனையேற்றி கற்பனைக்குள் உருவேற்றுகையில் /
உலகமதைச் சுற்றுகின்றாய் உளங்களில் மகிழ்வேற்றி/
பணத்தோடு புகழும் சேர்த்திடும் உறவாகின்றாய்/

குறவன் கரமதில் குவிக்கின்றாய் பணமதை/
சொன்னதைச் சொல்லும் நற்கிளியே நீயும் /
இலவு காத்த கிளியென்றாகி எமக்குள்/
அனுபவங்கள் துளிர்த்திட தடமும் பதிக்கின்றாய்/

ஜன்ஸி கபூர் - 17.11.2020

 ---------------------------------------------------------------
இராஜபுத்திரன் கவிதைகள்
----------------------------------------------------------------
ஜன்ஸி கபூர்
முதற்கண் வணக்கங்க அக்கா ..
தாவரச் சாற்றில் வார்த்தெடுத்த எழில் .. வெண்மேகமாகும் நீர்போல வர்ணிக்க வார்த்தைதேடி முதல்வரியே பெருமழையாக பெய்கிறது .. சோளக்கதிர் மேனி கருமுத்து கண்கள் நெட்டிலை வால் பிரமாதம்.

சிறகு விரித்து பறக்கும்போது மேனி தீண்டும் கதிரவன் ஒளி சரண் அடைகிறது செம்மிளகாய் கொத்தும்போது .. அதுவே அலகின் வர்ணமும் ஆகிறது. அழகோ அழகு.

கொழுசும் கொழுவியதோ உன் குரலுக்குள் .. வலித்திடாதோ வட்டக்கழுத்தும் வெட்டவெளி பறக்கையிலே ...

Kesavadhas ஐயா நீங்களே சொல்லுங்கள். எனக்கு கழுத்து வலிக்கிறது. இவ்வளவு அழகாக எழுத Meera Shree அம்மா அவர்களது குழுமம் நமக்கெல்லாம் உற்றதுணையாக கருத்துச்செறிவாக கவிதைகள் தேடித்தருகிறது. இவ்விடம் குழுமத்தார் கவியுறவுகள் எல்லோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் கூறிக்கொள்கிறேன்.

ஓவியன் தூரிகையும் பாவலன் எழுதுகோலும் பாவேந்தர் குரலுக்கு உயிர்தருகின்றன.  அன்பு வாழ்த்துகள்
 

காத்து நிற்கின்றேன்




மூடப்பட்ட அறை இருட்டின் முடிச்சு
இறுக்குகின்றது என் பத்திரப்படுத்தப்பட்ட மூச்சினை 
உடைகின்ற உணர்வுகளால் தடுமாறுகின்றேன் அச்சத்துக்குள்
என்னைச் சிறைப்படுத்தியிருக்கின்ற இயலாமையின் விரல்களை
நானும் விடுவதாக இல்லை பற்றுகின்றேன்

வெளியே மழை மண்ணைத் தோண்டுகின்றது
இடியின் குரல் துடிக்கின்றது அதிர்வுடன்
போர்வைக்குள் ஒளிந்து துரத்துகின்றேன் மின்னலையும்
நனையாமல் மனதையும் பத்திரப்படுத்துகின்றேன் ஆடைக்குள்

காற்று வாசலை மெல்லத் தட்டுகின்றது
தொற்றுக்களைக் கொட்டி விடுமோ சுவாசத்துக்குள்
சன்னல் துளைகளை மறைக்கின்றேன் அவசரமாக
முணுமுணுக்கின்றன உடம்பின் வியர்வைத்துளிகள் இருந்தும்
புழுதியையும் தும்மலையும் புறந்தள்ளுகின்ற திருப்தி

யார் யாரோ புத்தகங்களை எழுதுகிறார்கள்
அவற்றால் என் வாசிப்பறையும் நிரம்புகின்றது 
படித்துக் களைத்ததில் மங்கிய பார்வைக்குள்
எட்டிப் பார்க்கின்றது ஞானமற்ற அறிவு
வரிகளால் மெருகூட்டப்படாத சிந்தனை கண்டு
என் தலையணையும் ஏற்பதில்லை புத்தகங்களை

ஆசைக்குள் ஒதுங்கிக் கொண்ட மனது
காதலை மெல்லத் தொட்டுப் பார்க்கின்றது
நாடிய காதலிக்காக நாடித்துடிப்பும் அதிகமாகின்றது
ஆனாலும் மறைந்து கொள்கின்றேன் கதவுக்குள்
சாவித் துவாரத்தினுள் தெரிகின்றாள் அவளும்
அவளோடு உரசிச் செல்கின்ற அந்தத் துணையும் 
அடுத்தவர்களுக்காக என்னை அடக்கி அடக்கியே
சுமையொன்றை உயிருக்குள் இறக்கி வைக்கின்றேன்

ஓவ்வொரு நொடியும் பிழிகின்ற அவஸ்தைகள்
மரணத்துக்குள் பதுங்கப் பேரலையாகத் திரள்கின்றன
இருந்தும் சாவின் அனுபவங்களைப் பகிர்வதற்காக
இன்னுமொரு சாவுக்காகக் காத்திருக்கின்றேன் நானும்

ஜன்ஸி கபூர் - 21.11.2020

 
Kesavadhas
 
ஜன்ஸி கபூர் எந்தவொரு விளையாட்டையும் அதற்கென வழங்கப் பட்ட அரங்கில் அந்த விளையாட்டிற்குரிய விதிகளின் படி விளையாட வேண்டும்!!
இங்கு நவீன கவிதைதான் அரங்கு!
கொடுக்கப்பட்ட சான்று கவிதைதான் விளையாட்டு!
விதிகளின் படி தன்திறமையைக் காட்டி விளையாடுவது கவிஞரின் திறமை!
இதை எதற்கு சொல்கிறேன் எனில் அதைப் போலவே தன்தனித்தன்மை மாறாது கவிதை எழுதுவதில் இவர் வித்தகர்!
இந்த கவிதையும் விதிவிலக்கு அல்ல!
சான்றுக் கவிதைக் காட்டிய அச்சம் தயக்கம் துணிவின்மை
அதனால் எழும் வேதனை இவ்வுணர்வுகளை இக்கவிதையும் மிகத்துல்லியமாக வழியவழியக் காட்டுகிறது!
ஒவ்வொரு நொடியும்.... நானும்'
வரையுள்ள வரிகள் மனுஷ்யபுத்திரன் கவிதைவரிகளை ஞாபகப் படுத்துகிறது!
மனுஷ்ய புத்திரன் உலகளவில் கொண்டாடப்படும் நவீன கவிதை எழுத்தாளர்கள் வரிசையில் முன்னிருக்கைகளில் இருக்கும் கவிஞர்களில் ஒருவர்!
வாழ்த்துகள் கவிஞரே!

மழைக்காலம்

 

கார்மேகப் பொழிவினைக் கவிபாடும் கவிமணி/
சேர்க்கின்றார் உள்ளமதில் மழைப்பொழிவின் மகிழ்வினை/
வியர்வையை ஒற்றியெடுக்கும் முத்துக்களின் பேரணியால்/
விளைகின்றதே விளைச்சலும் விசாலமான பூமிக்குள்/

காற்றினில் கலைந்தோடும் கார் மேகங்கள்/  
பற்றிப் பிடிக்கின்றனவே வேர்களெனும் மின்னலைத்தான்/
வானும் குவித்த சாம்பர் மேடெல்லாம்/
கரைந்தே யூற்றுகின்றதே வறட்சியும் குறைந்திடவே/

மலர்க் கண்ணாய் மகிழ்ந்திடும் நீர்த்துளிதானே/
மனங் குளிர தடவுகின்றதே ஈரத்தை/ 
மழையும் வள்ளலாகி ஏரிக்குள் இறங்கிட/
அசையுதே நீரோட்டம் தாராக்களும் நீராடவே/ 

விரிந்திருக்கின்ற ஆகாயமும் உதிர்க்கின்ற ஊசிகள்/
துளைக்கின்றதோ நிழல்களை விலகுதே பொற்கதிர்கள்/ 
கள்ளமில்லாப் பெருமழையில் உள்ளமும் நனைகையில்/
வீட்டினுள் இருந்திடவே மனமது இசைந்திடுமோ/

மண்ணில் சிதறுகின்ற நுரைப் பூக்களை/
எண்ணாமல் எடுத்தே தேகம் சூட்டுகையிலே/
கண்ணோரமும் வியர்க்கின்றதே தேன்துளிகள் பட்டு/
இன்பத்தின் துளிர்ப்பில் கலக்கின்றதே மண்வாசமும்/

துடிக்கின்ற அலை நடுவே அசைந்திடும்/
துடுப்பினையும் விரட்டுதே விசாலக் காற்றும்/
இடுக்கண் கலைத்திடாமல் புயலும் மோதுகையில்/
புன்னகைக்குள் நசிகின்றதே கண்ணீரின் ஈரமும்/

நெஞ்சில் மோதுகின்ற மழைத் தோரணங்களை/
கொஞ்சி மகிழுதே வனத்தின் வண்டுகளே/
அஞ்சிடாமலே அணைக்கிறதே ஆற்றின் கரங்களும்/
பாய்ந்தோடுதே பவள மீன்களும் தாராளமாக/

வானீரம் சிந்தும் பசுமை நேசம்/
வருடுமே மண்ணையும் உள்ளமும் குளிர்ந்திடவே/
உயர்ந்த வானும் குவித்திடும் மழையும்/
குன்றாச் செல்வமே என்றும் எமக்கே/

ஜன்ஸி கபூர் - 24.11.2020
 

காண்டலின் உண்டு என்னுயிர்

 


அன்பினை அணிந்தே அகமகிழ்ந்த காதலின்/
அற்புதச் சுவையினில் நனைந்திட்ட இதயங்கள்/
இறக்கை விரிக்கின்ற இன்பவெளிக் கூடலும்/
இடைக்கிடையே அமிழ்கின்றனவே பிரிவுத் துயரினில்/

பொருளீட்டும் துடிப்பினில் பொன்மகன் காந்தனும்/
நகர்ந்திடுவான் நகர்களுக்கே நங்கையவளும் கரைந்திட/
கனவின் இதழ்களுக்குள் காளையவனைப் பூட்டிடவே/
நாடித்துடிப்பினில் ஏக்கம் நட்டே காத்திருப்பாள்/

பிரிவின் வலிக்குள்ளும் பிரிந்திடாக் காதல்/
பிரகாசம் கண்டே பிரிய தோழியும்/
மொழிகின்றாள் தலைவியிடம் பொலிவிற்கான காரணத்தை/
தழுவுகின்ற காதலவன் தவிப்பைப் போக்கிடும்/
வழிதனை வஞ்சியவள் கோர்க்கின்றாள் வார்த்தைகளில்/

நனவில் இன்பம் நல்கா காதலன்/
கனவில் பதிக்கின்றான் தன் முகமதை/
கனவின் உயிர்ப்பில் துளிர்க்கின்றதே உடலும்/
என்னுயிர் இவனென எழுதிடும் வாழ்வினை/
கனவது பகிர்கின்றதே இரவின் தரிசனத்தில்/
காண்டல் இல்லையெனில் மாண்டழியுமே உயிர்/
என்றுரைத்தாள் தலைவியும் தோழியும் புரிந்திடவே/

ஜன்ஸி கபூர் - 12.11.2020