About Me

2021/04/14

தாலாட்டு


 

அம்மாவெனும் உணர்வினை எனக்குள் உருத்துலக்குகின்றேன்
உயர்ந்து கொண்டே செல்கின்றது பாசத்தினளவு
உருவத்தினுள் அடங்காத உணர்வுகளின் பிம்பமவர்
 
உணர்வுகளை மெல்ல வருடுகின்ற அம்மாவின் தாலாட்டில்
ஏதோ வசீகரம் வீசுவதை உணர்கின்றேன்
கன்னம் வருடி காதோரம் கிசுகிசுப்பாகத்
தன் அன்பினை அள்ளிப் பிசைகையில்
மனம் எங்கோ சிறகடிக்கின்றது அடிக்கடி

வயது என்பது வெறும் எண்பெறுமானம்தானே
ஆழ்மனதினைத் தொட்டு இதப்படுத்தும் பக்குவம்
அம்மாவுக்கு கைவந்த கலையோவென நினைக்கின்றேன்
அதனால்தானோ எல்லோரையும் தூங்கவைக்க முடிகின்றது

அப்பா எனக்குள் ஒரு பிரமை
நிதர்சனத் தரிசிப்புக்களில் காணாமல் போனவர்
அப்பாவும் இவ்வாறான தாலாட்டில்தான் உறங்கினாரோ
எங்கோ அவர் உருவமற்ற ஆத்மாவாக
எனைச் சுற்றியும் இருந்திடக் கூடும்
அம்மா செய்ததெல்லாம் சரியெனும் நினைப்பில்
அம்மாமீதான நம்பிக்கை எனக்குள் விரிகின்றது  

தாலாட்டு உறக்கத்தையும் மரணத்தையும் தொடர்புபடுத்துகின்றதோ
இரண்டினதும் ஆழ்மன அமைதி தொடர்பிலிருக்கின்றதே
விழிகள் மூடிய மௌனநிலை நீள்கையில்
விண்ணேவுகின்றது நம் ஆத்மாவும் மீளாது
இருதயத்துடிப்பின் ஓய்வு நிலையுடன் அஸ்தமிக்கின்றதோ
இவ்வுலக வாழ்வின் தேடல் வேட்கை 

உறக்கத்தின்போது மெதுவாக நகருகின்ற ஆழ்மனம்
மரணம் காண்கையில் மிகையாகச் சுழல்கின்றதே
ஈற்றில் மீளா இருளுக்குள் மூழ்கி
மீளாத் திசையின் சிதைவுகளுக்குள் அடங்கி 
மண்ணுக்குள் தன்னைப் பிணைத்தும் விடுகின்றது

அம்மாவும் உறவுகளின் வலிகளைத் தனக்குள்
அனுபவித்தே துடிப்புடன் மரணம் தொட்டிருக்கின்றாள் 
குழந்தையினதும் முதுமையினதும் மரண அலைவுகளால் 
தனது வலியினைப் புதுப்பித்தும் இருக்கின்றாள்

சடத்துவமான இப்புவியின் ஒவ்வோர் அணுவுக்குள்ளும்
தன்னைப் பிணைத்திருக்கின்றதோ உயிரின் ஆத்மா 
உடல் உடைகையில் ஆன்மாவும் அவாக்கொள்கின்றது
எல்லாப் பரும்பொருளையும் போலவே தன்னையடக்காது
சுதந்திரமாகச் சிறகினை விரித்திடத் துடிக்கின்றது. 

எங்கோ வெகுதொலைவில் அம்மாவின் தாலாட்டு
எனை அழைக்கின்ற பிரமைக்குள் வீழ்கின்றேன் 
அத்தாய்மைக்குள் தவழ்ந்திட மனமும் துடிக்கின்றதே
இருந்தும் வாழ்வியல்நெறிகளின் தடைகளுக்குள் நான்

தொலைவில்  மேக நிழல்களின் அலைவுகளுக்கிடையில்
அணுக்களாக உதிர்ந்து கிடக்கின்ற தங்கையினை
தன்கரங்களிலேந்தி அம்மாவும் புன்னகைத்துக் கொண்டிருக்கின்றார்

எனைப் பார்த்தே கரமசைக்கும் தாய்மையை
ரசித்தவாறே காத்திருக்கின்றேன் நானும் அம்மாவுக்காக

ஜன்ஸி கபூர் - 31.10.2020

 
Kesavadhas
 --------------
ஜன்ஸி கபூர் ஆழ்கடல் முத்தெடுப்பில் அவதானிக்கிறது இந்த கவிதை!
அம்மா என்பது உணர்வு பிம்பம்
உருவத்துள் அடங்காத பாசத்தின் கொள்ளுரு
இது தாய்மை!
கன்னம் வருடி காதோரம் கிசுகிசுக்கும் தாலாட்டில் ஏதோ வசீகரம் வீசுகிறது மலரின் மருவாக!
வயது என்பது ஓர் அளவலகே! பக்குவம் என்பது மனநிலை!
அது தாய்மையின் உயிர்க்கலை!
நிதர்சன தரிசிப்புகளில் காணாமல் போன தந்தையை அன்னையின் தாலாட்டில் ஆசுவாசப் படுத்துகிறது கவிதை!
உறக்கம் விழிப்பு பிறப்பு இறப்பு
ஆன்மா மண்தொடும் ஆகம் என ஆன்மிக வெளியில் சஞ்சரிக்கிறது கவிதை!
வெளி விரிகிறது.. முடிவில்லையே!
அணுவின் அணுவாய் திகழும் ஆன்மாவின் தரிசனமும் தடைபடுகிறது வாழ்வியல் நெறிகளின் தடைகளுக்குள்!
எல்லாமே நாம் விரித்தது தாம்!
இது ஆன்ம வெளிப் பயணம்... தொடரும்...
வாழ்த்துக்கள் கவிஞரே!
 ·

கூடலிற் தோன்றிய உப்பு

விழியின் மொழியோ விளைந்திடும் காதல்/
வீழ்த்திடும் அன்பும் மொழிந்திடும் காமம்/ 
விடிந்திடா இரவுகள் நீள்கின்றதே இன்பத்தில்/
விளைகின்ற வியர்வையும் பிணைகின்றதே நுதலில்/

அணைக்கும் கரங்கள் மீட்டுகின்ற தேகங்கள்/
அடங்கிடுமோ காதலும் மொழிகின்ற சுகத்தில்/
புலவியின் பயனாய் பொங்கும் கலவி/
புளாங்கிதமே மேனிக்கு புத்துணர்ச்சியும் உணர்வுகளுக்கே/

செய்யாத தவற்றின் தவிப்பும் படரும்/
செல்ல ஊடலோ கூடலின் வழியோ/
பிரியத் தலைவனும் மொழிகின்றான் பிரிவிற்கே/
பிரிந்திடாக் காதலில் இணங்கி வாழ்வதற்கே/ 

உப்பும் விளைந்திட பூக்கட்டும் வியர்வை/
உச்ச இன்பமும் சுவைத்திடலாம் ஊடலில்/
உன் னுறவுக்குள் ஊறலைத் தூவடி அன்பே/
ஊட்டம் பெறுவோம் அன்புநிலையும் உயிர்த்திட/

ஜன்ஸி கபூர் - 29.10.2020



வீடு அடையா வெளி

 


மனதின் வலியும் வரைகின்ற கோடுகள்
வரைபடமாகித் தாங்கி நிற்கின்றதே மனையை
எனக்குள்ளும் இனிய கனவுத் தேடல்
நீண்டு தொடுகின்றது இன்னும் முடிவிலியில்

யுத்தம் சிதைக்கின்ற வீட்டின் எச்சங்கள்
துரத்திக் கொண்டிருக்கின்றன வேறொரு இருப்பிடத்திற்கு
ஓவ்வொரு ஆண்டுகளும் ஒவ்வொரு வீடாய்
அவலங்களையும் இடமாற்றிப் பழகிக் கொண்டிருக்கின்றேன்

இருந்தும் சொந்த வீட்டிற்கான ஏக்கம்
இன்னும் புகைக்கின்றது அடங்காப் பெருமூச்சுக்களை
இந்த வருடத்திற்குள் வாழ்வதற்கான வீடொன்றென்ற
ஆசைகளின் உதிர்ப்பில் கருகுகின்றதே எதிர்பார்ப்பும்

வறுமையின் உச்சம் வழிகாட்ட மறுக்கின்றதே
இருந்தும் முயல்கின்றேன் சிதைவுகளை மீள்வுருவேற்ற
வீடு அமைத்திடத் துடிக்கின்ற கனவுகளை
மீள உருத்துலக்கிப் புனரமைக்கின்றேன் மெல்ல
சேமிப்பு என்னவோ நிறைக்கின்றது பெருமூச்சுக்களைத்தானே

அவலங்களின் உழைப்பால் சிந்தியவை கொஞ்சம்
மஞ்சாடிப் பவுண்களால் கைகளில் கிடைத்தவை
கெஞ்சி வாங்கிய கடன்களின் கருணை
பணத்திற்கான வடிகால்களாகின என் தேடலில்

அவிழ்க்கின்றேன் கனவினை எழுகின்றது அடித்தளம்
ஆசைகளைத் தெளித்து கற்களை அடுக்குகின்றேன்
உணர்வுகளின் துடிப்பினைச் சுமந்தவாறே நிமிர்கின்றது
அரை குறைகளுடன் கட்டிடச் சுவர்கள்
வெற்றுக் கைகள் முடிவுறுத்துகின்றனவோ கனவினை

முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற தூண்கள்
முகவரிகளாகி முணுமுணுக்கின்றன சதைகளற்ற எலும்புக்கூடுகளாகி
கற்பனைகளுடன் பிசைகின்ற கனவு வீடு
வெறும் சொற்களாகிச் சிரிக்கின்றதே வரைபடத்தில்

வெயிற் பூக்களும் வெண்மதியும் நிறைவாக
மலர்கின்ற எழில் சுற்றுக்கட்டுத் தாழ்வாரமும்
காற்றின் விரல்களை இதமாகத் தடவுகின்ற
சாளரங்களையும் அமைத்திட ஆசைதனைக் கொண்டேன்

இயற்கைச் சுகத்தினை அறுத்திடாத ஆர்வம்
இறுக்கிப் பிடிக்கின்றது கூரைத் தெரிவில்
வெற்றாசைகள் தாங்குமோ காசின் எடைக்கே

கூரைக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படாமலே இருக்கின்றன
கட்டியெழுப்பப்பட்ட பாதிச் சுவர்களைத் தாங்கியவாறு
குட்டித் தூண்கள் குற்றுயிர்களாகிக் கிடக்கின்றன
கட்டி முடிக்கப்படாத வீடும் அழுகின்றதே

கொட்டும் மழையும் நனைக்கின்ற போதெல்லாம்
வெட்டி விட முளைக்கின்ற பற்றைகள்
தொட்டுக் காட்டுகின்றதே பூச்சில்லாத தரையினை

உரிய பரிமாணச் செதுக்கல்களைத் தாங்கியவாறு
உருவாக்கப்பட்ட பெரிய அறைகள் இரண்டும்
பளிங்குகள் பதிக்கப்பட்ட விசாலத் தரையும்
அடக்கமான அழகிய குட்டிச் சமையலறை

வித விதமான வண்ணங்களைத் தாங்கியவாறு
உயிர்க்கின்ற எனக்கான இருப்பிட இல்லம்
வாய்த்துவிடக் கூடியதுதானோ வீடடையும் பேறு
இன்னும் முற்றுப்பெறாத வாழிடக் கூட்டினை
முழுமையாக நிறைக்கின்றன பெருமூச்சுக்களும் வறுமையும்

ஜன்ஸி கபூர் - 22.10.2020

கன்னமிரண்டும் கிள்ளாதே


விழிகள் நான்கும் பேசுகின்ற அன்பிலே/
விழுகின்றேனே நானும் உன்றன் மனதுள்/ 
விரல்கள் பேசிடும் மொழியில் மெல்ல/
விரிகின்றதே நாணமும் நனைகிறேன் நானுமே/
 
சொருகுகின்றாய் காந்தப் புன்னகையை நெஞ்சில்/
சொக்கி நிற்கின்றேனே நினைவுகளை வருடியே/
செதுக்குகிறேன் சொந்தமாக உன்னையே என்னில்/
சோகத்தை உதிர்க்கின்ற சுகமும் நீதானே/

கன்னமிரண்டும் கிள்ளாதே சிலிர்க்குதே உயிருமே/
கன்னியென்னை மூடுகின்றாய் உன்றன் நிழலாலே/
 
 ஜன்ஸி கபூர் - 25.10.2020