About Me

2021/04/15

பாரதியின் புதுமைப் பெண்


 


கடிகாரம் தன் கடமையைச் செய்து கொண்டிருந்தது. ஏனோ மனது விறைத்த பிரமை. பெண்ணென்றால் வெறும் இயந்திரம் எனும் நினைப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சில ஆண்களுள் அவள் கணவன் முத்துவும் ஒருத்தனே எனும்போது ஆத்திரம் உடலுக்குள் அதிர்வைத் தோற்றுவித்தது. அடக்கிக் கொண்டாள் பத்மா. சிறு வயதிலிருந்து பழக்கப்பட்டிருந்த குடும்பக் கட்டுப்பாடும் பெண்மைக் குணங்களும் இன்னும் அவளைக் கட்டிப் போட்டு வைத்திருக்கின்றன என்பதுதான் உண்மை.

குடும்பம் எனும் வண்டியை நகரச் செய்ய இந்நாட்களில் ஆண், பெண் இருவருமே கட்டாயமாக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் கால கட்டம். பத்மாவும் முத்தைப் போல் மாதம் ஐம்பதாயிரத்துக்கு மேல் உழைக்கின்றவள்தான். ஆனால் பெண் என்பதால் பலரும் விதிக்கின்ற கட்டுப்பாடுகள் அவளது சுதந்திரத்தை சிறை வைத்துள்ளன. 

கணவனின் ஒத்தாசைகள் கிடைக்காத வீட்டு வேலைகளைச் செய்கின்ற குடும்பத் தலைவி  அவள். இதனால் தினமும் அவளது மேனியில் ஊறும் வியர்வையினளவு அதிகம். குடும்ப வட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஓய்வின்றி சுழல்வதால் தன்னைக் கவனிக்கவே நேரமில்லை.

நாட்கள் தேயத் தேய அவள் மனமும் சலித்துப் போனது. பொறுமையும் எல்லை மீறிப் போனது. அன்பால் வழிநடத்த வேண்டிய கணவன் முத்து அதிகாரத்தினைப் பிரயோகித்து அடக்கியாள முயன்றான். சாதாரண பெண்ணுக்குக் கிடைக்கும் சுதந்திரம்கூட அவளுக்குள் இல்லை.   வேலைத் தளத்திற்கு அவளை ஏற்றி, இறக்குபவன் அவனே. தன்னுடன் வேலை செய்கின்ற பெண்களுடன் கூடக் கதைப்பதை விரும்பாதவன். சுற்றம், நட்பும் மாத்திரமல்ல அவளைத் தேடி உறவினர்கள்கூட வருவதில்லை.

மாத முடிவில் கிடைக்கும் சம்பளம் உடனடியாகவே அவனது வங்கிக் கணக்கிற்கு  சென்றுவிடும். அப்பணத்தில் அவள் கணக்குப் பார்த்தாலோ அல்லது தனது தேவைக்கு எடுத்தாலோ வீட்டில் பெரும் யுத்தமே வெடிக்கும். 

ஐந்து வயது மகள் திவ்வியா அவர்களின் சண்டையைப் பார்த்து பயந்து அழும்போது குழந்தையென்றும் பாராமல் மூர்க்கத்தனமாக அடிப்பான். குழந்தையின் உடலில் காணப்படும் இரணம் அவளது மனதைத் துண்டாக்கும். மகளின் வலியைக் குறைப்பதற்காக கணவனுடன் போராடுவதையே தவிர்த்தாள். ஆனால் அவ்வாழ்வின் நெருக்கடியை விதியென்று ஏற்க முடியவில்லை. அவனும் திருந்தவில்லை. முத்துவின் சந்தேகப் புத்தி அவளை கைபேசிப் பயன்படுத்தவும் அனுமதிக்கவில்லை. அவளைப் பொறுத்தவரை அவன் உளவியல் குறைபாடுள்ளவன். சாதாரண உணர்ச்சிகளைக் கூட அனுமதிக்காத வக்கிரபுத்திக்காரன்.

அன்று.....

 இரவு விருந்தொன்றில் கலந்து கொள்ளச் சென்ற முத்து நடுநிசி தாண்டியும் வீடு திரும்பவில்லை. பயங்கர இருளைத் திணித்துக் கொண்டிருந்த பீதி அவளை ஆட்கொள்ளவில்லை. மனம்தான் இறுகி விட்டதே.!

நிசப்தம் கரைந்து பொழுதும் விடிந்த பின்னர்கூட, அவன் வீட்டுக்குத் திரும்பவில்லை. அப்பொழுதான் அவனுக்கு இன்னுமொரு குடும்பமும் இருக்கும் விடயம் அவளுக்குத் தெரிய வந்தது. அவளுக்குள் அருவருப்பு நெளிந்தது. இதுவரை தன் குடும்பம், சமூகம் எனும் கட்டமைப்புக்களுக்காக தனது கவலைகளை அடக்கிக் கொண்டவள் அச்சிறையிலிருந்து வெளியே வரத் துணிந்தாள்.

உத்தியோகம் புருஷ இலட்சணம் என்பார்கள். 

அவளதும் குழந்தையினதும் எதிர்காலத்தினை ஓட்ட அந்த வருமானம் போதும். ஒரு தீர்மானத்திற்கு வந்தவளாக தமது துணிகளை சிறு தோற்பைக்குள் திணித்தவளாக குழந்தையையும் அழைத்துக் கொண்டு முதன் முதலாக வீதிக்குள் காலடி பதித்தாள். மன உணர்வுகள் இலேசான பிரமை.  தான் வாழ்ந்த அவனது வீட்டை ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். இத்தனை நாட்கள் வாழ்ந்த அவ்வீடு அந்நியமான உணர்வுக்குள் காட்சியளித்தது. குட்டக் குட்டக் குனிபவர்கள் எல்லாக் காலமும் தோற்பதில்லை.  

சுதந்திரமான வெளிக்குள் பறப்பதைப் போன்ற பிரமைக்குள் வெளியேறினாள். இனி அவளும் பாரதி கண்ட புதுமைப் பெண்தான். தனது வாழ்வினை தானே தீர்மானிக்கின்ற, அடக்கியாள்பவர்களை எதிர்க்கின்ற துணிச்சலுள்ள பெண். 

தனது முடிவினை கடிதவரிகளில் எழுதியவளாக, அவனது பார்வைபடும் இடத்தில் வைத்துவிட்டு வெளியேறியவளை உலகம் எக்கோணத்திலும் நோக்கக் கூடும். சம்பிரதாயம்,  பண்பாடு ,அடங்கி வாழ்வதே கௌரவம் போன்ற வெளிப்பூச்சுக்குள் தன்னை ஒளித்து வைக்க இனி அவள் தயாரில்லை.

தெளிந்த மனதுடன்  வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள். தொலைபுள்ளியில் அவளது தாய் வீடு தெரிய ஆரம்பித்தது.

ஜன்ஸி கபூர் - 16.10.2020



பசுமை காப்போம்

 


பரந்து விரிந்து காணப்படுகின்ற ஆகாயக் கூரைக்குள் தன்னை அடக்கிக் காணப்படுகின்ற அழகிய பூமிக்கு இறைவனால் வழங்கப்பட்ட அற்புதமான  வளங்களே பசுமை மரங்களாகும். பச்சைப் பசேலென கண்ணுக்கு இதமளிக்கின்ற இயற்கைக் கொடையினை காக்க வேண்டிய பொறுப்பு நமது கரங்களில் தங்கியுள்ளது. 

சுயநலம் எனும் குறுகிய சிந்தனையால் மனிதர்கள் தமது தேவைகளுக்காக பசுமையைத் தாக்குகின்ற விசக் கிருமிகளாக மாறிக் கொண்டிருக்கின்றார்கள். 

இயற்கைச் சமநிலை பேணப்படக் கூடிய விதத்தில் தாவரங்களுக்கும் விலங்குகளுக்குமிடையில் காணப்படுகின்ற பிணைப்பு இப்பசுமை அழிப்பினால் அறுந்து போவதனால் புவியின் உயிர்ப்பான கட்டமைப்பும் செயற்பாடுகளும் அழிவடைகின்றன.பசுமைக்குள் நாம் அழிவினை ஏற்படுத்தும்போது ஓசோன் படை சிதைவடைகின்றது. அத்துடன் தட்ப, வெப்ப சூழ்நிலை மாற்றம், அனல் காற்று, நிலத்தடி நீர் வற்றிப் போதல், பருவ மழை பொய்த்தல், சூழல் மாசடைதல் போன்ற இயற்கை நிகழ்வுகளில் மாற்றங்கள் ஏற்படுவதுடன்இ சுவாசப் பாதிப்புக்கள் உள்ளிட்ட நமது தேக ஆரோக்கியமும் பாதிப்படைகின்றன. 

நாம் இயற்கை எனும் சொத்துக்கு ஏற்படுத்துகின்ற சேதத்தால் நமக்கு நாமே அழிவினை ஏற்படுத்துகின்றோம். நமது வாழ்வின் வனப்பினையும் அழிக்கின்றோம். நாகரிக வளர்ச்சி எனும் மாயைக்குள் நாம் ஏற்படுத்தும் அழிவு உலகத்தையே ஆபத்தின் விளிம்புக்குள் தள்ளுகின்றது. பூமியை உயிர்ப்புடன் அசைத்துக் கொண்டிருக்கின்ற சுவாச மையமான இந்த பூமியைக் காக்க வேண்டுமானால் மரங்களை வெட்டுவதைத் தவிர்தது புது மரங்களை நட்டுதல் வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வுகள் மூலமாக பசுமையைக் காத்து இயற்கை இன்பத்தை நாமும் அனுபவிக்கலாம்.

ஜன்ஸி கபூர் - 01.10.2020


பெண்மையைப் போற்றுவோம்

 

மென்மை எனும் போர்வைக்குள் தன்னைப் போர்த்திக் கொண்டிருக்கும் பெண்மை இவ்வுலகின் வெளிச்சத்திற்கான கண்கள். பண்டைய காலந்தொட்டு இற்றைவரை பெண்மைக்குள் பொதிந்திருக்கும் நாற்குணங்களால்  ஈர்க்கப்படாதோருண்டோ?   நல்லறத்தின் வடிவமாகவும் பண்பாட்டின் மகுடமாகவும் வாழ்க்கைக்கான தவமாகவும் சக்திமிக்க தாய்மையாகவும் திகழும் பெண்ணானவள் ஒவ்வொரு ஆணின் இயக்கத்திற்குமான சக்தியாகவே பரிணமிக்கின்றாள். இவ்வுலக நிலவுகைக்குள்ளும் அவளின் பண்புகள் நினைவூட்டப்படுகின்றன.  இலக்கியங்களிலும் வரலாறுகளிலும் அவளின்; மாண்புகள்  பிரகாசித்துக் கொண்டேயிருக்கின்றது.  

பெண்ணின் சிறப்பினை உலகப் பேராசான் வள்ளுவனும் தனது குறளில் தனி அதிகாரமிட்டு சிறப்பித்துக் கூறியுள்ளார். தாயின் காலடியில் சுவர்க்கம் இருப்பதாக திருக்குர் ஆன் கூறுகிறது. ஓவ்வொரு மதமும் பெண்மையைக் கண்ணியப்படுத்தியுள்ளன. ஒவ்வொரு பெண்மைக்குள்ளும் குடும்பத்தைப் பரிபாலிக்கின்ற சிறந்த நிர்வாகத் திறன் காணப்படுகின்றது.  

பெண்மையைச் சுற்றிக் காணப்படுகின்ற பல்வேறு யதார்த்தங்களின் நெருக்கடிகள் அவளது போராட்டத்திற்கான தடங்களை உருவாக்குகின்றன. பாலியல் வன்முறை உள்ளிட்ட பல்வேறு குடும்ப அடக்குமுறைகள் பொருளாதார நெருக்கடிகள் போன்ற இடர்களில்   சிக்குப்படுகின்ற   நிலை இன்றைய முன்னேற்றமான உலக வாழ்வியலிலும் அரங்கேற்றப்படுகின்றது என்பதே கசப்பான உண்மையாகும். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு எனக் கோஷமிட்ட அன்றைய நாட்கள் தொடக்கம் ஆணுக்குச் சரிசமனாக உரிமைகளை அனுபவித்து வாழ்கின்ற  இன்றைய காலகட்டம் வரையில் காணப்பட்ட பெண்ணின் வளர்ச்சிப்படி நிலையில் பல்வேறு போராட்டங்கள் ஒளிந்து கொண்டுள்ளன.

 பெண்ணின் முன்னேற்றத்திற்குத் தடையாகக் காணப்படும் அனைத்துக் காரணிகளையும் இனங்கண்டு தகர்த்துவதன் மூலம் பெண்ணின் மேன்மையைப் பாதுகாக்கலாம்.

எனவே பெண்ணுக்கான மதிப்பும் மரியாதையும் எள்ளளவும் குறையாது   அவளைப் போற்றிப் பாதுகாப்பது ஒவ்வொருவரின்   கடமையாகின்றது.

ஜன்ஸி கபூர் - 12.10.2020

2021/04/14

வல்வரவு வாழ்வார்க்கு உரை

 

 

செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை (1151)

இன்பநலன் நுகர்ந்திடும் காதல் மணத்தில்/

இதமற்ற பிரிவும் பெருந் துன்பமே/

இன்னுயிர் வருத்திடும் பிரிவின் வலிதனை/

உணர்த்துதே பிரிவாற்றாமை அதிகாரச் சுவை/


இல்லறச் செழுமையில் வருங்காலம் வனப்புற/

தலைவனின் சிந்தைக்குள் உயிர்க்கின்றதே பொருளீட்டல்/

தேடல்ச் சிந்தனை தோழியூடாக உரைத்தால்/

தெரிந்திடுவாளே தலைவியுமதை தாக்கமில்லாச் செய்தியாய்/


வாழ்விற்கே காப்பாம் வளமான துணையே/

நிழலென நீண்டிட வேண்டுமே எதிர்காலத்தினில்/

உணர்வுகளைப் பொருத்திய உடல்கள் பிரிதல்/

உத்தம கற்பின் நியதியோ இவ்வையகத்தில்/


அறிந்திட்டாள் தலைவியும் அணைத்தாள் அக்கினியை/

பிரிந்திடேன் என்றவரே துன்பத்துள் தள்ளுகின்றார்/

பிரியமே நீங்கிடாதே நானும் இறக்கும்வரை/

பிரிந்துப் போகாமை உண்டென்றால் சொல்/


மாறாக விரைந்து வருவேன் என்றுரைத்தால்/

உரைத்திடு அடுத்தாரிடம் உன் வருகையை/

நானோ அறியேன் உன் வாசனையை/

உறைந்திருப்பேன் மரணத்துள் என்னுயிரும் மெலிந்திருக்கும்/


ஜன்ஸி கபூர் - 15.10.2020