About Me

2021/04/14

வல்வரவு வாழ்வார்க்கு உரை

 

 

செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை (1151)

இன்பநலன் நுகர்ந்திடும் காதல் மணத்தில்/

இதமற்ற பிரிவும் பெருந் துன்பமே/

இன்னுயிர் வருத்திடும் பிரிவின் வலிதனை/

உணர்த்துதே பிரிவாற்றாமை அதிகாரச் சுவை/


இல்லறச் செழுமையில் வருங்காலம் வனப்புற/

தலைவனின் சிந்தைக்குள் உயிர்க்கின்றதே பொருளீட்டல்/

தேடல்ச் சிந்தனை தோழியூடாக உரைத்தால்/

தெரிந்திடுவாளே தலைவியுமதை தாக்கமில்லாச் செய்தியாய்/


வாழ்விற்கே காப்பாம் வளமான துணையே/

நிழலென நீண்டிட வேண்டுமே எதிர்காலத்தினில்/

உணர்வுகளைப் பொருத்திய உடல்கள் பிரிதல்/

உத்தம கற்பின் நியதியோ இவ்வையகத்தில்/


அறிந்திட்டாள் தலைவியும் அணைத்தாள் அக்கினியை/

பிரிந்திடேன் என்றவரே துன்பத்துள் தள்ளுகின்றார்/

பிரியமே நீங்கிடாதே நானும் இறக்கும்வரை/

பிரிந்துப் போகாமை உண்டென்றால் சொல்/


மாறாக விரைந்து வருவேன் என்றுரைத்தால்/

உரைத்திடு அடுத்தாரிடம் உன் வருகையை/

நானோ அறியேன் உன் வாசனையை/

உறைந்திருப்பேன் மரணத்துள் என்னுயிரும் மெலிந்திருக்கும்/


ஜன்ஸி கபூர் - 15.10.2020


 
 
  


 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!