About Me

2021/04/20

To Sir with love

 திரைப்படம் பற்றிய என் பார்வை  

இந்தத் திரைப்படமானது ஈ ஆர் ப்ரைத்வைட்டின் 1959 ஆம் ஆண்டின் சுயசரிதை நாவலை அடிப்படையாகக் கொண்டு, அதே பெயரில் 1967 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பிரிட்டிஷ் நாடகத் திரைப்படமாகும். இது ஒரு உள் நகர பள்ளியில் சமூக மற்றும் இனப்பிரச்சினைகளை கையாளுகிறது. இதில் பிரதானமான பாத்திரமான தாக்கராக சிட்னி போய்ட்டியர் நடித்துள்ளார். இவருடன் கிறிஸ்டியன் ராபர்ட் ஸ், கீசன் சுசி கெண்டல் மற்றும் பாடகர் லுலு இணைந்துள்ளனர். ஜேம்ஸ் கிளாவெல் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படமானது எண்டர்டெயின்மென்ட் வீக்லியின் 50 சிறந்த உயர்நிலைப் பள்ளித் திரைப்படங்களின் பட்டியலில் 27 வது இடத்தைப் பிடித்தது. இது அமெரிக்காவில் அதிக வசூல் செய்த எட்டாவது திரைப்படமாகும்.   

இந்தத் திரைப்படத்தில் ............... 

பொறியியலாளராக வர வேண்டுமென்ற தனது எதிர்பார்ப்பை நிறைவேற்ற பிரிட்டிஷ் கயானாவிலிருந்து கலிபோர்னியா வழியாக பிரிட்டனுக்கு குடிபெயர்கின்றார் மார்க் தாக்கரே. அவரே இப்படத்தின் கதாநாயகன். எனினும் அவர் எதிர்பார்த்த தொழில் உடனடியாகக் கிடைக்கவில்லை. அது கிடைக்கும்வரை தற்காலிகமாக லண்டன் கிழக்கு முனையிலுள்ள நார்த் க்வே மேல்நிலைப் பள்ளியில் கற்பித்தல் பணியில் தன்னை இணைத்துக் கொள்கின்றார். ஏனைய பாடசாலைகளிலிருந்து நிராகரிக்கப்பட்ட மாணவர்களே இப்பாடசாலையில் கல்வி கற்பதனால் அவர்களின் நடத்தைகள் ஆசிரியர்களுக்கு பிரச்சினைகளைத் தோற்றுவிக்கவே எல்லோரும் தமது வேலையை ராஜினாமா செய்தனர். பேர்ட் டென்ஹாம் மற்றும் பமீலா டேர் தலைமையில் இத்தகைய வெறுக்கத்தக்க குறும்புகளைச் செய்யும் மாணவர்களுக்கே மார்க் தாக்கரே கற்பித்தல் பணியை மேற்கொள்கின்றார். அவர்களின் பலவிதமான குறும்புகளையும் தார்க்கரே அமைதியாக எதிர்கொள்கின்றார். இருந்தும் சில நேரங்களில் மாணவர்களின் சில நடத்தைகள் அவரைக் கோபப்பட வைக்கின்றன. மாணவர்களின்  நடத்தைகள் பற்றி தார்க்கரே சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தவராக தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்கின்றார். அவர்கள் இனி பாடப்புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். எனவே தமது கற்றல் காலத்தில் பெரியவர்கள் தொடர்பான எந்த விடயங்களையும் தன்னிடம் விவாதிக்க வழிப்படுத்தினார்.   மாணவர்களும் உறவுகள்,  திருமணம்,  தொழில் உள்ளிட்ட பல விடயங்களைக் கேட்டறிந்தனர். தமக்குள் எழுந்த பிரச்சினைகளைத் தீர்த்தனர். டென்காமைத் தவிர ஏனைய அனைத்து மாணவர்களின் மனதையும் தாக்கரே வென்றார். 

 ஸ்தாக்கரே அருங்காட்சியகத்திற்கு மாணவர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யும்போது  

  ஜிம் ஆசிரியரான மிஸ்டர் பெலுக்  பாட்டருக்கிடையில்  வன்முறை ஏற்படுகின்றது. தாக்கரே அதனைத் தடுக்கிறார். பெல்லிடம் தவறு காணப்பட்டாலும்கூட மிஸ்டர் பெலுக் பாட்டர் தன்னிடம் மன்னிப்புக் கோர வேண்டுமெனக் கூறுகின்றார். இவ்வாறான சூழ்நிலையில் சில மாணவர்களின் ஆதரவை தாக்கரே இழக்கின்றார். அவர்கள், அவரை வகுப்பு நடனத்திற்கு அழைக்க மறுக்கின்றார்கள். சீலஸின் தாய் இறந்தபோது தாக்கரேயின் நன்கொடையை ஏற்க மறுக்கின்றார்கள். 

இந்நிலையில் .......

பள்ளி தலைமை ஆசிரியரோ 'வயது வந்தோர் அணுகுமுறை தோல்வியுற்றதாகவும், வகுப்புப் பயணங்கள் ரத்துச் செய்யப்படுவதாகவும் அறிவிக்கின்றார். இப்பிரச்சினைக்கு மாற்றுத் தீர்வு கிடைக்கும்வரை தாக்கரேயே ஜிம் வகுப்பினை எடுக்க வேண்டுமெனவும் தலைமை ஆசிரியர் கூறுகின்றார். அத்தகைய சூழ்நிலையில் தாக்கரேக்கு விண்ணப்பித்திருந்த பொறியிலாளர் பதவி கிடைக்கின்றது. 

ஒரு சந்தர்ப்பத்தில் ஜிம் வகுப்பில் தாக்கரேயைக் குத்துச் சண்டைப் போட்டிக்கு வருமாறு சவால் விடும் டென்ஹாமின் திறனைப் பாராட்டும் தாக்கரே, அவனை இளைய மாணவர்களுக்கு குத்துச் சண்டை கற்பிக்குமாறு அறிவுறுத்துகின்றார். இச்செயற்பாட்டில் மாணவர்களின் திறன்களை இனங்கண்டு ஊக்குவிப்பவராக மாறுவதுடன் சில நடத்தைகளையும் மாற்றியமைக்கின்றார். அதன்பின்னர் டென்ஹாம் சக மாணவர்களிடம் தாக்கரே மீதான தனது மதிப்பை வெளிப்படுத்துவதுடன் அவர்மீதான காழ்ப்புணர்ச்சியையும் குறைக்கின்றான். தாக்கரே மீண்டும் மாணவர்களின் மதிப்பினைப் பெறுகின்றார். வகுப்பு நடனம், நன்கொடை நிகழ்வுகள் என முன்னர் மறுக்கப்பட்ட விடயங்கள் மீண்டும் மரியாதையுடன் அவரைத் தேடி வருகின்றது. பமீலா 'லேடிஸ் சாய்ஸ்' நடனத்தில் தன்னுடன் இணைந்தாட தாக்கரேயை தெரிவு செய்கின்றார்.

இவ்வாறாக தாக்கரே மாணவர்களின் உளமறிந்து தனது செயற்பாடுகளை பொறுமையுடன் நகர்த்தி குழப்பமான கேவலமான நடத்தைகளை கொண்டிருந்த மாணவர்களின் மனதை வென்றெடுத்தவராக வகுப்பறை கற்பித்தலிலிருந்து ஓய்வு பெறுகின்றார். 

ஆசான் ஒரு சிற்பி. பொருத்தமான அணுகுமுறைப் பிரயோகங்களினூடாக மாணவர்களின் உளங்களை வென்றெடுக்க முடியும் என்பதை தாக்கரே நிருபித்திருக்கின்றார்.

தாக்கரே வகுப்பறையை விட்டு வெளியேறும்போது இரண்டு இளம் மாணவர்கள் உள்ளே வந்து பரிசளிக்கின்றனர். அதில் டேங்கார்ட் மற்றும் அட்டை 'ஐயா அன்புடன்' என சிரிக்கின்றது. 

அடுத்த வருடம் 'இந்த இளம் மாணவர்களும் இவரது வகுப்பில் இருப்பார்கள்' என்ற சக ஆசான்கள் இருவரின்  கேலி வார்த்தைகளை செவியில் ஏந்திய தாக்கரே மாணவர்கள் தன்மீது கொண்ட அன்பினைக் கண்டு கண்ணீர் சிந்தியவாறு, தனது பொறியியல் தொழிலுக்கான அழைப்பிதழை கிழித்தெறிந்தவராக தனது கற்பித்தல் பணியை முன்னெடுக்கின்றார். 

இங்கு தோலின் நிறம் கடந்த மனிதம் பேசுகின்றது. இந்தப் படத்தில் வருகின்ற மாணவர்களின் நடத்தைகளையுடைய பல மாணவர்களை நாமும் காண்கின்றோம். ஆனால் தாக்கரே போன்று மாணவர்பால் தமது முழுக் கவனத்தினையும் செலுத்தி அவர்களின் உளப்போக்கிற்கேற்ப தமது அணுகுமுறைகளை மாற்றி வழிப்படுத்துபவரே என்றும் காலத்தை வென்று நிற்கின்றார். 

அந்த யதார்த்தத்தை இப்படம் மெய்ப்பிக்கின்றது.

ஈற்றில்..................    

தாக்கரே ............

மாணவர்களின் மனதை வென்றார்....!

இந்த மென்மையான கதைகளினூடாக எமது மனங்களையும் தொட்டார்.!!

தாக்கரே ஆசான்களுக்கெல்லாம் முன்னுதாரணமான கதாபாத்திரம். வகுப்பில் மோதல்கள் ஏற்படும்போதெல்லாம் தன்னைக் கட்டுப்படுத்தி சரியான விதத்தில் மாணவர்களை வழிப்படுத்தியுள்ளார்.  

சுருங்கக்கூறினால் இத்திரைப்படத்தில் ஆசான் பற்றிய கதாபாத்திரம் ஒழுக்கம், மரியாதை, ஒருமைப்பாடு உள்ளிட்ட சகல பண்புகளையும் ஒரே நேரத்தில் உள்ளடக்கி வாழ முயற்சிக்கின்ற ஒரு நிர்வாகி.

இந்த திரைப்படம் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த விமர்சனங்களை நோக்கினால் திரு.போய்ட்டியர் கூறுவதைப் போல இது விவேகத்துடன் விளையாடப்படுகின்ற சிறிய கதை என்கின்றார். இங்கு இனம் பற்றிய பிரச்சினைகள் எழவில்லை. வகுப்பில் தோன்றும் பதற்றங்களும் தணிக்கப்படுகின்றன. 

டைம் அவுட் ஃபிலிம் கையேடு இது 'எங்களுக்குத் தெரிந்தபடி பள்ளி வாழ்க்கையுடன் எந்த ஒற்றுமையையும் கொண்டிருக்கவில்லை' எனக் கூறுகின்றது.

 ஹல்லிவெல்லின் திரைப்படம் மற்றும் வீடியோ கையேடு இதனை 'செண்டிமென்ட் அல்லாத யதார்த்தம்' எனக் கூறுகின்றது.

சிறந்த பாடல்கள், கதை, நடிப்பு என பல பரிமாணங்களிலும் பல விருதுகளை வென்ற இத்திரைப்படம், கற்றல் சார்பான பல விடயங்களை முன்வைக்கின்றது. சூழல் மாற்றங்களால் உளத்தாக்கம் ஏற்படுகின்ற இளம் சந்ததியினர் உரிய விதத்தில் வழிப்படுத்தப்பட்டால் சமூகப் பரிமாணமுள்ளவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் மாற்றப்படுவார்கள் எனும் உண்மையை இத்திரைப்படம் உரக்கச் சொல்லி நிற்கின்றது. 

ஜன்ஸி கபூர்  - 20.04.2021






2021/04/15

அப்துல் கலாம்


தமிழ்நாடு இராமேஸ்வரத்தில் ஜைனுலாப்தீன் ஆஷியா உம்மா தம்பதியனருக்கு   மகனாக 1931 ஆம் ஆண்டு அக்தோபர் மாதம் 15 ஆம் திகதி பிறந்த கலாம் அவர்கள் தனது இளமைக் காலத்திலேயே குடும்பத்தைக் காத்தவர்கள்.  

இயற்பியல் இளங்கலைப் பட்டதாரியான அவர்கள் தனது ஆர்வத்தின் காரணமாக விண்வெளி பொறியியல் படிப்பையும் மேற்கொண்டு முதுகலையும் பெற்றார்கள்;. 1960 ஆம் ஆண்டு விஞ்ஞானியாக ஆராய்ச்சிகளைத் தொடங்கியவர் விண்வெளி ஆராய்ச்சிக்கூடத்தில் செயற்கைக்கோள் ஏவுதலிலும் முக்கிய பங்காற்றினார்கள்;. ஹெலிகொப்டர் வடிவமைப்பு அணு ஆயுதச் சோதனை உள்ளிட்ட ஏவுகணைத் திட்டங்களிலும் பங்கேற்றார்கள். இவரது முற்போக்குச் சாதனைகளால் சகல நாடுகளின் பார்வையையும் இந்தியாமீது திருப்பியது மாத்திரமல்ல இந்தியாவும் வல்லரசானது.  

அன்பினால் மக்கள் மனங்களை வென்று 2002 ஆம் ஜூலை 25 ஆம் திகதி இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராகவும் உயர்ந்தார்கள். பாரத ரத்னா உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளதுடன் அக்கினிச் சிறகுகள் உள்ளிட்ட சில நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்கள். 

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் உள்ளது என்பதை வலுவூட்ட   முன்னேற்ற இந்தியாவுக்காக கனவுகளைக் கண்டு அதனை நனவாக்க பாடுபட்டு உழைக்குமாறு இளைஞர்களுக்கு உற்சாகமூட்டிய மிகச்சிறந்த தலைவர். 2007 ஆம் ஆண்டு தனது குடியரசுப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்கள். பல்வகை ஆளுமைகளுடன்   வாழ்ந்த ஏவுகணை நாயகன் 2015 ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் திகதி இவ்வுலகை நீத்தார்கள்.  

அந்தவகையில் தனது வாழ்வை எளிமையாக ஆரம்பித்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் வரலாறும் காலத்தால் மறக்கப்படாதது. 


ஜன்ஸி கபூர்  - 20.10.2020

மறக்க முடியுமா

 

  • கடிகார முட்கள் மெதுவாக நகர்வதைப் போன்ற பிரமை. எவ்வளவு நேரம்தான் ரம்யாவால் விட்டத்தை வெறித்துப் பார்க்க முடியும்.

    "தாயீ........வெறும் வயித்தோட இருக்கக்கூடாது. ஏதாவது வாய் நனையம்மா. தேத்தண்ணீ ஆறப் போவுது"

    தாயின் பரிவுடன் அவளை ஆறுதல்படுத்தும் கணவனை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தாள். கண்ணீரால் நிறைந்திருக்கின்ற விழிகள் வெடித்து விடுமோவென்ற பிரமை. அடக்க முடியவில்லை. நெஞ்சம் தேம்பியது.

    மனைவியைப் பார்த்துக் கொண்டேயிருந்தான் ராம். அண்மையில் நடந்து முடிந்த அந்த வலி தரும் சம்பவம் கண்முன்னால் விரிந்தது.

    ராம் குடும்பத்தின் தலைமகன். சிறுவயதிலேயே அப்பா தவறிப் போனதால் அவனே தனது குடும்பத்தைக் காக்கும் தூணானான். அவனுக்கு பின்னர் காத்திருந்த நான்கு குமர்ப்பிள்ளைகளையும் கரையேற்றும் பொறுப்பு அவனுக்கு ஏற்பட்டது. அண்ணனாக அல்லாமல் தந்தையாகிப் பாரம் சுமந்தான். தனது இளமைக் காலம் அனைத்தையும் வெளிநாட்டில் கரைத்து உழைத்தான். பாலைவன வெம்மை அவனது வனப்பையெல்லாம் சுரண்ட நான்கு குமர்களையும் கரையேற்றியவனாக நாடு திரும்புவதற்குள் நாற்பது வயதையும் தாண்டிவிட்டான். வயோதிபத் தாயை நல்ல தனயனாகிக் காத்தான். தனது எதிர்காலம் அவனுக்கு மறந்தே போனது. நாளாந்த வாழ்க்கைச் செலவினைச் சமாளிப்பதற்காக முச்சக்கர வண்டியொன்றைக் கொள்வனவு செய்து வாடகைக்காக ஓட்டத் தொடங்கினான். கிடைக்கும் வருமானம் அவர்களின் அன்றாட வாழ்வைச் சமாளிக்க உதவியது.

    ஆனாலும் அவனது தாயார் அவனுக்கென்று ஒரு வாழ்வை அமைத்துக் கொடுக்கப் போராடி ஈற்றில் முதிர்கன்னியாக தனது வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கின்ற ரம்யாவைத் தேடிக் கண்டுபிடித்தார். அவனுக்கேற்ற மனைவி. பெரியவர்களின் ஆசியுடன் அவளைக் கரம் பற்றினான்.

    நாட்களும் வேகமாக ஓடின. குழந்தையின்மை அவர்களுக்குப் பெருங் குறையாகத் தெரியவில்லை. அவனுக்கு அவளும், அவளுக்கு அவனுமாகக் குழந்தையாக மாறி வாழ்ந்து கொண்டிருக்கின்ற நேரம்தான், ரம்யாவின் சித்தப்பா மகள் அவள் வாழ்வுக்குள் குறுக்கிட்டாள்.

    "அக்கா நாலு பொட்டப் புள்ளா தொடர்ந்து பொறந்திருச்சி. சமாளிக்க முடியல. உனக்குத் தத்து தாரேன் வளர்க்கிறியாக்கா"

    தங்கையின் குரல் அவளுக்கு புது வாழ்வுப் பாதையைக் காட்டவே சம்மதித்தாள். தங்கை மகளை இருவரும் அன்போடு வளர்க்க ஆரம்பித்தார்கள். இரண்டு வயதில் வந்த குழந்தை மீனு இப்போது பன்னிரெண்டு வயதினை எட்டிப் பார்க்கின்ற அழகு நிலாவாக வளர்ந்திருந்தாள். இடைக்கிடையே பெற்ற தாய், தகப்பன் உறவுகளின் தொடர்பினைப் பேண வளர்ப்பு பெற்றோர் மறுக்கவில்லை. இரு குடும்ப உறவுகளின் பாலமாக மீனுவும் வளரத் தொடங்கினாள். வளர்ப்புப் பெற்றோர்கள் தமது வறுமைக்குள்ளும் மீனுவை செல்ல மகளாகவே வளர்த்தார்கள். அவள் தரம் ஏழில் ஊர்ப் பாடசாலையில் கற்றுக் கொண்டிருந்தாள்.  
     
    ஒருநாள் பாடசாலைக்குப் போன மகள் வீடு திரும்பவில்லை. பதறித் துடித்துக் கொண்டே பாடசாலைக்கு சென்று விசாரித்ததில்,  பெற்றவர்கள் மீனுவை மீள அழைத்துச் சென்றிருப்பது புரிந்தது. சட்டமும் அவர்களின் கனவினைக் கருக்கியது. உறவுக்கார பெண் என்பதால் நம்பிக்கை வலுக்க சட்டப்படி தத்தெடுக்காத தவறு இன்று பெருந்துயராகி நீண்டிருக்கின்றது. 

    அழுதாள் பல நாட்கள். வளர்த்த பாசம் நெஞ்சை அமுக்கியது. காணும் இடங்களிலெல்லாம் மீனுவின் பிம்பம். உணர்வுகள் கதற நடைப்பிணமானாள் ரம்யா.

    மறக்க முடியுமா அந்தக் குழந்தை முகத்தை. அவளுடன் பறந்தோடிய நாட்களை....

    மீனுவின் குறும்புகளின் சிதறல்கள் அந்த வீடு முழுவதுமாக நிரம்பிக் கிடந்தன.

    தேம்பித் தேம்பி அழுகின்ற மனைவியை அணைத்தார் ராம். சுயநல உலகில் உணர்வுகளுடன் விளையாடுகின்ற மனிதர்கள் இருக்கும்வரை இத்தகைய உளத் துயர்களும் நீள்கின்றன.
    இடையில் வந்த உறவு சிறகினை விரித்ததில் உறவினை இழந்த வளர்ப்புப் பெற்றோர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக மாறி தமது துயரத்தைத் துடைத்துக் கொள்ள ஆரம்பித்தனர்.

    ஜன்ஸி கபூர்  - 27.10.2020


எது சுதந்திரம்

 

 

  • சுதந்திரம் என்பது பிறர் தலையீடின்றி நாம் அனுபவிக்கும் விடுதலையாகும். உண்மையில் சுதந்திரத்தை ஏற்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உருவாக்கப்படுகின்றனவா? எனும் தேடலுக்கான விடை சுதந்திரத்தின் யதார்த்த நிலையை உணர்த்தும்.
    நாம் அனுபவிக்க வேண்டிய சமூக சுதந்திரமானது அரசியல், தனிமனித, தேசிய, சர்வதேச, பொருளாதார, தார்மீக, வீட்டுச் சுதந்திரம் எனப் பல கூறுகளினாலானது.
    யாரிடம் வலிமை இருக்கின்றதோ அங்கே சுதந்திரம் காணப்படுகின்றது. அந்த வலிமை நமது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றது. ஒரு மனிதன் தான் விரும்புகின்ற செயல்களை எல்லாம் தன்னிச்சையாகச் செய்ய முடியாது. கலாசாரம், பண்பாடு போன்ற வேலிகளை இடுவதன் மூலமாக தனிமனித சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகின்றது.
    குடும்பக் கட்டமைப்பில் நாம் உறவுகளால் சூழ்ந்தே காணப்படுகின்றோம். அவர்கள் ஏதோவொரு விதத்தில் நம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டேயிருப்பார்கள். எனவே ஒரு தனிமனிதனின் வீட்டுச் சுதந்திரம் முழுமையாக அனுபவிக்கப்பட முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது. இவ்வாறே தார்மீக சுதந்திரமும் மீறப்படுகின்றது.
    ஏழை, பணக்காரன் எனும் அந்தஸ்து பொருளாதாரச் சுதந்திர நிலைமையைச் சிதைக்கின்றது.
    சுதந்திர நாட்டின் முக்கிய பண்பு மனித சமத்துவமாகும். நாட்டில் முழுமையான சமத்துவம் பேணப்படுகின்றதா? அவ்வாறாயின் ஏன் போராட்டங்கள் வெடிக்கின்றன?
    ஒரு பெண்ணால் இரவில் தனியாக நடமாட முடிகின்றதா?
    வருடாவருடம் சுதந்திரதினம் கொண்டாடுகின்றோம். ஆனால் அடிமைத்தனமான அடித்தள உணர்வினை நாம் அறுப்பதாக இல்லை. வரிகளாலும், எழுத்துக்களாலும் முன்மொழியப்படுகின்ற சுதந்திரம், உணர்வு ரீதியாக இன்னும் செயலுருப் பெறப்படவில்லை என்பதே இன்றைய உண்மை நிலையாகும். சுதந்திரமாக வாழ்கின்றோம் எனும் மாயைக்குள் நாம் நமது சுதந்திரத்தை தொலைத்துக் கொண்டிருக்கின்றோம்.
    ஜன்ஸி கபூர் - 26.10.2020
  •