About Me

2021/04/14

ஆண்-பெண்கள்

 

 
ஓர் குடும்பத்தின் கட்டமைப்பை நிர்வகிக்கும் பாரிய பொறுப்பை பெண்கள் சுமக்கின்றார்கள்.அவளுக்குக் கிடைக்கின்ற ஓய்வும் மிகக் குறைவே. அக்குறைந்த  ஓய்வுக்குள்ளும் நேரத்தைத் திட்டமிட்டு தம் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி இலக்கிய கலையுலகில் தடத்தினைப் பதித்து முகநூல்க் குழுமங்களில் முன்னணி வகிக்கின்றார்கள் பெண்கள். ஆனாலும் இந்நிலையை எய்த அவர்கள் பல சவால்களை ஏற்க வேண்டியுள்ளது. ஆணாதிக்கச் சிந்தனையுடைய சிலர் விமர்சனம் எனும் பெயரில் அவளது ஆற்றலை ஆசைகளைக் கிள்ளியெறியத் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.  முகநூல் என்பது சர்வதேசத்தை தனது கரங்களுக்குள் அடங்கியிருக்கின்ற குழுமம் என்பதால் அவளின் கருத்துக்களை வெவ்வேறு திசைகளில் பரப்பிவிட சில குடும்ப உறவுகளும் தடையாக இருக்கின்றன. இருந்தும் இத்தடைகளையும் கடந்தே பெண்களின் கலைப் பயணம் முன்னணியில் திகழ்கின்றது என்பதே உண்மையாகும்.

இது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயம். பெண்கள் ஆண்களின் தடைகளைத் தாண்டியே தமது ஆற்றலை வெளிப்படுத்துகின்றார். பெண்ணின் கலை வளர்ச்சி உச்சம் அடைகின்ற பட்சத்தில் ஆண்கள் மௌனம் சாதிக்கின்றார்கள். இத்தகைய ஆண்கள் இல்லாதபட்சத்திலும் பெண்களின் தன்னம்பிக்கை அவளைத் தனித்து இயங்கச் செய்யும். ஆண்களின்றி அவர்களால் சுயமாகப் பயணிக்க முடியும்.

 ஆண்களின் அனுமதியைப் பெற்றுத்தான் பெண்கள் இயங்க வேண்டுமென்றால் பெண்களை முகநூலில் காணவே முடியாது. ஆண்களின் தடைகளையும் இலகுவாகக் கடக்கின்ற சாமர்த்தியம் பெண்களுக்கு உண்டு.

 நிறைய பெண்கள் எழுதுகின்றார்கள். போட்டி நடத்துனர்களுக்கு இது தெரியும். ஆனால் வெற்றி வாய்ப்புக்கள் அனுபவமுள்ள ஆண்களுக்குப் போய் விடுகின்றன போலும். இதுதான் உங்கள் கருத்துக் கணிப்பிற்கான விளக்கம்

ஜன்ஸி கபூர் - 7.11.2020

இரத்த தானம்

 

 
இவ்வுலகில் அறிவெனும் ஆறாம் விரலினூடாக முழு உலகையும் தனது சிந்திக்கும் ஆற்றல் மூலம் இயக்கிக் கொண்டிருக்கும் மனித உடலின் கட்டமைப்புக்களைப் பார்க்கும் ஒவ்வொரு கணங்களும் விந்தைமிகு இறைவனின் படைப்பின் நுட்பம் ஆச்சரியப்படுத்துகின்றது.

தனது கைமுஷ்டியின் அளவு இதயத்தைப் படைத்து, அதன் மூலமாக இரத்தத்தை உடல் முழுதும் பாய்ந்தோடச் செய்து, உயிர்வாழ்விற்கான தகுதியை வழங்குவதற்காக குருதிச்சுற்றோட்டத் தொகுதியுடன் தொடர்புபட்டதாக ஏனைய கட்டமைப்புத் தொகுதிகளையும் அமைத்து மனிதனை உயிர்வாழச் செய்யும் இறைவனின் ஆற்றல் அபாரிதம்.

இரத்தம் என்பது மனிதனை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கான பாயம். அத்தகைய இரத்தத்தை தேவை கருதி தானம் செய்வதே மிகச் சிறந்த தானமாகும்.

தற்காலத்தில் நவீனம் எனும் போர்வைக்குள் வாழப் பழகிக் கொண்ட மனிதன், தனது இயந்திரத் தன்மையான வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும்போது, விபரீதமான முறையில் ஆபத்துக்களை எதிர்நோக்குகின்றான். விபத்துக்கள் மற்றும் சில நோய் நிலைமைகளின் போது இரத்தத்தின் பயன்பாடு மருத்துவ உலகத்திற்கு தேவைப்படுகின்றது. எனவே இவ்வாறான அவசரமான நேரங்களை எதிர்கொள்ளும்போது இரத்த வங்கி அல்லது இருப்பில் போதிய அளவு இல்லாவிடில் உயிரிழப்பு ஏற்படுகின்றது. இத்தகைய உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்கு இரத்த தானமெனும் உயரிய கொடையை வழங்க ஒவ்வொருவரும் முன்வரல் வேண்டும்.

சாதி, மத, குல வேறுபாடின்றி அனைவருக்கும் வழங்கப்படக்கூடிய இரத்தத்துளிகள் சமத்துவத்திற்கான ஓர் அடையாளமாகும்.

ஏற்றத்தாழ்வுகள் நீங்கி அனைவரும் இத்தானத்திற்கான பங்காளர்களாக முன்வரல் வேண்டும். நாம் இரத்ததானம் செய்யும்போது நமது உடலிலுள்ள இரத்தத்தின் அளவும் அதிகரிப்பதனால் நமது உடலும் ஆரோக்கியம் பெறுகின்றது. ஆபத்திலிருந்து அடுத்தவரைக் காப்பாற்றியிருக்கின்றோம் எனும் உணர்வு நம் உள்ளத்தில் ஊற்றெடுக்கும்போது நமக்குள் ஏற்படுகின்ற மனத்திருப்தி நமது மன ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகின்றது.

நாம் தானமாக வழங்குகின்ற ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அடுத்தவரின் ஆயுள் அதிகரிக்கப்படுகின்றது.

"இரத்தம் வழங்கும் மனிதமுள்ள மனிதர்களாக நாம் நம்மை மாற்றிக் கொள்வோமாக"

ஜன்ஸி கபூர் - 18.11.2020

மனித நேயம்

 

மனித நேயம் என்பது அன்பு அல்லது தன்னலமற்று இருத்தலாகும். இளகிய இதயமும், இரக்கமும் அடங்கியிருக்கின்ற நேயத்தினால்தான் மனிதன் தான் தனித்திருக்காது தன்னைச் சுற்றி குடும்பம், சமூகம் போன்ற கட்டமைப்புக்களினால் சமூக இசைவாக்கம் அடைகின்றான்.  

"கொடையும் தயையும் பிறவிக் குணம்" என்பது சான்றோர் மொழி. 

இவ்வுலகம் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது எனும் சிந்தனை நம்மிடையே எழுமாயின் நம்மைச் சூழவுள்ள பிற உயிரினங்களின்மீதும் நமக்கு கருணை ஏற்படும்.

மனிதநேயத்தை வெளிப்படுத்தி பல தமிழ் இலக்கிய பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. இதிகாசங்கள், திருக்குறள் என்பவற்றிலும் மனித நேயம் முன்னிலப்படுத்தப்பட்டுள்ளன. சமய நூலான புனித அல்குர்ஆன் திருமறையிலும் மனித நேயம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித நேயம் கொண்ட பலர் மக்களால் மதிக்கப்படுகின்ற மதத் தலைவர்களாகவும் இவ்வுலகினை  வழிப்படுத்தியுள்ளார்கள். பாரி, பேகன் போன்ற மன்னர்கள் மனித நேயத்தின் உச்சநிலையில் வைத்துப் போற்றப்பட்டவர்கள். 

கணியன் பூங்குன்றனார் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' எனவுரைத்தார். இது சமத்துவத்தின் குரல்.

மனித நேயம் என்றவுடன் நம் கண்முன்னால் தோன்றுபவர், மானுட சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த அன்னை திரேசா அவர்கள். நெல்சன் மண்டேலா அவர்களும் நிறவெறிக்கு எதிராகப் போராடி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.

 அன்பு, அஹிம்சை எனும் தடங்களினூடாக,  உண்மைக்கும், நல்லிணக்கத்திற்கும் இடையில் பயணப்பட்டவர்கள் இறந்தும் மறையாத கல்வெட்டுக்களாகப் பரிணமிக்கின்றார்கள்.

பிறரை வருத்தி அதற்குள் தனது நலன்களைப் பேணும் இன்றைய உலகில் மனிதநேயம் கொண்டவர்களைத் தேட வேண்டிய நிலையில் இருப்பது கவலைக்குரிய விடயமே!.

ஜன்ஸி கபூர் - 03.11.2020

துடுப்பில்லாத் தோணிகள்

 


 இலக்கது இல்லாது இயங்கிடும் வாழ்வினில்/

இரணமே துரத்துகின்றது இன்னலுக்குள் வீழ்த்தி/

உழைப்பைத் தேடி ஊருக்கு வெளியே/

உலாவுகையில் இழக்கின்றனர் உறவுகளின் அருகாமையை/


கல்வியைச் சுமக்கும் கரங்களில் சுமைகள்/

கசக்குவார் தொழிலாளிகளாக கருக்குவார் வருங்காலத்தை/

பெண்மையைக் கசக்கி பெருவலிக்குள் திணிக்கும்/

பொல்லாத மாந்தரால் பெருந்துயரில் மங்கையும்/


பெற்ற பட்டத்துக்குள் பொருந்தாத உழைப்பு/

பெற்றாலும் ஏற்கார் பொழுதுகளை வளமாக்கார்/

முயற்சியும் பயிற்சியும் முன்னேற்றத்தின் வளங்களே/

முயன்றிடாமல் புறந்தள்ளுவார் முகாமிடும் சந்தர்ப்பங்களை/


அடுத்தவர் தயவுக்காக அல்லலுடன் காத்திருந்து/

அலைக்கழிவார் வீணாக அடைந்திடுவார் சிறுமைதனை/

நிலையில்லா மனதோடு நிதமும் அலைந்தே/

நிற்கின்றனர் நிர்க்கதிக்குள் துடுப்பில்லாத் தோணிகளாக/


ஜன்ஸி கபூர்  - 13.11.2020