About Me

2021/05/01

மேகங்களோடு



சிறகுகளை உதிர்த்தவாறே நகர்கின்ற மேகங்களை

தன் விரல்களால் வருடிக்கொள்கின்றது வானம்

காற்றின் முடிச்சுக்களால் சிறைப்பட்டிருக்கின்ற மேகத்தினை

தன் இதழ்களால் அவிழ்ப்பது சுகம்தான்போலும்

வான் துளைகளுக்குள் தம் முத்தங்களை

நிரப்பியவாறு பயணிக்கின்ற பஞ்சு மேனிதனை

தன் இதழ்களால் ஈரப்படுத்துகின்றது வானும்

காதலின்பத்தின் இதம் வரையத் தொடங்குகின்றது

மேகங்களுக்கும் வானுக்குமிடையிலான அற்புதக் காதலை


கீற்றுமின்னலெனும் மாங்கல்யமும் முழங்குகின்ற இசையும்

வானுக்கும் மேகத்திற்குமான உறவுநிலையை வெளிப்படுத்தும்போது

மேகங்கள் தன்னைக் கருங்கூந்தலுக்குள் ஒளித்தே

மொய்க்கின்ற நாணத்துக்குள் நனைந்து அலைகின்றன


வானும் விடுவதாக இல்லை துரத்துகின்றது

வெவ்வேறு திசைகளில் கலைந்தோடுகின்றன அவை

மகிழ்வின் சிதறல்கள் ஆங்காங்கே அப்பிக்கொள்கின்றன

பொன்னிறத்தூறல்களின் சங்கமத்தில் இசைகின்றது இயற்கையும்


பூமிக்கும் வானுக்கும் இடையிலான வெளிதனில்

தொங்கிக்கொண்டே சென்றாலும் விழுவதாக இல்லை

ஈர்ப்பின் இரகசியம் இயற்கையின் ஆற்றல்

நிலத்தின் வரைகோடுகளையும் சலனமற்ற குளங்களையும்

அவை கடந்து செல்கையில் இணைகின்றன

உயிர்களின் ஏக்கப் பெருமூச்சுக்களின் திரட்சிகளும்

கண்ணீர்ப் பாறைகளின் வெடிப்பொலிச் சப்தங்களும்


மேகங்கள் நகர்வை நிறுத்துகின்றன நிதானத்துடன்

கீழே எட்டிப் பார்க்கின்றன கவலையுடன்

கருகிய வயல்களின் சாம்பல் மேடுகள்

ஒட்டியுலர்ந்த தேகங்களின் கூக்குரல்களின் தரிசனங்கள்


பேரன்பு கொண்ட மேகங்களைத் தீண்டுகின்றது

இருண்ட விழிகளில் வெடிக்கின்றது அழுகை

அவற்றின் ஈரம் தரையைப் போர்த்துகின்ற

ஆடையாக மாறத் தொடங்குகின்றது பேரிரைச்சலுடன்

மேகங்களின் கண்ணீர் தெறிக்கின்றது கன்னங்களில்


ஜன்ஸி கபூர்

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!