About Me

2021/05/01

அழகென்னும் அபாயம்



குடையென விரிந்திருக்கின்ற மரக் கிளைகள்

ஓன்றோடொன்று மோதி விரிக்கின்றனவோ நிழலை

மறுப்பின்றி இருளும் விழுந்து கொண்டிருக்கின்றது

ஆதவன் மேலிருந்தும்கூட சாமத்துச் சாயலில்

அகன்ற வனமும் மாறிக் கொண்டிருக்கின்றது.


ஒளியைத் தனக்குள்ளே உறுஞ்சாப் பாதையில்

உராய்ந்து நிற்கின்றது என்றன் ஊர்தி.

இயந்திர அதிர்வின் துடிப்பொலி கேட்டு

எட்டிப் பார்க்கின்றன கானகத்துச் சருகுகள்


ஆதவச் சுவாலையின் அணைவை சூட்சுமமாக

அறிவித்துக் கொண்டிருக்கின்றது மாலை நேரமும்

தரைக்குள் பதிக்கின்ற காலடிச் சத்தமும்

விரட்டத் தொடங்குகின்றது கானக அமைதியை


இலைச் சருகுகளில் ஒளிந்திருக்கின்ற எறும்புகள்

விளையாடத் தொடங்குகின்றன கால் விரல்களுக்கிடையில்

குறும்பான கருவண்டுகளின் சிறகடிப்பின் ஓசையும்

செவிக்குள் நுழைகின்றது இரைச்சலை நிரப்பியபடி


சிறகுகளை மடித்து உறங்குகின்ற பறவைகள்

சீற்றத்துடன் பறக்கையில் காற்றும் அலறுகின்றதே

மென்மேனியைத் தழுவிய இம்சையின் முறைப்புக்குள்

தைரியத்தையும் மெல்லத் தொட்டுப் பார்க்கின்றேன்


மங்குகின்ற வெளிச்சத்தில் தொங்குகின்ற குளவிக்கூடு

மொய்க்கின்ற பிரமையில் நிம்மதியும் அறுந்துவிட

வேகமாக நடக்கின்றேன் ஒற்றையடிப் பாதையில்

சோகமாகச் சரிகின்றன பற்றைப் புற்கள்

என்னாடையின் உரசலினால் மெல்ல நிமிர்கின்றன

வெட்டவெளிக்குள் பூத்துக் கிடக்கின்ற பூக்களின்

உறக்கத்தினை கலைக்கின்றேன் போலும் அவற்றின்

கலக்கப் பார்வைகூட துளைக்கின்றது உயிரை


தொலைவில் நகர்கின்றனவோ பெரும் மலைகள்

பிளிறல் ஓசைக்குள்ளும் பின்னலிடுகின்றது பீதி

அலறுகின்ற உணர்வினை அடக்கிக் கொண்டே

மெதுவாகப் பதுங்குகின்றேன் பெருமரத்தின் பின்னால்


உயர்ந்த மரக்கொப்பை முறிக்கின்ற ஆவேசத்தில்

ஊஞ்சலாடுகின்ற செங்குரங்குகளின் கண்களும் பளிச்சிடுகின்றன

வெஞ்சினத்தின் எதிரொலியாய் குரங்குகள் வீசுகின்ற

காய்களின் மோதலில் வலிக்கின்றதே தலையும்


பறக்கின்ற வண்ணாத்திகளின் சிறகுத் தொடுகையும்

உயிரின் உயிர்ப்பைத் தடுக்கின்ற நஞ்சோ

காதோரம் வெடிக்கின்றது அச்சத்தின் பிரமை

படர்கின்ற வியர்வைக்குள் மூச்சும் கரைகின்றதே


அனுபவங்கள் திணிக்கின்ற மரண பயத்திலிருந்து

உணர்வுகள் மீள்கின்றபோது சுவாசமும் சுகமாகின்றது

புன்னகைக்கும் சிறு குழந்தைபோல் பிறப்பெடுக்கின்றேன்

மனதுக்குள் மகிழ்வையும் நிறைத்துக் கொள்கின்றேன்

ஜன்ஸி கபூர்

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!