About Me

2020/09/12

சமாதானம்


மனசுக்குள் போர்ச் சூழல் அலைகிறது

கொந்தளிக்கின்ற உணர்வுகளால் உதடுகள் துடிக்கின்றன

சிவக்கின்றது அவளது மலர் முகம்

மௌனத்தில் கரைந்து வழிகின்ற விழிநீரும்

சினத்தில் ஆவியாகி கன்னத்தில் உறைகிறது.


கரையை அரித்துச் செல்லும் அலையாக

என் விழிகளை உற்றுப் பார்க்கிறாள்

சிவப்பின் தெறிப்பில் அது துடிக்கிறது

சிந்திய வார்த்தைக்குள் பொய் கண்டாளோ

சினக்கிறாள் சிதறிய வார்த்தைகளைப் பொறுக்குகின்றேன்

சில்லறைகளாக உதிர்ந்திருக்கின்றதே; ஊடலும் சிறிதளவு


பொறுக்குகின்றேன் உடைந்திருக்கின்ற அவளின் சினத்தை

பொங்கும் கண்ணீர் ஈரத்தில் புதைகின்ற

என் தவற்றினையும் நான் பரிசீலிக்கின்றேன்

என்னை மீள நியாயப்படுத்துகையில் மீண்டும்

உலகப் போரொன்று வெடிக்கலாம் வீட்டுக்குள்


அவள் உலகம் எனக்குள் விரிந்திருக்கின்றது

அணுதினமும் உணர்த்துகின்றாள் தன் அன்பால்

இருந்தும் தளிர்க்காத ஆசைகளின் ரணம்

அவளுக்குள் ஊற்றுகின்றது அமிலத்தினை செறிவுடன்


வேகமான வேலையுலகின் கீற்றுக்களாக நேரமின்மை

நெருடுகின்ற போதெல்லாம் துடிக்கின்றாள் தனக்குள்

எதிர்பார்ப்புக்கள் வெடிக்கின்றதே நிறைவேறாத வலியினில்

மனம் துகிலுரிக்கின்றதோ அவள் கனவுகளை

கல்லெறிகின்றேனே உழைப்பு எனும் முகமூடியால்


மனம் உறுத்துகின்றதுதான் மலரைக் கசக்குகின்றேனென்று

கசக்கினாலும் மடிப்பு அவிழாத அற்புதமவள்

சினத் தீக்குள் கருக்காதவள் அவள்

நம்பிக்கை இருக்கின்றது நாடி யறுக்காதவள்

பிறப்புடன் இசைந்திட்ட அவள் பண்பினை

அறிகின்றேன் தினமும் தனிமைக்குள் ரசித்தாலும்கூட

கலைக்கின்றேனே அவள் கூட்டையும் சுயநலத்தினால்


அவள் அடங்காத பேராற்றுக் கிளையல்ல

அணைத்தால் அடங்குகின்ற தேனாறுதான் எனக்கு

இருந்தும் விட்டுப் பிடிக்கிறேன் நீளமாக

இதயத்தின் அன்பின் வலிமை பெரிதென்று

வலிந்து சொல்லிடுவாள் வலியையும் மறைத்தே


வாழ்க்கைப் பகிர்வில் விட்டுக்கொடுப்பு நானாக 

அன்பிடம் தோற்பதில் அடம் பிடிக்கக்கூடாதுதான்

அவளின் எதிர்பார்ப்பு உடைந்தது என்னால்தானே

காற்று வாங்கி கடலில் நனைந்திட

நேற்றுக் கொடுத்த உறுதியும் கரைந்ததில்தானே

அனல் கொட்டுகிறாள் இன்றும் எரிமலையாகி


சமாதானம் அவளுக்கான உணர்வு தானம்

காதலின் வருடலும் அவள் உயிருக்குள்

துளையிடும்போது தூக்கியெறிவாள் கோபத்தை தன்னில்

துன்பத்தில் கரைந்து கொண்டிருக்கின்ற மனதும்

துவளாதிருக்க ஏந்துகின்றேன் சமாதானப் புறா

அவள் கண்களிலோ ஏக்கங்கள் மீள

அணைக்கையில் அடங்கி விடுவாள் குழந்தையாக


ஜன்ஸி கபூர் = 12.09.2020

 


Kesavadhas

ஜன்ஸி கபூர் இதனை விட உணர்வுகளை விண்டு உரைக்கும் நவீன கவிதையினை மொழிநீர் ஊற்றி வரைய முடியாது!

உளந்தொட்ட சில வரிகளை மட்டும் தொட்டுக் காட்டுகிறேன்!

'வழிகின்ற விழிநீரும் சினத்தில் ஆவியாகி கன்னத்தில் உறைகிறது- கண்ணீரின் கறையை இதைவிட அழகாக சொல்வதெப்படி?

பார்வை அலையாகி படிமம் காட்டுவது அழகு!

சிதறிய வார்த்தைகளை சில்லறைகளாகப் பொறுக்கிறேன்!

உடலும் உதிர்ந்திருக்கிறது!

அவள் உலகம் எனக்குள் விரிந்திருக்கிறது-

தோன்றாத கற்பனை உணர்வு!

உழைப்பெனும் முகமூடி கல்லெறிகிறது!

சினத்தீக்குள் கருகாதவள்!

அணைத்தால் அடங்கும் தேனாறு

கசக்கினாலும் மடிப்பு அவிழாத அற்புதம்!

இந்த சொல்லாடல்கள் சிறப்பு!

வாழ்த்துக்கள்!


நவீன கவிதைகளில் ஒரு நிகழ்விற்கு கவிஞனின் உணர்வுகள் எவ்வாறு அமைகிறது என்பதுதான் பார்க்கப் படுகிறது.அதனால் தான் நிகழ்வு நிலையில் பேசப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப் படுகிறது.அதனால் தன்மை நிலையில் உணர்ந்து எழுதுவது இதில் முக்கியமான யோக்கியதாம்சமாக கருதப்படுகிறது.

.ஒரு குறிப்பிட்டச் சூழலில்(நிகழ்வில்) என்ன நிகழ்வுகள் உளவியல் ரீதியாக மற்றும் செயல் ரீதியாக அமையும் என்பது தான் தன்மை உணர்வு. அதற்காக நான் என்பது ஒரு பாத்திரமாக மாறவேண்டிய அவசியமில்லை.

அவ்வாறு எழுதுவது உணர்வுகளைப் பிரதிபலிப்புச் செய்திட வசதியாக அமையலாம்.. சமாதானம் தலைப்பில் சில கவிதைகள் அந்நிகழ்வினைத் தாண்டி கதாபாத்திரங்களின் வாழ்வினைப் பற்றிப் பேசியிருந்தார்கள்.பொதுமைப் படுத்தி எழுதியிருந்தார்கள்;

அது நவீன கவிதை அல்ல;

'சமாதானம்' கவிதையில் ஐந்து நட்சத்திர மதிப்பீடு பெற்றுள்ளக் கவிஞர்கள் நவீன கவிதை உத்திகளை மிகச் சிறப்பாக பயன்படுத்தி கவிதை செய்துள்ளார்கள்; இஃது

வழிகாட்டலுக்கு உதவும்.

 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!