About Me

2012/06/09

அடையாளம்

சஞ்சிகை விமர்சனம்
-----------------------------



ஒரு மனிதரின் அல்லது (பிர) தேசத்தின் தனித்தன்மையைச் சிறப்பிக்கும் அடையாளங்கள் பல காணப்படும். அந்த வகையில் இலங்கையின் வடமத்தியில் அமைந்துள்ள அநுராதபுரத்தின் கல்விச்சிறப்பையும் அதன் சாதனைகளையும் தகவல்களாகவும் தரவுகளாகவும் முனைப்போடு வெளிப்படுத்தும் விதத்தில் "அடையாளம் " எனும் அநுராதபுரப் பிராந்தியம் சார் கல்விச்செய்திகளை தன்னகத்துள் அடக்கும் சஞ்சிகையொன்று மே மாதம் முதல் தன் பிரசவிப்பை முன்வைத்துள்ளது. அடையாளம் சஞ்சிகை யின் விலை 10 ரூபா மாத்திரமே!

இதன் ஆசிரியர்களாக எம் .சி. சபூர்தீனும், துணையாசிரியராக ஏ.ஏ.பஸானும் செயற்படுகின்றனர். இது படிகள் பதிப்பகத்தின் வெளியீடாகும்.

அநுராதபுர மாவட்டத்தின் கல்வி சாரா செய்திகளைப் பகிரவும் , மாகாண, வலய கல்விக்காரியாலங்களின் செயற்பாடுகளை ஆவணப்படுத்தவும் பாடசாலைகளின் வரலாறு ,சாதனைகளை ஆவணப்படுத்தவுமே இவ் அடையாளம் தன் முகம் காட்டுகின்றது என ஆசிரியர் உரை சுட்டிக்காட்டுகின்றது.

அநுராதபுர மாவட்ட முஸ்லிம்களின் இன்றைய கல்விநிலை எனும் தலைப்பில் இம் மாவட்ட கல்விநிலை தொடர்பான பார்வை செலுத்தல் முதல் ஆக்கமாக எட்டிப் பார்க்கின்றது.

வடமத்திய மாகாண கல்விப் பணிமனையின் தமிழ்ப்பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் ஈ. பீர்முஹம்மட் அவர்களின் செவ்வியொன்றும் இங்கே தரப்பட்டுள்ளது. " அநுராதபுரம் மாவட்டத்தில் தமிழ் மொழிமூல மாணவர்கள் சிறந்த அடைவுகளைப் பெற்று பெருமை சேர்க்கின்றனர் " எனும் தலைப்பினாலான அச் செவ்வி மூலம் பல தரப்பட்டுள்ள பயனுள்ள கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.

மேலும் அநுராதபுரம் சுதந்திர இயக்கத்தின் இரத்த தான நிகழ்வு,  அல்- இஸ்லாஹ் முன்பள்ளி நிலையத்தின் விளையாட்டுப் போட்டி, உள்ளிட்ட நாச்சியாதீவு, ஹொரவபொதான, கஹடகஸ்திகிலிய பிரதேசங்களின் கல்வி அபிவிருத்தி சார் பிராந்திய செய்திகள் சிலவும் இணைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மின்னும் தாரகைகள் எனும் மகுடத்தின் கீழ் கற்றல் உலகோடு தொடர்புடைய இரண்டு சர்வதேச செய்திகள் தரப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் அநுராதபுர மாவட்ட செய்திகளை இப் பக்கத்திற்காக ஒதுக்குவது சிறப்பாக இருக்கும். ஏனெனில் பத்திரிகைத் தலைப்பிற்கும் இதற்கும் பொருத்தப்பாடின்மை காணப்படுவதாக நான் எண்ணுகின்றேன்.

அநுராதபுர மாவட்டத்தில் விஞ்ஞானக் கல்லூரியொன்றை உருவாக்கும் முயற்சி தொடர்பான செய்தியின் அடிக்கோட்டின் கீழ் விஞ்ஞானக் கல்வியின் வளர்ச்சி தொடர்பாக கண்ணோட்டம் செலுத்தப்பட்டுள்ளது.

பின்புற அட்டையானது கடந்த வருட கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைப் பெறுபேற்றின் வீதங்களைச் சுட்டிக்காட்டும் ஆய்வுப் பார்வையும் மாவட்ட சிறந்த சாதனை படைத்த மாணவர்களையும் தாங்கி நிற்கின்றது

இவ் அடையாள சஞ்சிகையின் சிந்தனையாக பெற்றோர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. " ஞாயிறு தினங்களில் நடைபெறும் டியூஷன்களை நிறுத்தி அஹதிய்யா பாடசாலை போன்ற மதக் கல்வி பெற மாணவர்களுக்கு வழி விடுங்கள் என்ற முன்வைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது உரியவர்கள் செவிகளை எட்டுமா......காலம் தான் பதில் சொல்ல வேண்டும்....

எட்டுப் பக்கங்களைக் கொண்ட சஞ்சிகையாக அடையாளம் இருந்தாலும் காத்திரமான தகவல்களோடு அது தன்னை இனங்காட்டுகின்றது. எதிர்காலத்தில் இதன் வளர்ச்சி இன்னும் மெருகூட்டப்படும் என நம்பலாம் !
வாழ்த்துக்கள் !

- Jancy Caffoor -

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!