About Me

2019/06/16

வாப்பா



வாப்பா!

இன்னும் உச்சரிக்கிறேன்
உங்கள் பெயரை
என் பெயரோடு !

உங்கள் கரம் பற்றி திரிந்த பயணங்கள்தான்
இப்போதும்   
என் அடையாளமாகின!

வாப்பா!
உங்கள்   அருகாமையில்
தைரியம் முளைத்தது  எனக்குள்!

நிரப்பினேன் என்னை
நீங்கள் கற்றுத் தந்த அனுபவங்களால்
தினமும்!

வாப்பா
தூரிகைகளுக்கு உயிர் கொடுத்த
ஓவியர் நீங்கள் !

வாப்பா!
உங்கள்  அழகான கையெழுத்தும் மொழிப் புலமையும்
நான் வியந்த கிரீடங்கள்!

தொலைவாகி போன
உங்களை இன்னும் தேடுகிறேன்
நிழல்கள் எல்லாம் உங்கள் முகமாக!

தீ வீசும் உஷ்ணத்தில் இன்றும்
நீராய்  வழிகின்றன
உங்கள் வார்த்தைகள்! 

உங்கள் நினைவுகள் இன்னும்
பூத்துக் கொண்டுதான் இருக்கின்றன
என் வெறுமை மனதில்!

உங்களை
நான் புரிந்து கொண்ட போது
என்னை பிரிந்தீர்கள் வாப்பா!

உங்கள் மரணம் கூட
என் அருகாமையில்!
விழி நீர்  நிரப்புகிறேன் இன்று வரை!

ஓய்ந்து போன உங்கள் சுவாசத்தில்
இன்னும்
என் நினைவுகள்  கலந்திருக்கு!

வாப்பா !
பிரார்த்தனை குடை பிடிக்கிறேன்
உங்கள் ஆன்மாவின்  சுவனத்திக்காய்!

மறைந்தும் மறையாத உங்களுக்கும் என் தந்தையர் தின வாழ்த்துக்கள் வாப்பா 16.06.2019
 


- Jancy Caffoor -

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!