About Me

2012/06/06

"வேர் அறுதலின் வலி" - விமர்சனப் பார்வை!


(கவிதைத் தொகுப்பு நூல் விமர்சனம்)
----------------------------------------------------

இலக்கியங்கள் காலத்தை வென்றும், நின்றும் பேசப்படக்கூடியவை. அவை வாழ்வியல் அனுபவங்களுடன் ஒன்றித்து நிற்கும் போதே மேற்கூறிய யதார்த்தம் மெய்ப்படுகின்றது. வேர் அறுதலின் வலியும் இக் கட்டுக்கோப்புக்குள் தன்னைத் தொட்டு நிற்கின்றது.

"வேர் அறுதலின் வலி"

இது தாயகத்தின் இருப்பை வலுக்கட்டாயமாகப் பறித்தெடுத்த ஓர் சமூகத்தின் வலி! 1990 ஒக்டோபர் 30 ந்திகதி 2 மணி நேரத்தில் தம் பாரம்பரிய பூமியிலிருந்து விடுதலைப்புலிகளால் பலாத்காரமாக விரட்டியடிக்கப்பட்டு இன்னும் அகதி வாழ்விலிருந்து மீளமுடியாத சோகத்தில் புரண்டு கொண்டிருக்கும் எம் சமூகத்தின் கண்ணீர்.....அவலம்!

எம்மவர்களின் அவலம் வெளியுலகிற்குள் அதிகளவில் பரவிக்கிடக்காத சூழ்நிலையில் யாழ் முஸ்லிம் இணையத்தளம் அந்த சோகங்களின் பிரதிபலிப்புக்களை உலகறியச் செய்வதில் வெற்றி கண்டது. அந்த வெற்றியின் ஓர் அடையாளமாக இக் கவித் தொகுப்பினைக் கருதலாம். இவ் வெற்றியின் பின்புலமாகச் செயற்பட்ட சகோதரர் அன்ஸிரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு வீணாக கழிந்து விட்ட 21 ஆண்டின் நிறைவாக நடத்திய கவிதைப் போட்டிக்காக குவிக்கப்பட்ட மன உணர்வுகளின் சங்கமிப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 55 கவிதைகள் "வேர் அறுதலின் வலி" யுடன் சங்கமித்துக் கிடக்கின்றது.
                     
 யாழின் மகுடங்களாக உயர்ந்து கிடப்பவை பனை மரங்களே...அந்தப் பிண்ணனியை புலப்படுத்தும் பனைமரங்களுடன் கூடிய முகப்பட்டை.................அழகான தலைப்பு!

உள்ளே இருக்கக்கூடிய கனாதியான கவிதைகளை நம் எதிர்பார்ப்பில் வீழ்த்தக்கூடியதாக இக் கவித்தொகுப்பு காணப்படுகின்றது.
சொந்த மண்ணிலிருந்து துடைத்தெறியப்பட்ட மனித ஆத்மாக்களுக்காக, அவ் ஆத்மாக்களின் பிரதிபலிப்புக்களாக விளங்கும் இக்கவிதைகளை யாழ் முஸ்லிம் இணையத்தளம் 1990ல் விடுதலைப் புலிகளால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளது.

 ஈழத்தில் வாழும் முஸ்லிம்களின் வாழ்விலும், வரலாற்றிலும் அதிக அக்கறையுள்ளவர் கவிஞர் வி.ஐ.எஸ்.ஜெயபாலன் அவர்கள்.அவர்களின் முன்னுரையோடு இக் கவித்தொகுப்பு பயணிக்க ஆரம்பிக்கின்றது. ஜெயபாலன் அவர்களின் முன்னுரையில் "இம் மக்களின் துன்பத்திற்கான பிரயாச்சித்தம் மேற்கொள்ளப்படவேண்டுமென்ற "ஆதங்கம் இழையோடிக் கிடக்கின்றது.

"பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை வெளியிட சிறந்த சாதனம் கவிதைகளாகும்" என ஆசிரியரும் எழுத்தாளருமான எம்.எஸ்.ஏ.ரஹீம் ஆசிரியர் அவர்கள் தனது ஆசிச் செய்தியினூடாக இக் கவிப்பயணத்தின் நகர்வுக்கு கையசைக்கின்றார்.
                        தனித்து துணிந்தியங்கி யாழ் முஸ்லிம்களின் இருட்டடிக்கப்பட்ட வாழ்வை உலகின் கண்முன் நிறுத்திக் கொண்டிருக்கும் அன்ஸிரின் இம் முயற்சிக்கான பாராட்டுக்கள் அல்ஹாஜ் எம் .எம். குத்தூஸ் (முன்னாள் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி அதிபர்) அவர்களின் ஆசியுரையோடு கலந்துள்ளது.

அவ்வாறே இவ் வேர் அறுதலின் வலியின் பிரசவம் பற்றி சகோதரர் ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் தனது அணிந்துரையில் மனந் திறந்து பேசுகின்றார். நம் உள்ளத்தையும் தொட்டு நிற்கின்றார்.

  "கறைபடிந்த வரலாற்றை கண்ணீரால் வாசிக்கும்"  கிண்ணியா ஏ.எம்.எம்.அலி அவர்களின் வேதனையின் வருடல்களோடு இக் கவிதைத் தொகுதியின் கவிப்பயணம் நடைபோட ஆரம்பிக்கின்றது.

                                                     இரண்டாவது கவிதை அநுராதபுரம் ஜன்ஸி கபூரின் "பிறப்பிட நிழலிலே" முகங் காட்டி நிற்கின்றது. பல வருடங்கள் கழிந்தாலும் கூட மறக்கப்பட முடியாத ஞாபகங்களும், வலி தரும் ரணங்களும் இக் கவிதையாய் நிமிர்ந்து நிற்கின்றன.

 ஈர் தசாப்தம் உதிர்ந்தாலும் கூட அன்றைய ஞாபகப் பொழுதுகளின் ஈரம் இன்னும் உலர்த்தப்படாத தன்மையை சகல கவிதைகளும் தொட்டு நிற்கின்றன. வயதின் ஏற்றங்களோ, கவித்துவ அந்தஸ்தோ மன உணர்வுகளைப் பாட இங்கே தடையாகவில்லை..ஒருவரின் மனவெளிப்பாடுகள் எவ்வித திருத்தமின்றி அவர் குரலாகவே ஒலிப்பது இங்கே சிறப்பு.ஏனெனில் செம்மைப்படுத்தலுக்காக அரிதாரம் பூசும் போது அவர் அனுபவித்த அனுபவங்கள் தம் எடையைக் குறைக்கின்றன.ஏனெனில் ஒருவர் தன் அனுபவங்களை தான் மாத்திரமே உணரலாம் அனுபவிக்கலாம்.

தத்தமது கவித்திறமைக்கேற்ப பேனாக்கள் புதுக்கவிதைகளாகவோ, மரபுக் கவிதைகளாகவோ பேசுகின்றன இவ்விதழில்! சில கவிஞர்கள் தம் தலைப்புக்களை சுருக்கமாக, அழகாக வைத்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது. பத்திற்குமேற்பட்ட கவித்தலைப்புக்கள் சற்று நீளமாக காணப்பட்டன. இருந்தும் அவற்றின் கவியடக்கம் தன் கனதியைக் குறைக்கவில்லை......

ஒவ்வொரு கவிதைகளின் ஏற்ற இறக்கங்களுக்கேற்ப எழுத்துக்களின் வடிவம் மாற்றப்பட்டிருப்பது கூட சிறப்பே! இந்தக் கவிதைகளுக்குப் பொருத்தமான சித்திரங்களை இணைத்திருப்பின் அதன் அழகு மேலும் மெருகூட்டப்பட்டிருக்கும் என்பதை என் பார்வை எனக்குள் தொட்டுச் சொல்கின்றது. ஏனெனில் ஏனைய கவிதைப் பக்கங்களை விட "கண்ணீர் கரையும் " எனும் கவிப்பக்கத்தின் ஈர்ப்பில் விழி இன்னும் மொய்த்துக் கிடக்கின்றது அந்த விழியின் சித்திரத்தில் ஈர்க்கப்பட்டு!

கண்ணீரின் ஏக்கத்துடன் தொடங்கப்பட்ட இக் கவிப்பயணம் கடைசியில் "வசந்த காலம் வருமோ, வாழ்வின் நிலை மாறுமோ" எனும் கவியோடு முற்றுப் பெறுகின்றது..வசந்தத்திற்கான ஏக்கம் ஒவ்வொரு மனங்களின் எதிர்பார்ப்பாக ஊடுறுவிக் கிடப்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

ஐம்பத்தைந்து பேரின் எண்ண வார்ப்புக்கள் இவை...எனவே ஒவ்வொரு கவி தொடர்பான பார்வையை நுணுக்கமாக படரவிட முடியவில்லை..இருந்தும் ஒரு சொல்லில் சொல்வதாயின் இவை யாவும் காலத்தை வென்றும் நின்றும் பேசப்படக்கூடியவை..இங்கு பதிவிட்டவர்கள் யாவரும் கவிப்புலமையில் வென்றவர்கள் அல்லர் என்பதால் சிற்சில இடங்களில் கவி வார்ப்புக்களில் சற்றுத் தொய்வு காணப்படுகின்றது. எனினும் அவை குறைகள் அல்ல......பிரமிப்பூட்டக்கூடிய வியப்புக்கள்...எங்கள் சமுகத்தின் இலக்கிய வார்ப்புக்கள் அவை.........அவை தலை காட்ட முயற்சிக்கும் போது விமர்சனங்களால் அவற்றை வேரறுப்பது தகுந்ததல்ல.

                   கவித் தொகுப்பட்டையின் பின்புறம் கவிஞர் அல்லாமா இக்பால் சிரிக்கின்றார்.அவர் புன்னகைச் சிந்தலின் ஓர் துளியிது,,,,

"நித்திய வாழ்க்கை நீ வாழ விரும்பின்
உன் இறந்த காலத்தை
நிகழ்காலத்திலிருந்தும்
எதிர்காலத்திலிருந்தும் துண்டித்து விடாதே"

                  ஆம் கடந்த காலங்களில் நாம் பெற்ற கசப்பான அனுபவங்களிலிருந்து, மீண்டும் நமக்கான வசந்தத்தை தேடிப் பயணிப்பதற்கான பாதையை நம்பிக்கையோடு வகுப்போம் எனும் எதிர்வுகூறலாய் அது அமைந்துள்ளது.

 " வேர் அறுதலின் வலி" யாழ் முஸ்லிம்களின் அவலங்களை, அனுபவங்களை, நம்பிக்கைகளை , வாழ்வியலை சேமித்து வைத்திருக்கும் சிறந்த ஆவணம். இம் முயற்சியில் தன்னை அர்ப்பணித்துள்ள யாழ் இணையத்தளம் சகோரர் அன்ஸிருக்கு மீண்டும் என் நன்றி உரித்தாகட்டும்!

சகதிக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் எம் சமுகத்தின் சோர்வை உதறி நம்பிக்கைதனை வார்த்து அவர்களின் விடியலுக்காய் கொடி பிடிக்கும் நல்ல உள்ளங்கள் இன்னும் இன்னும் தம்மை வெளிப்படுத்த வேண்டும்.

போனது போகட்டும் இனி நாம் பயணிக்கவுள்ள நற்பாதையில் இறைவனின் துணையுடன் வசந்தங்கள் வந்தமரட்டும். அல்லல் வாழ்விலிருந்து துகிலுரிக்கப்பட்டு எம் மனங்களின் அமைதி நிறைக்கட்டும் !!

எனக்கு யாழ் முஸ்லிம் இணையத்தளம் வழங்கிய விருது
தருபவர் அமைச்சர் ரிசாட் பதியூத்தின் அவர்கள்




நிகழ்வுக்கு வருகை தந்த பிரதம அதிதிகள்


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!