About Me

2012/06/06

ரகஸியமாய்



முகிழும் இராச் சிணுங்கலில் 
நம் மூச்சுக்களின் சப்தம்
நிசப்தத்தைக் கிழிக்கும்!

பனித்துளிகளின் புல்லரிப்பில்
தேக உஷ்ணம் விறைத்துக் கிடக்கும்
மயக்கத்தில் தோய்ந்தபடி!

நட்சத்திரக் கிசுகிசுப்புக்களால்
மௌனம் துறக்கும் காற்று - நம்முள்
காதலை வார்த்துச் செல்லும்!

என்னுள் நீ ஒற்றும்-உன்
ஒற்றைப் பார்வையின் சேமிப்பில்
மனசு நெகிழ்ந்து தவிக்கும்!

இதழ்களின் தவிப்பில்
முத்தமொன்று மெலிதாய் - நம்
உணர்வினைத் தழுவிச் செல்லும்!

இதயங்களின் வெற்றுக்கூடுகளின்
நல விசாரிப்பில் 
சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகள்
மெல்ல நம்முள் குந்திக் கொல்லும்!

நாம் தனித்திருக்கும் அந்த
நீண்ட இரவில் - நம்
உணர்வறுக்கும் ஓசைகள்
நொருங்கிக் கிடக்கும் முத்தமாய்!


ஜன்ஸி கபூர் 






No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!