2012/07/22
நிஜங்களின் வலி!
காற்றின் கிசுகிசுப்புக்களால்
காணாமல் போன கனாக்கள்
மனப்பாறைக்குள்
ஏக்கமாய் விக்கலெடுக்கும்!
விழி முடிச்சுக்களில்
விழாமல் நழுவும் உறக்கத்திற்காய்
நடுசாமம் இன்னும்
காத்துக்கிடக்கும்!
உன் நினைவுகளின்
எதிரொலிப்பால் - என்
சுவாசிப்பினுள்ளுமுன் முகம்
சுவடு பதிக்கும்!
பாலைவன நீரூற்றாய்
பாசம் தருமுன் னருகாமைக்காய்
என் ஆத்மாவும்
காத்துக்கிடக்கும்!
என் கிராம விழுதுகளில்
பதிவான
உன் பெயரை உச்சரிக்க
வார்த்தைகள் தவம் கிடக்கும்!
பெருமூச்சின்
அகாராதிக்குள் அப்பிக்கிடக்கும்
உன்
பிரிவின் ரணக்கூடலில்
நிமிஷங்கள்
வெந்து மடியும்!
நிலாக்கசிவின் சிதறல்களில்
உன் சிரிப்பின் சிந்தல்
வேராகி - என்
ஞாபகப்பூமியைப் பற்றிப்பிடிக்கும்!
தொலைந்து போன
வசந்தங்களின் விசாரிப்புக்களாய்
நாட்பூக்கள் நாடி தளர்ந்து
காத்திருக்கும் சுமையுடன்!
என் விசாரிப்புக்களால்- உன்
உயிர்ப்பூக்களில்
மருதாணிச்சாறு நிரம்பிக்
கிடக்கும் வாஞ்சையோடு!
இத்தனைக்கும் நீயோ
யதார்த்தங்களின் நச்சரிப்பால்
வேற்றவனாய் என்னை வேவு பார்க்க
நானோ
நாடியறுத்து கிடக்கின்றேன்
சோக வயலோரங்களில்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!