About Me

2012/07/23

என் தேவதை


தாமரைச் சாறில் மையெடுத்து
சூரிய விரலில் பேனா ஏந்தி - நீ
நிலவின் விளக்கொளியில்
களவாய் வரைந்த காகிதங்கள்
என் மலர் மெத்தையின்
பூவாச தூதோலைகள்!

புன்னகைக் கொலுசினிலே
ஒட்டிக் கிடக்கும் உன் வார்த்தைகள்............
இன்னிசைத் தொகுப்பாக - என்
செவிப்பறை யேந்தி நிற்கும்!

உன் பார்வை மின்னொளியில்
என்னுயிரும் ஒளியுறுஞ்சும்...........
நீ பருவச் சேமிப்பினிலே
உதிர்க்கும் நாணமள்ளி- துருவப்
பனிப்பாறை நித முருகும்
தங்கச் சிற்பமாய் உன் விரலது தொடும்!

நேர நகர்விற்கு நங்கூரமிட்டு - நீ
நெடு நேரம் எனை நேசிக்கையில்
என்....................
தனிமைச் சாரளம் விழி திறக்கும்
உன்னையே உள்வாங்கி
கனவுவெளியில் காதல் செய்யும்!

என் நெஞ்சத் தரையில் விழுதாகும்
மன அண்டவெளியின் ஆட்சிக்காரியே...........!
என்
ஞாபகக் கல்வெட்டில் நீ - நிதம்
விரல் தொட்டுச் செல்கின்றாய் அழகாய்!


ஜன்ஸி கபூர் 


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!